• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நான் அறிய நீ - 12

Vishakini

Moderator
Staff member
"சீட் புக் பண்ணியாடா.."

"ம்!"

"எத்தின மணி பஸ்?"

"பஸ் இல்ல ரெயின்"

"ரெயினா.. பஸ் எண்டால் அஞ்சி மணித்தியாலத்துல கொண்டு போய் விடுவான். ரெயின் பத்து பன்னிரண்டு மணித்தியாலம் எடுக்கும். கால கட்டி வச்ச மாதிரி அவ்வளவு நேரம் இருந்து போகோணும். அலுத்த பயணம்"

"அதான் வசதி.."

"அதான் வசதியா?"

"ஓ, ரயில் வசதி.. நித்திர தூங்கி காலையில போய் இறங்கலாம்.."

"சீட் கிடைக்குமா"

"ஒஃபிஸ் வாரன்ட் இருக்கு. ஃபர்ஸ்ட் க்ளாஸ்ல எடுத்து வச்சிருக்கன்"

"ஃபர்ஸ்ட் க்ளாசா.. பேசாம நாங்களும் வெளிக்கிட்டு போவமாடா.. பம்மல் ட்ரிப்பா இருக்கும்.."

"அவன் ஒஃபிஸ் வேலையா போறானாம்.. உனக்கு பம்பல் கேக்குதா.. எப்ப வருவாய் வரா?"

"போனா தான் தெரியும்.."

"ஒரு திட்டம் இல்லாமலா வெளிக்கிடுறிங்கள்?"

"போற வேலை முடிஞ்சா அடுத்த நிமிஷம் திரும்பிருவம்.."

பயணம் முஸ்தீபுகளுடன் பரபரப்பாக இயங்கிய வரோதயனை மடக்கி மடக்கி பேட்டி கண்டான் ராசு.

என்ன இருந்தாலும் வரோதயன் படித்தவன். புத்திஜீவி. அவன் நெறியாகவே நடப்பான் என்று கண்மூடி நம்பும் பஞ்சுவுக்கு அவனுடைய இந்த திடீர் பயணத்தில் எவ்வித சந்தேகமும் எழவில்லை.

மச்சான் மீது உறவும் கொள்ளொணா நட்பும் இருப்பினும் இயற்கையான முன்னெச்சரிக்கை உடையவன் ராசு. எதையும் தூண்டித் துருவி கேள்வி கேட்டு அலசி ஆராய்ந்து தன் மனதுக்கு ஒப்பினால் அன்றி இது தவறடா என்று ஆலோசனை தருபவன்.

பிரார்த்தனாவின் தாயை ஆஸ்பத்திரியில் சேர்க்க உதவியதையே ஆட்சேபித்து 'முன் பின் அறியாத அவர்களிடம் தப்பும் தவறும் இருக்கலாம் அந்தளவுக்கு ஒரு பக்கத்து வீட்டு காரனின் உதவி கூடவா கிடைக்காது அந்தப் பெண்ணுக்கு, ஏன் உன்னை கூப்பிட வேண்டும்?' என்று ஆயிரம் கேள்வி கேட்டவன் அவன்.

'ஒஃபிஸ் பயணம் அம்மா.. ஒஃபிஸ் வாகனங்கள கொழும்புல கம்பனிட்ட ரிப்பேர்க்கு விட்டிருக்கிறாங்கள். நான் நேர்ல போய் செக் பண்ணி பாரம் எடுத்து வர வேணும்' என்று வரோதயன் வெளிக்கிடுவதை உண்மையா பொய்யா என்று சந்தேகப்படாதவன்,

'அதுக்கு நீ ஒஃபிஸ் வாகனத்தில தானே போகணும்? ஏன் தனிப்பட்ட முறையில போறாய்?' என்று விபரமாக மடக்கினான்.

'தனிப்பட்ட முறையில போனாலும் அதுக்குரிய செலவை நாங்க க்ளைம் பண்ணலாம் ராசு. ரிட்டர்ன் வரும் போது ஒஃபிஸ் வாகனத்திலயே வருவன்..' என்றால்,

"எப்படா நீ ட்ரைவர் ஆகின?" என்று கேட்கிறான்.

"டேய் நான் தனிய போக இல்ல. ஒஃபிஸ் ஸ்டாப் வாராங்க.."

"யாரு வாராங்க?"

