அத்தியாயம் -8
அவளைப் பார்த்த பார்வையில் அத்தனை காதலை தேக்கி வைத்திருந்தான்.
கையில் ஒற்றை ரோஜாவுடன் தன் முகம் பார்த்து நிற்கும் அருண்மொழியை பார்த்தவளுக்கு அத்தனை பரவசம்.
ஜில் என்ற பனிப்பாறையை தலையில் வைத்தது போல ஒரு உணர்வு.
தன்னை விழுந்து விழுந்து காதலிக்கும் ஆணவனைப் பார்க்கும் போது தனது அழகில் கர்வம் வந்தது. கூடவே அலட்சியமும் அழையா விருந்தாளியாக ஒட்டிக் கொண்டது அவளது முகத்தில்.
“ப்ளீஸ்… வாங்கிக்கோங்க..!” என ரோஜாவை அவள் முன்னே நீட்டிக் கொண்டே இருந்தான்.
சுற்றுமுற்றும் பார்த்தாள் நந்தினி.
அலுவலக ஊழியர்கள் ஆங்காங்கே கண்டுகொள்ளாமல் நின்றிருப்பது போல இருந்தாலும் அனைவரின் பார்வையும் தங்கள் மீது தான் என்பதை நொடியில் உணர்ந்து கொண்டாள்.
மிகவும் அலட்சிய பாவனையில் ரோஜாவை வாங்கியவள் அதனை ஒரு கணம் நுகர்ந்து பார்த்தாள்.
அருண்மொழியின் முகம் மலர்ந்து விரித்தது.
அவன் மீது ஏளனப்பார்வை செலுத்தியவள் அவனை பார்த்துக் கொண்டே ரோஜாவின் ஒவ்வொரு இதழாக பிய்த்து அருகிலிருந்த குப்பைத் தொட்டியில் போட்டாள்.
அவளது செயல் முதன்முறையாக அவனுக்கு எரிச்சலூட்டியது.
“ப்ளீஸ்…! உங்களுக்கு பிடிக்கலன்னா என் கிட்டயே அந்த ரோஜாவை கொடுத்திருக்கலாமே..!அதை போய் ஏன் பிச்சி போடுறீங்க…?” என்றான் எரிச்சலாக.
அவனது முகத்திற்கு நேராக குனிந்தவள், “ ஹான்…கோபம் வருதா? வரட்டும் வரட்டும்…என் கிட்ட பேசறதுக்கே ஒரு ஸ்டேட்டஸ் வேணும். நீங்க என்னடான்னா இத்தனை பேர் முன்னாடி ஒத்த ரோஜாவை தூக்கிட்டு வந்து நிக்கிறீங்க? எவ்வளவு தைரியம் உங்களுக்கு? ம்ம்… இனி என் பின்னாடி வர்றதுக்கு முன்னாடி யோசிக்கணும். அதனால தான் நீங்க கொடுத்த காதல் ரோஜாவை பிச்சி போட்டேன். போங்க மிஸ்டர் அருண்மொழி. பார்ட்டிக்கு எல்லாம் ரெடியா இருக்கான்னு செக் பண்ணுங்க. அப்பறம் அது இல்லை இது இல்லன்னு பேச்சு வரப்போகுது. ஐ வாண்ட் எவிரித்ங்க் டு பி பெர்ஃபெக்ட் இன் மை லைஃப். காட் இட். நீங்க பெர்பெஃக்ட் கிடையாது. நான் சொன்னதோட அர்த்தம் புரிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன் . உள்ள போங்க… இந்த மாதிரி ஹோட்டலை எல்லாம் கனவுல கூட நீங்க பாத்துருக்க மாட்டீங்க. போய் ஆசை திர பார்த்து என்ஜாய் பண்ணுற வழியைப் பாருங்க..”என்று அலட்சியமாக கூறி விட்டு ஹோட்டலின் உள்ளே நுழைந்தாள்.
அருண்மொழிக்கு முதன் முதலாக ஒரு வித சலிப்பு ஏற்பட்டது.
சற்று வாடிய முகத்துடன் உள்ளே நுழைந்தவனின் கைகளைப் பிடித்தாள் பாரதி.
“ என்ன புரூஸ்லீ…? என்ன வேணும்? கொஞ்சம் வெயிட் பண்ணு ஓசி சோறு சீக்கிரம் போட்டுடுவாங்க …பறக்கிறது, ஓடுறது, தாவுறது, ஊர்றதுன்னு ஆல் வெரைட்டிஸ் இருக்கு…” என நக்கலடித்தவனின் முகத்தை கூர்ந்து பார்த்தாள்.
