• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிழலை கடந்த காதல் -25

STN - 24

New member
மறுநாள் காலையில் அலுவலகத்திற்கு விடுப்பு சொல்லுவதற்காக பிரியா தனது மேலதிகாரிக்கு அழைத்தாள்.

அவர் அழைப்பை எடுத்ததும்,
"சொல்லுங்க பிரியா..."என்றார்.

"சார்... என் பையனுக்கு உடம்பு சரியில்லை. ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கோம். இன்னைக்கு ஒரு நாள் லீவு வேணும் சார்..." என்று தயக்கமாகக் கூறினாள்.

அதைக் கேட்டவர் உடனே,
"பிரியா, நீங்க என்ன நினைச்சிட்டு இருக்கீங்க?அடிக்கடி லீவு போட்டுட்டே இருக்கீங்க.
கொஞ்ச நாளைக்கு முன்னாடி உங்க பையனைக் கூட்டிட்டு வந்தீங்க.அதுக்கப்புறம் நடுவுல அடிக்கடி பர்மிஷன் கேட்டு போனீங்க.லீவு போட்டீங்க.
ரீசண்டாவும் லீவு போட்டீங்க.
இப்போ திரும்பவும் லீவு வேணும்னு சொல்றீங்க.

ஏன்? உங்க வீட்டுல பார்த்துக்க யாருமே இல்லையா? எப்பப் பார்த்தாலும் பையன், பையன் என்று சொல்லிட்டே இருக்கீங்க.
இப்படி ஒவ்வொரு தடவையும் ஒரு காரணம் சொல்லிட்டு இருந்தா எப்படி?"என்று கோபமாகக் கேட்டார்.


பிரியா என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தாள்.

அவர் தொடர்ந்து, "உங்க பர்சனல் விஷயத்தை மட்டும் பார்க்கணும்னா. நீங்க வேலையை விட்டுப் போயிடணும்னா போயிடுங்க. அதுல எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனா உங்களை நம்பி ஒரு ப்ராஜெக்ட் ஓடிட்டு இருக்கு.
அதுல நீங்களும் ஒரு முக்கியமான ஆளுன்றதை மறந்துடாதீங்க.
இன்னும் ரெண்டு நாள்ல அந்த பிராஜெக்ட் சப்மிட் பண்ணனும் வந்து ப்ராஜெக்ட்டை முடிச்சுக் கொடுத்துட்டு போங்க."என்றார்.


"சார்... பையன் பெட்ல இருக்கான் சார்..." என்று கெஞ்சும் குரலில் சொன்னாள்.

அதைக் கேட்ட அவர் ஒரு பெருமூச்சு விட்டார்.

ஆரம்பத்தில் கோபமாகப் பேசியிருந்தாலும், இப்போது குரலை மெதுவாக்கி, "பிரியா, எனக்கு இந்த எக்ஸ்கியூஸ் எல்லாம் தேவையில்லை. ஆனா ஒரு விஷயம் புரிஞ்சுக்கோங்க.
ஒவ்வொரு எம்ப்ளாயியும் இப்படி காரணம் சொல்ல ஆரம்பிச்சா நாங்க ஆபீஸ் நடத்த முடியாது.

நான் என்னோட மேலதிகாரிகிட்ட போய் இதே காரணத்தை சொல்ல முடியுமா?அவங்களும் என்னைக் கேட்பாங்க இல்லையா?கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்கோங்க." என்றார்.


"உங்க இடத்துல வேற யாராவது இருந்தா, இவ்வளவு நாள் நான் லீவு கொடுத்திருக்கவே மாட்டேன்.
மத்த ஸ்டாஃப் எல்லாருக்கும் கூட நான் இவ்வளவு தளர்வு கொடுத்தது கிடையாது. அதனால்தான் உங்களையும் கொஞ்சம் யோசிக்கச் சொல்றேன்.

வேலை முக்கியம் இல்லன்னு நான் சொல்லல. உங்க பையனும் முக்கியம்தான். ஆனா ப்ராஜெக்ட்டும் பாதியில இருக்கு.
என்ன பண்ணலாம் என்று யோசிச்சு சொல்லுங்க." என்று இப்போது முழுக்க பொறுமையாகவே பேசினார்.