"வேற யாரடா.. ட்ரைவரா இருக்கும் கேள்விக்கு புறந்தவனே, நீ போய் பைக்கை எடு.. நீ பேக்க தந்து போட்டு அம்மாட்ட சொல்லிட்டு வா. ஒன்பது மணிக்கு ரயில் எண்டால் எட்டு மணிக்கு நிக்க வேணாமா அங்க?" என பஞ்சு காப்பாற்றினான்.

தாயிடம் சொல்லிக் கொண்டு கிளம்பிய வரா, "பஞ்சு வரட்டும் என்னோட.. நீ அம்மாவோட நில்லு. ரெண்டு மூணு நாள் ஆனாலும் ஆகும். கவனமடா.." என்றான் ராசுவிடம்.

"கவனம் தம்பி, போய் கோல் எடு" பத்திரம் சொல்லி வழி அனுப்பினார் காமாட்சி. அரச உத்தியோகம் எடுத்த குறுகிய காலத்தில் மகன் அலுவலக ரீதியில் தலைநகருக்கு பயணம் செய்வது பெருமை தாய்க்கு.

ஒரு மணி நேர மோட்டார் சைக்கிள் பயணத்தில் திருகோணமலை ரயில் நிலையத்தில் இறங்கியவன் பஞ்சலிங்கத்தை புறப்படச் சொன்னான்.

"ரயில் வெளிக்கிட விட்டு போறனே"

"இரவில தனிய போகணும் நீ. நேர காலத்தில போய் சேரு" என முதுகில் தட்டி அனுப்பி விட்டான்.

9.45pm க்கு புறப்படவுள்ள கொழும்பு புகையிரதத்தில் செல்வது என்பது பிரார்த்தனாவின் தீர்மானமே.

'தேடி விசாரிச்சதுல ரெண்டு மூணு அட்ரஸ் இருக்கு வரோதயன்.. கொழும்பு காலி சிலாபம். இதுல சிலாபம் தான் ஹவுஸ் ஓனர் தந்த அட்ரஸ்.. எனக்கு எங்க தொடங்கி எங்க முடிக்கிற எண்டு விளங்கல்ல' என நேற்று இரவு அலைபேசியில் திணறியவளிடம் 'ஒவ்வொண்டா போவம். பார்க்கிற வரை தேடுவம்' என்று பதில் கொடுத்தான்.

'ம்' என்ற பதிலில் அவன் மேல் மலையளவு நம்பிக்கையும் திடமும் அவள் கொள்வது புரிந்தது.

'காலைல பஸ் இருக்கு. போவோமா?' என்றதும் மறுத்தவள் இரவு ரயில் பயணத்தை தேர்ந்தெடுத்திருந்தாள்.

ஏன் எதற்கு என்று கேள்வி கேட்கவில்லை இவன். அவளுடைய சவுகரியம் அதில் அடங்கியுள்ளமையால் மறுப்பின்றி ஒப்புக் கொண்டான்.

ரயில் நிலையத்தில் இரவுப் பயண தொடருந்துகள் புறப்பாட்டுக்கு காத்திருக்க, பரிசோதகரிடம் புகையிரத ஆணைச் சீட்டை காட்டி சீட் எடுத்தான்.

அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட சலுகையாக முதல் வகுப்பில் பயணம் செய்யும் வாய்ப்பை வருடத்திற்கு இரண்டு முறை வழங்குகிறது அரசு.

இதை பயன்படுத்தும் யோசனையும் பிரார்த்தனாவுடையதே.

நேரம் பார்த்தவன் எங்கும் தென்படுகிறாளா என்று தேடி தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்கும் போது ஆட்டோவில் வந்து இறங்கியவள் பைக்குள் சிணுங்கும் அலைபேசியை துழாவி சாரதிக்கு பணம் நீட்டினாள்.


"சொரி வரோதயன், வந்து கன நேரமா?"

"வெளிக்கிட அஞ்சி நிமிஷம் தான் இருக்கு.. வாங்க"

பெட்டியில் தங்களை சேர்த்துக் கொண்டதும் தண்டவாளங்களை உரசி ஒலி எழுப்பியது புகைவண்டி.

ஜன்னல் பக்கம் அமர்ந்த பிரார்த்தனாவின் அருகில் இடைவெளி விட்டிருந்தான் வரோதயன். அவர்களுடன் இன்னும் ஒரு தம்பதி தங்கள் இரண்டு பிள்ளைகளுடன் இணைந்திருந்தனர்.

