• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

புது மங்கல சௌபாக்கியம் - 1

நிதனிபிரபு

Administrator
Staff member
புது மங்கள சௌபாக்யம் 🌸

அத்தியாயம் 1

தமிழகத்தின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றான மதுரை மாநகரம்.. வரலாறு, பக்தி, பரபரப்பு, வியாபாரம் எல்லாம் கலந்த நகரம். “தூங்காத நகரம்” என்ற பெயர் பெற்ற இந்த நகரம், பகலும் இரவும் உயிரோட்டத்தால் நிரம்பி இருக்கும்.

இந்த நகரத்தின் இதயத்தில் உயர்ந்து நிற்கும், பல துறைகள் ஒரே கூரையின் கீழ் இணைந்துள்ள மிகப்பெரிய மல்ட்டி-ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல். நவீன வசதிகள், உலகத் தரம் வாய்ந்த மருத்துவ உபகரணங்கள், முழு நேரமும் அவசர சிகிச்சை இவை அனைத்தும் நோயாளியின் நலனுக்காக வடிவமைக்கப்பட்டவை.

அந்த பெரிய மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் ஐம்பது வயது மதிக்க தக்க ஒரு நடுத்தர பெண் உடல் முழுதும் வயரில் இணைக்கப்பட்டு சுவாசத்துக்கு ஏங்கி, அவ்வப்போது சிரமப்பட்டு கண்ணை திறந்து வாசலில் யாரையோ தேடிக்கொண்டிருந்தது அந்த உருவம்..

அறைக்கு வெளியே தெரியும் சிறு கண்ணாடி வழியே ஆறு கண்கள் கலக்கமாக அந்த உருவத்தை நோக்க, ஆனால் அவ்வுருவமோ இரண்டு வேறு கண்களை தேடியது.. தேடிய ஆள் இல்லை என்றதும் வந்த சுய நினைவும் போனது..

துல்லியமாக காலை ஒன்பது மணி, கண்ணாடி கதவுகள் திறக்கின்றன.
கணினி மானிட்டர்களின் ஒளி, கவுண்டர்களின் பின்னால் அடுக்கி வைக்கப்பட்ட கோப்புகள், டோக்கன் எண்களை அழைக்கும் மெஷின் சத்தம், எல்லாம் சேர்ந்து அந்த வங்கிக்குள் ஒரு தனி ரிதம் உருவாகிறது.

அந்த கவுண்டரின் பின்னால், எப்போதும் போல பகட்டு இல்லாத சிவப்பில் வெள்ளை பொடி பூ போட்ட சல்வார் அதற்கு இணையான வெள்ளையில் சிவப்பு தூறல் போட்ட பட்டியாளா பாண்ட் அணிந்து, ஒரு கையில் வாட்ச் மற்றொரு கையில் சின்னதாக பிரேஸ்லேட் அணிந்து கணினியில் வேகமாக தட்டச்சு செய்யும் அவள் அந்த வங்கியின் உயிரோட்டக்கருவி போல..

வட்ட முகத்தில் குடிகொண்டிருக்கும் சாந்தம், கண்ணில் வழிந்தோடும் குறும்பு, இதழில் உறைந்திருக்கும் குறுநகை, தேனியை மிஞ்சும் சுறுசுறுப்பு.. அங்கு வரும் வாடிக்கையாளரின் சந்தேகங்களுக்கு அமைதியாக பதில் சொல்லும் தீர்மதி..

"ஹ்க்கும்!!" வெகு அருகில் சிங்கம் போல கர்ஜிக்கும் குரல் கேட்டு கணினியில் இருந்து பார்வையை சற்று உயர்த்தி அருகில் நிற்பவனை பார்த்தாள்..

"ஒரு ஹெல்ப் வேணும்?!?"

அவளின் காஜலில் குளித்த நயன விழிகள் அவனை கேள்வியாக பார்க்க,

"என்கூட ஒரு இடத்துக்கு வரணும்"

அவள் தன் கை கடிகாரத்தை திருப்பி நேரம் பார்க்க அதுவோ 'நீங்க வந்தே பத்து நிமிஷம் தானே டா ஆகுது' என்று சொல்லும் விதமாக நேரம் காட்டியது..