அழைப்பை வைத்த பிறகும் பிரியாவிற்கு என்ன செய்வது என்று புரியவில்லை.

ஒருபக்கம் மருத்துவமனையில் காய்ச்சலுடன் படுத்திருந்த தருண்.
மறுபக்கம் தன்னை நம்பி ஒப்படைக்கப்பட்ட வேலை. எதை விட்டாலும் குற்ற உணர்வுதான்.

அலைபேசியை கையில் வைத்தபடியே நின்றவளின் கண்களில் மீண்டும் கண்ணீர் திரண்டது.

அவள் போன் பேசி வைத்த பிறகு பரத்,"என்னாச்சு பிரியா?" என்று கேட்டான்.

அவளும் நடந்ததை முழுவதுமாக அவனிடம் கூறினாள்.

அதைக் கேட்ட பரத் சற்று அமைதியாக இருந்தான்.

"நீ போய் பாரு... நான் இங்க இருக்கேன்."என்றான்.

"தருண் இப்படி இருக்கு அப்ப அவனை தனியா விட்டுட்டு போய் நான் எப்படி அங்க நிம்மதியா வேலை செய்ய முடியும்?"

அதைக் கேட்ட பரத், "இவன் என்னோட பிள்ளையும் தானே... இவனைப் பார்த்துக்க எனக்கு உரிமை இல்லையா? இல்லன்னா நான் பார்த்துக்க மாட்டேன்னு நினைக்கிறியா?" என்று கேட்டான் ..

அவனது குரலில் ஒரு சிறிய கோபம் தெரிந்தது.

அவன் மனநிலையை புரிந்துகொண்டாள் பிரியா.
"அப்படி இல்ல.."என்றாள்.

"நான் இருக்கேன். இல்லனாலும் வினிதா, அம்மா, அத்தை எல்லாம் இருக்காங்க. பார்த்துப்பாங்க சரியா? முக்கியமா நான் இருக்கேன்.

என் மேல நம்பிக்கை இருந்தா நீ போய் உன் வேலையை பாரு.
அதுவும் முக்கியம்தான். அவங்க சொல்றதும் தப்பு இல்ல. நிறைய லீவு எடுத்துட்ட.உனக்கே தெரியும், இந்த கேஸ் காரணமாகவே நிறைய லீவு போயிடுச்சு. இப்ப நம்ம கல்யாணத்துக்கே ரெண்டு நாள் லீவு போயிடுச்சு. அதனால அவங்க பக்கம் இருந்து பார்த்தாலும் நாம யோசிக்கணும் பிரியா," என்றான் பரத்.



அதைக் கேட்ட பிரியா,"சரி..." என்று தலையசைத்தாள்.

பிறகு மாமியாரிடம் தகவல் கூறிவிட்டு, வீட்டிற்கு சென்று குளித்து அலுவலகத்திற்குச் சென்றாள்.


அந்த மூன்று நாட்களும் அப்படியே சென்றன.

அன்று ப்ராஜெக்ட் முடிந்த நாள்.
மாலை மூன்று மணிக்கே ப்ராஜெக்ட் முடித்துவிட்டு பர்மிஷன் கேட்டுவிட்டு கிளம்பினாள்.

உண்மையிலேயே குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவள் முழு கவலையுடன்தான் வந்தாள்.


அவள் மருத்துவமனைக்கு வரும்போது,பரத் சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தான். அவன் தோளில் தருண் படுத்திருந்தான்.மெதுவாக அவன் முதுகை தட்டிக் கொடுத்தபடியே பரத்தும் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தான்.

இரவு முழுவதும் தூங்காமல் இருந்தது பிரியாவுக்கு நன்றாகவே புரிந்தது.

அவள் வேலை முடித்து இரவு எப்போது வந்தாலும் தருணை பார்த்துக்கொண்டு, "நான் இருக்கேன்... நீ தூங்கு" என்று சொல்லி விடுவான்.

தனக்காகவும் தருணுக்காகவும் அவன் சுமந்து கொண்டிருப்பதை அவள் உணர்ந்தாள்.

