• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

என் தேசமிங்கே பூந்தோட்டமாக - 27

STN 22

New member
“நாம ரெண்டு பேரும் மட்டும் தனியாக இருக்கிறது உனக்கு எதுவும் வித்தியாசமாகத் தெரியலையா?”என்றக் கணவனைப் பார்த்துக் கேலியாக சிரித்து விட்டு,

“ஏன் வித்தியாசமாகத் தெரியனும்? நாம நம்ம ரூமில் தினமும் தனியாகத் தானே இருக்கோம்? அப்பறம் எதுக்கு எனக்கு அப்படியெல்லாம் தெரியப் போகுது”என்றுரைத்தாள் பிரார்த்தனா.

அதில் அதிசயத்துப் போனவனோ, அதற்குப் பிறகு அவள் கூறிய பதிலைத் தானும் சிந்தித்துப் பார்த்தான் சம்யுக்தன்.

அவள் சொன்னதும் சரி தானே? இரவு முழுவதும் தாங்கள் இருவரும் மட்டும் தானே தங்களது அறையில் தங்கி, உறங்கி எழுவோம்? அப்படி இருக்கும் போது இப்போது மட்டும் என்ன? என்றெண்ணித் தானும் தன்னை இயல்பாக வைத்துக் கொண்டு நடமாடத் தொடங்கவும்,

தங்கள் இருவருக்காக காப்பியைத் தயாரித்துக் கொண்டு வந்து அவனிடம் ஒரு கோப்பையைத் தந்து விட்டுத் தன்னுடையதைப் பருகினாள் பிரார்த்தனா.

சில நிமிடங்கள் மௌனமாய்க் கழிய,“உனக்கு எதனால் என் மேல் லவ் வர ஆரம்பிச்சது?”என்று அவளிடம் மெல்லப் பேச்சை ஆரம்பித்தான் சம்யுக்தன்.

அதைக் கேட்டதும் அவனைப் பார்த்து,”என்ன எங்கிட்டே போட்டு வாங்க டிரைப் பண்றீங்களா?”என்றாள் குறும்பாக.

தன்னுடைய நோக்கத்தை அவள் அறிந்து கொண்டாளே! என்றெண்ணி அசடு வழிந்து கொண்டே அவளைப் பார்த்து,”அப்படியும் வச்சுக்கலாம். நீ சொல்றப்போ தான் எங்கிட்ட எல்லாத்தையும் ஷேர் பண்ணுவன்னு சொல்லி இருக்கிற. ஆனால் எனக்கு ஆர்வத்தில் தலையைப் பிச்சுக்கலாம் போல இருக்கு. அதனால் தான் எப்படியாவது உன் வாயைக் கிளறி விஷயத்தை வாங்கலாம்னு நினைச்சேன்! அதையும் நீ கண்டுபிடிச்சுட்ட”எனச் சலித்துக் கொண்டான் சம்யுக்தன்.

அதில் தனது இதழ்களில் புன்னகை தவழ,”ஓஹோ!”என்றிருந்தாள் பிரார்த்தனா.

“ஆமாம். ஏதாவது ஒரு விஷயமாவது எங்கிட்ட சொல்லேன். ப்ளீஸ்!”என்று அவளிடம் கேட்டுக் கொள்ளவும்,

“சரிங்க. நானும், நீங்களும் ஒரே காலேஜில் வேலை பார்க்கிறது தானே உங்களுக்குத் தெரியும்? ஆனால் நாம ரெண்டு பேரும் ஒரே காலேஜில் தான் படிச்சோம்! அப்போதிருந்தே எனக்கு உங்களைத் தெரியும்!”என்றவளைத் தன் விழிகளை விரித்து அதிர்ச்சியுடன் பார்த்தான் சம்யுக்தன்.

“என்ன அப்படி பார்க்கிறீங்க? நான் சொல்வது உண்மை தான்”என்றவளோ, தாங்கள் இருவரும் படித்த கல்லூரியின் பெயரையும் தெரிவித்தாள் பிரார்த்தனா.

அதைக் கேட்டதும் அவனுக்கு இன்னும் தூக்கி வாரிப் போட்டது எனலாம்.

“நீ உண்மையாகவா சொல்ற?”எனக் கேட்டிருந்தான் அவளது கணவன்.

“ம்ஹ்ம்”என்று கூறிப் புன்னகைக்க,

“நான் உனக்கும் இந்தக் கல்யாணத்தில் இஷ்டம் இல்லைன்னு நினைச்சு உங்கிட்ட அதைப் பத்திப் பேசும் போதெல்லாம் நீ ஏன் இதை அப்போவே எங்கிட்ட சொல்லலை?”என அவளிடம் ஆதங்கத்துடன் வினவினான் சம்யுக்தன்.