"டேட்டா என்ட்ரி முடிச்சுட்டு வரேன்.."

இருவரும் வேறு பேசவேயில்லை..

"என்னடி!!? சிங்கம் சாண்ட்வெஜ் சாப்பிட்டுட்டு போது.."

"ஹாஹா!! ம்ம்ம்ம் ஒரு ஹெல்ப் வேணுமாம்??"

"என்ன ஹெல்ப் டி?? "

"தெரியல ஒரு முக்கியமான செக்கு டேட்டா அனுப்பிட்டு இருக்கேன் முடிச்சிட்டு வரேன்னு சொன்னேன்.. "

"அடியே அழகான பசங்க உதவி கேட்டா ஓடோடி போய் செய்யுங்கடி அதை விட்டுட்டு பேங்க்ல உக்காந்து உருட்டிக்கிட்டு இருக்காளுங்க!!"

அவளிடம் வம்பு பேசிய தோழி எழுந்து தன்னுடைய பணிக்கு சென்றாள்..

அவள் பெயர்!
வெண்ணிலா.. உன்னை கையில் ஏந்தியதுமே இந்த பெயர் தான் உனக்கு பொறுத்தமா இருக்கும் என்று வைத்து விட்டேன் தந்தை அடிக்கடி கூறி கேட்டிருக்கிறாள்.. இருபத்தி நான்கு வயதே ஆகும் புத்தம் புது ரோஜா.. பி.காம் படிப்பு.. கடைசி வருட படிப்பிலேயே தங்கள் கல்லூரிக்கு வந்து ஒரு தனியார் வங்கி தேர்வு வைக்க, அதில் தேர்ச்சியும் பெற்று இதோ கிளர்காக பணியில் இருக்கிறாள்..

கல்லூரியில் ஒன்றாக தன்னுடன் படித்த தோழியையும் பரீட்சை எழுத வைத்து இதோ இதே வங்கியில் அவள் வங்கிக்கடன் மேலாளராக இருக்கிறாள்.. தோழி பெயர் சரண்யா தேவி..

அந்த வங்கியில் அனைவரையும் கவனிக்கும் விதமாக ஒரு தனி அறை, அறை முழுதும் ஏசி, கண்ணாடி தடுப்புகள், நீண்ட மேசை அதற்கு அந்த பக்கம் சூழல் நாற்காளி, இந்த பக்கம் நான்கு நாற்காளிகள்.. அந்த மேசையில் அசிட்டென்ட் மேனேஜர் நித்திக் சரண் என்று கொட்டை எழுத்தில் இருந்தது..

அவனே நம் நாயகன்.. நாயகன் என்றாலே ஆறடி உயரம் அழகிய உருவம் ஆப்பிள் போல் தான் இருக்க வேண்டுமா என்ன?? இவன் ஐந்தரடிக்கு சற்று குறைவான உயரம்.. மாநிறம் ஆனால் இந்த பணி வந்தது முதல் ஏசியில் அமர்ந்து சற்று நிறம் கூட்டி இருக்கிறான்.. தூக்கி சீவிய சிகை அதில் குட்டி பங்க், யாரிடமும் அதிகமாக பேச மாட்டான் ஆனால் எப்போதும் பளபளக்கும் முகம் சிறிது மாதங்களாகவே இருளடைந்து தான் இருக்கிறது.. ஒரு சக பணியாளராக என்ன, ஏது என்று விசாரித்தும் பார்த்து விட்டார்கள் உங்களுக்கேன் நான் சொல்ல வேண்டும் என்ற ஒற்றைப் பார்வையில் எல்லோரையும் தள்ளி நிறுத்தி விட்டான்.. பெண்கள் என்றாலே அலர்ஜி என்றெல்லாம் இல்லை எனக்கு யாருடனும் பேச வேண்டிய தேவை இல்லை என்று ஒதுங்குபவன், ஒருத்தியின் மனதில் காதல் மன்னன்.. இருபத்தி ஆறு வயது காளை அவன்.. இந்த பணிக்கு அவன் படிப்பிலும், உழைப்பிலும் மட்டுமே வந்தவன்..

