• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மன்னிப்பாயா காதலே - 25 ( இறுதி அத்தியாயம் )

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம் 25

டோர்ட்மண்ட் நகரின் தமிழர் கடைகள் இருக்கும் இடத்திலேயே மூடப்பட்ட ஒரு கடை இருப்பதாக விசாரித்துச் சொன்னார் சிவதாசன். சின்னவர்களை மேனகாவிடம் விட்டுவிட்டு சிவதாசன், கேசிகன், நாவினி, உதயன், பிரியா ஐவரும் சென்று பார்த்தார்கள்.

நல்ல இடம். விசாலமான கடை. ஏற்கனவே பலசரக்குக் கடையாக அதை நடத்தியவர்கள் ஒழுங்காக வரி செலுத்தாத காரணத்தினால் ஜெர்மன் வரித்திணைக்களம் மொத்தமாகக் கடையை மூடி சீல் வைத்திருந்தது. நிறைய மாதங்களின் பின் விடுவிக்கப்பட்டிருந்தாலும் அதன் பிறகு அதை நடத்த யாரும் முன்வரவில்லை.

கேசிகனுக்குக் கடை, அது அமைந்திருக்கும் இடம், அங்கே தெரிந்த அதிகமான தமிழ்த் தலைகள் என்று எல்லாமே பிடித்திருந்தன. அந்தக் கடை முழுவதையும் பொருள்களால் நிரப்ப எவ்வளவு ஆகும் என்று அவன் போட்ட மனக்கணக்குத்தான் பெரும் மலைப்பைத் தந்தது.

ஒரு வேலை கூட இல்லாமல் இருக்கிறவன் அதை நாவினியிடம் எப்படிக் கேட்பான்? “சின்ன கடையா இருந்தா பரவாயில்லையோ எண்டு இருக்கு.” என்று சிவதாசனிடம் சொன்னான். அவனைத் தனியாக அழைத்து வந்து, “காசுக்கு யோசிக்கிறீங்களா?” என்று கேட்டாள் நாவினி.

அதுதான் என்று சொல்ல முடியாமல் நின்றான் அவன். முதலில் அவன் நினைக்கும் தொகை அவளிடம் உண்டா என்று தெரியாது. இருந்தாலும் கையும் மனமும் கூசாமல் எப்படி வாங்கி வியாபாரத்தில் போடுவான்?

“அப்ப நான் இன்னும் உங்கட பெட்டச்சி இல்லை என்ன?” என்றாள் அவள் வேதனையோடு.

“அடிதான் வாங்கப் போறாய்!” என்றான் அவன் உடனேயே.

“அப்ப ஏன் யோசிக்கிறீங்க?”

“பெரிய தொகை வரும்போல நவி.”

“வரட்டும்.” சர்வசாதாரணமாகச் சொன்னாள் அவள்.

“ப்ச் நவி!” என்று தலையைக் கோதிவிட்டு, “ஆரம்பமே ஏன் இவ்வளவு பெருசா ஆரம்பிக்க? எனக்கு இந்த நாடு, இஞ்ச வியாபாரம் செய்ற முறை எல்லாமே புதுசு. கொஞ்சம் கொஞ்சமா மேல போறதுதானே சரி.” என்று சொன்னான்.

“அதால மட்டும்தான் யோசிக்கிறீங்களா?” என்றாள் பார்வையை அவன் முகத்திலேயே நிலைக்கவிட்டு.

“நவி.”

வேதனை துலங்கும் விழிகளால் அவனையே நோக்கிவிட்டு அங்கிருந்து போக முயன்றாள் அவள். “நவி நில்லு!” என்று எட்டிப் பிடித்து நிறுத்தினான் அவன்.

“காசப் பற்றி யோசிக்காம இருக்கேலுமா நவி? தப்பித்தவறி என்னால லாபம் பாக்கேலாம போயிற்றா?”

அவன் பணமாக இருந்தால் இந்த யோசனை வந்திருக்காதே. ஒரு வேதனை உள்ளே ஊடுருவ, “அந்த விபத்துல லொறி ஓடினவர்லதான் பிழை எண்டுறதால பெரிய தொகை இன்சூரன்ஸ்ல இருந்து வந்தது. வீட்டுக்கும் அப்பா இன்சூரன்ஸ் போட்டு இருந்ததால வீடும் சொந்தமாயிற்றுது. வேற பெரிய செலவு எண்டு எனக்கு ஒண்டுமே இல்ல. அதால என்ர சம்பளத்திலயும் பெரிய தொகை மாதம் மாதம் சேரும். அதால உங்களுக்குத் தேவையான காசு என்னட்ட இருக்கு.” என்றவள் அவனை ஒரு கணம் பார்த்துவிட்டுத் தொடர்ந்தாள்.

“நீங்க கடனாவே என்னட்ட வாங்குங்க. பிறகு திருப்பித் தாங்க. நானும் எந்தக் காலத்திலயும் உங்கட காசில் சாப்பிட மாட்டன்.” என்றுவிட்டுப் போனாள் அவள்.

