• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

என் தேசமிங்கே பூந்தோட்டமாக - 28

STN 22

New member
வீட்டினுள் நுழைந்ததும் வரவேற்பறையில் இருந்த பிரார்த்தனாவோ,”வாங்க! வீட்டுக்குக் கிட்டே வந்ததும் கால் செஞ்சிட்டு வருவீங்கன்னு நினைச்சு வெயிட் பண்ணேன்”என்று அவர்களை வரவேற்றுத் தண்ணீர் குடிக்கக் கொடுத்து உபசரித்து விட்டுத் தங்கள் அறைக்குச் சென்று,

“அவங்க மூனு பேரும் வந்துட்டாங்க”என்று கணவனிடம் அறிவித்தாள்.

உடனே,”ம்ஹ்ம்”என்றவனோ, தானும் வரவேற்பறைக்கு வந்து சேர,

“வாடா. ரெண்டு பேரும் காபி குடிச்சிட்டீங்களா?”என விசாரித்தார் கலாவதி.

“குடிச்சிட்டோம்மா”எனப் பதிலளித்து விட்டு சோபாவில் அமர்ந்தான் சம்யுக்தன்.

“உங்களுக்கும் காபி வேணுமா?”எனக் கேட்ட மருமகளிடம்,

“வேண்டாம் பிரனா. நாங்க விருந்துக்கு அழைக்கப் போன வீடுகளிலேயே குடிச்சிட்டோம். இனிமேல் நைட்டுக்குச் சமைச்சா போதும்”என்றதும்,

“நான் சமைச்சிட்றேன்த்தை. நீங்க ரெஸ்ட் எடுங்க”என அவருக்கு அறிவுறுத்தி விட்டுச் சமையலறைக்குள் போகவும்,

“எனக்குக் காரிலேயே டிராவல் செஞ்சிட்டு வந்தது ரொம்ப உடம்பு எல்லாம் வலிக்குது. நான் ரூமுக்குப் போய் ரெஸ்ட் எடுக்கிறேன்”எனத் தன் அறைக்குப் போய் விட்டான் பிரதீபன்.

“நான் சம்பந்திக்குக் கால் பண்ணிப் பேசிடறேன்”என்று பொதுவாக உரைத்து விட்டுத் தன் செல்பேசியில் பிரார்த்தனாவின் தந்தைக்கு அழைப்பு விடுத்தார் ஜெயராம்.

“ஹலோ சம்பந்தி”என்றார் சக்திவேல்.

“வணக்கம் சம்பந்தி”என்றவரோ, சிறு நலம் விசாரிப்புக்குப் பிறகு,

“நாங்க எங்க சொந்தக்காரங்களை எல்லாம் விருந்துக்கு அழைச்சிட்டோம். உங்கப் பக்கத்து ஆளுங்களை அழைச்சிட்டீங்களா?”என்று அவரிடம் விசாரிக்க,

“நாங்களும் இன்னைக்குத் தான் அழைச்சிட்டு வந்தோம் சம்பந்தி”என்றதுமே,

“அப்படின்னா சரி. சம்பந்தி. பந்தல்காரங்க, கேட்டரிங் எல்லாத்துக்கும் நாமளே நேரில் போய்ப் பேசிட்டு அட்வான்ஸ் கொடுத்துட்டு வந்துடுவோம்”எனக் கூறினார் ஜெயராம்.

“சரிங்க சம்பந்தி”என்றுரைத்து விட்டுப், பந்தல் மற்றும் உணவிற்கு எங்கு சொல்லி வைக்கலாம் என்று இருவரும் கலந்துரையாடி முடித்ததும் அழைப்பு வைக்கப்பட்டது.

தங்களது உரையாடலைக் குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்,

“இதுக்கெல்லாம் நானும் உங்க கூட வர்றேன்ப்பா. உங்களுக்கும், மாமாவுக்கும் மட்டும் எதுக்கு அலைச்சல்?”என்றிருந்தான் சம்யுக்தன்.

“அதெல்லாம் ஒன்னும் இல்லை. இதை நாங்களே பார்த்துக்கிறோம்”என்று அவனிடம் கூறி விடச் சிறிது நேரம் கழித்து சமையலறையில் இருந்து வந்த பிரார்த்தனாவோ,

“சப்பாத்திக்கு ரெடி பண்ணிக், குருமாவும் வச்சிட்டேன். சாப்பிடும் போது சொல்லுங்க. எல்லாருக்கும் சூடாகச் சப்பாத்திப் போட்றேன்”என்க,

“எல்லாத்துக்கும் மொத்தமாகப் போட்டு வச்சிடலாம் பிரனா. அதை நான் போய்ச் செய்றேன். நீ உட்காரு”என்று அவளை அங்கே இருக்கச் சொல்லி விட்டுச் சமையலறைக்குப் போனார் கலாவதி.

