• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தகிக்காதே குளிர் நிலவே - 7

Vishakini

Moderator
Staff member

அத்தியாயம் -7

முன் பக்க கண்ணாடி வழியாக தன்னை பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தவனை பார்த்துக் கொண்டே காரை ஓட்டியவளுக்கு மெல்லிய புன்னகை இதழில் வந்தமர்ந்தது.

சிறிது கர்வமாகவும் இருந்தது.

அவளது வீடு வரை பின் தொடர்ந்து வந்தவன் நந்தினியின் கார் அவளது வீட்டினுள்ளே நுழைந்த பிறகு தான் தனது ராயல் என்ஃபீல்டு பைக்கை திருப்பிக் கொண்டு தனது வீட்டை நோக்கிச் சென்றான்.

வீட்டினுள்ளே நுழைந்தவள் தன்னை சுத்தம் செய்து கொண்டு மெல்லிய இரவு உடைக்கு மாறியிருந்தாள்.

தலையை விரித்து விட்டபடியே பால்கனியில் வந்து நின்றாள்.

மெல்லிய நிலா வெளிச்சம் அவளது முகத்தில் பட்டு இன்னும் பேரழகியாகக் காட்டியது .

இரவு நேர இதமான தென்றல் காற்று அவளது முகத்தில் மோதி கண் மூடி இரவின் ஏகாந்ததை ரசிக்க வைத்தது.

மனதில் மெல்லிய பனிச்சாராலாய் அருண்மொழியின் அக்கறை.

தேன் சொட்டுக்களாய் அவளது இதயத்தினுள் இறங்கி அவளை கிறங்கச் செய்தது.

சிறிது நேரம் பால்கனியில் ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள் பின்னர் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

கண்மூடினாலும் அவனது பிம்பமே வந்து தொலைத்தது.

‘ ம்ம்ச்…என்ன இது..? அவன் நியாபகமாவே இருக்கு. இது சரியில்லை நந்தினி. உன் கிட்ட ஒரு சாதாரண வெர்க்கரை கிட்ட போய் ‌உன்‌ மனசு சாயலாமா? இது சரி வராது. இன்னும் கொஞ்சம் அவன் கிட்ட கடுமையான நடந்துக்கணும். லவ்வு கிவ்வுன்னு ‌பின்னாடி சுத்துறதை என்கரேஜ் பண்ணக்கூடாது. கொஞ்சம் ஸ்டிரிக்டா இருக்கணும்..’ என நினைத்து கொண்டவள் அதன்‌ பிறகு உறங்கிப் போனாள்.

மறுநாள் விடியல் யாருக்காகவும் காத்திருக்காமல் அழகாக விடிந்தது.

அலுவலகத்திற்கு வந்த அருண்மொழி ‌பாரதியிடம் பேசிக் கொண்டு இருந்தான்.

“ மதியம் லன்ச் கொண்டு வரல அருண். கேண்டீன்ல சாப்பிடலாம் வர்றீயா?” என்றழைத்தாள் பாரதி.

“ ம்ம்..நான்‌ லன்ச் கொண்டு வந்துருக்கேனே..! அதை என்னப் பண்றது?”

“ ஏய்..! நீ சமைப்பபியா? என்ன‌‌ சமைச்சு கொண்டு வந்திருக்க? “

“ வேறென்ன…ஆல் டைம் ஃபேவரைட் ப்ரியாணி தான்…”

“ ஏய்…ஏய்‌ டிபன் பாக்ஸை கொடுடா…இப்பவே சாப்ட்டு பாக்குறேன்…” என‌அவள் கூறிக் கொண்டு இருக்கும் போதே அமுதன் வந்து , “ ஏய் …சீ..பரக்காவெட்டி. அதை மதியம் சாப்ட்டுக்கலாம். இப்ப எல்லாரையும் மீட்டிங் ஹாலுக்கு வரச் சொல்லுங்க நந்தினி. சீக்கிரம் வந்து சேரு..டேய்.. அருண்மொழி நீயும் தான்டா.. நான் டெஸ்டிங் டீம் கிட்ட சொல்லிட்டு வந்துடுறேன்..” என்று கூறி விட்டு நகர்ந்தான்.

பாரதியுடன் இணைந்து மீட்டிங் ஹாலினுள்‌ நுழைந்தான் அருண்மொழி.

