• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

17. தாமரை இலையுள் உறை தண்ணீராய்..!!

STN - 72

New member
Staff member
உறை நீர் - 17

மறுபடியும் மறுபடியும் தெய்வானை மனிதாபிமான அடிப்படையில் பூமாவை கவனிக்க சொல்ல அதற்கு மேல் மறுக்கமுடியாது

"சரிக்கா.. பார்த்துக்கறேன்.." என்று அமைதியாக உள்ளே சென்றான் ஜெகன்நாதன்.. ஆனால் உள்ளே ஜகந்நாதன் சென்றது தான் தாமதம்.. அவனை இறுகப் பற்றிக் கொணடாள் பூமா..

அவளுக்குள் இருந்த குற்ற உணர்வு அதற்கான பாவ மன்னிப்பு அழுகை வலி வேதனை அவனுக்கு தான் செய்த துரோகம் என்று பேசிப் பேசி புலம்பி தீர்த்தவளுக்கு அவள் கை பிடித்திருந்த அவனின் கரம் மட்டுமே பெரிய ஆறுதலை தந்து கொண்டு இருந்தது..

அன்று மாலை தெய்வானை சீதாவின் வீட்டுக்கு நவ்யாவை பார்க்கச் சென்றாள். நவ்யாவிடம் அவளை அவளுடைய அத்தை என்று சீதா அறிமுகம் செய்யவும் அவளோ கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைந்து விட்டாள் அவர்களை.

"இத்தனை நாளா நீங்க ஏன் வரவே இல்ல..? எங்க போயிருந்தீங்க..? உங்க வீட்டில யார் யார் இருக்காங்க..? அவங்கள எல்லாம் எப்ப கூட்டிட்டு வருவீங்க..? உங்க வீடு எங்க இருக்கு..? நான் அங்க வரலாமா..?" என்று அடுக்கடுக்காய் கேள்விகள்..

பதில் சொல்ல முடியாமல் திணறிப் போனார்கள் தெய்வானையும் சீதாவும்..

என்ன என்னவோ சொல்லி சமாளித்து ஒரு வழியாக நவ்யாவை நம்ப வைத்தார்கள்.. அடுத்த நாளில் காளிங்கன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து ரியாவை போலீஸ் பாதுகாப்பு வளையத்தினுள் கொண்டு வந்தான் சிவனேசன்..

காளிங்கன் மீது பூமாவை பாலியல் வன்கொடுமை உட்பட பல கொடுமைகள் செய்த குற்றங்களில் கைது செய்து அதிகபட்ச தண்டனையும் வாங்கி கொடுத்தான் சிவனேசன்..

ரியாவை கொண்டு வந்து பூமாவிடம் சேர்ப்பித்து விட அவளை கட்டிக்கொண்டு பூமா கதறித் தீர்த்தாள்.. அந்தக் குழந்தையும் ரொம்பவும் தான் மிரண்டு போயிருந்தது.. அதையும் மிரட்டி பயமுறுத்தி அடித்து துன்புறுத்தி அடைத்து வைத்திருந்தான் அந்தக் கிராதகன்.

வீட்டில் நடப்பது எதையும் வெளியே சொல்ல கூடாது என்று அந்த குழந்தையை பயமுறுத்தி வைத்திருக்க அதையும் மீறி வீட்டை விட்டு வெளியில் ஓடியவளை இழுத்து பிடித்து காலில் சூடு வைத்திருந்தான் அந்த மனித உருவில் இருந்த மிருகம்..

இப்போது அன்னையைக் கண்டதும் அவளுக்குள் கோழி குஞ்சாய் புதைந்து கொண்டாள் மகளவள்.. தெய்வானை ரியாவை கொஞ்சம் கொஞ்சமாய் பேசி பேசி சமாதானப்படுத்தி சீதாவின் வீட்டிற்கு அழைத்துப் போக சீதாவோ தங்கையின் குழந்தையை தன் குழந்தையாய் கண்ணில் வைத்து பார்த்துக் கொண்டாள்..

நவ்யாவுக்கும் அவள் வயதே இருந்த ரியா அங்கு வந்ததில் ஏக சந்தோஷம்.. தன் விளையாட்டுப் பொருட்களை எல்லாம் அவளோடு பகிர்ந்து அவளோடு குதூகலமாய் விளையாடி மகிழ்ந்தாள் அவளும்.. ரியாவும் அடுத்தடுத்த நாட்களில் அவர்களோடு இயல்பாய் பழக தொடங்கி இருந்தாள்..