உடனே அவளிடம் அவளது தந்தையுடன், தான் உரையாடியவற்றைத் தெரிவித்தார் ஜெயராம்.

“நீங்களும், அப்பாவும் மட்டும் ஏன் எல்லா வேலையையும் இழுத்துப் போட்டுச் செய்றீங்க மாமா?”என்று அவரிடம் குறைபட்டுக் கொண்டாள் பிரார்த்தனா.

அதையே தான் சற்று முன்னர் மகனும் கூறி இருந்தான் அல்லவா? அதன் காரணமாக அவரது இதழ்கள் புன்னகையை உதிர்த்தது.

அதேபோல் தானும் மனைவியைப் பார்த்துப் புன்னகைத்தான் சம்யுக்தன்.

அதைக் கவனித்து திருதிருவென்று விழித்தவளிடம் தங்களது புன்னகையின் காரணத்தை விவரித்தார் ஜெயராம்.

அதைக் கேட்டதும் தன் முகம் பூவாய் மலர,”அப்படியா மாமா?”என்றவளோ கணவனின் முகம் பார்த்தாள் பிரார்த்தனா.

அவனும் அவளைப் பார்க்க கணவனின் விழிகளில் தெரிந்த காதலில் மூச்சடைத்துப் போய் விட்டது பெண்ணவளுக்கு.

அதனால் தடுமாறிப் போயிருந்தவளை,”பிரனா! எல்லாரையும் டைனிங் டேபிளுக்கு வரச் சொல்லும்மா”என்ற மாமியாரின் குரல் நிதானத்திற்குக் கொண்டு வந்தது.

உடனே,”சரிங்கத்தை”என்று தானும் அவருக்குக் குரல் கொடுத்து விடவும்,

“நீங்க ரெண்டு பேரும் போய் உட்காருங்க. நான் போய்த் தீபனைக் கூட்டிட்டு வர்றேன்”என்று தன் தந்தை மற்றும் மனைவியிடம் கூறி விட்டுத் தம்பியிடம் சென்றான் சம்யுக்தன்.

உடனே சாப்பாட்டு மேசைக்குச் சென்றார்கள் மாமனாரும், மருமகளும்.

தன் அறைக் கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்த தமையனைக் கண்டதும்,”வா, அண்ணா”என்றான் பிரதீபன்.

“சாப்பாடு ரெடி ஆயிடுச்சுடா. வா”

“ம்ம். வர்றேன் அண்ணா”என்றவனின் முகம் வாடிப் போயிருப்பதைக் கண்டு,

“ஏன் ஒரு மாதிரி இருக்க?”என்று அவனிடம் அக்கறையுடன் வினவ,

“நாங்க இன்னைக்கு நம்ம சொந்தக்காரங்க வீட்டுக்குப் போனோம்ல? அப்போ அவங்க எல்லாரும் உனக்கு ரெண்டாவது கல்யாணம் தானே? அதுக்கு ஏன் இவ்வளவு அலட்டல்ன்னுக் கிண்டல் பண்ணாங்க. அதை நினைச்சுத் தான் கவலையாக இருக்கு”என்று பட்டென்று போட்டுடைத்து விட்டான் பிரதீபன்.

அதைக் கேட்டதும் தனக்குச் சுருக்கென்று தைத்தாலும் கூட,”அவங்களுக்கு விஷயம் என்னன்னு முழுசாகத் தெரியாது தானேடா? அதனால் தான் அப்படி பேசி இருக்காங்க! நீ அதை நினைச்சு ஃபீல் பண்ணாமல் வந்து சாப்பிடு”என்று அவனைச் சமாதானப்படுத்தி தன்னுடன் அழைத்து வந்து உணவருந்த வைத்தான் சம்யுக்தன்.

சிறிது நேரத்லிலேயே அனைவரும் உணவுண்டு முடித்து தத்தமது அறைக்குள் அடைந்து கொண்டார்கள்.

தன்னிடம் எதுவும் பேசாமல் மௌனமாய்ப் படுத்துக் கொண்ட கணவனைக் கண்டு அவன் தன்னைப் பற்றிய யோசனையில் இருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டுத் தானும் உறங்கிப் போனாள் பிரார்த்தனா.