அவனைப் பார்த்தபோது பிரியாவின் மனதில் ஒரு மெல்லிய உணர்வு எழுந்தது.
அது காதல் என்று அவளால் உடனே சொல்ல முடியவில்லை.

ஆனால் அது ஒரு பாதுகாப்பு உணர்வு.ஒரு குடும்பம் என்ற உணர்வு. ஒருவர் உனக்காக விழித்திருந்து, உன் சுமையை பகிர்ந்து கொள்கிறார் என்ற உணர்வு.

அவள் நினைவுக்கு வந்தது பானுமதி சொன்ன வார்த்தைகள்.
"ஒரு துணை இருக்கணும் பிரியா..."

அதேபோல தாயின் சொற்களும் நினைவுக்கு வந்தன. "வாழ்க்கையில ஒருத்தர் உனக்காக தோள் கொடுக்கணும்..."


இன்று அவள் அதை நேரிலேயே பார்த்துக் கொண்டிருந்தாள். தன் சோர்வையும், கவலையையும் எல்லாம் மறந்து, தங்களுக்காக அமைதியாக உறங்கிக்கொண்டிருந்த பரத்தை பார்த்தவளின் கண்களில் மெதுவாக ஒரு மென்மையான புன்னகை தோன்றியது.

அவளுக்குத் தெரியாமல் மனதில் ஒரு எண்ணம் மட்டும் உறுதியானது. "இவர்... நமக்காக இருக்கிறார்."

எப்படிப்பட்ட சூழ்நிலை வந்தாலும், தனக்காகவும் தங்களுக்காகவும் ஒருவர் இருக்கிறார் என்ற உணர்வு அவளது மனதில் முதல் விதையாக வேரூன்றியது.

முன்பு அவளுக்குத் தனக்கு பிரச்சனை வந்தபோது, யார் என்று தெரியாமலேயே அவளுக்காக உதவி செய்தவன் அவன்தான்.
அதை அவள் கூறாமலே புரிந்துகொண்டு, இப்போது பிள்ளைக்கு உடல்நிலை சரியில்லை என்ற சூழ்நிலையிலும் கேட்காமலே தங்களுக்காக முன்னால் வந்து நின்றவன் அவன்தான்.

"எனக்கென்று ஒரு துணை இருக்கிறான்... அது இவன்தான்" என்பதை அவள் முதன்முறையாக உணர்ந்தாள்.

அது அவளது மனதில் விழுந்த முதல் உணர்வு.


அவள் மருத்துவமனைக்கு வந்தவுடன், தருணை மெதுவாக தூக்க முயன்றாள். அதற்குள் பரத் விழித்துக்கொண்டான்.

"என்ன பிரியா, வந்துட்டியா?" என்றான்.

"ஏன் நீங்க தூங்காம இப்படி உட்கார்ந்து இருக்கீங்க? தூங்குங்க..." என்றாள்.

"இருக்கட்டும்..." என்று கூறியவன்

அவளிடம் குழந்தையை ஒப்படைத்தபடி, "ப்ராஜெக்ட் முடிஞ்சிடுச்சா?" என்று கேட்டான்.

"ஆமா... அதனால்தான் வந்தேன்," என்றாள்.

"சரி... கொஞ்சம் ரெஸ்ட் எடு."

" நீங்க வேண்டுமானால் படுத்து தூங்குங்க" என்றாள்.

"ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா? சாப்பிட்டியா?" என்று கேட்டான்.

அவனது அக்கறை நிறைந்த கேள்விகளில் அவளது மனம் நெகிழ்ந்தது.

"நான் வரும்போதே சாப்பிட்டு வந்தேன். நீங்க சாப்பிட்டீங்களா?" என்றாள்.

"சாப்பிட்டேன். தருணுக்கும் கொடுத்துட்டேன்..." என்றான்.

"உண்மையா?" என்று சந்தேகமாக பார்த்தாள்.

அவன் மெதுவாகச் சிரித்தான்.
"உண்மையாவே சாப்பிட்டேன் பிரியா..."

பிறகு இருவரும் இயல்பாக பேசிக்கொண்டிருந்தனர்.

மாலை நேரத்தில் வீட்டிலிருந்து அனைவரும் வந்து பார்த்துவிட்டு சென்றனர்.