ஒரு பக்கம் அவள் பேச்சினால் கோபம் எழுந்தாலும் இன்னொரு பக்கம் அவள் ரோசத்தை எண்ணிச் சிரிப்பும் உண்டாயிற்று. மற்ற மூவரும் இவர்கள் பேசட்டும் என்று காத்திருந்ததில் திரும்பவும் அவளைத் தடுத்து நிறுத்திப் பேசாமல் அவனும் அவள் பின்னால் சென்றான்.

“என்னம்மா, என்ன முடிவு எடுத்திருக்கிறீங்க?” முன்னால் வந்தவளிடம் திரும்பி வினவினார் சிவதாசன்.

அவள் பதில் சொல்ல முதல், “வாடகை, முற்பணம் பற்றி விசாரிங்கோ அங்கிள். முடிவு உடனே சொல்லோணும் எண்டு இல்லைதானே. கொஞ்சம் யோசிச்சுப்போட்டு முடிவு செய்வம்.” என்று சொன்னான் கேசிகன்.

அவனுக்கு இந்தக் கடை எடுப்பதாக முடிவானாலும் இங்கே கடைகளை நடத்தும் முறைகள், பொருள்களை எங்கிருந்து கொள்வனவு செய்வது, எப்படி இலாபம் வைத்து விற்கிறார்கள் என்று அனைத்தையும் அறிந்துகொள்ள வேண்டியிருந்தது.

அவள் கோபப்படுகிறாள் என்பதாலேயே கடையைச் சும்மா திறக்க முடியாதே. களத்தில் இறங்கிப் பார்க்க, தெரிந்துகொள்ள என்று நிறைய விடயங்கள் இருந்தன.

வீடு திரும்புகையில் நாவினிக்கு ஏன் மனம் சரியில்லை என்று அறிந்துகொண்டு, “கவனமா இருக்கிறது பிழை இல்லையே நவி.” என்று கேசிகன் பக்கம் நின்று சொன்னார் சிவதாசன்.

கவனமாக இருப்பது தவறில்லைதான். அவள் பணம் என்று எண்ணித் தயங்குவது வேறாயிற்றே. அவரிடம் அவனை விட்டுக்கொடுத்து எதையும் சொல்லாதபோதும் அவள் மனத்தின் சிணுக்கம் தீருவதாக இல்லை.

உதயன் கார் ஓடிக்கொண்டிருக்க சிவதாசன் அவன் அருகில் அமர்ந்திருந்தார். பின் பக்கம் பிரியா, நாவினி, கேசிகன் என்று அமர்ந்திருந்தனர். மற்றவர்கள் அறியாமல் அவள் கரம் பற்றி அழுத்திக்கொடுத்துச் சமாதானம் செய்ய முயன்றான் கேசிகன். நாசுக்காகக் கையை விலக்கிக்கொண்டாள் அவள். வியப்பும் சிரிப்புமாக அவளை நோக்கிவிட்டுத் திரும்பினான் கேசிகன்.

வீடு சென்று பார்த்தால் மேனகா சின்னவர்கள் இருவரையும் விளையாட விடுவதற்கு பார்க் அழைத்துச் சென்றிருந்தார். இரவு உணவையும் வெளியே முடித்துக்கொண்டு அவர்கள் வீட்டிற்கே கொண்டுவந்து விடுவதாகச் சொன்னார்.

கணவன் மனைவி இருவரும் நடந்தே வீட்டுக்கு வந்தனர். கேசிகனுக்கு அங்கே ஊரில் அவர்கள் இருவரும் இப்படி நடந்த பொழுதுகள் நினைவில் வந்தன. திரும்பி மனைவியைப் பார்த்தான். பிடிவாதக் கோபத்தில் அழுந்தியிருந்த அவள் உதடுகளையும் முகத்தையும் கண்டு அடக்கப்பட்ட சிரிப்பில் அவன் கண்ணோரங்கள் துடித்தன.

வீட்டுக்குள் வந்தபிறகும் அவனோடு ஒரு வார்த்தை பேசவில்லை அவள். ஷூக்களை கழற்றிவிட்டு, குளிருக்காக அணிந்துபோயிருந்த மேலங்கியைக் கழற்றி அதற்கான தாங்கியில் தொங்க விட்டுவிட்டு, விடுவிடுவென்று மாடியேறினாள்.

“என்ர மனுசிக்கு கோவம் நல்லாத்தான் வருது!” இடுப்பில் கைகளை வைத்து நின்று மேலே ஏறுகிறவளையே பார்த்துச் சொன்னான் கேசிகன். அவள் அசைவதாக இல்லை. தானும் தன் மேலங்கியைக் கழற்றிக் கொழுவிவிட்டு மாடி ஏறிச் சென்று அறையின் கதவைத் திறந்தான்.

அங்கே அவள் வீட்டுடைக்கு மாறிக்கொண்டிருந்தாள்.

“என்ன கோவம் உனக்கு?” என்றுகொண்டு அவளை நெருங்கினான் கேசிகன்.

அப்போதும் உடை மாற்றுவதிலேயே கவனமாக இருந்தாள் நாவினி.