"கிளம்பலாமா??"

மீண்டும் அரை மணி நேரத்தில் வந்து அழைத்தான்.. அவளுக்கு இன்னுமே வேலை இருக்கிறது ஆனால் கலவரம் அடைந்தவன் முகத்தை பார்த்து காக்க வைக்க அவளுக்கு மனதில்லை..

"போலாம்!!"

என்றவள் தன் கைப்பை எடுத்துக்கொண்டு தோழியிடம் கண்ணாலே கூறிவிட்டு கிளம்பிவிட்டாள்.. அவனின் மின்னணு இருசக்கர வண்டியில் ஏற சொல்லி கண்ணை காட்ட அவளும் ஏறிகொண்டாள்.. இதுவரை அவன் வண்டியில் ஏறிய முதல் பெண் அவளே, இருவருக்கும் இது தெரியும் ஆனால் பெரிதாக பெருமைப்பட ஒன்றுமில்லை இதான் அவர்கள் இயல்பு..

"ஹாஸ்பிடல் எதுக்கு??" அந்த பெரிய மருத்துவமனை பார்த்ததுமே காய்ச்சல் கண்டது பெண்ணிற்கு..

"சும்மா தான் வா!! அங்க என்ன நடந்தாலும் நீ எதுவும் ரீ ஆக்ட் ஆகாத.. ஐ வில் எக்ஸ்பிளைன்!!"

"ம்ம்ம்ம்!!" என்றவள் முன்னே நடந்த அவன் பின்னே நடந்தாள்..

"மாப்பிள்ள எங்க டா போயிட்ட?? அம்மா கண்ணு முழிச்சதும் உன்ன தான் தேடுனா??" என்றார் ஒரு கிராமத்து காளையாக மடித்துக்கட்டிய வேஷ்டியில் ஒருவர்..

"ஒரு சின்ன வேலையா போயிருந்தேன் மாமா.. வாங்க உள்ள போலாம்.."

அவ்வளவு நேரம் பின்னாடி நின்றவளை இப்போது வம்படியாக கை பிடித்து அழைத்து செல்ல நான்கு கண்கள் புரியாமல் பார்க்க ஒரு ஜோடி கண்கள் மட்டும் அழுகையில் வெடித்து நித்திக் சரண் பிடித்திருக்கும் பெண் கையையே பார்த்தது..

"அம்ம்மா!!" நித்திக் சரண் தன் அன்னை காதில் குனிந்து கூப்பிட கடினப்பட்டு தன் கண்ணை திறந்தார் இதய நோயாளி..

"கண்ணா!!"

"ம்ம்ம்ம்!! கண்ண முழிச்சு பாருங்க.." என்றவன் தன் பாக்கெட்டிலிருந்த தாலியை எடுத்து பக்கத்தில் தேமே என்று இருந்த வெண்ணிலா கழுத்தில் கட்டி மூன்று முடிச்சு போட்டுவிட்டான்..

"இப்போ சந்தோசமா??" புன்னகை முகமாக அன்னையை பார்க்க அவளோ புன்னகையித்து கண் குளிர இருவரையும் பார்த்துவிட்டு மீண்டும் உடல் சோர்வில் கண்ணை மூட, அடுத்து தன் அத்தை மாமா காலில் ஆசிர்வாதம் வாங்கினான்.. தங்களை பார்த்து விசும்பிக்கொண்டே போகும் தன் மாமன் மகளை பெருமூச்சுடன் பார்த்துவிட்டு அந்த அறையை விட்டு வெண்ணிலாவையும் அழைத்துக்கொண்டு வெளியே வந்தான்.. இத்தனைக்கும் அவள் பொம்மையாக மட்டுமே நின்றாள்..

அவள் அமைதியான முகம் பார்த்தவன், "வா!!" அழைத்து சென்றான் ஒரு காபி ஷாப்பிற்கு..

"ஒரு சாரி அண்ட் தேங்க்ஸ் சொல்லணும்.."

"எதுக்கு??"