உடனே அவனை முறைத்து விட்டு,”நீங்க என்னை எப்போ இதையெல்லாம் சொல்ல விட்டீங்க? எப்போ பார்த்தாலும் உங்களுக்கு என்னப் பிடிக்கலை! இந்தக் கல்யாணத்தில் விருப்பம் இல்லைன்னு தான் எங்கிட்ட தினமும் சொல்லிட்டு இருந்தீங்க! அப்புறம் எப்படி என்னால் உங்கிட்ட பேச முடியும்? அது தான் சரியான நேரம் கிடைக்கிற வரைக்கும் வெயிட் பண்ணேன்”எனப் பதிலளித்தாள் பிரார்த்தனா.

“அப்படின்னா, என்னை எப்போ ஃபர்ஸ்ட் டைம் பார்த்த? அதையாவது சொல்லேன்?”என்றான் ஆவலாக,

அதில் அவளது இதழ்கள் தன்னை மீறிப் புன்னகைக்கத் தொடங்கி விட்டது.

“ப்ச்! சிரிக்காமல் சொல்லு”என்று அவளிடம் கடுப்புடன் கூறினான் சம்யுக்தன்.

உடனே,”நான் காஃபியைக் குடிச்சு முடிச்சிட்டேன். நீங்களும் குடிச்சு முடிங்க. அப்பறம் பொறுமையாகச் சொல்றேன்”என்றவளோ காலித் தம்ளரைக் கழுவி வைக்கச் சென்று விடவும்,

அவளது கூற்றிற்கிணங்கித் தானும் தன்னுடைய கோப்பையில் இருந்த பானத்தை முழு மூச்சில் குடித்து முடித்து விட்டுத் தம்ளரைக் கழுவி வைத்து விட்டு வந்ததும்,

“நீங்க இப்படி வந்து உட்காருங்க”என்று அவனைத் தன் அருகில் வந்து அமருமாறு அழைத்தாள் பிரார்த்தனா.

உடனே அவளுக்குச் சற்றுத் தள்ளி உட்கார்ந்து கொண்டான் சம்யுக்தன்.

“நான் உங்களைக் காலேஜில் சேர்ந்தவுடனேயே பார்த்துடலை! நான் எப்பவும் துறுதுறுன்னு இருக்கிற ஆள்! ஏதாவது பேசிக்கிட்டே இருப்பேன்! ஆனால் நீங்க அப்படியான கேரக்டர் இல்லை. அதை ஒரு நாள் கண்டுபிடிச்சேன்! அதை எப்படிக் கண்டுபிடிச்சேன் தெரியுமா?”என்றவளிடம்,

“மேலே சொல்லு”என்க,

“நான் ஒரு நாள் பிரேக் டைமில் கேன்டீனில் என் ஃப்ரண்ட்ஸோட உட்கார்ந்து பேசிட்டு இருந்தேன்! அப்போ தான், எனக்குப் பக்கத்து டேபிளில் இருந்த சில பொண்ணுங்க ஏதோ சத்தமாகப் பேசிட்டு இருந்தாங்க!”என்று அன்று நடந்ததை அவனுக்குக் காட்சியாக விவரிக்கத் தொடங்கினாள் பிரார்த்தனா.

அவள் தனது இளங்கலை வரலாற்றுப் பாடத்தின் முதல் வருடப் படிப்பிற்காக கல்லூரியில் சேர்ந்ததும் தனக்கான தோழிகளைக் கண்டறிந்து அவர்களுடன் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருந்த சமயத்தில், தனது தோழிகளுடன் சிற்றுண்டிச் சாலையில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்த போது,

தங்கள் அருகில் இருந்த மேசையில் அமர்ந்திருந்த சில பெண்களின் பேச்சுக் குரல்களை எதேச்சையாக தன் காதுகளில் விழவும், அவர்களிடம் கவனத்தைப் பதிக்க,

அவர்களில் ஒருவளோ,”அந்தச் சம்யுக்தன் என்ன இ்ப்படி ஒரு அழுத்தக்காரனாக இருக்கான்டி! என்னால் அவன்கிட்ட பேசக் கூடப் போக முடியலை! அந்தளவுக்கு ரஃப் அண்ட் டஃப் ஆக இருக்கான்! அவன் கிட்டே போனாலே முறைக்கிறா மாதிரி லுக் விட்றான்! எனக்கு அல்லு விட்டுப் போச்சு!”என்று மற்றவர்களிடம் புலம்பினாள்.

