• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

11. தாமரை இலையுள் உறை தண்ணீராய்...!!

STN - 72

New member
Staff member
உறைநீர் - 11

அப்பாவா? என்ன சொல்ற.. அவர் உன் அப்பாவா எப்படி இருக்க முடியும்? என் மாமா என் அத்தையை கல்யாணம் பண்ணிக்கிட்டதிலிருந்து அவங்களோட தான் இருந்தாரு.. இன்னும் சொல்லப் போனா அத்தைக்கு உடம்பு சரியில்லைன்னு அவர் எதோ அவங்களுக்கு ட்ரீட்மென்ட் பார்க்க அப்ராட் போயிருந்தாரு.. சிந்து அப்ப எங்களோட தான் இருந்தா.. அப்புறம் சிந்துவுக்கு ஒரு தங்கச்சி பாப்பா பொறந்திருக்குன்னு சொன்னாங்க.. ஆனா ரியா.. ரியாக்கும் உன் வயசு தான்.. அப்படி இருக்கும் போது அவர் எப்படி?"

குழம்பிப் போனான் அவன்..

"சரி.. அதை விடு.. அவர்தான் உன் அப்பான்னா இங்க வந்த உடனே நீ அதை சொல்லி இருக்கலாமே.."

"சொல்லி இருந்தா.. சொல்லியிருந்தா என்ன பண்ணி இருப்பீங்க?"

"சொல்லி இருந்தா.. இந்த வீட்டு பொண்ணா.."

அதைக் கேட்டு விரக்தியாய் சத்தம் போட்டு சிரித்தாள் அவள்..

"இந்த வீட்டு பொண்ணா? அந்த மனுஷனுக்கு பொண்ணுன்னு சொல்லிக்கறதையே நான் வெறுக்கிறேன்.. தனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இருக்கிறதை மறைச்சு ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணி ஒரு குழந்தை பிறந்த அப்புறம் நிர்க்கதியா என்னையும் எங்க அம்மாவையும் விட்டுட்டு போனவரை நான் எப்படி என் அப்பான்னு சொல்லிக்க முடியும்..? அந்த மனுசனை மனுஷன்னு சொல்றதுக்கே எனக்கு வாய் கூசுது.. இதுல அப்பான்னு வேற சொல்லணுமா? இன்னைக்கு நான் இருக்கற நிலைமைக்கு காரணமே அவர்தான்.. அவர் மட்டும் எங்க அம்மாவை ஏமாத்தாம இருந்திருந்தா எங்க அம்மா வேற யாராவது ஒரு நல்லவரை கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லபடியா இருந்திருப்பாங்க.. அவங்களும் அப்படி ஒரு கேவலமான வாழ்க்கையை வாழ்ந்து இப்படி நாசமா போகிற நிலைமை வந்து இருக்காது.. இவ்வளவு பண்ணின மனுசனை நான் அப்பான்னு வேற கூப்பிடணுமா?"

அவள் கண்களில் இருந்த தீர்க்கம் அவனிடம் அவள் பொய் சொல்லவில்லை என்று கட்டியம் கூறியது.. அவளைப் பார்த்தபோது அவனுடைய மாமனின் முகத்தில் இருந்த கலக்கம் குழப்பம் இது எல்லாமே அவள் சொல்வதில் உண்மை இருப்பதாகத் தான் அடித்து சொல்லியது.. ஆனால் இன்னும் கூட ஏனோ தன் மாமனை ஒரு பெண்ணுக்கு துரோகம் செய்பவராய் எண்ணிப் பார்க்க முடியவில்லை அவனால்..