அடுத்த ஒரு வாரத்தில் பூமா கொஞ்சம் தெளிந்திருந்தாள்.. அவளை ரொம்பவும் நெருங்காமல் ஒரு நண்பனாய் அவளுக்கு உதவி மட்டும் செய்து கொண்டிருந்தான் ஜெகன்நாதன்.. அவள் அவனை அணைத்து ஆறுதல் தேடிய போது அதற்கு அவளை அனுமதித்தானே தவிர அவளை பதிலுக்காக அவன் அணைக்க கூட இல்லை..

அவளிடம் இருந்து கொஞ்சம் தள்ளியே நின்று கொண்டான் அவன்.. அவனுடைய ஒதுக்கம் பூமாவுக்கு உரைக்க அடிப்பட்ட பார்வை பார்த்தாள் அவனை..

மனம் திறந்து தான் நினைப்பதை சொல்லியும் விட்டாள் அவனிடம்..

"ஏன் என்னை விட்டு தள்ளி போறீங்க? நான் காளிங்கனோட போய்ட்டு வந்ததுனால என்னை பார்த்தாலே உங்களுக்கு அருவருப்பா இருக்கா? அப்படித்தானே இருக்கும்..? என்னை அப்படியே சாக விட்டு இருக்கலாம் இல்ல..? என்னை எதுக்கு பொழைக்க வச்சீங்க? இப்படி வாழவும் முடியாம சாகவும் முடியாம.. ஆனா சரிதான்.. நான் செஞ்ச தப்புக்கலாம் இது சரியான தண்டனை தான்.. நீங்க இப்படி என்னை தள்ளி வைக்கிறதை என்னால தாங்கிக்கவே முடியல.. செத்துடலாம் போல இருக்கு.. உங்களுக்கு நான் செஞ்ச துரோகம் பெருசுதான்.. நீங்க இவ்ளோ பண்றதே ரொம்ப பெரிய விஷயம்.. புத்திக்கு புரியுது.. ஆனா மனசுக்கு புரியலையே.. அது எல்லாத்தையும் தாண்டி உங்க பழைய அரவணைப்பு வேணும்னு கேக்குதே.." என்று அழுதவளை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று கூட தெரியவில்லை ஜகந்நாதனுக்கு..

சற்று பயமே வந்திருந்தது அவனுக்கு.. இது எங்கே போய் முடியுமோ என்று.. கொஞ்சம் கவலை தொற்றிக் கொண்டது அவனை.. அவளிடம் சீதாவுடன் தனக்கு நடந்த திருமணத்தைப் பற்றி சொல்லிவிடலாம் என்றால் அதை இப்போதைக்கு சொல்ல வேண்டாம் என்று தடை சொல்லி இருந்தார் பூமாவுக்கு கவுன்சிலிங் செய்யும் மருத்துவர். நெருப்பில் நிற்பது போல் தவித்துப் போனான் ஜெகநாதன்..

இதனிடையே பூமாவை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அழைத்து போகலாம் என்று சொல்லி அவளுக்கு மட்டுமின்றி அங்கிருந்த மற்ற நால்வரையும் அழைத்து சில அறிவுரைகளை சொன்னார் அந்த உளவியல் மருத்துவர்..

"அவங்க ரொம்ப ஷாக் ஆக கூடாது.. அவங்க ஸ்ட்ரெஸ் ஆகுற மாதிரி எந்த விஷயத்தையும் அவங்களுக்கு சொல்லாதீங்க.. அப்புறம் மிஸ்டர்.ஜகன் கொஞ்ச நாள் நீங்க அவங்களோட இருக்கிறது பெட்டர்.. ஏன்னா இன்னும் கூட அவங்க முழுசா அந்த ட்ராமால இருந்து வெளியில வரல.. ஆழ்ந்த தூக்கத்தில இருக்கும் போது கூட அவங்க சப் கான்சியஸ் மைன்ட்ல இருக்கற அந்த பழைய நிகழ்வுகள் அவங்கள ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது.. அப்ப ரொம்ப வயலென்டா மாறி அவங்களையே ஹர்ட் பண்ணிக்குறாங்க.. அந்த நேரத்துல எய்தர் ஸெடெடிவ் யூஸ் பண்றோம் இல்லன்னா அவங்களை கண்ட்ரோல் பண்ண முடியற ஒரே ஆளு நீங்க மட்டும்தான்.. ஸோ அவங்க முழுசா இந்த ட்ராமால இருந்து வெளில வர வரைக்கும் நீங்க அவங்க கூட இருக்கணும்.. அதுக்கு இன்னும் ஒரு ஒன்னு ரெண்டு மாசம் ஆகலாம்.. அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமா அவங்களுக்கு உண்மையை சொல்லி புரிய வச்சு அவங்க தனியா இருப்பாங்கன்னு தெரிஞ்ச அப்புறம் அவங்களை பிரிஞ்சு வர்றது சரியா இருக்கும்.. டாக்டரா உங்க ஃபேமிலி ஹிஸ்டரி எல்லாம் நான் கேட்டு இருக்கேன்.. சோ எனக்கு தெரியும்.. உங்களுக்கு உங்க மனைவி சீதா உங்க குழந்தை நவ்யா இவங்க எல்லாம் ரொம்ப முக்கியமானவங்க தான்.. ஆனா ஒரு ரெண்டு மாசம் இவங்கள சரி பண்ற வரைக்கும் அவங்களோட இருங்கன்னு சொல்றது தான் பூமாவோட டாக்டரா என்னோட அட்வைஸா இருக்கும்.. அதுக்கப்புறம் யூ டேக் த கால்.."

