அத்தியாயம் 11
பெரிய சமையலறை. அதில் கிட்சன் செட் பூட்டியிருந்தார்கள். அங்கே பிரேமா முருங்கை இலைகளை ஆய ஆரம்பித்திருந்தார். சஜிதனைத் தூக்கிச் சமையல் மேடையில் இருத்திவிட்டு, “தாங்க அன்ட்ரி, நான் செய்றன்.” என்று முருங்கை இலைகள் இருந்த சுளகைத் தன் புறம் திருப்பிக்கொண்டாள் நாவினி. சஜிதனும் அவளுக்கு உதவி செய்தான்.
“என்ன அன்ட்ரி, இண்டைக்கு மரக்கறிச் சமையலோ?” சஜிதனை ஒரு பார்வை பார்த்துவிட்டுக் கேட்டாள் நாவினி.
“இல்லையே. இண்டைக்கு விடியவே என்ர அப்பா எங்கட கோழி ஒண்ட அறுத்தவரே. இண்டைக்குக் கோழிக் கறியெல்லா அப்பும்மா. முட்டையும் அவிச்சனீங்க எல்லா?” என்று எல்லோரையும் முந்திக்கொண்டு அன்றைய சமையல் மெனுவைச் சொன்னான் சின்னவன்.
எல்லோர் முகத்திலும் விரிந்த முறுவல். அதுவும் நாவினியால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. வாய் விட்டுச் சிரித்தபடி சின்னவனை அணைத்து முத்தமிட்டாள். அவள் முகம் பார்த்த கேசிகன் விழிகளில் கோடாகக் கண்ணீர் படர்ந்துபோயிற்று.
பிரேமாவுக்கும் புன்னகையில் மலர்ந்திருந்த அவள் முகம் பார்க்கையில் மிகுந்த நெகிழ்ச்சி. “இந்தப் பெரிய மனுசனுக்கு மூண்டு நேரமும் மச்சம் குடுத்தாலும் காணாது.” என்று பேரனைச் செல்லமாகத் திட்டிக்கொண்டார்.
அன்று காலையே பகல் சாப்பாட்டுக்கு இங்கே வந்துவிடும்படி தன் அன்னைக்கு அழைத்துச் சொல்லியிருந்தார் பிரேமா. அவரும் வந்துவிட உணவு வேளையும் நன்றாகவே கழிந்தது. மகனுக்கும் கொடுத்துத் தானும் சாப்பிட்ட கேசிகன் அவளை மிகவுமே பாதித்தான்.
உலகத்தின் துன்பம் எதுவும் அண்டா வயதில், என்ன வடிவம் என்றே தெரியாமல், வெறும் மாவில் அவன் சுட்டுத் தந்த ரொட்டிகளை இருவரும் சாப்பிட்டிருக்கிறார்கள். எத்தனையோ மழை நாள்களில் இருவருமாக விறகடுப்பை எரித்து, தேநீர் ஊற்றிக் குடித்திருக்கிறார்கள். சின்னவர்களாகவே இருந்திருக்கலாம். ஓயாத இந்த அலைப்புறுதலும், உயிர் கொள்ளும் இந்த வேதனைகளும் அவர்களை அண்டாமல் இருந்திருக்கும்.
“ஒரு கலியாணத்தக் கட்டுங்கோ குஞ்சு. உங்களுக்கும் வயசு போகுதெல்லோ.” என்றார் பிரேமா பேச்சோடு பேச்சாக.
ஒன்றும் சொல்லாமல் மெல்லிய புன்னகையோடு அவரைப் பார்த்தாள் அவள்.
“என்னம்மா, இப்பிடிப் பாத்தா என்ன அர்த்தம்? இல்ல இஞ்ச ஆரையும் பாக்கிறதோ? ஊரோடயே வந்து இருக்கப்போறீங்களா?” அன்னை இல்லாத பெண். தன் ஆசைகளைச் சொல்ல ஆள் இல்லாமல் நிற்கிறாளோ என்றெண்ணி வினவினார் பிரேமா.