“நவி!”

உடை மாற்றி முடித்தவள் அவனைப் பாராமல் தாண்டிக்கொண்டு செல்ல முயன்றாள். அதற்கு விடாமல் பற்றி நிறுத்தி, “கதைக்க மாட்டியா?” என்றான் அவன்.

அப்போதும் பதில் சொல்லாமல் பிடிவாதம் துலங்கும் முகத்தைத் திருப்பிக்கொண்டு நின்றாள் நாவினி. அவனும் விடாமல் அவளையே பார்த்து நின்றான். அவள் பார்வை மெல்ல மெல்ல தடுமாற ஆரம்பித்தது. எவ்வளவோ தடுக்க முயன்றும் முடியாமல் கன்னங்கள் சூடாக ஆரம்பித்தன. கீழுதட்டைப் பற்றித் தன்னைச் சமாளிக்க முயல, அவளையே பார்த்திருந்தவன் சத்தமாக நகைத்தான்.

“அழகியடி!” கிறங்கும் குரலில் கிசுகிசுத்துவிட்டு அவள் முகத்தைக் கைகளில் ஏந்தி இதழ்களில் ஆழ்ந்து முத்தமிட்டான். விலக மனமேயில்லை. பேச வந்ததை மறந்து முகம் முழுக்கத் தன் முத்திரைகளைப் பதித்தான். மீண்டும் இதழோடு இதழ் பொருத்தினான்.

இலேசாக விலகி, “நவிம்மா!” என்று தொண்டையைச் செருமிக்கொண்டு அழைத்தான். அவள் விழிகள் மயக்கத்தில் மூடியே இருந்தன. அவன் உதட்டினில் மெல்லிய முறுவல். “கேசி சொல்லு நவி.” என்று அவள் காதோரம் கிசுகிசுத்தான்.

பட்டென்று விழிகளைத் திறந்து பார்த்தாள் நாவினி. எப்போது எப்படி அவளைக் கட்டிலுக்குக் கொண்டுவந்தான் என்று அவளுக்குத் தெரியாது. ஆனால், அவன் கையணைப்பில் கிடந்தாள் அவள்.

“சொல்லு.”

என்ன திடீரென்று? அவள் பார்வை ஆச்சரியத்துடன் நோக்கிற்று.

“அனுப்பின மெசேஜ் முழுக்க அவ்வளவு உரிமையா எழுதி இருந்தியே. இப்ப கூப்பிட மாட்டியா?”

ஆரம்ப காலங்களில் கேசி அண்ணா என்று அழைக்கையில் இயல்பாக வந்தது. அதுவே அவனைத் தன்னுடைய நாயகனாக வரித்துக்கொள்ள ஆரம்பித்தபோது எழுந்த வெட்கமும் கூச்சமும் பெயர் சொல்ல விடவில்லை.

பிறகு மனத்தால் மிகவும் கலங்கிப்போயிருந்த காலத்தில்தான் மெசேஜ் அனுப்பினாள். அவையெல்லாம் அவள் உள்ளத்தின் அடியாழத்தில் கிடந்த தவிப்புகள். அதனாலோ என்னவோ இயல்பாய் வந்த அந்தக் கேசி இப்போது வரமாட்டேன் என்றது.

“சொல்லாம இண்டைக்கு உன்னை விடமாட்டன்.” தண்டனை கொடுக்கிறேன் என்கிற பெயரில் மோகம் கொண்டு அவளை முற்றுகையிட்டவனின் செய்கைகளில் நிலைகுலைந்துகொண்டிருந்தவளின் சுவாசமே தடம்புரண்டிருந்தது. பேச்சு எப்படி வரும்? அவன் சட்டையை இறுக்கிப் பற்றித் தன்னை நிலைநிறுத்த முயன்றாள். முடிய வேண்டுமே.

எப்போதுமே பக்கத்து அறையில் சின்னவன் இருக்கிறான் என்கிற கவனம் இருவரிடமும் இருக்கும். தம் உணர்வுகளுக்குக் கண்ணுக்குத் தெரியாத கட்டுப்பாடு ஒன்றை விதித்தபடியே கரையைக் கடப்பார்கள். இன்று அப்படி இல்லை. தடையில்லாத் தனிமையும், ஊடலின் பின்னான கூடலும் சேர கேசிகனைத் தடுப்பார் யாருமில்லாது போயிற்று.

“கே…சி!” திக்கித் திணறிச் சொன்ன பிறகாவது விடுவான் என்று பார்க்க, அதன் பிறகுதான் அவன் ஆசையும் வேகமும் அதிகரித்துப் போயிற்று. உணர்வுகள் கரையுடைத்து, உயிர் மொத்தமாக உருகி வழிந்து, அவள் மூர்ச்சையடைகிற பொழுதுகளில் எல்லாம் கேசி மட்டுமே அவள் இதழ்களில் நிறைந்துகிடந்தான்.