அதைக் கேட்டதும்,’இப்படியொரு குணம் கொண்ட ஆணைத், தான் அவ்வளவாகப் பார்த்ததே இல்லையே! தான் பார்த்தவர்கள் எல்லாரும் கலகலப்பான ஆட்கள் தான்!'என்றெண்ணிக் கொண்டு அவர்களது பேச்சில் இருந்து தனது கவனத்தை திருப்பிக் கொண்டாள் பிரார்த்தனா.

ஆனால் அதற்கு வழி வகுக்காமல்,”அவன் சரியான முசுடு ஹேமா! எனக்கும் அவன் மேலே இன்ட்ரெஸ்ட் இருந்துச்சு. ஃப்ரண்ட் ஆக இருக்கலாம்னு நினைச்சுப் பேசப் போனால் கூட அவன் என்னைக் கண்டுக்கலை! அதுக்கப்புறம் நானும் விட்டுட்டேன்”என்றுரைத்தாள் மற்றொருவள்.

“ஓஹ்! அப்போ நானும் அவனை மறந்துட வேண்டியது தான்”எனப் பெருமூச்சு விட்டாள் அந்தச் சம்யுக்தனைப் பற்றிய பேச்சை முதலில் ஆரம்பித்த பெண்.

“ஆமாம்! நீயும், அவனும் பல வருஷமாக லவ் பண்ணிப் பிரேக்கப் பண்ணிட்டீங்க பாரு! மறந்துட்றேன்னு இவ்வளவு ஃபீல் பண்ணிட்டு இருக்கிற!”என்று அவளைக் கிண்டல் செய்தாள் ஹேமா.

“அங்கே பாரு! அவன் தான் வந்துட்டு இருக்கான்! இப்படி கண்ணுக்கு முன்னாடி நடமாடினால் நானும் என்ன தான் பண்ணுவேன்?”என்று ஆதங்கத்துடன் கூறியவளின் பார்வையைப் பின்பற்றி,
‘இவங்க இவ்வளவு ஃபீல் செஞ்சிப் பேசுற அளவுக்கு அவன் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா?'என்பதைப் போல் எதிரில் வந்து கொண்டிருந்தவனைப் பார்த்தாள் பிரார்த்தனா.

அவனது உடையையும் தாண்டி அவனைக் கண்டதும் இவளை முதலில் ஈர்த்தது அவனது நிர்மலமான முகம் தான்!

அந்த முகத்தில் எவ்வளவு சாந்தமும், அமைதியும் குடி கொண்டிருக்கிறது என்பதை வியந்து போய்ப் பார்த்தவளோ,’இவரையா முசுடு, கோபக்காரன்னுச் சொல்லிட்டு இருக்காங்க?'என்றவளின் முதல் பார்வையிலேயே தன்னால் அவளுக்குள் சிறு சலனம் உருவாகி விட்டதை அறியாமல் ஒரு காபியை வாங்கிக் கொண்டுத் தனியாக அமர்ந்து தன்னிடம் இருந்த புத்தகத்தில் பார்வையைப் பதித்தான் சம்யுக்தன்.

அவனது புத்தகத்தின் அட்டைப் படத்தைப் பார்த்ததும்,’ஓஹ்! தமிழ் டிபார்ட்மெண்ட்டா? அதனால் தான், நீங்க என் கண்ணில் படவே இல்லையா? அப்போ சரி'என்று எண்ணிக் கொண்டவளை அழைத்துக் கொண்டு வகுப்பறைக்குச் சென்று விட்டார்கள் அவளது தோழிகள்.

ஆனால் தனது கையிலிருந்த புத்தகத்தை மிகுந்த ஈடுபாட்டுடன் வாசித்துக் கொண்டு இருந்ததால், சில நிமிடங்களாகத் ஒரு பெண் தன்னையே பார்த்துக் கொண்டு இருந்ததை அறியாமல் போய் விட்டான் சம்யுக்தன்.

உடனே தனது கணவனின் வியப்பு நிறைந்த பார்வையைக் கண்டுப் புன்சிரிப்பை உதிர்த்து விட்டு,”இன்னைக்கு இது போதும்! நான் இந்தக் கதையை உங்க கிட்ட முழுசாக சொல்ற நாள் ரொம்ப தூரத்தில் இல்லை! அதனால் நீங்க அது வரைக்கும் காத்திருந்து தான் ஆகனும்!”என்ற மனைவியிடம்,

“நான் உனக்காக எப்பவுமே காத்திருப்பேன்!”என்ற வார்த்தைகளை மொழிந்து விட்டுத் தங்கள் அறைக்குள் புகுந்து கொள்ள,

அதைக் கேட்ட பெண்ணவளுக்கு நெகிழ்ச்சியில் பேச்சே வரவில்லை!