"நாளைக்கு மதியம் போல டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்" என்று மருத்துவர் கூறினார்.


மறுநாள் குழந்தைக்கு மீண்டும் ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது.

தட்டணு எண்ணிக்கை (Platelet count) சீராக உயர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்கள் அனுமதி அளித்தனர். பிறகு தருணை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்தனர்.


வீட்டிற்கு வந்த அந்த நிமிடமே அனைவரின் முகத்திலும் நிம்மதி தெரிந்தது.பிரியாவின் மனமும் அப்போதுதான் முழுமையாக சாந்தமடைந்தது.

தருணை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்கள். அவன் சோர்வாக இருந்தாலும் அனைவரிடமும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். அவனை முழுமையாக மாற்றியிருந்தது அந்த சூழ்நிலை. சசியும் வந்து அவனுடன் பேசி, விளையாடிக் கொண்டிருந்தான். இப்படியே மேலும் ஒரு நாள் கடந்தது.

வீட்டிற்கு வந்ததும் பரத் மிகவும் களைப்பாக இருந்தான். “கொஞ்சம் தூங்கி எழுந்திருச்சு வந்து சாப்பிடுறேன்" என்று கூறி, மதியம் சாப்பாட்டுக்கும் கூட வராமல் அறைக்குச் சென்று படுத்துக் கொண்டான்.

மாலை நான்கு மணி ஆகியும் மகன் சாப்பிட வராததை கவனித்த பானுமதி, “அவனைப் போய் எழுப்பி கூட்டிட்டு வாம்மா, ஹாஸ்பிடல்ல சரியா சாப்பிட்டானோ இல்லையோ தெரியல” என்று மருமகளிடம் கூறினார்.

பிரியா சென்று பரத்தை எழுப்ப முயன்றாள். அவன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான். “இவ்வளவு நேரம் தூங்குறாரா…” என்று யோசித்தபடி மெதுவாக அவனைத் தொட்டாள். அடுத்த நொடியே அவன் உடல் அதிக சூடாக இருப்பதை உணர்ந்து பதறினாள்.

“என்னங்க… பரத் …” என்று குரல் கொடுத்தும் அவனுக்கு தெளிவாக பதில் வரவில்லை. உடல் முழுவதும் காய்ச்சல் போல எரிச்சலாக இருந்தது. அவள் பயத்தில் "வினி"என்று சத்தம் போட்டாள்.

வினி உடனே உள்ளே வந்து பார்த்துவிட்டு, “உடம்பு சரியில்லை போல இருக்கு… ஹாஸ்பிடல்ல இருந்து வந்ததால இருக்கலாம், தூக்கமின்மையும் சேர்ந்திருக்கும்” என்று கூறினாள். உடனே சசிக்கு அழைத்தனர். அவன் வேலை காரணமாக கொஞ்சம் தாமதமாக வருவதாக சொன்னாலும், அரை மணி நேரத்தில் வந்து சேர்ந்தான்.

பரத்தை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். பரிசோதனைக்குப் பிறகு மருத்துவர், “லேசான டெங்கு காய்ச்சல் ஆரம்ப நிலையில் இருக்கலாம். அதிக அலைச்சலும் தூக்கமின்மையும் காரணம்” என்று கூறினார்.

அதைக் கேட்டு பிரியா மனம் உடைந்தாள். “என்னால்தானோ…” என்று அவள் வருந்த, சசி அவளிடம் நிம்மதியாக பேசினான்.
“அப்படி யோசிக்காதே… இது பெரிய விஷயம் இல்ல. கொஞ்ச நாள் ஓய்வும் மாத்திரையும் எடுத்தா சரியாகிடும். "என்றான்.

"வீட்டிலேயே பார்த்துக்கலாம். தினமும் சாயங்காலம் ட்ரிப் மட்டும் போட்டுக்கோங்க” என்று மருத்துவர் கூறி அனுப்பினார்.

அதன்பின் சசியுடன் சேர்ந்து பரத்தை வீட்டிற்கு அழைத்து வந்தார்கள்.