இதே சமயம்,”மறு வீட்டு விருந்துக்கு அழைக்கப் போன வீட்டில் எல்லாம் நம்மப் பொண்ணைப் பத்தி எப்படி எல்லாம் பேசினாங்கன்னுப் பார்த்தீங்களா? நான் இப்பவும் கேட்கிறேன்! இரண்டாம் தாரமாக வாக்கப்படனும்னு அவளுக்கு என்னத் தலையெழுத்தா? அதை அவ கிட்ட எப்போதிருந்து தலை, தலையாக அடிச்சு சொன்னோம்? ஆனால் நம்மப் பேச்சைக் கடைசி வரைக்கும் கேட்காமல் கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டாள்! இப்போ எல்லாரும் அவளை நாக்கு மேலே பல்லுப் போட்டுக் கிண்டல் செய்து பேசுறாங்கன்னு நமக்குத் தான் கஷ்டமாக இருக்கு! ஆனால் அவ அதைப் பத்தி எல்லாம் கவலைப்பட்ற மாதிரியே தெரியலையே!”என்று தன் கணவரிடம் புலம்பித் தீர்த்தார் கோமளா.

ஏனெனில் தங்களது மகளின் மறு வீட்டு விருந்திற்காகத் தங்களது உறவினர்களை அழைக்கச் சென்ற இவ்விருவரிடமும்,”ஆமாம்! உங்கப் பொண்ணுக்கு ஏதாவது குறை இருக்கா என்ன? இப்படி ரெண்டாந் தாரமாக வாக்கப்பட்டு இருக்காளே?”என்று சிலரும்,

“ஒருவேளை அவ உங்க சொந்தப் பொண்ணு இல்லை, ஆசிரமத்தில் இருந்து கூட்டிட்டு வந்து வளர்த்தவ தானேன்னு அவளுக்கு மாப்பிள்ளைப் பார்த்து, நகைப் போட்டுக் கட்டிக் கொடுக்க முடியாதுன்னு இப்படிக் கிடைச்ச இடத்தில் தள்ளி விட்டுட்டீங்களா?”எனக் கேட்டிருந்தார்கள் சிலர்.

அதையெல்லாம் காது கொடுத்துக் கேட்க முடியாமல் மனம் கலங்கிப் போய் அங்கேயிருந்து வீட்டிற்கு வந்திருந்த போது தான் சம்யுக்தனின் தந்தை சக்திவேலுக்கு அழைத்து விருந்திற்கான ஏற்பாடுகளைப் பற்றிப் பேசியிருந்தார்.

அதற்குப் பிறகு தான், தனது மனக் கலக்கத்தைப் புலம்பலின் மூலம் வெளிப்படுத்தி இருந்தார் கோமளா.

“நாம எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவ தானே கேட்கலைம்மா? அதுக்கு நாம என்னப் பண்ண முடியும் சொல்லு? இப்போ கொஞ்ச நாள் முன்னாடி கூடக் குழந்தை விஷயத்தைப் பேசி அவ வார்த்தையை விட்டுட்டாள்ன்னு வந்து அழுத! இனிமேலும் அவ கிட்ட ஏதாவது பேசினால் நம்மளைத் தான் எதிரியாகப் பார்ப்பாள்! அதே மாதிரி யார், என்னப் பேசினால் என்னம்மா? நம்மப் பொண்ணு அவளுக்குப் பிடிச்சவனைத் தான் கல்யாணம் செஞ்சி வாழ்றாள்ன்னு நிம்மதி அடைஞ்சிக்க வேண்டியது தான்! நாம மறு வீட்டு விருந்துக்கான ஏற்பாடுகளைப் பார்ப்போம்!”என்றுரைத்து விட்டார் சக்திவேல்.

அதற்குப் பிறகான நாட்களில் தங்களது புலம்பல்கள், பொருமல்கள் மற்றும் மனக்கலக்கங்களை எல்லாம் ஓரமாக வைத்து விட்டுத் தங்களது பிள்ளைகளின் மறு வீட்டு விருந்திற்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார்கள் சம்யுக்தன் மற்றும் பிரார்த்தனாவின் பெற்றோர்.

தனது தமையனைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தன் பெற்றோருக்கு அறிவுறுத்தி விட்டுத், தன் தந்தை மற்றும் தமையனின் மாமனாருக்கு தானே முன் வந்து மறு வீட்டு விருந்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய உதவிக்கரம் நீட்டினான் பிரதீபன்.