பாரதியுடன் சற்று நெருக்கமாக அமர்ந்து சிரித்து பேசியபடி அமர்ந்திருந்தவனை புருவம் சுருக்கிக் பார்த்தாள்‌ நந்தினி.

அவளது பார்வை இருவரையும் பஸ்பமாக்கிக் கொண்டிருந்தது.

அனைவரும் வந்துவிட, பார்வை திருப்பிக் கொண்டு நந்தினி பேச ஆரம்பித்தாள், “ குட் மார்னிங் எவிரி படி. எம்.யூ கம்பெனிக்கு நம்ம டிசைன் பண்ணிக் கொடுத்த எடியூகேஷன் சாஃப்ட்வேரோட பர்ஃபாமென்ஸ் நல்லா இருக்குன்னு க்ளையண்ட் கிட்ட இருந்து பாசிடிவ் ரெவ்யூ வந்துருக்கு. அவங்களுக்கு நம்ம சாஃப்ட்வேர் ரொம்பவே பிடிச்சிருக்கு அண்ட் ரொம்பவே யூஸ்புல்லா இருக்குதுன்னு காம்பிளிமெண்ட் பண்ணிருக்காங்க. அவங்க சிஸ்டர் கன்சர்னோட அடுத்த புராஜெக்ட்டும் நமக்கு கொடுக்க விரும்புறாங்க. அதுக்கான டிஸ்கஷன் அண்ட் அக்ரிமெண்ட் ரெடி பண்ணுறேன்னு சொல்லிருக்காங்க. இதுக்கெல்லாம் முக்கிய காரணம் உங்களோட உழைப்பு தான். உங்க ஒத்துழைப்புக்கு ரொம்பவே நன்றி. இந்த சந்தோஷமான விஷயத்தை கொண்டாடும் விதமா சின்ன பார்டி ஒண்ணு ஏற்பாடு பண்ணிருக்கேன். அடுத்த வாரம் சனிக்கிழமை எல்லாரும் ப்ளூ பே ஹோட்டலுக்கு வந்துடுங்க. சோ…இந்த சந்தோஷமான விஷயத்தை ஷேயர்‌ பண்ணிக்க தான் உங்களை வரச் சொன்னேன். ஒன்ஸ் அகைன் தேங்க்ஸ் ஃபார் எவிரி ஒன். வேற ஏதாவது சந்தேகம் இருக்கா ?” என்றாள் அனைவரையும் பார்த்தபடியே.

“ எனக்கு ஒரு சந்தேகம் மேம்…” என்ற குரல் ஒலித்தது.

யாரென்று எட்டிப்‌ பார்த்தாள்.‌

ஆர்வக்கோளாறு ஒன்று எழுந்து நின்று, “ மேடம் ….பார்ட்டின்னு சொன்னீங்க…அது…என்ன‌‌ ஃபார்ட்டி? சரக்கெல்லாம் உண்டா…? ஹி…ஹி…தப்பா‌ எடுத்துக்காதீங்க…சும்மா…ஒரு ஜெனரல் நாலேட்ஜ்க்கு தான்…ஹி..ஹி…” எனக் கூறி தலையை சொறிய , அவனை முறைத்தவள், “ ஸ்ட்ரிக்ட்லி ட்ரிங்க்ஸ் நாட் அலோவுட்…” எனக் கூறி விட்டு வெளியேறினாள்.
சரக்கு உண்டா என்று கேட்டவனருகே வந்த அமுதன்,”அந்தம்மா பார்ட்டி வைக்கறதே பெரிய விஷயம். இதுல உனக்கு ஓசி குடி ஒண்ணு தான் கேடு…போடா…! அங்குட்டு. வைச்சிருக்க ஃபார்ட்டியை கேன்சல் பண்ணிறப் போறாங்க…” என அவனது தலையில் தட்டி விட்டுச்‌ சென்றான்.

நந்தனியின் அறைக்குள் நுழைந்தான் அருண்மொழி.

“ என்ன விஷயம்?”