தருணை வினி தங்களுடன் வைத்துக் கொள்வதாக கூறினாள். “இப்போதுதான் அவன் கொஞ்சம் சரியாகி இருக்கான்.அண்ணா கூட இருந்தா மீண்டும் அஃபெக்ட் ஆகிடும். நான் பார்த்துக்கிறேன், நீங்க கவலைப்படாதீங்க” என்று உறுதியாக சொன்னாள்.

அந்த நேரம் பானுமதி கஞ்சி சாதம் கொண்டு வந்து அவனிடம் கொடுத்தார். பரத் சோர்வாக இருந்தாலும் அதை மெதுவாக எடுத்துச் சாப்பிட்டான்.

சிறிது நேரம் கழித்து அவன் அருகில் சென்று தொட்டு பார்த்த பிரியா, “இப்போ எப்படி இருக்கு?” என்று கேட்டாள். அவனுக்கு தண்ணீர் கொடுத்து உடலை துடைத்துவிடவும் செய்தாள்.

“நானே பார்த்துக்கிறேன் பிரியா, கவலைப்படாத” என்று சொல்லியும், பிரியாவால் முழுமையாக அமைதியாக இருக்க முடியவில்லை. அவனுக்குத் தேவையான அனைத்தையும் அவளே கவனிக்க முயன்றாள்.

சிறிது வருத்தம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அமைதியாக இருந்தாள். ஆனால் உள்ளுக்குள் ஒரு பதற்றம், ஒரு பயம் தொடர்ந்து இருந்தது. அது உண்மையான அக்கறையிலிருந்துதான் வந்தது.

அந்த நேரத்தில் அவள் மனதில் ஒரு கேள்வி எழுந்தது. 'இவருக்காக நான் ஏன் இவ்வளவு பதறுறேன்?' என்று யோசித்தாள். ஆனால் அடுத்த நொடியே பரத்தின் உடல்நிலை அவளின் எண்ணங்களை முழுவதுமாக ஆக்கிரமித்தது.

பரத் உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி இருந்தது. சோர்வு முழுவதும் குறைந்து, அவன் மீண்டும் இயல்பாக இருந்தான். ஆனால் நீண்ட நாட்களாக குழந்தை மகிழினியை பார்க்க முடியாததால் தருணும் மிகவும் ஏக்கமாக இருந்தான்.

அவன் உடல்நிலை சரியில்லாமல் ஹாஸ்பிடல், வீடு என்று இருந்து சோர்வாக இருந்ததால், குழந்தையை பார்க்க அழைத்துச் செல்ல வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

வினிதாவும் பிரியாவும் சேர்ந்து குழந்தையைப் பார்க்க தருணுடன் சசி வீட்டிற்கு சென்றார்கள்.

இவர்கள் சென்றபோது குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டு இருந்தாள் ரேகா.. பால் கொடுத்த பிறகு, வினிதா குழந்தையை வாங்கிக்கொண்டு, தருணையும் அழைத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தாள்.

ரூமில் ரேகா ,பிரியா இருவர் மட்டும் இருந்தனர்..

“இப்போ எப்படி இருக்கு பிரியா அண்ணனுக்கு ?” என்று கேட்டாள் ரேகா.

“இப்போ கொஞ்சம் பரவாயில்லை அண்ணி..” என்றாள்.

“ரொம்ப பயந்துட்ட போல…” என்றாள் ரேகா.

“இல்ல… லேசா பயம் வந்துச்சு. தம்பிக்கு சரியாகி வீட்டுக்கு வந்ததும். உங்க அண்ணனுக்கு உடம்பு சரியில்லாததும் எல்லாம் ஒரே நேரத்துல ஒன்னு மாத்தி ஒன்னு வரவும் பயம் வந்துருச்சு”.

ரேகா அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் உள்ளுக்குள் ஒரு குழப்பம் இருந்தது.

“பிரியா … நான் உன் கிட்ட ஒன்னு கேட்கலாமா?” என்று மெதுவாக கேட்டாள்.

“சொல்லுங்க அண்ணி…” என்றாள் பிரியா.

சிறிது தயக்கத்துடன், “உனக்கு அண்ணனை பிடிக்குமா பிரியா?”.