“இஞ்ச கட்டி நான் என்ன செய்ய அன்ட்ரி? அங்கதான்… மேனகா அன்ட்ரியும் சொல்லித்தான் அனுப்பினவா. ஆரையோ பாத்திருக்கிறன் எண்டும் சொன்னவா. அங்க போய்த்தான் யோசிக்கோணும்.” என்று சொன்னாள் அவள்.
இந்தப் பேச்சுக்குள் கேசிகன் வரவில்லை. ஆனால், கைப்பேசியைப் பார்ப்பதுபோல் அமர்ந்திருந்தாலும் கவனம் முழுக்க இங்கேதான் இருந்தது. அவள் திருமணத்திற்கு ஏதோ ஒரு வகையில் தயாராகிறாள் என்கிற விடயம் பெரும் ஆசுவாசத்தை உண்டாக்கிற்று.
பிரேமாவின் அன்னை பேரனை ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டுத் தன் மடியில் இருந்த சஜிதனைக் காட்டி, “இவனுக்கும் ஒரு அம்மா வேணும். சுத்தி ஆயிரம்பேர் இருந்தாலும் அம்மா எண்டு ஒருத்தி இருக்கிற மாதிரி வருமா சொல்லம்மா? எங்க, இவன்ர தகப்பன் கேக்கோணுமே. அவள் பேத்தி இருக்கிற வரைக்கும் சந்தோசமா இருந்தானம்மா. ஆரின்ர கண் பட்டுதோ… வாழ வேண்டிய வயசில போய்ட்டாள்.” என்று கண்களைத் துடைத்தார்.
“அம்மம்மா!” என்று அதட்டினான் கேசிகன். அவன் பார்வை எச்சரிக்கும் விதமாக மகனைத் தொட்டு மீண்டது.
அவருக்கும் தன் தவறு புரிந்தது. பூட்டக் குழந்தையை அள்ளிக் கொஞ்சினார். ஆனாலும் விடாமல், “இந்தளவு மகனில அக்கறையும் பாசமும் இருக்கிறவன் அவனுக்குத் தேவையானதையும் செய்யோணும் அப்பு.” என்று வற்புறுத்தினர்.
அவர் சொல்வது அவளுக்கும் சரியாகப் பட்டதில் அவனைக் கேள்வியாக ஏறிட்டாள் நாவினி.
அதைக் கண்டுவிட்டு, “இப்பிடியே இருந்து என்ன செய்யப் போறானாம் எண்டு கேளம்மா. என்னத்த மனதுக்க வச்சிருக்கிறானோ. மாட்டனே மாட்டன் எண்டு நிக்கிறான்.” என்றார் அந்த வயதான பெண்மணி.
பிரேமாவுக்கும் தன் அன்னையின் பேச்சில் உடன்பாடு என்பதில், “அம்மா சொல்லுறதையும் யோசிங்கோவன் தம்பி.” என்றார் அவரும்.
“பேசாம இருங்கம்மா!” என்று அதட்டிவிட்டு எழுந்துபோனான் அவன்.
அவனுக்குக் கோபம் என்று புரிந்தது. அவனையும் அவளால் புரிந்துகொள்ள முடிந்தது.
அவனோடு அவளைப் பிணைத்தவை வெறும் ஒரு சில நொடித் தருணங்கள் மாத்திரமே. அவைதான் அவன் நினைப்பைக் கடலில் போட்ட நங்கூரமாக அவளுள் பதிய வைத்தவை.
அவையே அவளை இத்தனை ஆழத்திற்குப் போட்டு ஆட்டுகையில், அவன் ஊனும் உயிருமாக வாழ்ந்திருக்கிறான். அதன் சாட்சியாக மகனையும் கையில் வைத்திருக்கிறான். அந்த நினைவுகள் என்னவெல்லாமோ செய்யுமே. நெடிய மூச்சு ஒன்று அவளிடத்திலிருந்து தானாக வெளியேறிற்று.