சற்று முன்பு நந்தனியால் அவமானப்பட்ட வருத்தம் அவனது முகத்தில் சிறிதும் இருப்பது போல தெரியவில்லை.
“என்ன டி..? என்ன அப்படி பாக்குற?”
“ உனக்கு கொஞ்சம் கூட சூடு சொரணை இல்லயா டா? நீ ஹெர்ட் ஆவன்னு தெரிஞ்சும் அவ்வளவு பேச்சு பேசுறா… நீயும் கொஞ்சம் கூட வெக்கமில்லாம அவ கிட்ட பல்லை காட்டிட்டு நிக்குற? டோண்ட் யூ ஃபீல் அஷேம்ட்? எப்படி டா இப்படி உன்னால இருக்க முடியுது..? நான் மட்டும் ஆம்பிளையா இருந்தா சரிதான் போடின்னு சொல்லிட்டு போய் அவளை விட அழகான , குணமான பொண்ணை கல்யாணம் கட்டி அவ முன்னாடி காட்டுவேன்…” என்றாள் ஆதங்கத்துடன்.
“சில் பேபி….நீ ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற? ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் விருப்பம்ன்னு ஒண்ணு இருக்குல்ல. அதை நம்மமதிக்கணும். விருப்பமில்லாம என் விரல் நகம் என்ன… என் மூச்சுகாத்து கூட அவ மேலப் படாது.” என்றவனை கண்களில் நீர் கோர்க்க பார்த்தாள் பாரதி.
அவளும் தைரியமான பெண் தான். தேவயில்லாமல் வழியும் ஆண்களை பார்வையினாலேயே விரட்டி விடுவாள்.
மனதில் பட்டதை பட்டென்று போட்டு உடைத்து விடுவாள். மனதில் சிறிதும் இறக்கம் என்பதே இருக்காது.. ஜீன்ஸ் பேண்ட்டுடன் போனி டெய்ல் போட்டுக் கொண்டு தான் எப்போதும் இருப்பாள்.
அருண்மொழியின் பேச்சு அவளை அசர வைத்தது.
முதல் நாள் காதலை பகிர்ந்து , அடுத்த நாள் வெளியே சுற்றி, சில தினங்களிலியே காமத்தின் வாசலை தொட்டு விடத் துடிக்கும் இளஞ் சிட்டுகளுக்கு மத்தியில் அவனது நிதானமும் கண்ணியமான காதலும் அவளை அசைத்து தான் பார்த்தது.
“ என்ன புரூஸ்லீ..? ஏன் கண்ணு வேர்க்குது?” என்றான் தோளில் கையைப் போட்டபடியே.
“ ஒண்ணுமில்ல டா.நீ ஒரு ஜென்டில்மேன். கட்டிக்க போறவ குடுத்து வச்சவ?”
“ அவ தான் மனசை குடுக்க மாட்டேங்குறாளே…!” என்றனை முறைத்தாள் .
இருவரும் பேசியபடி அந்த பிரம்மாண்டமான ஹோட்டலின் மீட்டிங் ஹாலிற்கு சென்றார்கள்.
அவனது கையைப் பிடித்துக் கொண்டே சென்றாள் பாரதி.
பொதுவாக அவன் யாரையும் தொட்டுப் பேசமாட்டான்.
பாரதியின் தைரியமும், வெளிப்படையான பேச்சும், நேர்மையும் அவனுக்கு பிடித்துப் போனது.
அவளது நட்பை இயல்பான ஒன்றாக ஏற்றுக் கொண்டதால் அவளிடம் எவ்வித கல்மிஷமின்றி தொட்டு பேச முடிந்தது.
அதிலும் ஒரு கண்ணியம் இருக்கும். அவனது தொடுகையில் ஒரு பாதுகாப்பினை உணர முடிந்தது அவளால்.
பாரதியும் அருண்மொழியும் கரங்களை கோர்த்துக் கொண்டு வருவதை பார்த்தவளுக்கு மனம் கனன்றது.
சிறிது நேரத்தில் அமுதமும் வந்துவிட, வழக்கம் போல அருண்மொழியை சுற்றி நண்பர்கள் கூட்டம் கூடிவிட்டது.