பிளளைகளுக்கு இது முதல் ரயில் பயணமாம். குழந்தைகள் ஆசையை நிறைவேற்ற கொழும்பில் உள்ள தங்கள் அத்தை வீட்டுக்கு போகிறார்களாம்.

"அம்மாக்கு என்ன சொல்லிட்டு வந்திங்க வரோதயன்.." தங்கள் உரையாடல் எதிரில் உள்ளவர்களுக்கு விளங்கி விடக் கூடாது என்ற பிரக்ஞையுடன் பிரார்த்தனா சின்னக் குரலில் பேசினாள்.

"ஒஃபிஸ் ட்ரிப் எண்டு சொன்னன்.."

வரோதயன் ரயில் சத்தத்துடன் போட்டியிட்டதும் முன்னால் உள்ளவர்களை பார்த்தவள் எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை.

காலை சவுகரியமாக வைத்து கையை குறுக்கே கட்டி ஜன்னல் வழி வேடிக்கை பார்ப்பது போல வந்தாலும் பக்கத்தில் உள்ள பெண்ணின் சங்கடங்கள் பற்றிய யோசனையே அவனிடம் வியாபித்திருந்தது.

"நீங்க சாப்பிடல்லயா?" எதிர் ஆசனத்தில் இரவுணவை கடை விரித்துக் கேட்டனர்.

பிரார்த்தனா வரோதயனுக்கு உணவு கட்டி வந்திருந்தாள். காமாட்சி செய்து தந்ததை அவளிடம் அவன் கொடுத்தான்.

"நான் சாப்பிட்டு வந்தன்.."

"ரெண்டு பார்சல் இருக்கு. வேஸ்ட் பண்ண கூடாது.. அம்மாட சமையல் நல்லா இருக்கும்.. சாப்பிட்டு பாருங்க.."

வரோதயன் வீட்டு உணவை வீணாக்குவதற்கு பதில் தனது சமையல் குப்பைத் தொட்டிக்கு போனால் பரவாயில்லை என்று அவள் எண்ணும் போது அவனுக்காக அவள் செய்து வந்ததை பிரித்து சாப்பிட ஆர்ப்பித்திருந்தான் வரோதயன்.

புளி சாதத்துடன் இரண்டு அவித்த முட்டை வைத்திருந்தாள். அதில் ஒன்றை அவளுக்காக தந்தான்.

நிஜத்தில் பிரார்த்தனா சாப்பிட்டு வரவில்லை. கட்டியாக டீ ஊற்றி குடித்து விட்டு கிளம்பி இருந்தாள்.

'கோணேசர் பூமியில் அவரை நம்பி வாழும் தங்களுக்கு அடி மேல் அடியாம்..' ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டார் ராஜேஸ்வரி அவள் புறப்படும் நேரத்தில்.

தொலைந்தவளை தேடி உள்ள பிள்ளையும் ஆபத்தில் சிக்கி கொள்ளுமாம்.

போகாத நீ.. என்று கட்டையை போட்டார்.

போகாம இருந்தா ஒவ்வொரு நிமிஷமும் நரகம் தான் எனக்கு இங்க. மூச்சு முட்டுது. விடுங்க.. என்று வெளியே வந்து விட்டாள்.

என்ர சவத்த தாண்டி போவன் நீ.. நா வண்மை காட்டினார்.

மனம் பூராவும் கசப்பு.

தோள் பையை எறிந்து, சுடிதாரை கழற்றி வீசி, 'எங்கும் போகவில்லை நான்' என்று சொல்ல நினைத்தாள்.

வரோதயன் அவளுக்காக காத்திருப்பான் ரயில் நிலையத்தில்.

உங்கட தங்கச்சிட வீட்ட போய் ரெண்டு நாள் இருங்க என்று கிளம்பி வந்து விட்டாள்.

பிட்டும் கோழிக் குழம்பும் காமாட்சியின் கை பக்குவத்தில் சாப்பிட்ட பிரார்த்தனா வரோதயன் முகத்தை கடைக்கண்ணால் பார்த்தாள்.

அவனுக்கு பிடிக்குமோ பிடிக்காதோ என்ற சங்கடத்துடன் சிக்கன் துண்டுகளையும் குழம்பையும் எடுக்க சொன்னாள், தனது எச்சில் கையால் வைக்கத் தயங்கி.

பங்கெடுக்க மாட்டேன் என்றவனுக்கு அவளே வைத்தாள்.