மாலையானது. புறப்பட ஆயத்தமானாள். இனி அவளைப் பார்க்க முடியாது. நாளைக்குப் புறப்பட்டுவிடுவாள் என்பதில், “இனி எப்பயம்மா வருவீங்க?” என்றார் பிரேமாவின் அன்னை.
“தெரியா பாட்டி. ரெண்டு வருசக் கென்ட்ராக்ட் போட்டுத்தான் வீடு வாடகைக்குக் குடுத்திருக்கிறன். அதையெல்லாம் மாதவன் அங்கிள் பாப்பார். அதால இனி எனக்கு இஞ்ச எந்த அலுவலும் இல்லை. அதவிடச் சும்மா வந்து இஞ்ச நான் என்ன செய்ய?” என்று கேட்டாள்.
“ஏன் நாங்க இல்லையோ? அடிக்கடி வந்திட்டுப் போங்கோம்மா.” பரிவும் வாஞ்சையுமாகச் சொன்னார் அவர்.
போனமுறை வந்தபோது இதே நீங்கள் எங்கு இருந்தீர்கள் என்று கேட்க நினைத்தாலும் கேட்கவில்லை அவள். அவரைப் பார்த்து இலேசாக முறுவலித்தாள்.
அப்படி, அமைதியாக அவள் சிந்தும் முறுவல்களின் பின்னே பேச விரும்பாத பல விடயங்கள் புதைந்திருக்கின்றன என்று எண்ணினான் கேசிகன்.
சஜிதனை ஆசையாகத் தூக்கி வைத்துக்கொண்டு, “சஜுக்குட்டி கவனமா இருக்கோணும். வடிவா படிக்கோணும். அடுத்த முறை நான் பாக்கேக்க எங்கட சஜுக்குட்டி பெரிய மனுசனா இருப்பார் எண்டு நினைக்கிறன்.” என்றவளை முடிக்க விடாமல், “இப்பவும் நான் பெரிய மனுசன்தான். அப்பும்மா அப்பிடித்தான் கூப்பிடுறவா.” என்று சொன்னான் அவன்.
எல்லோர் முகத்திலும் விரிந்த முறுவல். “அது உண்மைதான். எண்டாலும் உங்கட அப்பா மாதிரி இன்னும் பெரிய மனுசனா வளரோணும்தானே.” என்றதற்கும், “அதுக்குத்தான் ஒவ்வொரு நாளும் இறைச்சி சாப்பிடுறனான்.” என்று சொன்னான் அவன்.
நாவினிக்கு ஏனோ சிரிப்போடு சேர்த்துக் கண்ணீரும் வந்தது. அவனை இறுக்கி அணைத்துக் கொஞ்சிவிட்டு இறக்கிவிட்டாள்.
மொத்தமாகப் புறப்படுகிறாள் என்று சஜிதனுக்குத் தெரியாது. அவள் தன் வீட்டுக்குத்தான் போகிறாள் என்று எண்ணிக்கொண்டு, “நாளைக்கு அப்புச்சாமிக்கு வாழை இலை அறுக்க நானும் அப்பாவும் பெரிய கத்தி கொண்டு வருவம் அன்ட்ரி.” என்று சொன்னான்.
“சரி சரி வாங்கோ. எப்ப வேணுமெண்டாலும் வந்து அறுத்துக்கொண்டு போங்கோ என்ன.” என்றவள் இலேசாகப் படர்ந்திருந்த கண்ணீருடனேயே எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டாள்.