"சாரி உன் அனுமதி இல்லாம உன் கழுத்துல தாலி கட்டினதுக்கு.. அண்ட் தேங்க்ஸ் நான் தாலி கட்டும்போது அதிர்ச்சியா, ஆச்சரியமா கூட பாக்காம ஏற்கனவே தெரிஞ்சதுங்குற மாதிரி உன் முகத்தில் காட்டின அந்த பாவனைக்கு.. "

"ம்ம்ம்ம்!! இப்போ சொல்லுங்க என்ன இதெல்லாம்??"

"உஆஃப்!! ஒரு ட்ராமா.. நாங்க போடுற நாடகத்துல உன்னைய கேட்காமலே உன்னையும் இழுத்து விட்டுட்டோம்.."

"புரில!!"

"நான் உனக்கு தாலி கட்டினத பாத்துட்டு அழுதுகிட்டே வெளில போனாளே அவ தான் என் மாமன் பொண்ணு.. அவளும் நானும் சின்ன வயசுல இருந்து லவ் பண்றோம்.. ஆனா அம்மா லவ் வேண்டான்னு சொல்லி வீட்ல ஆறு மாசமா பிரச்சனை தான் அதுனால அம்மாக்கு இதயதுக்கு போற இரத்த குழாய் ஒன்னு வெடிச்சுருச்சு அதுக்கு ஆஞ்சியோ பண்ண விடாம அம்மா ஒரே அடம்.. எனக்கு வேற பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணி வச்சுட்டு தான் ஆஞ்சியோ பண்ணிப்பேன்னு ஆனா எங்களுக்கு அவ்வளவு நாள் டைம் இல்ல.. அதனால வேற வழியே இல்லாம, 'எங்க பேங்க்ல நான் ஒரு பொண்ணு மேல இன்ட்ரெஸ்ட்டா இருக்கேன் அவளையே வேணுனா உங்களுக்காக கல்யாணம் பண்ணிக்கறேன்' அப்புடின்னு அடிச்சுவிட்டு தான் அவங்க ஆப்ரேசன்க்கு சம்மதிக்க வச்சேன் ஆனா நான் கண்ணு முழிக்கும்போது நீ அந்த பொண்ணோட கல்யாணம் ஆகி ஜோடியா நிக்கணும் இல்லேன்னா மருந்து எடுத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க.. சோ.. "

"பேங்க்ல அத்தனை பொண்ணுங்க இருக்கும்போது எதுக்கு என்கிட்ட ஹெல்ப் கேட்டீங்க?? "

"ஏன்னா நீ தான் என்கிட்ட தேவையில்லாம பேச மாட்ட.. மேல வந்து உரச மாட்ட.. இவன்லாம் ஒரு ஆளான்னு லுக் விடுவ.." என்றவன் பல மாதங்கள் கழித்து நிம்மதியாக புன்னகையிக்க இவளோ அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள்..

"மம்!! இப்போ நான் என்ன செய்யணும்??"

"எனக்கும் தெரில!! ஆனா இப்போதைக்கு இந்த தாலியை உள்ளுக்குள்ள மறைச்சு வச்சுக்கோயேன் ப்ளீஸ்.."

வேறு எதுவும் பேசாமல் மீண்டும் இருவரும் வங்கிக்கு வர வாசலில் இறங்கியவன்,

"ஆமா!! இவ்வளவு பெரிய உதவியை எனக்கு ஏன்ன்னு கேட்காம, நான் கேட்டதும் தட்டாம செஞ்சியே ஏன்??"

"நீங்க சொன்ன அதே காரணம் தான்!!"

"என்ன??"

"நீங்க தான் என்கிட்ட தேவையில்லாம பேச மாட்டீங்க.. மேல வந்து உரச மாட்டீங்க.. இவலாம் ஒரு ஆளான்னு லுக் விடுவீங்க.."

என்றவள் பதிலில் அவன் அழகாக புன்னகையித்து தலையை கோத, உள்ளிருந்து பார்க்கும் கண்களுக்கு அவள் ஏதோ காதல் வசனம் பேசியது போலவும் அவன் வெட்கப்பட்டு தலை கோதுவது போலவும் தெரிந்தது..