"சரி.. நீ அவரை அப்பானு கூப்பிட வேண்டாம்.. இப்ப நீ வெளியில போனா உனக்கு ரொம்ப ஆபத்து.. அதுக்காக என்னோட வீட்டுக்கு வா.. நீ அங்க இரு.. நீ அவரோட பேச வேணாம்.. அவரை பார்க்க வேண்டாம்.. இத்தனை நாள் எப்படி இருந்தியோ அப்படியே இரு.. நீ அவரை அப்பானு கூப்பிட்டாலும் இல்லைன்னாலும் நீ அவர் பொண்ணு தான்கறதை மாத்தமுடியாது.. நீ அந்த வீட்டு பொண்ணு.. உனக்கு அந்த வீட்டில முழு உரிமை இருக்கு.. நீ அந்த வீட்டிலதான் இருக்கணும்.. உனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கு.. அவரு உன் அப்பான்னு நீ சொன்னப்புறம் நீ எக்கேடோ கெட்டுப் போன்னு உன்னை இப்படியே என்னால போக விட முடியாது.. நீ வீட்டுக்கு வந்து தான் ஆகணும்.."

அவன் அழுத்தமாய் சொல்ல அவளோ "என்ன? என்னை ஃபோர்ஸ் பண்றீங்களா? உங்க மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்.. என்னால அந்த வீட்டுக்கு வர முடியாது.. எங்க அம்மாவுக்கு துரோகம் செஞ்சவரு இருக்கிற வீட்ல என்னால வாழவும் முடியாது.." என்றாள் குரலில் அதே போன்ற அழுத்தத்தோடு..

"அவ்வளவுதானே.. என் மாமாவை வெளியில எங்கேயாவது தங்கிக்க சொல்லறேன்.. நீ அங்க வந்து இரு.. அப்ப ஓகேவா?"

"அவர் பொண்ணுன்னே சொல்லிக்க விரும்பலன்னு சொல்றேன்.. உங்களுக்கு புரியுதா இல்லையா? என்னை விடுங்க.. நான் இப்படியே போறேன்.." என்று அங்கிருந்து போக எத்தனித்தவளின் கையைப் பிடித்து அப்படியே தூக்கி தன் தோளில் போட்டுக் கொண்டான் தமிழ்..

மறுபடியும் அவளை வண்டியில் அமர வைத்து அழைத்து சென்றால் எங்கே வெளியே குதித்து ஓடி விடுவாளோ என்று எண்ணியவன் அவளை தோளில் சுமந்தபடியே வீட்டுக்கு நடந்தே வந்தான்..

"என்ன பண்றீங்க சார்.. விடுங்க என்னை.." என்று அவனிடமிருந்து திமிறியவளின் வார்த்தைகளை கண்டு கொள்ளவே இல்லை அவன்..

"அதான் மாமா உன்னோட அப்பான்னு சொல்லிட்ட இல்ல..? அப்படின்னா நான் உன் அத்தை பையன் தானே? இனிமே இந்த சாரு மோருன்னெல்லாம் கூப்பிடாத.. என் பெயர் சொல்லி தமிழ்ன்னு கூப்பிடு.. இல்ல அத்தான்னு உறவு சொல்லி கூப்பிடு.."

இனி அவளை தள்ளி இருக்க விட்டால் மறுபடியும் அங்கிருந்து கிளம்பி ஆபத்தில் சிக்கிக் கொள்வாள் என்று தோன்றியது அவனுக்கு.. மாமனிடம் பேசி அவள் சொல்லும் விஷயங்களைப் பற்றிய உண்மைகளையும் வாங்க வேண்டி இருந்தது அவனுக்கு.. இதற்கு ஒரே வழி அவளை அந்த வீட்டு பெண்ணாய் உணர வைப்பது மட்டுமே என்று தோன்ற அதை செயல்படுத்தத் தொடங்கியிருந்தான் அவன்..

"என்ன அத்தானா? அவரு எனக்கு அப்பாவே இல்லைன்கிறேன்.. அப்புறம் எங்க வந்தீங்க அத்தான் எனக்கு.. ப்ச்.. என்னை இறக்கி விட போறீங்களா இல்லையா சார்?"

"ம்ம்.. இறக்கி விடணுமா? அத்தான்னு கூப்பிடு.. இறக்கி விடுறேன்.. இல்லன்னா இறக்கி விட மாட்டேன்.."

அவன் அவளை சிக்க வைக்க அந்த வார்த்தைகளை சொல்லி இருக்க அவளோ அவனிடமிருந்து தப்பித்தால் போதும் என்று எண்ணத்தில் "சரி இறக்கி விடுங்க அத்தான்" என்று சொன்னாள்..