அவன் அனுமதியே இல்லாமல் அவளின் முதல் ஜெர்மன் பயணமும், அன்று பேச முடியாமல் கண்ணீர் வழிய அவனையே பார்த்தபடி அவள் நின்றதும், அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டு நம்பிக்கை வாக்குறுதி கொடுத்ததும் நினைவில் மின்னி மறைய, அப்படியே நின்றுவிட்டான் கேசிகன்.
என்னவோ அவன் உள்ளத்தின் ஒரு பகுதியையே பிய்த்துக்கொண்டு போவதுபோல் ஒரு வாதை. வாயைக் குவித்துக் காற்றை ஊதி நெஞ்சின் அடைப்பை நேராக்க முயன்று தோற்றான்.
“ஓட்டோ பிடிச்சு விட்டுட்டு வாறனம்மா.” என்று அன்னையிடம் சொல்லிவிட்டு அவளிடம் விரைந்து வந்தான்.
“நவி நில்லு! ஓட்டோ கூப்பிடுறன்.”
“இல்ல வேண்டாம். வெய்யிலும் நல்லா குறஞ்சிட்டுது. நான் நடந்தே போறன்.” என்றுவிட்டுத் திரும்பவும் நடக்க ஆரம்பித்தாள் அவள்.
போகிறவளையே ஒரு கணம் பார்த்துவிட்டு, “நில்லு, நானும் வாறன்!” என்று ஓடி வந்தவனைக் கண்டு ஒரு நொடி அதிர்ந்து நின்றுவிட்டாள்.
முன்னரும் இப்படித்தான். இலேசாக இருள் படிந்துவிட்டாலும் அவளோடு வந்து, அவளை விட்டுவிட்டுத்தான் திரும்புவான். அப்போது இருவர் வீடுகளுக்கு இடையிலான தூரம் என்னவோ நான்கே நான்கு வீடுகள்தான். இப்போது அவர்களுக்குள் இருப்பது இருவரும் சேர்ந்து கடக்கவே முடியாத அளவிலான தூரம். அப்படியிருக்க இவன் எதுவரை வரப்போகிறானாம்?
“அது நானே போவன்.” என்றாள் திணறி.
அவளையே பார்த்தான் அவன்.
“இல்ல, இன்னும் இருட்டேல்லையே. அதான்.”
“பரவாயில்ல, நட!”
வேறு வழியற்று அவனுடன் சேர்ந்து நடந்தாள் நாவினி.
“இஞ்ச இருந்து எப்ப வெளிக்கிடுறாய்?”
“நாளைக்கு விடிய வெள்ளனவே.”
“ஓ! ஆனா நாளைக்கு இரவுதானே ஃபிளைட்.”
“ஓம், ஆனா பருத்தித்துறை போயிட்டுத்தான் கொழும்பு போகோணும்.”
“எயாபோர்ட் எப்பிடிப் போறாய்?”
“மாதவன் அங்கிள் கூட்டிக்கொண்டு போய் விடுவார்.”
“வேற ஏதும் ஹெல்ப் வேணுமெண்டா கேளு. யோசிக்காத.”
ஒட்டவைத்த முறுவல் ஒன்றுடன் சரி என்று தலையசைத்தாள்.
அதற்குமேல் அவர்களுக்குள் பேச்சுத் தடைப்பட்டுப் போயிற்று. உள்ளங்கள் மட்டும் பெரும் சத்தமாக இரைச்சலிட்டன.
தன் முடிவுகளில் ஏதும் தவறு இருக்கிறதா என்று கேட்க வேண்டும் போலவே இருந்தது. அதே நேரத்தில் அதைக் கேட்க மிகவுமே பயந்தான். பிரயோசனம் இல்லாத கேள்வி. அது அவளுக்கு எந்த நன்மையையும் பயக்கப்போவதில்லை. ஆனால், அதற்கான பதில்
இல்லாமல் இனியும் அவன் நாள்கள் நிம்மதியாகக் கழியும் என்கிற நம்பிக்கை அவனுக்கு முற்றிலுமாகப் போயிருந்தது.