"ஹே நிலா!! இங்க வா வா.. நானும் இவனும் உனக்காக தான் வைட்டிங்.. எங்க போனீங்க ரெண்டு பேரும்?? என்ன ஹெல்ப் கேட்டாரு??"

"ஏன் டி பறக்குற??" என்ற வெண்ணிலா தன் தோழி சரண்யா தேவிக்கும், பல வருட நெருங்கிய தோழன் அபிஷேகிற்கும் அங்கு நடந்த அத்தனையும் கூற சரண்யா வாயை பிளக்க, அபிஷேக் பல்லை கடித்தான்..

"அப்போ பார்ட்டி!! கமிட்டடா அதான் எவ்வளவு நூல் விட்டாலும் அசரமா எனக்கென்னு இருந்துச்சா?? ரொம்ப லக்கி இல்லடி அந்த பொண்ணு.. சரி மாமா பொண்ணு தானே அப்போ கிட்டத்தட்ட ரிலேஷன் தானே அப்படி இருக்கும்போது ஏன் அவங்க அம்மா ஒத்துக்கலையாம் அவங்க கல்யாணத்துக்கு??"

தெரியாது என்பது போல உதட்டை பிதுக்க,

"அடியேய்!! எவ்வளவு பெரிய ஹெல்ப் பண்ணியிருக்க அதுவும் எந்த பொண்ணுமே துணிந்து பண்ண முடியாத ஹெல்ப் பண்ணிட்டு வந்திருக்க அட்லீஸ்ட் ஏன்னு கூடவா டி கேட்காம வந்த??"

"எனக்கு ஷாக்ல இருந்தே நான் வெளிய வரல டி.. இதுல எங்க இருந்து கேட்கிறது என்ன சொல்றது ஒன்னுமே புரியல!!"

"அய்யோ எனக்கு மண்ட காயுது டி.. உடனே கேளு போன் போட்டு கேளு டி.." சரணியா நச்சரிக்க,

"ப்ச்!! சலித்துக்கொண்டவள், "ஏ.எம்(Assistant Manager)!!" என்ற எண்ணுக்கு அழைத்தாள்..

"ஹலோ ஹூ இஸ் திஸ்??"

கைபேசியை எடுத்து முறைத்து பார்த்தவள்..

"ஹலோ!!"

"யாரு??"

அவனின் ஹு இஸ் திஸ் என்ற கேள்வியிலேயே காண்டானவள், சரி தன் குரலை கேட்டாவது கண்டுபிடிப்பான் என்று குரலை செருமிக் கொண்டு பேசினாள் அப்பொழுதும் அவன் யார் என்று கேட்க கடுப்பாகிவிட்டாள்..

"நான் வெண்ணிலா!"

நிமிர்ந்து எட்டி பார்க்க வெளியே கிளர்க் கேப்பினிலிருந்து அவள் தான் என்பதை பார்த்தவன்..

"ஹான் சொல்லு.."

"அது... வந்து... உங்க அம்மா ஏன் உங்க லவ் அஃக்ஸ்ப்ட் பண்ணிக்கலன்னு??"

ரொம்பவே சங்கோஜமாக இருந்தது அவளுக்கு... தயங்கி தயங்கி தான் கேட்டாள்.. ஏனென்றால் அடுத்தவர்கள் பர்சனலில் தலையிடாதவள்.. தோழியின் தொந்தரவு தாங்காமல் தோழி கேட்டதுக்கு பிறகு தான் தனக்குள் ஏற்பட்ட சிறு பொறி உருத்தலின் காரணமாக கேட்டுவிட்டாள்..

"ஈவினிங் சொல்றேன்.." என்றவன் அழைப்பை வைத்துவிட்டான்..

"ரொம்ப தான் பண்றாரு சிடுவன்.." உதட்டை சுழித்துக்கொண்டு திரும்பி பார்க்க நட்புகள் இரண்டும் அவரவர் இருக்கையில், நித்திக் நிமிர்ந்து பாத்ததுமே தெறிச்சு ஓடி விட்டார்கள்..
 
Last edited:
Top Bottom