சண்டை சமாதானத்தில் முடிந்தாலும் சண்டைக்கான தீர்வு காணப்படாமலேயே அன்றைய இரவு கழிந்துபோயிற்று. அவளிடம் பணம் இருக்கிறது என்பதற்காக எடுத்ததும் பெரிதாக ஆரம்பிக்கத் தயங்குவதற்கான காரணங்களை அடுத்த நாள் அவளிடம் விளக்கிச் சொன்னான் கேசிகன்.
 

Vishakini

Moderator
Staff member
அவன் சொல்வதில் இருக்கும் நியாயம் இப்போது புரிந்தது அவளுக்கு. பாதிக் கடையைத் தற்போதைக்கு ஸ்டோர் பகுதியாக அடைத்துப் பாவித்துக்கொண்டு மிகுதியில் கடையை ஆரம்பிக்கச் சொன்னாள். அதுவும் சரியாகவே பட்டது அவனுக்கு. அதுபோன்ற முக்கிய வீதியில் இப்படி ஒரு கடை கிடைப்பது இலகு இல்லை என்று சிவதாசனும் சொன்னார். அவருக்கும் கேசிகன் அந்தக் கடையைத் தவற விடுவதில் உடன்பாடு இல்லை.

அதில் ஆறு மாதங்கள் கழித்துக் கடையை வாடகைக்கு எடுத்துக்கொள்வதாகக் கடை உரிமையாளரிடம் பேசினார்கள். பலசரக்குக் கடை திறப்பதற்கான அனுமதியை அரசாங்க அலுவலகத்தில் பெறுவதற்குமே ஒரு சில மாதங்கள் எடுக்கும் என்பதில் உரிமையாளரும் சம்மதித்தார்.

கேசிகனுக்கும் படித்துக்கொண்டிருக்கும் ஜெர்மன் மொழி கோர்ஸை முடித்து, டிரைவிங் லைசென்ஸையும் பழகி முடிக்க இந்தக் கால இடைவெளி தேவையாய் இருந்தது. அதற்குள் தேவையான தகவல்களையும் திரட்டிக்கொண்டுவிடலாம் என்று திட்டமிட்டான்.

இப்படி இருக்கையில்தான் பிரேமாவிற்குப் பயணம் சரிவந்தது. சஜிதனைக் கையிலேயே பிடிக்க முடியவில்லை. அன்று மாலை மூவருமாக மேனகா வீடு சென்றபோது, “மேனு அம்மம்மா, உங்களுக்குத் தெரியுமா, என்ர அப்பும்மா வரப்போறா. ஃபிளைட்ல இடம் கிடச்சிட்டாம்.” என்று கதை சொன்னான்.

அவரை அவன் அழைத்த விதத்திலேயே மயங்கிப்போனார் மேனகா. “இந்த மனுசனக் கட்டி முப்பது வருசத்துக்கும் மேல ஆகுது. ஒரு நாள் செல்லப் பெயர் சொல்லிக் கூப்பிட்டிருக்க மாட்டார். ஆனா எங்கட செல்லம் எப்பிடிக் கூப்பிடுறார் பாருங்கோ.” என்று சொல்லி சொல்லி மகிழ்ந்தார்.

அன்று அதிகாலையிலேயே வந்திறங்கினார் பிரேமா. மகன் மருமகளுக்கிடையில் இருந்த பிணைப்பு அவர் உள்ளத்தை நிறைத்தது. அதுவும் எலும்புக்கூடு போன்ற தோற்றம் முற்றிலும் மாறி, அவர் மகனோடான நிறைவான வாழ்க்கை கொடுத்த பொலிவிலும் பூரிப்பிலும் பேரழகியாக ஜொலிக்கும் நாவினியைக் கண்டு மகிழ்ந்தார்.

அவளும் முகம் முழுக்கப் புன்னகை மின்ன ஓடி வந்து, மாமி என்று அணைத்துக்கொண்டபோது, “சந்தோசமய்யா!” என்று மகன் கன்னம் வருடிச் சொன்னார் பிரேமா.

அதைவிடவும் பேரானந்தம், அவரைக் கண்டுவிட்டு, “அப்பும்மா!” என்று சத்தமாகக் கூவிக்கொண்டு ஓடிவந்த அவர் பேரன்தான்.

“என்ர ராசனடி! இந்தக் குஞ்சன எப்பிடியாவது பாத்திடோணும் எண்டு உயிரை இறுக்கிப் பிடிச்சுக்கொண்டு வந்தனானையா.” என்று அவனை அள்ளியணைத்துக் கண்ணீர் விட்டு அழுதார் அவர்.

நாவினியும் கேசிகனும்தான் அவரைத் தேற்றி அழைத்து வந்தனர். அன்று போலவே இன்றும் மேனகா குடும்பத்தினர் நாவினி வீட்டில் நின்று பிரேமாவை அன்புடன் வரவேற்று உபசரித்தனர்.

அத்தனையும் மனத்துக்கு நிறைவான தருணங்கள் என்பதில் பிரேமாவின் விழிகள் கசிந்துகொண்டேயிருந்தன. பேரனை இறக்கி விடவேயில்லை. அவனும் அப்பும்மா அப்பும்மா என்று இத்தனை மாதத்துக் கதைகளையும் அந்த ஒற்றை நாளில் சொல்லிவிட முயன்றான். அவனுக்குத் தெரிந்த அத்தனை ஜெர்மன் சொற்களையும் அன்றே அவருக்குச் சொல்லிக்கொடுத்துவிட நின்றான்.