"அண்ணி இது என்ன கேள்வி ஏன் உங்க அண்ணனை பிடிக்காம? யாருக்குத்தான் அவரைப் பிடிக்காமல் போகும்.."


"நான் அப்படி கேக்கல பிரியா அது.. அவருக்கு உன்னை பிடிக்கும். உன்னை விரும்பி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு அது உனக்கு தெரியுமா? அதுபோல உனக்கு அவர் மேல விருப்பம் இருக்கான்னு கேட்டேன்? "

இந்த கேள்விக்கு பிரியா சிறிது அதிர்ச்சியடைந்தாள். அவள் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள்.

“கல்யாணத்துக்கு முன்னாடி அத்தை சொன்னாங்க…” என்று மெதுவாக சொன்னாள்.

“அப்போ அண்ணா உன் கிட்ட எதுவும் சொல்லலையா?”.

அவள் தலையசைத்து “இல்லை…” என்றாள்.

ரேகா கண்களை சுருக்கி பார்த்தாள். “அவர் உன்னை ஒன்றரை வருஷமா விரும்புறார் பிரியா…” என்றாள்.

அந்த வார்த்தை கேட்டு பிரியா அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

“என்ன சொல்றீங்க? ஒன்றரை வருஷமா? இதுவரை அவர் என்கிட்ட சொல்லலையே…” என்று அவள் குழப்பத்துடன் கேட்டாள்.

அதே நேரத்தில் வெளியிலிருந்து வினிதா குரல் கொடுத்தாள்.

“அக்கா! பாப்பா அழுதுட்டே இருக்கா… வந்து பாருங்க!”

அந்த சத்தம் கேட்டதும் ரேகா உடனே வெளியே ஓடினாள்.

“அண்ணி சொல்லிட்டு போங்க…” என்றாள் பிரியா.

ரேகா மெதுவாக சிரித்துக் கொண்டே குழந்தையை பார்க்க சென்றுவிட்டாள்.

ரேகா ஹாலிலேயே இருக்க. பிரியாவும் வெளியே வந்து விட்டாள்.. குழந்தையுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்தாள். நேரம் போனதே தெரியவில்லை. ரேகாவும் குழந்தைகளுடன் முழுமையாக ஈடுபட்டிருந்ததால், அந்த உரையாடல் அப்படியே முடங்கிப் போனது.

ஆனால் பிரியாவின் மனதில் மட்டும் ஒரு பெரிய குழப்பம் மீதமிருந்தது…

“அவர் என்னை விரும்புறாரா? அதும் ஒன்றரை வருஷமா?”
அந்த கேள்வியே அவளை உள்ளுக்குள் தொடர்ந்து தொந்தரவு செய்தது.


ஆனால் இதற்கு பதில் கிடைக்காமல் தவித்தது முழுக்க முழுக்க பிரியா தான். ரேகாவிடம் பேசுவதற்கு தொடர்ந்து முயற்சி செய்தாள். ஆனால் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வீட்டிற்கு சென்றாலும் அனைவருடனும் இருக்கும்படியாக இருந்தது. போனில் பேசி கேட்டு தெரிந்து கொள்ளக்கூடிய விஷயமும் இல்லை. இப்படியே நாட்கள் நகர்ந்தது.

இந்த இடைப்பட்ட காலத்தில் பரத்தை முழுமையாக கவனிக்கத் தொடங்கினாள். அவனது ஒவ்வொரு அசைவுகளையும் கவனிக்கத் தொடங்கினாள். ஆனால் ஒரு இடத்தில் கூட அவன் காதல் பார்வையை வீசவில்லை. பேச்சுவார்த்தை கூட காதலாக இல்லை. எப்படி இவரால் அப்படி இருக்க முடியும்? ஒன்றரை வருடமாக விரும்புகிறார் என்றால், ஒற்றை வார்த்தையோ அல்லது ஒரு பார்வையோ பார்க்க முடியாதா? எப்படி இவரால் இப்படி இருக்க முடிகிறது? தனக்காக நேரம் தருகிறேன் என்று ஒதுங்கி இருக்கிறாரா ?என்று யோசித்தவாறே குழம்பினாள்.