பெரிய சமையலறை. அதில் கிட்சன் செட் பூட்டியிருந்தார்கள். அங்கே பிரேமா முருங்கை இலைகளை ஆய ஆரம்பித்திருந்தார். சஜிதனைத் தூக்கிச் சமையல் மேடையில் இருத்திவிட்டு, “தாங்க அன்ட்ரி, நான் செய்றன்.” என்று முருங்கை இலைகள் இருந்த சுளகைத் தன் புறம் திருப்பிக்கொண்டாள் நாவினி. சஜிதனும் அவளுக்கு உதவி செய்தான்.
“என்ன அன்ட்ரி, இண்டைக்கு மரக்கறிச் சமையலோ?” சஜிதனை ஒரு பார்வை பார்த்துவிட்டுக் கேட்டாள் நாவினி.
“இல்லையே. இண்டைக்கு விடியவே என்ர அப்பா எங்கட கோழி ஒண்ட அறுத்தவரே. இண்டைக்குக் கோழிக் கறியெல்லா அப்பும்மா. முட்டையும் அவிச்சனீங்க எல்லா?” என்று எல்லோரையும் முந்திக்கொண்டு அன்றைய சமையல் மெனுவைச் சொன்னான் சின்னவன்.
எல்லோர் முகத்திலும் விரிந்த முறுவல். அதுவும் நாவினியால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. வாய் விட்டுச் சிரித்தபடி சின்னவனை அணைத்து முத்தமிட்டாள். அவள் முகம் பார்த்த கேசிகன் விழிகளில் கோடாகக் கண்ணீர் படர்ந்துபோயிற்று.
பிரேமாவுக்கும் புன்னகையில் மலர்ந்திருந்த அவள் முகம் பார்க்கையில் மிகுந்த நெகிழ்ச்சி. “இந்தப் பெரிய மனுசனுக்கு மூண்டு நேரமும் மச்சம் குடுத்தாலும் காணாது.” என்று பேரனைச் செல்லமாகத் திட்டிக்கொண்டார்.
அன்று காலையே பகல் சாப்பாட்டுக்கு இங்கே வந்துவிடும்படி தன் அன்னைக்கு அழைத்துச் சொல்லியிருந்தார் பிரேமா. அவரும் வந்துவிட உணவு வேளையும் நன்றாகவே கழிந்தது. மகனுக்கும் கொடுத்துத் தானும் சாப்பிட்ட கேசிகன் அவளை மிகவுமே பாதித்தான்.
உலகத்தின் துன்பம் எதுவும் அண்டா வயதில், என்ன வடிவம் என்றே தெரியாமல், வெறும் மாவில் அவன் சுட்டுத் தந்த ரொட்டிகளை இருவரும் சாப்பிட்டிருக்கிறார்கள். எத்தனையோ மழை நாள்களில் இருவருமாக விறகடுப்பை எரித்து, தேநீர் ஊற்றிக் குடித்திருக்கிறார்கள். சின்னவர்களாகவே இருந்திருக்கலாம். ஓயாத இந்த அலைப்புறுதலும், உயிர் கொள்ளும் இந்த வேதனைகளும் அவர்களை அண்டாமல் இருந்திருக்கும்.
“ஒரு கலியாணத்தக் கட்டுங்கோ குஞ்சு. உங்களுக்கும் வயசு போகுதெல்லோ.” என்றார் பிரேமா பேச்சோடு பேச்சாக.
ஒன்றும் சொல்லாமல் மெல்லிய புன்னகையோடு அவரைப் பார்த்தாள் அவள்.
“என்னம்மா, இப்பிடிப் பாத்தா என்ன அர்த்தம்? இல்ல இஞ்ச ஆரையும் பாக்கிறதோ? ஊரோடயே வந்து இருக்கப்போறீங்களா?” அன்னை இல்லாத பெண். தன் ஆசைகளைச் சொல்ல ஆள் இல்லாமல் நிற்கிறாளோ என்றெண்ணி வினவினார் பிரேமா.