“ மேடம் நான் நேராவே விஷயத்துக்கு வந்துடுறேன். ட்ரிங்க்ஸ் இல்லாம பார்ட்டி நல்லாவே இருக்காது. அதனால் அளவா கொஞ்சமா எடுத்துக்குற மாதிரி ஏற்பாடு‌ பண்ணலாமே? இந்த ப்ராஜெக்ட்டை முடிக்கிறதுக்குள்ள பசங்க ரொம்பவே ஸ்டெரஸ் ஆகிப்‌போயிட்டாங்க. அதனால அவங்க கொஞ்சம் ஜாலியா…இருக்கணும்னு ஆசைப்படுறாங்க. லேடீஸ்யெல்லாம்‌ போனதுக்கு அப்பறம் ட்ரிங்க்ஸ் அரேன்ஜ் பண்ணலாம். கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க” என்றான்.

“ ஏது… குடிச்சா உங்களுக்கு ஸ்டெரஸ்யெல்லாம் காணாம போயிடுமா? நல்லாயிருக்குது உங்க லாஜிக். ட்ரிங்க்ஸ் பார்ட்டியெல்லாம் தேவையில்லை. ஜஸ்ட் மியூசிக் அண்ட் டான்ஸ் மட்டும் போதும். நல்லா ஹய்ஃபை பப்ஃபே அரேன்ஜ் பண்ணிருக்கேன். சோ இதைப் பத்தி திரும்பவும் பேச‌ வேண்டாம். நீங்க மத்தவங்களுக்காக ட்ரிங்க்ஸ் பார்டி கேக்குற‌ மாதிரி தெரியலையே..! உங்களுக்கு தான் ரொம்பவே வேணும் போல?” என்றாள் இகழ்ச்சியாக.

“ சாரி…மேடம். எனக்கு அந்த பழக்கம் கிடையாது. ஏன்னா லைஃப்ல எந்த ஒரு விஷயத்தையும் நான் மூளைக்குள்ளாற‌ புகுத்தி ஸ்டரெஸ் ஆக்கிக்க மாட்டேன். எனக்கு அது எப்பவுமே தேவைப்படாது…” என்றான்‌ உறுதியாக.

“ ஒகே…நீங்க நல்லவராவே இருங்க. பட் அதுக்காக மத்தவங்க குடிச்சி கெட்டுப்போனா உங்களுக்கு ஓகே வா?. இது ஜஸ்ட் செலிப்ரேஷன் தான். இதை ட்ரிங்க்ஸ் பார்ட்டியா மாத்திறாதீங்க. “ என்றாள்.

“ மேடம்…” என‌ ஆரம்பித்தவனை கையமர்த்தி , “ போய் வேலையை பாருங்க மிஸ்டர். எனக்கு தலைக்கு மேலே வேலையிருக்கு. உங்க கூட‌ வெட்டியா பேசிட்டிருக்க எனக்கு நேரமில்லை. உங்களுக்கு தான் ‌வாயடிக்க நிறைய‌ பேர் இருக்காங்கல்ல…போய் அவங்க‌ கூட கடலைப் போடுங்க….”என்றாள் காட்டமாக.

அருண்மொழியோ அவளது கடுகடுப்பை புரியாமல் பார்த்துவிட்டு தோளைக் குலுக்கி விட்டு சென்றான்.

எதனால் இந்த தேவையற்ற கோபம்? அவனிடம் மட்டுமே அத்தனை கடுகடுப்பு.

நெற்றியை நீவியபடி வெளியேறினான் அருண்மொழி.

பாரதியுடன்‌ அவன் நெருங்கிப்‌ பழகுவதே அவளுக்கு மிகுந்த ஆத்திரத்தை வரவழைத்தது.

அவளது மனம் என்னவென்று அவளுக்கே புரியாத நிலை.

சனிக்கிழமையும் வந்தது…

அனைவரும் ‌ஹோட்டல் ப்ளு பேவில் கூடியிருந்தனர்.

விலையுயர்ந்த பி.எம்.டபுள்யூ இசட்4 அந்த ஹோட்டலின்‌ முன்பு வந்து நின்றது.

அனைவரும் வாயைப் பிளந்தபடி அதனைப் பார்த்துக் கொண்டிருக்க அதிலிருந்து மிடுக்காக இறங்கினாள்‌ நந்தினி..

மிதமான ஒப்பனையில் வானுலகில் இருந்து இறங்கி‌ வந்த தேவதையை போலிருந்தாள்.

வெள்ளை கற்கள் பதித்த மெரூன் நிற சாட்டின் புடவையை அணிந்திருந்தவள் ,புடவையின் தலைப்பை ஒரு புறமாக வழிய விட்டிருந்தாள்.