உணவு முடிந்து உறக்கத்துக்கு என்று மேலே அழைத்துச் சென்ற நாவினி, இத்தனை காலமும் அவர்களின் இரகசிய ஆலோசனை நடக்கும் அறையை அவருக்கென்று கொடுத்தாள்.

அவளின் பொல்லாத கணவன் அடக்கிய சிரிப்புடன் அவளைப் பார்வையால் சீண்டுவது தெரியாமல் இல்லை. காது மடல்கள் வரை சூடேறினாலும் அவன் புறம் திரும்பவே இல்லை அவள்.

அவருக்கு ஹீட்டர் போட்டு நிறுத்துவது எப்படி, அதை அவருக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்வது எப்படி என்று எல்லாம் சொல்லிக்கொடுத்தாள். அவர் பெட்டியில் கொண்டுவந்த உடைகளை எல்லாம் அங்கிருந்த அலமாரியில் அவளே எடுத்து அடுக்கிவைத்தாள்.

தினமும் காணொளி அழைப்பில் பேசினாலும் அவளுக்கும் அவரிடம் சொல்ல நிறைய விடயங்கள் இருந்தன. கட்டிலில் அமர்ந்திருந்த பிரேமா, மடியில் படுத்திருந்த பேரனின் தலையை ஒரு கையினாலும் பக்கத்தில் படுத்திருந்த மகன் கேசத்தை இன்னொரு கையினாலும் வருடி விட்டபடியே மருமகளின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

சின்னவனைப் பிரேமா தன்னுடனேயே வைத்துக்கொண்டார். இதை எதிர்பார்த்திருந்தாலும் களைப்பு ஆற அவரை நன்றாக உறங்கி எழச் சொன்னாள் நாவினி. அவர் மறுத்துவிட்டார். அதுவும், “இந்தப் பெரிய மனுசனை கைக்க வச்சுக்கொண்டு படுத்தாத்தானம்மா எனக்கு மனமே ஆறும்.” என்று அவர் சொல்லிவிட, மறு பேச்சுப் பேசவில்லை கேசிகனும் நாவினியும்.

தம் அறைக்குள் வந்து நாவினி கதவடைக்கவும் கண்ணாலேயே சிரித்தான் கேசிகன். நாவினிக்குத் தலையை நிமிர்த்தவே முடியவில்லை. சத்தமில்லாமல் நகைத்தபடி அவளைத் தன் கைகளுக்குள் கொண்டுவந்து, “மூண்டு மாதத்துக்கு ராஜ யோகம்தான்.” என்றான் அவள் காதோரம்.

இல்லாட்டி மட்டும் என்று எழுந்த கேள்வியை அவள் கேட்கவில்லை. மகிழ்ச்சிக்குக் குறைவில்லாமல் நாள்கள் விரைய ஆரம்பித்திருந்தன.

சின்னவனுக்கு கிண்டர் கார்டன், கேசிகனுக்குக் காலையில் டொச் வகுப்பு, மாலைகளில் சிவதாசன் அல்லது உதயனோடு கடை விசயமாக எதையாவது அறிந்துகொள்ளச் செல்வது என்று போனது. டிரைவிங் லைசென்ஸும் படிக்க ஆரம்பித்திருந்தான். நாவினிக்கு வேலை என்றால், பிரேமா வீட்டின் பொறுப்பை மொத்தமாக எடுத்துக்கொண்டிருந்தார்.

அன்று நாவினிக்கு மாலை நான்குமணி வரை வேலை இருந்தது. கேசிகன் வகுப்பை முடித்துக்கொண்டு வந்து உதயனோடு வெளியே சென்றிருந்தான். பிரேமாவும் சின்னவனும் தனியே என்பதில் அவர்களைத் தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டிருந்தார் மேனகா.

வேலையை முடித்துக்கொண்டு வீடு வந்த கேசிகன், நாவினி சோஃபாவிலேயே சுருண்டு படுத்திருக்கவும் நேராக அவளிடமே வந்தான்.

“நவி என்னடா?” என்று வந்து அவளருகில் அமர்ந்தான்.

“தெரியா கேசி. ஏலாமயே இருக்கு. இண்டைக்குக் கதிரைல இருந்துப்போட்டு என்னத்துக்கோ டக்கெண்டு எழும்பத் தலையைச் சுத்திக்கொண்டு வந்திட்டுது.” என்று சொல்லிக்கொண்டு வந்தவளின் பேச்சில் சட்டென்று உறைந்தான் கேசிகன். கடந்த சில நாள்களாகவே சோர்வும், ஒழுங்கான உணவின்மையும் அவளைப் போட்டு வாட்டுவது தெரியும்.

“நவி, இந்த மாதம் உனக்குப் பீரியட்ஸ் வரேல்ல எல்லா?” என்றான் சட்டென்று தொற்றிக்கொண்ட பரபரப்புடன்.