“இஞ்ச கட்டி நான் என்ன செய்ய அன்ட்ரி? அங்கதான்… மேனகா அன்ட்ரியும் சொல்லித்தான் அனுப்பினவா. ஆரையோ பாத்திருக்கிறன் எண்டும் சொன்னவா. அங்க போய்த்தான் யோசிக்கோணும்.” என்று சொன்னாள் அவள்.
இந்தப் பேச்சுக்குள் கேசிகன் வரவில்லை. ஆனால், கைப்பேசியைப் பார்ப்பதுபோல் அமர்ந்திருந்தாலும் கவனம் முழுக்க இங்கேதான் இருந்தது. அவள் திருமணத்திற்கு ஏதோ ஒரு வகையில் தயாராகிறாள் என்கிற விடயம் பெரும் ஆசுவாசத்தை உண்டாக்கிற்று.
பிரேமாவின் அன்னை பேரனை ஒரு முறை திரும்பிப் பார்த்துவிட்டுத் தன் மடியில் இருந்த சஜிதனைக் காட்டி, “இவனுக்கும் ஒரு அம்மா வேணும். சுத்தி ஆயிரம்பேர் இருந்தாலும் அம்மா எண்டு ஒருத்தி இருக்கிற மாதிரி வருமா சொல்லம்மா? எங்க, இவன்ர தகப்பன் கேக்கோணுமே. அவள் பேத்தி இருக்கிற வரைக்கும் சந்தோசமா இருந்தானம்மா. ஆரின்ர கண் பட்டுதோ… வாழ வேண்டிய வயசில போய்ட்டாள்.” என்று கண்களைத் துடைத்தார்.
“அம்மம்மா!” என்று அதட்டினான் கேசிகன். அவன் பார்வை எச்சரிக்கும் விதமாக மகனைத் தொட்டு மீண்டது.
அவருக்கும் தன் தவறு புரிந்தது. பூட்டக் குழந்தையை அள்ளிக் கொஞ்சினார். ஆனாலும் விடாமல், “இந்தளவு மகனில அக்கறையும் பாசமும் இருக்கிறவன் அவனுக்குத் தேவையானதையும் செய்யோணும் அப்பு.” என்று வற்புறுத்தினர்.
அவர் சொல்வது அவளுக்கும் சரியாகப் பட்டதில் அவனைக் கேள்வியாக ஏறிட்டாள் நாவினி.
அதைக் கண்டுவிட்டு, “இப்பிடியே இருந்து என்ன செய்யப் போறானாம் எண்டு கேளம்மா. என்னத்த மனதுக்க வச்சிருக்கிறானோ. மாட்டனே மாட்டன் எண்டு நிக்கிறான்.” என்றார் அந்த வயதான பெண்மணி.
பிரேமாவுக்கும் தன் அன்னையின் பேச்சில் உடன்பாடு என்பதில், “அம்மா சொல்லுறதையும் யோசிங்கோவன் தம்பி.” என்றார் அவரும்.
“பேசாம இருங்கம்மா!” என்று அதட்டிவிட்டு எழுந்துபோனான் அவன்.
அவனுக்குக் கோபம் என்று புரிந்தது. அவனையும் அவளால் புரிந்துகொள்ள முடிந்தது.
அவனோடு அவளைப் பிணைத்தவை வெறும் ஒரு சில நொடித் தருணங்கள் மாத்திரமே. அவைதான் அவன் நினைப்பைக் கடலில் போட்ட நங்கூரமாக அவளுள் பதிய வைத்தவை.
அவையே அவளை இத்தனை ஆழத்திற்குப் போட்டு ஆட்டுகையில், அவன் ஊனும் உயிருமாக வாழ்ந்திருக்கிறான். அதன் சாட்சியாக மகனையும் கையில் வைத்திருக்கிறான். அந்த நினைவுகள் என்னவெல்லாமோ செய்யுமே. நெடிய மூச்சு ஒன்று அவளிடத்திலிருந்து தானாக வெளியேறிற்று.