அவளது பால் வண்ண நிறத்தை புடவை இன்னும் எடுப்பாக எடுத்துக் காட்டியது.

கையில் உயர்‌ ரக கடிகாரம் அணிந்திருந்தவள் மறுகையில் வெள்ள கற்கள் பதித்த கைப்பையுடன் நடந்து வந்தாள்.

பாரதி வழக்கம் போல ஜீன்ஸ் டீசர்டில் நின்று அருண்மொழியுடன்‌ பேசிக் கொண்டு இருந்தாள்.

தனது ராயல் என்ஃபீல்ட் மீதமர்ந்து கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருந்தான்.

“ ஏன் பாரதி இன்னைக்காவது பொண்ணு மாதிரி வந்துருக்கலாமே..?” என‌ நக்கலடித்தான் அமுதன்.

“ ஏன் நான் இப்படி இருக்குறதுல்ல உனக்கு என்ன பிரச்சினை ?”என எகிறிக் கொண்டு வந்தாள்.

“ அம்மா ….தாயே..! சும்மா தான் சொன்னேன். வேற ட்ரெஸ் ட்ரை பண்ணிருக்கலாமேன்னு தான்‌ சொன்னேன் .தினமும் ஒரே மாதிரி போட்டுட்டு வர்றியே இன்னைக்கு பார்ட்டி தானே…கொஞ்சம் பட்டி டிங்கரிங்யெல்லாம் பாத்துட்டு வந்துருக்கலாம்ல…” என்று கூறி வம்பிழுத்தவனை தலையிலும் தோளிலும் அடித்தாள் பாரதி.

பாரதியிடம் வம்பிளுத்து அடி வாங்கிக் கொண்டிருந்த அமுதனை பார்த்து சிரித்து கொண்டிருந்தவனின் பார்வை நந்தினியின் மீது பட்டது.

அழகு தேவதையென நடந்து வந்து கொண்டிருந்தவளை விழியகற்றாமல் பார்வையால் கபளீகரம் செய்தான்.

அடித்து வம்பிளுத்துக் கொண்டிருந்தவர்கள் தீடீரென அமைதியான அருண்மொழியை பார்த்தனர்.

அவன் பார்வை சென்ற திசையை பார்த்தவர்கள் அருண்மொழியின் தோளினை தட்டினர்.

அவனோ ஏதோ மாய உலகத்தில் சஞ்சரிக்கும் கொண்டிருப்பவன் போல அவர்களின் கையைத் தட்டிவிட்டுவிட்டு பைக்கில் இருந்து பாய்ந்து எழுந்து தன்னவளை நோக்கி நடந்தான் .

அங்கு அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த அடர் சிவப்பு நிற ரோஜா ஒன்றை எடுத்துக் கொண்டு அவள்‌ முன்பு‌ நின்றான்.

கைப்பையில் அலைப்பேசியை வைத்த படியே வந்து கொண்டிருந்தவள் திடீரென தன் முன்னே தோன்றிய உருவத்தை கண்டு பதறி பின்னால் நகர்ந்தாள்.

வசீகரமான புன்னகையுடன் தன் முன்னே நின்றிருந்தவனை பார்த்தாள்.

கருப்பும் வெள்ளை கட்டம் போட்ட சாதாரண சட்டையும் கருப்பு நிற ஜீன்ஸூம் அணிந்திருந்தான்.

கையில் ஒற்றை ரோஜாப்பூவை வைத்திருந்தவனை பார்த்து,
“ என்ன வேணும்..?” என்றாள் வழக்கம் போல கடுமையான முகத்துடன்.

“ ம்ம்ச்…இவ்வளவு அழகா தேவதை மாதிரி வந்து இறங்கிருக்கீங்க? முகத்தை கொஞ்சம் சிரிச்ச மாதிரி வைச்சுக்கோங்க மேடம். இன்னும் அழகாக இருப்பீங்க.. இந்த புடவையில அவ்வளவு அழகு நீங்க. இந்தாங்க ஒரு சின்ன காம்ப்ளிமெண்ட்..” என்றவாறே கையிலிருந்த ஒற்றை ரோஜாவை அவளிடம் நீட்டினான்.

அதனை பார்த்து விட்டு அவனது முகத்தை பார்த்தாள் நந்தினி.

அவனது விழிகளிரண்டும் ரசனையுடன் அவள்‌ மீது படிந்திருந்தது.

 
Top Bottom