அவனும் இறக்கி விட அடுத்த நொடி அவனிடம் இருந்து விலகி எதிர்பக்கம் அவள் நடையை கட்ட அவள் கையோ இறுக்கமாய் சிறைபட்டிருந்தது அவன் பிடியில்..

"விடுங்க கையை.. நான் போறேன்.." என்று அவள் கையை விடுவிக்க முயல

"இனிமே நீ எங்கேயும் போக முடியாது.. என்னை அத்தான்னு கூப்பிட்ட இல்ல..? அப்போ நீ அந்த வீட்டுப் பொண்ணு தானே? வீட்டுக்கு வர்றே.. அவ்வளவு தான்.." என்று அவள் கையைப் பிடித்து தரதரவென இழுத்துக் கொண்டு போனான் அவன்..

அவளோ வாயடைத்து போனாள்..
பின்னே.. அவனும் போலீஸ்காரன் ஆயிற்றே.. எவ்வளவு பேரை சமாளித்து இருப்பான் இது போல.. இவளெல்லாம் எம்மாத்திரம்? வேறு வழியின்றி வாயில் அவனை அரைத்துக் கொண்டே அவனை பின் தொடர்ந்தாள் நிலா..

அவன் நிலாவோடு வீட்டுக்குள் நுழைந்த நேரம் அங்கே திருமணத்திற்கு சென்றிருந்த பெரியவர்கள் அனைவருமே திரும்பி வந்து இருந்தார்கள்.. வரவேற்பறையில் அவர்களை கண்டதுமே திடுக்கிட்டு போனான் தமிழ்..

நிலாவோ அங்கே ஜெகநாதனை பார்த்ததுமே பார்வையாலேயே அவரை எரித்து கொண்டிருந்தாள்..

விஷயம் கேள்விப்பட்டு சுனிதாவும் அங்கே வந்திருந்தாள்..

அங்கிருந்த எல்லோரும் தமிழைக் கேள்வியாய் பார்க்க அவனோ அவன் மாமனை தான் கூர்ந்து பார்த்திருந்தான்..

ஜெகந்நாதனின் பார்வையோ நிலாவின் எரிக்கும் பார்வையை தாண்டி அவளை ஆதூரமாய் கண்களாலேயே வருடிக் கொண்டிருந்தது..

இதில் ஏதோ ஒரு தவறான புரிதல் இருக்கிறது என்று மட்டும் தமிழுக்கு புரிந்தது.. நிச்சயம் தன் மாமன் தவறு செய்திருக்க வாய்ப்பில்லை என்று நம்பினான் அவன்..

அவரை நேராக பார்த்தவன் "மாமா என்ன விஷயம்னு நீங்களே சொல்றீங்களா? இல்ல நான் உங்களை கேள்வி கேட்கணுமா? அதுக்கு அவசியம் இருக்காதுன்னு நினைக்கிறேன்.." என்றான்..

நிலா தமிழ் இருவரின் பார்வையுமே ஜெகந்நாதனை விட்டு இம்மியும் நகரவில்லை..

சிவனேசன் "தமிழ்.. உன் கேள்விக்கான பதிலை நான் சொல்றேன்.. நிலா ஜெகந்நாதனோட பொண்ணு.. ஜெகநாதனுக்கும் சீதாவுக்கும் பிறந்த பொண்ணு.. நிலா பார்க்க சீதா மாதிரியே இருந்தததனால அவ இங்க வந்த அப்பவே எங்க எல்லாருக்குமே சந்தேகமா தான் இருந்தது.. அதனாலதான் பூமாவும் தெய்வானையும் நிலா கிட்ட அவங்க அம்மா பேர் என்னன்னு கேட்டாங்க.. அப்பவும் அவ சொல்லல.. அந்த பொண்ணு சூர்யா அவ அம்மா பேரு மேனகான்னு சொல்லி இருக்கா.. அந்த தப்பான இடத்துல இருந்தப்போ சீதா பேரை மேனகான்னு மாத்தி இருக்காங்க.. இது அவங்க ரெண்டு பேருக்கும் தெரியாது.. அதனால அவ சீதாவோட பொண்ணு இல்லன்னு நினைச்சுக்கிட்டு அவங்க அந்த விஷயத்தை அப்படியே விட்டுட்டாங்க.."