மாலையானது. புறப்பட ஆயத்தமானாள். இனி அவளைப் பார்க்க முடியாது. நாளைக்குப் புறப்பட்டுவிடுவாள் என்பதில், “இனி எப்பயம்மா வருவீங்க?” என்றார் பிரேமாவின் அன்னை.
“தெரியா பாட்டி. ரெண்டு வருசக் கென்ட்ராக்ட் போட்டுத்தான் வீடு வாடகைக்குக் குடுத்திருக்கிறன். அதையெல்லாம் மாதவன் அங்கிள் பாப்பார். அதால இனி எனக்கு இஞ்ச எந்த அலுவலும் இல்லை. அதவிடச் சும்மா வந்து இஞ்ச நான் என்ன செய்ய?” என்று கேட்டாள்.
“ஏன் நாங்க இல்லையோ? அடிக்கடி வந்திட்டுப் போங்கோம்மா.” பரிவும் வாஞ்சையுமாகச் சொன்னார் அவர்.
போனமுறை வந்தபோது இதே நீங்கள் எங்கு இருந்தீர்கள் என்று கேட்க நினைத்தாலும் கேட்கவில்லை அவள். அவரைப் பார்த்து இலேசாக முறுவலித்தாள்.
அப்படி, அமைதியாக அவள் சிந்தும் முறுவல்களின் பின்னே பேச விரும்பாத பல விடயங்கள் புதைந்திருக்கின்றன என்று எண்ணினான் கேசிகன்.
சஜிதனை ஆசையாகத் தூக்கி வைத்துக்கொண்டு, “சஜுக்குட்டி கவனமா இருக்கோணும். வடிவா படிக்கோணும். அடுத்த முறை நான் பாக்கேக்க எங்கட சஜுக்குட்டி பெரிய மனுசனா இருப்பார் எண்டு நினைக்கிறன்.” என்றவளை முடிக்க விடாமல், “இப்பவும் நான் பெரிய மனுசன்தான். அப்பும்மா அப்பிடித்தான் கூப்பிடுறவா.” என்று சொன்னான் அவன்.
எல்லோர் முகத்திலும் விரிந்த முறுவல். “அது உண்மைதான். எண்டாலும் உங்கட அப்பா மாதிரி இன்னும் பெரிய மனுசனா வளரோணும்தானே.” என்றதற்கும், “அதுக்குத்தான் ஒவ்வொரு நாளும் இறைச்சி சாப்பிடுறனான்.” என்று சொன்னான் அவன்.
நாவினிக்கு ஏனோ சிரிப்போடு சேர்த்துக் கண்ணீரும் வந்தது. அவனை இறுக்கி அணைத்துக் கொஞ்சிவிட்டு இறக்கிவிட்டாள்.
மொத்தமாகப் புறப்படுகிறாள் என்று சஜிதனுக்குத் தெரியாது. அவள் தன் வீட்டுக்குத்தான் போகிறாள் என்று எண்ணிக்கொண்டு, “நாளைக்கு அப்புச்சாமிக்கு வாழை இலை அறுக்க நானும் அப்பாவும் பெரிய கத்தி கொண்டு வருவம் அன்ட்ரி.” என்று சொன்னான்.
“சரி சரி வாங்கோ. எப்ப வேணுமெண்டாலும் வந்து அறுத்துக்கொண்டு போங்கோ என்ன.” என்றவள் இலேசாகப் படர்ந்திருந்த கண்ணீருடனேயே எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டாள்.