ஜன்னலுக்கு வெளியே கை கழுவி தண்ணீர் அருந்தி வாய் துடைத்தவன் தன்வசம் உள்ள இனிப்பை முன்னால் உள்ள பிள்ளைகளுக்கு பங்கு கொடுத்து அவர்களிடன் பேச ஆரம்பித்தான்.

இருளை கிழித்து ஓடிக் கொண்டிருந்த ரயில் பெட்டிகள் தடக் சத்தம் காதுக்கு பழகி விட்டது. காட்சி இல்லாத இருட்டில் பார்த்தாள்.

விடியல் நிலானியை காட்டித் தருமா?

மேகம் கோர்த்து மழைத் தூரல் விழுந்தது. ஜன்னல் பக்க சாரல் குளிரில் உறக்கம் கலைந்து கழுத்து வலித்தது பிரார்த்தனாவுக்கு.

ஒரு வாக்கில் வரோதயன் தோளில் சரிந்து தூங்கி இருந்தவள் விழித்து விலகி அமர்ந்தாள். ஜன்னலின் குளிர் கம்பிகள் பட்ட பிறகு தூக்கம் வரவில்லை.

அவன் நேராக உட்கார்ந்து தலையை பின்னால் சாய்த்து கை கட்டி உறக்கத்தில் இருந்தான்.

துளி சொட்ட சொட்ட கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் அடைந்தனர்.

நனைந்த ஃப்ளாட்பாரம் வரவேற்றது. சேர்ந்து பயணித்த தம்பதி வரோதயனுடன் நட்பாக விடைபெற்றுப் பிரிந்தது.

துப்பட்டாவை இழுத்துப் போர்த்தி ஜனத் திரளில் இடிபடாமல் வரோதயன் நிழலாக நடந்தவள்
பர்சில் பத்திரப்படுத்திய முகவரி சீட்டைக் கொடுத்தாள்.

"ரூம் பார்த்து ரெஃப்ரெஷ் ஆகிட்டு பஸ் எடுப்பம்"

"இங்க ஸ்டேஷன்லயே எல்லாம் வசதி இருக்காம் எண்டாங்கள்.." என்றதும் அவன் நடை தடைப்பட்டது.

ரயில்வே கட்டண கழிப்பறை, குளியலறை வசதிகளையுமுடையது. தலைநகர் தேடி வரும் தூர பிரதேச மக்களுக்கு வசதியாகவே அமைந்துள்ளது.
 

Vishakini

Moderator
Staff member
அழைத்து வந்த பெண்ணை அங்கே விடுவதா என்று பார்த்தான்.
பிரார்த்தனாவின் விருப்பத்தை முன்னுரிமை படுத்தியவன் மறுத்து பேசவில்லை.

அவளுக்கு சவுகரியம் எனும் போது வேறென்ன.

காலைக் கடன் முடித்து உடை மாற்றி தலை சீவி பொட்டு வைக்க பதினைந்து நிமிடம் எடுத்துக் கொண்டாள் பிரார்த்தனா.

நாவை பஸ்பம் ஆக்கும் பதத்தில் ரயில்வே கடையில் கோப்பி குடித்து கிளம்பினர்.

முதல் முகவரிக்கு காலி பஸ் தேடினான். பேருந்து நெரிசலில் நசிந்தே பயணித்தனர். ஒரு மணி நேரம் பிடித்தது. விலாசம் விசாரித்த ஆட்டோகாரன் மீட்டர் போட்டு ஏற்றிச் சென்றான்.

நகரில் இருந்து பிரிந்த கரையோரப் பிரதேசம் அது. சின்னச் சின்ன பள்ளிவாசல்கள் கடந்தன.

"ஷியாம் கருணாகரமூர்த்திட வீடு.."

"இந்த வீடு தான்.."

மதிற் சுவரோடு இணைந்த சீற் மனை அது. ஆங்கிலேயர் காலத்து கதை சொல்லியது.

வரோதயன் அழைப்பு மணி அடிக்க, நிலானியே கதவு திறப்பாள் என்று பேராசை கொண்டாள் பிரார்த்தனா.

"யாருங்க?" நடுத்தர வயது பெண் மணி திறந்தார்.

"ஷியாம்"

பெண்மணியின் முகம் மாறியது.

"அவ எங்க இங்க இருக்கான்.. கொழும்பு கொச்சிக்டைல பாருங்க" கதவை முகத்தில் அடித்தாள்.

மனம் கருக, "நாங்க.." என்று பிரார்த்தனா குறுக்கறுக்கும் முன்பு கதவு அடைக்கப்பட்டு விட்டது.