அங்கிருந்த அனைவருமே பேச்சற்று போயிருந்தார்கள் அவர்கள் சொன்ன கதையில் இருந்து..

சிந்து ரியா என அனைவரும் அங்கே இருக்க

"என்னப்பா சொல்றீங்க? நீங்க சொல்றது எல்லாமே எங்களுக்கு புதுசா இருக்கு.. இப்போ எங்களுக்கு மாமா புதுசா தெரியறார்.. இவர் எங்க மாமா தானான்னு சந்தேகமா இருக்கு.."

அரசி சொன்னதைக் கேட்டு "இல்லம்மா.. உங்க மாமாவை தப்பா ஒரு வார்த்தை சொல்லாதம்மா.. அவர் தெய்வம்.." என்ற பூமாவை கோபமாய் வெறித்தாள் நிலா..

"அப்படித்தானே சொல்லுவீங்க? ஏன்னா உங்களை தவியா தவிக்க விட்டுப் போன புருஷன் உங்க கிட்ட திரும்ப வந்து சேர்ந்துட்டாரு இல்ல.. எங்க அம்மாவும் நானும் தானே இவரால நடுத்தெருவுல நின்னோம்.. இப்போ இன்னைக்கு நான் என்னையே அருவருக்கிற அளவுக்கு ஒரு கேவலமான ஜீவனா வாழ்ந்துட்டு இருக்கேன்னா அதுக்கு காரணம் இந்த படுபாவி தானே..?" என்று அவள் பேச பேச கோபம் கொண்ட பூமா

"ஏய்.. யாரை பார்த்து என்ன வார்த்தை சொல்ற?" எனக் கையை ஓங்கி கொண்டு வர அவர் கையை அழுத்தமாக பிடித்து தடுத்து கீழே இறக்கினார் ஜெகந்நாதன்..

"ஆயிரம் நியாயம் சொன்னாலும் நான் செஞ்சது தப்பு தானே.. நான் அவங்களை விட்டுட்டு வந்து இருக்க கூடாது.. ஆனா தலையில மண்ணெண்ணெயை ஊத்திக்கிட்டு கைல எரியற தீக்குச்சியை வச்சிக்கிட்டு நான் அவங்களை விட்டுட்டு வரலைன்னா தன்னை கொளுத்திக்குவேன்னு சீதா சொல்லும் போது நான் என்ன பண்ண முடியும்? எனக்கு வேற வழி தெரியலியே.."

ஜெகந்நாதன் பேச பேச அனைவருக்குமே குழப்பமாய் தான் இருந்தது.. எதற்காக சீதா ஜெகந்நாதனை விலக்கி வைக்க வேண்டும்.. அதுவும் யாரோ ஒரு பூமாவுக்காக.. இப்படித்தான் யோசித்தார்கள் அவர்கள் அனைவரும்..

"நிலாவோட அம்மா சீதா தான்னு அன்னைக்கே தெரிஞ்சிருந்தா அப்பவே இந்த உண்மை எல்லாம் சொல்லி இருப்பேன்.. ஊருக்கு போன பிறகு நிலாவை பத்தி ஏதோ பேச்சு அடிப்பட்டப்பதான் நிலாவோட அம்மா பேரு மேனகான்னு சொன்னதா பூமாவும் தெய்வானையும் எங்க கிட்ட சொன்னாங்க.. என் சீதா என்னை விட்டு போயிட்டாளே மாமா.. இனிமே நான் அவளை பார்க்கவே முடியாதேன்னு இடம் பார்க்காம கதறிட்டான் ஜகா.. அதோட நிலா என்னோட பொண்ணு என்னோட பொண்ணுன்னு புலம்ப ஆரம்பிச்சுட்டான்.. நிலாவை பார்க்க வரணும்னு அடம் பிடிச்சு உடனே அங்கிருந்து கெளம்பிட்டான்.."