புருவங்களைச் சுருக்கி யோசித்துவிட்டு, “இல்லை என்ன?” என்றவளும் விழிகளை விரித்தாள். “கேசி?” நம்ப முடியா ஆனந்தமும் அதிர்ச்சியுமாகக் கூவினாள் அவள்.

“நவிம்மா! டேய் பெட்டச்சி!” அவளை அப்படியே பூப்போன்று அள்ளி அணைத்தவனின் குரல் கரகரத்தது.

மெல்ல அவள் ஆடை விலக்கி வயிற்றைத் தடவினான். அதற்கே ஆனந்தக் கண்ணீர் சொரிந்தாள் நாவினி. “அதுதானா?” என்றாள் ஆவலும் பயமுமாக. அவன் விழிகளும் பனித்தன. “அப்பிடித்தான் இருக்கோணும்.” என்றான்.

அதன் பிறகு கணமும் தாமதிக்கவில்லை அவர்கள். இருவருமாகச் சென்று கருத்தரித்தலை உறுதி செய்யும் கருவியை(Pregnancy Test Kit) வாங்கிக்கொண்டு வந்தார்கள்.

அவளைக் குளியலறையினுள் விட்டுவிட்டு, ஆசைப்பட்டது போலவே அமைந்துவிட வேண்டும் என்கிற பிரார்த்தனையுடன் வெளியில் காத்திருந்தான் கேசிகன். நாவினி கதவைத் திறந்தாள். கன்னம் நனைக்கும் கண்ணீரும் புன்னகையுமாக அவன் முன்னே கையை நீட்டினாள்.

அவள் உள்ளங்கையில் இருந்த கருவியில் இரண்டு கோடுகள் விழுந்து கிடந்து, அவர்கள் நால்வராகிவிட்டதைச் சொல்லிற்று.

பாய்ந்து அவளை அணைத்துக்கொண்டு தன் மகிழ்ச்சியை முத்தங்களாக அவளிடம் மொழி பெயர்த்தான் கேசிகன்.

விடயம் அறிந்த பிரேமா மட்டுமல்ல, மேனகா குடும்பமும் சேர்ந்து ஓடி வந்தார்கள். அடுத்த சில மணித்துளிகள் அந்த வீடு ஆனந்தத்தில் பூத்துக் குலுங்கிற்று.

கேசிகனை ஆரத்தழுவித் தன் மகிழ்வைப் பகிர்ந்தான் உதயன். பிரியா நாவினியைக் கேலி செய்தே ஒரு வழியாக்கினாள். பெரியவர்கள் மூவருக்கும் கண்ணீரும் சந்தோசமும் கலந்து வந்தன. பிரேமா உடனேயே மகன் குடும்பத்தை மொத்தமாக நிறுத்திச் சுற்றிப் போட்டார்.

கணவனின் கைப்பிடியில் அமர்ந்திருந்து தன் பெற்றவர்களையே கண்ணீர் அரும்பிய விழிகளால் அவள் பார்த்திருக்கக் கண்டு, “ஒண்டுக்கும் கவலைப்படக் கூடாதம்மா. உங்கட அம்மாவோ அப்பாவோதான் பிள்ளையா வந்து பிறப்பினம்.” என்றதும் புன்னகையுடன் தலையசைத்து ஆமோதித்தாள் நாவினி.

விடயம் அறிந்த பெரிய மனிதனுக்கும் கொண்டாட்டம். அப்போதே அவள் சட்டையைத் தூக்கி வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையைப் பார்க்க நின்றான். “அப்பா எப்பப்பா பேபி வெளில வரும்? நேற்றைக்கா?” என்று தந்தையிடம் கேட்டான்.

எல்லோர் முகத்திலும் முறுவல். ‘நாளைக்கா’ என்று கேட்க வேண்டும் என்று திருத்திவிட்டு மகனைத் தூக்கி மடியில் அமர்த்திக்கொண்டு, “இப்பதான் அம்மான்ர வயித்துக்க பேபி வந்திருக்கு. அது கொஞ்சம் வளரோணும். வளர வளர அம்மான்ர வயிறும் வளரும். பிறகு நாங்க ஆஸ்பத்திரிக்கு போனா, டொக்டர் அம்மான்ர வயித்துக்க இருந்து பேபிய வெளில எடுத்துத் தருவார்.” என்று அவனுக்குப் புரிவதுபோல் விளக்கினான்.

“ஊசி போட்டா?”

“ஓம், ஊசி போட்டுத்தான்.”

“அம்மாக்கு நோகும் எல்லா?”

“நாங்க நோகாம போடச் சொல்லுவம் சரியா?”

அதன் பிறகும் அவனுக்குப் பல கேள்விகள் இருந்தன. பொறுமையாக எல்லோரும் பதில் சொல்லினர். மகப்பேறு வைத்தியரும் குழந்தைதான் என்று உறுதி செய்தார்.
கண்ணும் கருத்துமாகப் பிரேமாவுடன் சேர்ந்து மேனகாவும் அவளைப் கவனித்துக்கொண்டனர்.
 