ஆனால் அவனது சிறு சிறு அசைவுகளைக் கவனிக்கத் தவறவில்லை. நாட்கள் நகர, பைத்தியம் பிடித்தது போல் இருந்தவள் அன்று ஒரு முடிவு எடுத்தவளாக, வினிதாவிடம் தருணை ஒப்படைத்துவிட்டு,

"நான் போயிட்டு ரேகா அண்ணியைப் பார்த்து ஒரு விஷயம் பேசிட்டு வரேன். எனக்கு கொஞ்சம் அவங்க கிட்ட வேலை இருக்கு. நீ தம்பியை பார்த்துக்கோ."என்று கூறிவிட்டு சென்றாள்.

போகும் தனது அண்ணியைத்தான் புரியாமல் பார்த்தாள் வினிதா. இருந்தாலும் தோள்களைக் குலுக்கிக் கொண்டு அமைதியாகிவிட்டாள்.

அன்று முடிவோடு சென்ற பிரியாவும் ரேகாவைப் பிடித்து வைத்துக் கொண்டாள்.அன்று அவளது நல்ல நேரம் போல குழந்தையும் ஹாலில் தூங்கிக் கொண்டிருக்க, ரேகா ரூமில் துணிகளை மடித்து வைத்துக் கொண்டிருந்தாள்.

ரேகாவிடம் சென்று நின்றவள்,
"என்னால சத்தியமா முடியல. எனக்கு உங்க அண்ணன் என்னை எப்போ இருந்து விரும்புறார்னு தெரியணும்."என்றாள்.

"அவர்கிட்டயே கேட்கலாமே?"
என்றாள் ரேகா சிரிப்புடன்.

"விளையாடாதீங்க. இதுவரை அவர் என்கிட்ட அவரோட விருப்பத்தையே சொல்லலன்னு சொல்றேன். அப்புறம் எங்கிருந்து நான் போய் அவர்கிட்ட கேட்கிறது? நீங்க சொல்லுங்க."என்றாள் பிரியா.

"எனக்கு முழுசா தெரியாது பிரியா."

"உங்களுக்கு தெரிஞ்ச வரைக்கும் சொல்லுங்க."என்றாள்.

"எனக்கும் அவர் சொல்லித்தான் தெரியும். அவருக்குமே கூட அண்ணன் முழுசா இதுவரை சொன்னது இல்லன்னு சொன்னாரு. ஏன், உன்னை விரும்புறேன்னு கூட அண்ணன் சொன்னதாக சொல்லல. பிரச்சனை வந்ததுக்கு பிறகுதான் உன்னைப் பற்றி சொல்லி இருக்காரு. அண்ணே அவர்கிட்டயும், அவரு என்கிட்டயும் சொன்னாரு."என்றாள் ரேகா.

"அண்ணி, புதிர் போடாம விஷயத்தை சொல்லுங்க."
இதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாது என்பது போல்....

ரேகாவும் தனக்குத் தெரிந்தவற்றை அனைத்தையும் கூறி முடித்துவிட்டாள்.

"ட்ரெயினில் தான் பார்த்து உன் மீது விருப்பப்பட்டு இருக்கிறார் அவருக்கு."என்று சிரித்தவள், அதைத்தான் கூறுவது சரியாக வருமா ?என்று ஒரு நொடி அமைதியானாள்.

"சொல்லுங்க அண்ணி..."
என்று அவளைப் பிடித்து உலுக்கியாள் பிரியா.

"நீ அண்ணன்கிட்ட மீதியை கேட்டு தெரிஞ்சுக்கப் பிரியா? என்ன இருந்தாலும் அண்ணா சொல்றது போல வராது"

"ப்ச்! நீங்க சொல்லுங்க."என்றாள் பிரியா ஆர்வமாக.

"அண்ணனுக்கு உன் கழுத்துல இருக்கிற அந்த ஓம் டாலர் செயின் ரொம்ப பிடிக்கும் போல. இவர் கூட அண்ணனை கலாய்க்கும் போது, 'உன்னுடைய இஷ்ட தெய்வத்தை பார்க்கப் போலயான்னு சொல்லிக் கேலி பண்ணி இருப்பாரு போல"
என்று புன்னகைத்தாள்.