அதனாலேயே அனைத்து ஏற்பாடுகளும் மிக விரைவாகவும், நேர்த்தியாகவும் நடந்து முடிந்திருந்தது.

தங்களது சம்பந்தி வீட்டாரிடம்,”விருந்துக்கான எல்லா ஏற்பாடுகளும் தயாராகிடுச்சு சம்பந்தி. இதில் உங்கச் சின்ன மகன் தான் நமக்கு ரொம்ப உதவியாக இருந்தார்”என்று ஜெயராமிடம் உரைத்தவரோ,

“நீங்க எங்க கூடவே இருந்து எல்லாத்தையும் பொறுப்பாகச் செய்து கொடுத்து இருக்கீங்க. ரொம்ப நன்றி தம்பி”என்று பிரதீபனுக்கு நன்றி தெரிவித்தார் சக்திவேல்.

அவனோ,“அச்சோ! பரவாயில்லை மாமா. இது நம்மக் குடும்ப நிகழ்ச்சி! இதுக்கு நானும் என்னோட பங்குக்கு வேலை செஞ்சேன். அவ்வளவு தான்!”என அவரிடம் பெருந்தன்மையுடன் கூறி விடவும்,

“அதெல்லாம் இருக்கட்டும். உங்க முதல் மருமகளோட அப்பா, அம்மாவைக் கூடப்பிடலையா சம்பந்தி?”என்று அனைவரின் முன்னிலையிலும் சம்யுக்தனின் பெற்றோரிடம் கேட்டு விட்டார் கோமளா.

ஏனெனில் என்ன தான் இருந்தாலும் வசுமதியின் பெற்றோர் இவர்களது முதல் சம்பந்தி என்ற அங்கீகாரம் பெற்றவர்கள் ஆயிற்றே?

அதனால் தான் இதைக் கேட்டிருந்தார் பிரார்த்தனாவின் அன்னை.

அவரின் கேள்வியில் அந்த அறை முழுவதும் பேரமைதி நிலவியது!

அங்கேயிருந்த அனைவருக்கும் சங்கடத்தில் பேச்சே வரவில்லை எனலாம்!

அவர்களில் முதலில் நிதானத்திற்கு வந்திருந்த பிரார்த்தனாவோ,”அம்மா! நீங்க என்னப் பேசுறீங்கன்னு உங்களுக்குப் புரியுதா?”என்று தனது தாயிடம் கண்டிப்புடன் கேட்க,

அதற்கு,“ஆமாம்டி! ஏன்னா, அவங்க தானே இவங்களோட முதல் சம்பந்தி. அப்போ அவங்களையும் நினைவில் வச்சுக் கூப்பிட்டு இருப்பாங்கன்னுத் தான் கேட்டேன். அதுக்கு என்ன இப்போ?”என்றிருந்தார் கோமளா.

“அதுக்கு ஒன்னும் இல்லைத்தை. அவங்க என் கல்யாணத்துக்குக் கூப்பிட்ட அப்போவோ வரலை. அதனால் அவங்களை எங்கப்பா, அம்மா என் மறு வீட்டு விருந்துக்கு அழைச்சு இருக்க வாய்ப்பில்லை”என்று தன் கணீர்க் குரலில் அவருக்குப் பதிலளித்து விட்டிருந்தான் சம்யுக்தன்.

அதில் அவனது பெற்றோரும், தம்பியும் அவனை அதிர்ச்சியாகப் பார்த்தார்கள் என்றால், தனது கணவனின் பதிலில் அவனை ஆச்சரியமாக ஏறிட்டாள் பிரார்த்தனா.

ஆனால் இவர்களது பார்வையைக் கவனிக்காமல் இன்னும் எத்தனைக் காலங்கள் தான், தன்னுடைய முதல் திருமணத்தைப் பற்றிப் பேசித் தன்னைக் குற்ற உணர்விற்கு ஆளாக்குவார்கள்? என்ற எண்ணத்தில் இறுகிப் போய்த் தனது முஷ்டியை அடக்கிக் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு அங்கேயிருந்த அனைவரையும் தீர்க்கமாக நோக்கினான் சம்யுக்தன்.

அதைக் கண்டுப் பயந்து போய் விட்டார்கள் பிரார்த்தனாவின் பெற்றோரான சக்திவேல் மற்றும் கோமளா.

- தொடரும்
 
Top Bottom