Vishakini

Moderator
Staff member
முதல் குழந்தை என்பதாலா, இல்லை அன்னையோ தந்தையோதான் வந்து பிறக்கப்போகிறார்கள் என்று அடி நெஞ்சில் ஆழமாக விழுந்துவிட்டதாலா, கொடூரமான பல இழப்புகளைக் கண்முன்னே கண்டுவிட்டதாலா தெரியாது. அப்போதிருந்தே தேர் அசைவதுபோல் தன்னையும் தன் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் மிகவும் பக்குவமாக அவளும் கவனித்துக்கொண்டாள்.

ஒரு நாள் இரவு, தன் அணைப்பினுள் இருந்தவளை இதமாக வருடிக்கொடுத்துக்கொண்டிருந்தான் கேசிகன். சிந்தனை பிறக்கப்போகும் குழந்தை பற்றிய இனிய கற்பனையில் மூழ்கியிருந்தது.

ஏதோ ஒரு இனிய கற்பனை தந்த தித்திப்பில் அவள் மீதான தன் நெருக்கத்தைக் கூட்டி அவன் முத்தமிடவும், “கேசி!” என்றாள் கலவரத்துடன். ஒன்றும் புரியாமல் தலையைத் தூக்கி பார்த்தான் கேசிகன். அவள் முகத்தில் இருந்த கலவரம் விடயத்தைச் சொல்ல, “அடிப்பாவி! ஆசையா கட்டிப்பிடிக்கக் கூட விடமாட்டியா?” என்று கேட்டுச் சிரித்தான்.

அவளுக்கும் வெட்கமாயிற்று. “இல்ல அது…” என்று இழுத்தாள்.

“ம் அது?”

“அது…”

“சொல்லு நவி. அது?” விரிந்து பெரிதான அவன் முறுவல் அவளைக் கண்டுகொண்டான் என்று சொல்ல, “ஒண்டுமில்ல!” என்றுவிட்டு அவனிடமே தன்னை ஒளித்துக்கொண்டாள் அவள்.

“அந்தளவுக்குக் கவனமில்லாம இருப்பனா?” என்று கேட்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டான் அவன். “என்ர மனுசி அம்மாவாகியிருக்கிறாள். எனக்கு இன்னொரு பிள்ளை வரப்போகுது எண்டு யோசிக்கச் சந்தோசமா இருந்தது. அதுதான்.” என்றான் அவள் கன்னம் வருடி.

உதட்டில் மலர்ந்த முறுவலோடு அவனையே நோக்கினாள் அவள்

“என்ன?”

ஒன்றுமில்லை என்று குறுக்காகத் தலையை அசைத்தாள் அவள்.

“இப்பிடி நீ செய்தாலே மனதுக்க என்னத்தையோ வச்சிருக்கிறாய் எண்டு தெரியும். சொல்லு!” என்றான் அவன்.

“தம்பிக்கும் பிறக்கப்போற பிள்ளைக்கும் வித்தியாசம் காட்டிப்போடுவனோ எண்டு உங்களுக்குப் பயமா இல்லையா?”

அவன் புன்னகைத்தான். “அப்பிடி நான் யோசிக்கிறதே உனக்குச் செய்ற அநியாயம் இல்லையா நவி?” என்று கேட்டான். “நீ அப்பிடி நடக்கமாட்டாய். அதவிடத் தம்பியும் உன்ர மகன்தான். பிறகு ஏன் எனக்கு அப்பிடி ஒரு யோசனை வர?” என்றதும் கண்ணீருடன் புன்னகைத்துக் கணவனின் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். அவன் முகம் முழுக்க முத்தமிட்டு, அவன் உதட்டிலும் தன் உதடுகளைத் தன்னால் முடிந்தவரையில் அழுத்தமாக ஒற்றி எடுத்தாள்

சின்ன முறுவலோடு கண்களை மூடி அவள் தந்த முத்தத்தின் தித்திப்பை அனுபவித்தான் கேசிகன்.

“என்ர அம்மாவ மாதிரியே தம்பிய நானும் வளக்கோணும். உங்களை விடவும் தம்பி என்னோடதான் பாசமா இருக்கோணும். நாளைக்கு வளந்த பிறகு அம்மா எண்டு சொன்னா அவருக்கு என்னை மட்டும்தான் நினைவு வரோணும். நான் அப்பிடித்தான் வளப்பன்.” சூளுரைப்பதுபோல் சொன்னவளை விரிந்த சிரிப்போடு பார்த்தான் அவன்.

தன் வயிற்றில் இருக்கும் குழந்தை மீதான கற்பனைகளையும் கனவுகளையும் காட்டிலும் கையில் இருக்கும் மகன் மீதான அவள் கனவுகளும் கற்பனைகளும் அதிகம் என்று புரிந்தது. அவளைத் தன் மார்பில் சேர்த்து, “எனக்கு என்ர பெட்டச்சியத் தெரியும்.” என்றான் ஆத்மார்த்தமாக.