அவன் அனுமதியே இல்லாமல் அவளின் முதல் ஜெர்மன் பயணமும், அன்று பேச முடியாமல் கண்ணீர் வழிய அவனையே பார்த்தபடி அவள் நின்றதும், அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டு நம்பிக்கை வாக்குறுதி கொடுத்ததும் நினைவில் மின்னி மறைய, அப்படியே நின்றுவிட்டான் கேசிகன்.
என்னவோ அவன் உள்ளத்தின் ஒரு பகுதியையே பிய்த்துக்கொண்டு போவதுபோல் ஒரு வாதை. வாயைக் குவித்துக் காற்றை ஊதி நெஞ்சின் அடைப்பை நேராக்க முயன்று தோற்றான்.
“ஓட்டோ பிடிச்சு விட்டுட்டு வாறனம்மா.” என்று அன்னையிடம் சொல்லிவிட்டு அவளிடம் விரைந்து வந்தான்.
“நவி நில்லு! ஓட்டோ கூப்பிடுறன்.”
“இல்ல வேண்டாம். வெய்யிலும் நல்லா குறஞ்சிட்டுது. நான் நடந்தே போறன்.” என்றுவிட்டுத் திரும்பவும் நடக்க ஆரம்பித்தாள் அவள்.
போகிறவளையே ஒரு கணம் பார்த்துவிட்டு, “நில்லு, நானும் வாறன்!” என்று ஓடி வந்தவனைக் கண்டு ஒரு நொடி அதிர்ந்து நின்றுவிட்டாள்.
முன்னரும் இப்படித்தான். இலேசாக இருள் படிந்துவிட்டாலும் அவளோடு வந்து, அவளை விட்டுவிட்டுத்தான் திரும்புவான். அப்போது இருவர் வீடுகளுக்கு இடையிலான தூரம் என்னவோ நான்கே நான்கு வீடுகள்தான். இப்போது அவர்களுக்குள் இருப்பது இருவரும் சேர்ந்து கடக்கவே முடியாத அளவிலான தூரம். அப்படியிருக்க இவன் எதுவரை வரப்போகிறானாம்?
“அது நானே போவன்.” என்றாள் திணறி.
அவளையே பார்த்தான் அவன்.
“இல்ல, இன்னும் இருட்டேல்லையே. அதான்.”
“பரவாயில்ல, நட!”
வேறு வழியற்று அவனுடன் சேர்ந்து நடந்தாள் நாவினி.
“இஞ்ச இருந்து எப்ப வெளிக்கிடுறாய்?”
“நாளைக்கு விடிய வெள்ளனவே.”
“ஓ! ஆனா நாளைக்கு இரவுதானே ஃபிளைட்.”
“ஓம், ஆனா பருத்தித்துறை போயிட்டுத்தான் கொழும்பு போகோணும்.”
“எயாபோர்ட் எப்பிடிப் போறாய்?”
“மாதவன் அங்கிள் கூட்டிக்கொண்டு போய் விடுவார்.”
“வேற ஏதும் ஹெல்ப் வேணுமெண்டா கேளு. யோசிக்காத.”
ஒட்டவைத்த முறுவல் ஒன்றுடன் சரி என்று தலையசைத்தாள்.
அதற்குமேல் அவர்களுக்குள் பேச்சுத் தடைப்பட்டுப் போயிற்று. உள்ளங்கள் மட்டும் பெரும் சத்தமாக இரைச்சலிட்டன.
தன் முடிவுகளில் ஏதும் தவறு இருக்கிறதா என்று கேட்க வேண்டும் போலவே இருந்தது. அதே நேரத்தில் அதைக் கேட்க மிகவுமே பயந்தான். பிரயோசனம் இல்லாத கேள்வி. அது அவளுக்கு எந்த நன்மையையும் பயக்கப்போவதில்லை. ஆனால், அதற்கான பதில்
இல்லாமல் இனியும் அவன் நாள்கள் நிம்மதியாகக் கழியும் என்கிற நம்பிக்கை அவனுக்கு முற்றிலுமாகப் போயிருந்தது.