முகத்தை சிரித்தபடி வைத்திருந்தாலும் அருண்மொழியுடன் ஒட்டிக் கொண்டே திரியும் பாரதியை பார்க்கும் போது எரிச்சலாக வந்தது நந்தினிக்கு.
சிறிது நேரத்தில் அங்கே போடப்பட்டிருந்த சிறிய மேடையில் ஏறியவள்ண ப்ராஜெக்ட்டில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களையும் பாராட்டிப் பேசினாள்.
அனைவருக்கும் பரிசாக சற்று விலையுயர்ந்த அலைப்பேசியை வழங்கினாள்.
அனைவருக்கும் கை குலுக்கி பரிசினை வழங்கியவள் அருண்மொழிக்கு மட்டும் வேண்டுமென்றே கை குலுக்காமல் வெறுமென கொடுத்தாள்.
அவனோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சிரித்தபடி அவளிடமிருந்து அலைப்பேசியை வாங்கிக் கொண்டான்.
ஆங்காங்கே அனைவரும் குழுமியிருக்க அங்கிருந்த ஒரு சிலர் அருண்மொழியை பாட வேண்டும் என்றும் ஒரு சிலர் ஆட வேண்டும் என வற்புறுத்தினர்.
“ ஓகே…ஓகே…” என்றவன் டிஜே விடம் சென்று ஏதோ கூறிவிட்டு வந்தான்.
“அங்கமெல்லாம் தங்கமான மங்கையை போல…
நதி அன்னநடை போடுதம்மா
பூமியின் மேலே…
கண்ணிறைந்த காதலனை காணவில்லையா…
இந்த காதலிக்கு தேன் நிலவில்
ஆசையில்லையா…
காதல் தோன்றுமா…?
இன்னும் காலம் போகுமா..
இல்ல காத்து காத்து
நின்றது தான் மீதமாகுமா..
பாட்டு பாடவா…
பார்த்து பேச வா…
பாடம் சொல்லவா…பறந்து செல்லவா..”
என பழைய பாடலை ரிமீக்ஸ் செய்து இரு கைகளையும் விரித்துக் கொண்டு நந்தினியின் பின்னே நடந்து கொண்டே மையலுடன் பாடி ஆடினான்.
அவளோ அவனை திரும்பி தீயென முறைத்தாள்.
காந்த குரல் அவனுக்கு.
காதலுடன் அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே பாடி முடித்தான்..
“ ஹேய்…சூப்பர் டா….வேற…வேற.. புதுப்பாட்டு பாடுடா…” என்று அமுதன் கூறினான்.
அவனிடம் கட்டை விரலை தூக்கிக் காட்டியவன் அ வேறு திரைப்பட பாடலை பாட ஆரம்பித்தான்.
“தேடல் வரும்பொழுது என் உணர்வுகளும் கலங்குதடி…
கானலாய் கிடந்தேன் நான் உன்
வரவால் விழி திறந்தேன்...
இணை பிரியாத நிலை பெறவே
நெஞ்சில் யாகமே…
தவித்திடும் போது ஆறுதலாய் உன் மடி சாய்கிறேன்..
காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன் காதல் ஞாபகங்கள்..
தினம் தினம்…
கனவெல்லாம் நீதானே…
விழியே உனக்கு உயிரானேன்..
பார்வை உன்னை அலைகிறதே..
உள்ளம் உன்னை அணைக்கிறதே..
அந்த நேரம் வரும்பொழுது
என்னை வதைக்கின்றதே..”
என உயிர் உருக பாடி முடித்தான்.
குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவிற்கு அனைவரும் அவன் ரசித்து பாடுவதை மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.
ரசிக்க வேண்டியவளோ மௌனமாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்..
அவன் பாடி முடித்தவுடன் அனைவரும் அவனை சூழ்ந்து கொண்டு பாராட்டினர்.
அனைவருக்கும் தெரிந்தது அவன் நந்தினியை நினைத்து தான் பாடினான் என்பது.
ஆனால் அதனை வைத்து அவனை வம்பிழுக்க முடியாதே..! தனியாக இருந்தால் அனைவரும் ‘ஓஓ….ஓ’ வென்று கத்தி அவனை ஒரு வழியாக்கியிருப்பார்கள்.
நந்தினி அருகிலேயே இருப்பதால் துடுக்காக பேச முற்பட்ட வாயை கட்டி அமைதி காத்தார்கள்.