"என்ன எண்டு கேட்காமலே கதவ மூடுறாங்க.."

"இங்க இல்லப் போல. கொச்சிக்கடை வீடு எண்டு சொன்னாங்க.. அடுத்த அட்ரெஸா...."

அங்கிருந்து நடந்து மெயின் ஏறினர். பேருந்து சனத்தை திணித்தே பயணித்தது. எல்லாருக்கும் அவசரம். எதையோ விரட்டிக் கொண்டே ஓடுகிறது நகரம்.

"சொரி வரோதயன், சாப்பிட்டு போவம்.. மூணு மணி ஆகுது.. ரைஸ் இருக்குமா?"

மீல்ஸ் நாவுக்கு ஒவ்வாத விதத்தில் கிடைத்தது. கடனுக்கு முடித்து கை கழுவும் போது அடுத்து செல்லும் இடத்தில் நிலானி இருக்க வேண்டும் என்று நினைக்காத தெய்வத்தை மனதார வேண்டினாள்.

இரண்டு பேருந்து மாறி நகர்புற ஒதுக்கத்து சந்து வீட்டை முச்சக்கர வண்டி பயணத்தின் முடிவில் இருநூறு மீட்டர் நடையில் அடைந்தனர்.

இருள் கவிய ஆரம்பித்த தெருவில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடினர்.

"ஷியாம் கருணாகரமூர்த்தி எண்டு...." விசாரித்த ஒருவருக்கும் தெரிவதில்லை.

அடித்த பந்து விரோதயன் முகத்தை பதம் பார்க்க வந்தது. விலகிப் பிடித்து திருப்பி வீசினான்.

"சொரி ஆங்கிள்!"

"ஷியாம் கருணாகரமூர்த்திய தெரியுமா தம்பிக்கு?"

"தெரியாதே.."

"வேற யாருக்கு தெரியும்?"

"வேற எதுனா டீடைல் சொல்லுங்க"

சிறுவன் தனது வீட்டுக்கு சென்று விசாரித்து வந்தான். வாங்க என அழைத்துப் போய் மூலை வீட்டைக் காட்டினான்.

"நீங்க இருங்க.." என வரோதயனை நிற்க வைத்து பிரார்த்தனா அழைப்பு மணி அழுத்தினாள்.

வயதான கிழவர் கைலியில் கதவு திறந்து யார் தொந்தரவு செய்வது என முகம் சுருக்கினார்.

இது ஷியாமின் தந்ததையாக இருக்கும்? மகனை கவர்ந்து சென்ற பெண்ணின் அக்கா தான் இவள் என்று தெரிந்தால் எப்படி எதிர்வினை ஆற்றுவார்?

"ஷியாம் சேர் இருக்கிறாரா?"

என்ன விதமான பார்வை என்றே கணிக்க இயலாத பாவனையில் நோக்கியவர் "அப்டி ஒருவரும் இங்க இல்ல!" என்று கதவைச் சாத்தினார்.

"ஐயா, ஐயா, ஒரு நிமிஷம் இருங்க.. நான் அவருட ஸ்டூடன்ட், இங்க கொழும்புக்கு ஒரு வேலையா வந்தன். அப்டியே சேர்ர பாத்துட்டு போகலாம் எண்டு…"

"தேடி வந்து பழகுற அளவில உத்தமன் இல்ல அவன். ஊர பார்த்து போய் சேரு" என்றவர் வரோதயனை ஒரு பார்வை பார்த்து கதவை அடைத்து விட்டார்.

ஏமாற்றம் முகத்தில் அறைய ஆக்ரோஷமாக அந்த கதவை தட்டினாள் பிரார்த்தனா.

"உத்தமன் இல்லயா.. அவர் யாரு உங்களுக்கு.. எனக்கு ஷியாம பாக்கணும். எங்க இருப்பான் இப்ப? நான் ஸ்டூடன்ட் இல்ல. ஷியாமால பாதிக்கப்பட்ட ஒரு பொம்பிளப் பிள்ளைட அக்கா நான்.. என்ர தங்கச்சி தேடி வந்திருக்கன்.. கதவ திறங்க.. கதவத் திறங்க.."

கூச்சலில் தெருவில் கூட்டம் சேர்ந்தது. வேடிக்கை பார்த்தது. முடி வளர்த்த அழுக்கு வாலிபர்கள் கமெண்ட் அடித்தனர்.

வரோதயன் பிரார்த்தனாவை கூப்பிட்டான். அது அவள் காதில் விழவில்லை.