அவர் சொல்லி முடித்து விட அங்கிருந்து வெளியே வந்த ஜெகன்நாதன் அதற்கு ஒப்புக்கொள்ளவே மாட்டேன் என்று அடம் பிடித்தான்..

தெய்வானை எவ்வளவு பேசி பார்த்தும் "முடியாதுக்கா.. என்னால முடியாது.. ஏதோ இங்க இருக்குற பத்து நாள் வேற வழி இல்லாம அவளோட இருந்தேன்.. ஆனா ஒரு மாசம் ரெண்டு மாசம் அதுவும் சீதாவையும் நவ்யாவையும் விட்டுட்டு என்னால இருக்க முடியாது.. அவளுக்கு என்ன ஆனாலும் பரவால்ல.. அவ கிட்ட உண்மையை சொல்லிட்டு நீங்க அவளை கூட்டிட்டு போங்க.." அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அங்கு வந்திருந்தாள் சீதா..

அவள் எதுவுமே பேசவில்லை..

"நம்ம வீட்டுக்கு போலாம்.. வாங்க.." என்று ஜெகந்நாதனை அவள் அழைக்க "ம்ம்.. போலாம்.." என்றவன் அவளோடு கிளம்பி விட்டான்..

வீட்டுக்கு வந்தவன் நவ்யாவை மடியில் வைத்தபடி அவளோடு விளையாடிக்கொண்டிருந்தான்.. அவன் பின்னாலேயே வந்த சீதாவும் அமைதியாகத்தான் இருந்தாள்..

நவ்யா உறங்கிய பிறகு அவள் அறையை மூடிவிட்டு வெளியே வந்தவள் ஜகன்நாதனிடம் "நீங்க பூமாவோட உங்க அக்கா மாமா வீட்டுக்கு போங்க.. அவளுக்கு நல்லா ஆனப்புறம் இங்க வாங்க.." என்க

"இங்க பாரு சீதா.. நான் ஹாஸ்பிடல்ல சொன்னது தான் என் முடிவு.. நீ என்ன சொன்னாலும் என் மனசு மாறாது.. பூமாவுக்கு என்ன ஆனாலும் பரவால்ல.. அவகிட்ட உண்மையை சொல்லிடலாம்.. என்னால உன்னையும் நவ்யாவையும் விட்டு இருக்க முடியாது.."

"என்ன பேசுறீங்க..? அவளுக்கு என்ன ஆனாலும் பரவால்லனா அதுக்கு என்ன அர்த்தம்? அவ செத்தே போனாலும் உங்களுக்கு கவலை இல்லையா? அவ்வளவு கல்லு மனசா உங்களுக்கு? ஒரு மாசம் ரெண்டு மாசம் தானே? நீங்க போயிட்டு வாங்க அவளோட ப்ளீஸ்.."