பிரியாவிற்கு தன்னையும் மீறி சிரிப்பு தோன்றி மறைந்தது. பேசாமல் வெட்கப்பட்டுக் கொண்டாள்.

தன் கழுத்தில் இருந்த டாலரை குனிந்து பார்த்தவள், அறியாமலே அதை பற்களுக்கு இடையில் வைத்து கடிக்க,

"இது என்ன பழக்கம்? செயினை வாயில் வைத்து கடிக்கிற?"
என்று அதட்டினாள் ரேகா.

அவளோ, புன்னகையுடன் இருக்க..

"போதும்டி.. பாப்பா எழுந்திட போற. வா, வெளியே போகலாம்."என்று அழைத்துக் கொண்டு வந்துவிட்டாள்.

அதன் பிறகு சிறிது நேரம் பேசிவிட்டு பிரியா கிளம்பிவிட்டாள்.

ஆனால் உள்ளுக்குள் ஒரு குறுகுறுப்பு தோன்றிக் கொண்டே இருந்தது. முதல் முறையாக பரத்தின் வருகைக்காக காத்திருந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும்.

அவன் எப்போது வருவான், அவனை எப்போது பார்ப்போம், அவன் முகத்தைப் பார்த்தால் என்ன தோன்றும் என்று தெரியாமல் மனம் தவித்துக் கொண்டே இருந்தது.

இதுவரை அவனது அக்கறையை மட்டுமே கவனித்தவள், இன்று முதல் முறையாக அவனது காதலைத் தேடத் தொடங்கியிருந்தாள்.


அவன் வீட்டிற்கு வந்ததிலிருந்து அவன் மீதுதான் பார்வையை வைத்திருந்தாள். அவனது சிறு சிறு அசைவுகளையும் உன்னிப்பாக கவனித்தாள்.

இரவு உணவை முடித்துக் கொண்டு அறைக்குள் வந்த பிறகும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதைக் கவனித்த பரத்,
"என்ன பிரியா, ஏன் அப்படி பார்க்கிற?"என்று கேட்க,

"ஒன்னும் இல்லை." என்று தலையசைத்துக் கொண்டாள்.

அவளை ஒரு நொடி ஆராய்ச்சியாகப் பார்த்தவன், தோள்களைக் குலுக்கிவிட்டு,
"சரி, தூங்கு. நேரமாவது பார்."
என்றான்.

அதன்பிறகு சிறிது நேரம் பேசிவிட்டு, தருணும் தூங்கிய பிறகு தானும் படுத்துத் தூங்கிவிட்டான்.

தூங்குபவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள் பிரியா.

எப்பவாவது உங்களுக்கு என் மேல இருக்கிற பிரியத்தை என்கிட்ட சொல்லணும்னு தோணவே இல்லையா?என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள்.

தனக்கான நேரத்தைக் கொடுக்கிறான் என்பதையும் உணர்ந்தாள். தன் மீது எந்த அளவிற்கு காதல் இருந்தால், தனக்காக நேரம் கொடுத்து ஒதுங்கி நிற்பான்?

உதவி செய்தது காதலால் அல்ல. ஆனால் திருமணம் முழுக்க முழுக்க அவன் தன் மீது வைத்திருந்த காதலால் தான் என்பதை இப்போது தெளிவாக உணர்ந்தாள்.

அவளது விருப்பம், அவளது மனநிலை, அவளது பயம் என அனைத்திற்கும் மதிப்பு கொடுத்து, எந்தவித அழுத்தமும் தராமல் காத்திருக்கிறான் என்பதே அவனது காதலின் ஆழத்தை அவளுக்கு உணர்த்தியது.

ஆனால் அதற்கு மேல் யோசிக்க அவளது மனம் இடம் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை.

ஏனெனில் இதுவரை அவனது அன்பை மட்டுமே பார்த்திருந்தவள், இப்போது அவனது காதலை உணரத் தொடங்கியிருந்தாள். அந்த உணர்வு அவளுக்குள் புதிதாக ஒரு அமைதியையும், அதே நேரத்தில் இனிமையான ஒரு தவிப்பையும் உருவாக்கியிருந்தது.
 
Top Bottom