படி ஏறி கையைப் பற்றியவன் "ரோட்டே பார்க்குது.. இது நம்மட ஊர் இல்ல.. மொழி பிரச்சினை இருக்கு இங்க. தப்பா விளங்கி கொள்றாங்க. தேவை இல்லாத பிரச்சினை ஆகினா வந்த வேலை கெட்டுப் போயிரும். போவம்.."

பிரார்த்தனா தெருவை பார்த்தாள்.

எவன் என்ன நினைத்தால் என்ன? ஒரு பெண் கத்துகிறாள் என்றால் ஏன் இவர்களுக்கு அவளது வலி புரியவில்லை.

"ஏன் வரோதயன் இப்டி இருக்கிறாங்க.. சிங்கம் புலியா நான்.. மனிசி தானே நான்.. தமிழ் பிள்ள தானே.. எவ்வளவு தூரம் இருந்து வந்திருக்கிறன்.. என்ன எண்டு கேட்டு என்னக் கதைக்க விட்டா என்ன? முகத்தில அறைஞ்ச மாதிரி கதவ அடைச்சா என்ன அர்த்தம்..
எல்லாரும் பாக்குறாங்க.. போவம் எண்டா எங்க போற? வந்த வேலை முடியல்லயே.." கத்தினாள்.

"ப்ரார்த்தனா! சூழ்நிலை விளங்குதா இல்லையா? இங்கருந்து போவம் முதல்"

"இல்ல நான் ஒரு முடிவு தெரியாம வரமாட்டன்.." என கதவை ஓங்கித் தட்டியவள் கை பற்றி மடக்கியவன்,

"அடிச்சிருவன் பிரார்த்தனா.. சொல்றத விளங்கிக் கொள்ளு. இப்ப வேணாம். போவம்"

கட்டுப்படுத்தும் அவன் மீது கோபம் வந்தது. அவன் கையை உருவி இறங்கி நடந்தாள்.

கிட்டத்தட்ட அவள் வேகத்திற்கு அவன் விரட்டி வர வேண்டி இருந்தது.

சந்தில் இருவர் மாத்திரம் நடக்க கூடிய ஒழுங்கையில் எதிரில் வந்த ஆணில் இடித்துக் கொண்டவள் கோபிக்கும் குணத்தில் இல்லை. விலகி நடந்தாள்.

அவள் நடை தளர்ந்ததும் "பொறுமையா தான் போகணும். முட்டிட்டு மோதிட்டு புது பிரச்சினைய உருவாக்காக்க கூடாது"

"கைக்கு கிட்ட வந்துட்டன். அது ஷியாம்ர க்ளோஸ் ரிலேஷன்.. அப்பாவா இருக்கலாம்.. அவரோட கதைச்சா எல்லாம் தெரிஞ்சிருக்கும்.."

"நம்மள கூப்பிட்டு இருக்க வச்சி கதைக்கிற ஆள் மாதிரி தெரியல்ல.. மற்றவங்க கதைச்சது உனக்கு கேட்கல்ல"

"மற்றவங்க கதைக்கிறத பத்தி எனக்கு என்ன? உங்கள யாரு கதைக்க சொன்ன? கால்ல விழுந்தாவது நான் கதைச்சிருப்பன். என்ர தங்கச்சி எங்க எண்டு கேட்டிருப்பன்.. ஷியாம் உத்தமன் இல்ல என்றார்.. அப்படி எண்டா அந்த அயோக்கியன்ர கையில நிலானி மாட்டி இருக்காள்.."

"ஒரேடியா முடிவுக்கு வர வேணாம். இன்னும் ஒரு அட்ரஸ் இருக்கு.."

"அங்கையும் இருப்பாள் எண்டு எனக்கு நம்பிக்கை இல்ல.." வெறுப்புடன் உரைத்தவள் தொண்டைக்குள் பயம் துடித்தது

பக்கத்தில் போய் குடிக்கப் பானம் வாங்கி வந்தான். போத்தல் மூடி திறந்து நீட்டினான்.

"வேணாம்.."

"குடியுங்க பிரார்த்தனா.."

அந்த பெயர் தெரியாக் கொழும்பு நகர் குப்பைச் சந்தின் இருட்டு முனையில் நின்று ஏன் அவன் கெஞ்ச வேண்டும்!

சற்று முன்பு மிஞ்சினான் என்பது அவள் கருத்தில் பதிந்திருக்கவில்லை
 
Top Bottom