தமிழ் "அப்பா ப்ளீஸ்.. இங்கே என்ன நடக்குதுன்னே எங்களுக்கு புரியல.. கொஞ்சம் விளக்கமா சொல்றீங்களா? மாமா என்ன.. ரெண்டு குடும்பம் நடத்திக்கிட்டு இருந்தாரா? மாமா அப்படிப்பட்டவர் கிடையாதேப்பா.."

"உன் மாமா அப்படிப்பட்டவரா இருந்தா உங்க பூமா அத்தை அவரை பத்தி இப்படி பேசுவாளா? உன் மாமன் எந்த தப்புமே பண்ணல.. செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவிச்சிட்டு இருக்கான் அவன்.. இன்னும் சொல்ல போனா அக்கா தங்கச்சிக்குள்ள இருந்த பாசம் அவன் வாழ்க்கையையே ஒன்னும் இல்லாம ஆக்கிடுச்சு.."

சிவனேசன் சொல்ல சொல்ல கண் மூடி கரைந்து அப்படியே நின்று இருந்தார் ஜெகன்நாதன்.. அவருக்கோ தன் மகளின் நிலையை கண்டு உள்ளுக்குள் குற்ற உணர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாய் கொன்று தின்றது அவரை..

"நவி குட்டி.. இந்த அப்பாவை மன்னிச்சுடுடா.. உன் வாழ்க்கையை இப்படி ஒன்னுமே இல்லாம ஆக்கிட்டேன்.. உங்க அப்பாக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடு.. ஆனா இதுக்கு மேல உன் வாழ்க்கையை நரகமாக்கிக்காத டா.. உன்னை கெஞ்சி கேட்கிறேன்.. இங்க இருந்து போகாதடா.. இந்த குடும்பத்தோடயே இரு.." என்று மன்றாடியவரை பார்த்து ஒரு ஜீவன் இல்லாத சிரிப்பை உதிர்த்தவள்..

"என்ன சேஃபா பாதுகாக்க வேண்டிய நீங்களே உங்களோட இன்னொரு குடும்பத்துக்காக என்னை தெருவுல விட்டுட்டு வந்துட்டு இப்ப எந்த மூஞ்சியை வச்சுக்கிட்டு என்கிட்ட மன்னிப்பு கேக்குறீங்க? உங்களுக்கு அந்த தகுதி இருக்கா..?" என்றவள் தமிழை பார்த்து

"தமிழ்.. இதுக்கு மேல என்னால இங்க இருக்க முடியாது.. நெருப்புல நிக்கிற மாதிரி இருக்கு.. இதுக்கு அந்த கேவலமான பொழப்பு நடத்துற இடமே தேவல.. நான் அங்கயே போறேன்.. எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை.." என்று கிளம்ப போனவளின் கை பிடித்து தடுத்து நிறுத்தினான் தமிழ்..

"இனி என்ன ஆனாலும் சரி.. நீ இந்த வீட்டை விட்டு போகக் கூடாது.. போகவும் முடியாது.. போக நான் விட மாட்டேன்.." என்றான் அழுத்தமாக அவள் கண்களை பார்த்து..

"அம்மாடி.. வேணாண்டா.. உங்க அப்பா அன்னிக்கு உங்களை விட்டுட்டு வரலைன்னா உங்க அம்மா அன்னிக்கே இல்லாம போயிருப்பா.. அவ உனக்கு மட்டும் அம்மா இல்ல எனக்கும் அக்கா உருவத்துல அம்மாவா இருந்தவ.. எனக்காக தன்னோட வாழ்க்கையை மட்டும் இல்லாம உன்னோட வாழ்க்கையையும் நரகமாக்கிட்டா.. இது எல்லாத்துக்கும் இந்த பாவி தான் காரணம்.. நான் தான் சாக வேண்டியவ" என்று அப்படியே தான் இருந்த இடத்திலேயே தளர்ந்து மடங்கி அமர்ந்து தலையில் அடித்துக் கொண்டு கதறினாள் பூமா..

நீர் உறையும்..
 
Top Bottom