"முடியாது சீதா.. என்னால நவிக் குட்டியை விட்டு ரெண்டு மாசம் எல்லாம் இருக்க முடியாது.. அவ நான் இல்லாம ஏங்கி போயிடுவா"

"நவ்யாக்கு ஒன்னும் ஆகாது.. நான் அவளை சமாளிச்சுக்கிறேன்.. உங்களுக்கு இன்னொரு மக இருக்கா.. அவளை பத்தி யோசிச்சீங்களா? சிந்து உங்களை விட்டு இத்தனை வருஷமா தனியா இருக்கா.. அண்ணி சொன்னாங்க.. எப்ப அப்பா வருவாரு எப்ப அம்மா வருவாங்கன்னு கேட்டுகிட்டே இருக்காளாம்.. இந்த ரெண்டு மாசம் பூமா உடல்நிலையை சாக்கா வச்சு நீங்க சிந்து கூட இருக்கலாம் இல்ல..? நவ்யாவை விட்டு ரெண்டு மாசம் இருக்க முடியாதுன்னு சொல்றீங்க.. சிந்துவும் பாவம் தானே.. அவளை பார்க்க வேண்டிய பொறுப்பும் ஒரு அப்பாவா உங்களுக்கு இருக்குங்கிறதை மறந்துடாதீங்க.."

பூமாவை பற்றி பேசிக் கொண்டிருந்தவரை அவன் மனம் அசையவில்லை. ஆனால் சிந்துவை பற்றி சொன்னதும் கொஞ்சம் ஆடித்தான் போனான். அவளை சென்று பார்க்க வேண்டும் என்று அவனுக்கு தோன்றாத நாளில்லை.. ஆனால் அங்கே போனால் எங்கே சீதாவை இழந்து விடுவோமோ என்ற பயம் அவனை அங்கு செல்லவே விடவில்லை..

இரண்டு நொடிகள் தான் இப்படி யோசனை..

அடுத்த கணம் "இல்ல.. சிந்து இத்தனை நாள் அங்க தனியா இருந்து பழகிட்டா.. இனிமேலும் பழகிப்பா.. ஆனா நவி குட்டி பொறந்ததிலிருந்து என்கூட தான் இருந்து இருக்கா.. அவளால என்னை விட்டு இருக்க முடியாது.. நானும் அவளை விட்டு போகமாட்டேன்.." என்றவன் உறுதியாக இருந்தான் அவன் முடிவில்.

அவளை மெதுவாய் திரும்பி பார்த்தவன் "இங்க பாரு.. பூமாவோட போகணுமா வேண்டாமான்னு நான் தான் முடிவு பண்ணணும்.. நான் அவளோட போக மாட்டேன்.. எனக்கு பொண்டாட்டினா அது நீ மட்டும் தான்.. வேணும்னா சிந்துவை கூட்டிட்டு வந்து நம்மளோட வச்சுக்கலாம்.. ஆனால பூமாவோட சான்ஸே இல்ல.. ரியாவை கூட்டிக்கிட்டு அவ அக்கா மாமாவோட போகட்டும்.. அவங்களோடயே இருக்கட்டும்.."

"ஐயோ.. ஏன் புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறீங்க? அவளுக்கு ஏதாவது ஆச்சுன்னா அப்புறம் நம்மளால நிம்மதியா வாழ முடியுமா? யோசிச்சு பாருங்க.. கொஞ்ச நாள்.. அவளுக்கு சரியாகற வரைக்கும் அவளோட இருந்துட்டு வாங்க.. நான் எங்க போக போறேன்? நான் இங்கேயே தான் இருக்கேன்.. சனி ஞாயிறு ஆஃபிஸ் வேலைன்னு சொல்லி இங்க வந்து எங்களை பாருங்க.. நான் நவ்யா கிட்ட ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கிறேன்.. ப்ளீஸ்.. பழசை மனசுல வச்சுக்காம கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க.."

"முடியாது.. நீ என்ன சொன்னாலும் இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்.. ம்ஹூம்.. இது சரிப்பட்டு வராது.. நான் இப்பவே போய் பூமா கிட்ட எல்லா உண்மையையும் சொல்லிடுறேன்.."

அப்போதே மருத்துவமனைக்கு தன் வாகன திறப்பை எடுத்துக் கொண்டு கிளம்பினான் அவன்..

"ஓ.. சொல்லப் போறீங்களா?" என்று அவள் ஆவேசமாக கேட்க

சாவகாசமாக அவளை பார்த்து ஆமோதிப்பாய் தலையாட்டியவன் வெளியே போக திரும்ப

அதே நேரம் மருத்துவமனையில் இருந்து தெய்வானை அவனுக்கு அழைத்திருந்தாள்.. தொலைபேசியை எடுத்து "அக்கா.." என்று அங்கு நிகழ்த்து கொண்டிருந்ததை தன் அக்காவிடம் சொல்லத் தொடங்
கும் முன்னரே தெய்வானை சொன்ன செய்தியில் துவண்டு போனான் அவன்..

நீர் உறையும்..
 
Top Bottom