“நீங்க இப்போ எங்கிட்ட சொன்ன மாதிரியே தான், நானும் உங்களோட காதல் எனக்குக் கிடைக்கனும்னு இன்னைக்கு வரைக்கும் காத்திருக்கேன்ங்க! நம்ம ரெண்டு பேரோட காத்திருப்பையும் ரொம்ப நாள் நீட்டிக்க விடாமல் கூடிய சீக்கிரமே நான் எல்லாத்தையும் சரி பண்ணிடுவேன்ங்க! அதுக்கான தெம்பை நீங்க தான் எனக்குக் கொடுத்துட்டு இருக்கீங்க! அதுக்குத் தாங்க்ஸ்!”என்று முணுமுணுத்து விட்டுத் தன் கணவனுக்குத் தனிமை கொடுக்க விரும்பி அங்கேயே இருந்து கொண்டாள் பிரார்த்தனா.

அதே நேரத்தில் தங்களது அறைக்குள் இருந்த சம்யுக்தனுக்கோ மனம் நிலைகொள்ளவே இல்லை!

ஏனென்றால், அவனுக்குத் தன் மேல் பிரார்த்தனா வைத்திருந்த காதலை எண்ணி இனம் புரியாத மகிழ்ச்சி உண்டாயிற்று எனலாம்!

‘நான் ஏன் இவளைத் தன் கல்லூரி வாழ்க்கையில் ஒருமுறை கூடப் பார்த்தது இல்லை!’என்ற ஏக்கத்தில் சோர்ந்து போனான்.

அதேபோல், தங்களது திருமணம் நிகழ்ந்த நாளில் இருந்து இப்போது வரை அவள் தன்னிடம் நடந்து கொண்ட விதத்தை எல்லாம் அசை போடத் தொடங்கி விட்டிருந்தான் சம்யுக்தன்.

அதே சமயம் தங்களது உறவினர்கள் ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் சென்று சம்யுக்தன் மற்றும் பிரார்த்தனாவிற்காக நடத்தப்படும் மறு வீட்டு விருந்தில் கலந்து கொள்ளுமாறு அவர்களை அழைத்து விட்டு வாடகை காரில் தங்களது இல்லத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தனர் ஜெயராம், கலாவதி மற்றும் பிரதீபன்.

“அந்த திலகம் சித்திப் பேசினதைக் கேட்டீங்க தானே? இரண்டாவது கல்யாணத்துக்கு இவ்வளவு தடபுடலான்னுக் கேட்டு நக்கலாகச் சிரிக்கிறாங்க! எனக்கு அப்போவே அங்கேயிருந்து எழுந்து வந்திடலாம்னுத் தோணுச்சு! செம்மக் கோபம்! ஆனாலும் உங்களுக்காகத் தான் நான் அமைதியாக இருந்தேன்!”எனத் தன் பெற்றோரிடம் கூறிப் பொருமினான் இளைய மகன் பிரதீபன்.

உடனே,“விடுடா! அவங்க அப்படித் தான்! நம்மளோட வாழ்க்கையில் என்ன நல்லது நடந்தாலும் அதைக் குற்றம், கிண்டல் சொல்லத் தான் முதல் ஆளாக வருவாங்க! ஆனால் இரண்டாவதாக நல்லது நடக்குதேன்னு நினைச்சு சந்தோஷப்பட மாட்டாங்க! அவங்களை மாதிரி ஆளுங்க எல்லாம் மத்தவங்க தங்களோட வாழ்க்கையில் முன்னேறாமல் அப்படியே இருக்கனும்ன்னு தான் ஆசைப்படுவாங்க!”என்று உரைத்த கணவனைத் தொடர்ந்து,

“அவங்க நம்ம வீட்டுக்கு வந்து சம்யுக்தனையும், பிரார்த்தனாவையும் பார்த்து வயிறு எரியனும்னு தான் விருந்துக்குக் கூப்பிட்டு இருக்கேன்! அவங்க காலடி மண்ணை எடுத்து ரெண்டு பேருக்கும் சுத்திப் போட்டுடலாம்”எனக் கூறிச் சிரித்தார் கலாவதி.

அதைக் கேட்டு மற்ற இருவரும் சிரித்துக் கொள்ள, ஒரு வழியாகத் தங்களது இல்லத்திற்கு வந்து சேர்ந்தார்கள் மூவரும்.

- தொடரும்
 
Top Bottom