*****

அன்று ஜெர்மனியின் குமர்ஸ்பாக் நகரில் இருக்கும் குறிஞ்சிக் குமரன் ஆலயத்திற்குக் குடும்பமாகப் புறப்பட்டார்கள். சின்னவனைக் கேசிகன் குளிக்கவார்த்துக்கொண்டிருந்தான்.

அவனுக்குத் தொப்பியுடன் கூடிய துவாய்(hooded bath towel) குளித்துவிட்டு அணிந்துகொள்ள விருப்பம் என்பதில் அதை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் உள்ளிட்டாள் நாவினி.

அப்போதுதான் குளித்து முடித்து வெளியில் வந்திருந்த சின்னவன், படக்கென்று தன் இரகசியப் பெட்டகத்தை இரண்டு கைகளாலும் பொத்திக்கொண்டு, அவளுக்கு முதுகு காட்டி திரும்பி, “நவி அம்மா! ஒரு பெரிய மனுசன் குளிக்கேக்க இப்பிடி வரக் கூடாது!” என்றான் உத்தரவாக.

அவன் என்ன சொன்னான் என்று புரிந்துகொள்வதற்கே நாவினிக்குச் சில பல நொடிகள் பிடித்தன. புரிந்தபோது நம்ப முடியாமல் விழிகளோடு சேர்த்து வாயையும் ஆவென்று பிளந்தாள். கணவனைப் பார்க்க அவன் அவளிடம் கண்ணால் சிரித்துக்கொண்டிருந்தான்.

அப்பாக்கும் மகனுக்கும் சேட்டை! துவாயைத் தூக்கிக் கேசிகனின் மீது வீசிவிட்டு வந்தவளுக்குச் சிரிப்பையும் அடக்க முடியவில்லை, கடுப்பையும் அடக்கமுடியவில்லை.

என்ன என்று கேட்ட பிரேமாவிடமும் விடயத்தைச் சொன்னாள். அவருக்கும் பேரனை எண்ணிப் புளகாங்கிதம். “நித்திரைல என்ன செய்தாலும் பேசாம இருக்கிறவருக்கு முழிச்சிருக்கேக்க மட்டும்தான் மான ரோசம் எல்லாம்.” என்று சிரித்தார் அவர்.

தலையைத் துவட்டி, மகனை அவள் தந்த டவலில் சுத்தியபடி கொண்டுவந்து அன்னையிடம் கொடுத்துவிட்டுக் கீழிறங்கி வந்தான் கேசிகன். சமையலறையில் நின்றவளைப் பின்னிருந்து அணைத்து, “ஒரு ஆம்பிளப் பிள்ள உடுப்பில்லாம நிக்கிறதப் பாக்கிறதெல்லாம் என்ன பழக்கம் உனக்கு?” என்றான் அதட்டலாக.

திரும்பிப் பார்த்தவள் விழிகளில் விசமம் வழிந்தது.

“என்ன?” என்றான் அவன் புரியாமல்.

“அப்பாக்கே கூச்சம் போயிட்டுதாம். மகனுக்குப் போக வைக்கிறது எல்லாம் சின்ன விசயம்.” என்றதும் வேகமாக அவள் வாயைப் பொத்தி, “என்னடி இது, இப்பிடி எல்லாம் கதைக்கிறாய்?” என்றான் நம்ப முடியாமல்.

“வேற எப்பிடிக் கதைக்க? முளைச்சு மூண்டு இல விடேல்ல. இதில அவரை நான் பாக்கக் கூடாதாம்.” அவன் கையைத் தன் வாயிலிருந்து அகற்றிவிட்டுச் சிரிப்புடன் சொன்னாள் அவள்.

“அதுக்கு என்னத்துக்கு அவன்ர அப்பாவ இழுக்கிறாய்?”

“நான் என்ன பொய்யா சொல்…”என்றவளை, “வாயை மூடடி!” என்றவன் தானே அந்தக் காரியத்தைச் செய்திருந்தான். அவள் கண்கள் அவனிடம் குறும்புடன் சிரித்தன.

சிரிக்கும் அந்த முகத்தையே ஆசையாகப் பார்த்தவனுக்கு மனம் நிறைந்திருந்தது. அவள் கன்னத்தில் இதழ் பதித்து விலகினான்.

அப்பாவும் மகனும் எப்போதும்போல் ஒரே போன்ற வேட்டி சட்டையில் தயாராகி வந்தனர். முக்கியமாக நெற்றி முழுக்கப் பட்டை, பெரிய சந்தனப் பொட்டு, காதோரம் பூ என்று முழுமையான கள்ளச் சாமியார் கோலத்தில் இருந்தான் அந்த வீட்டின் பெரிய மனிதன்.

“நவி அம்மா, வாங்கோ! நாங்க கோயிலுக்குப் போய், பேபி சுகமா பிறக்கோணும் எண்டு அப்புச் சாமிட்ட சொல்லிப்போட்டு வருவம்.” என்று அவள் கரம் பற்றி அழைத்துக்கொண்டு நடந்தான் அவன். அவர்கள் பின்னால் மலர்ந்த முறுவலோடு மற்ற இருவரும்.

முற்றும்.
 
Top Bottom