• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மகேந்திரனின் மதிவதனியிவள் - 11

நிதனிபிரபு

Administrator
Staff member
மகேந்திரனின் மதிவதனியிவள் - 11

தமது கைச்சிறையில் அமர்ந்து பாறையை வருடிக் கொண்டிருந்த இணையளின் கரம்
பற்றிய தீரன், "ஆம்..! நம் காதலுக்கு மரியாதை நடந்த இடம்..! அத்தோடு உமது தீரன்
சொர்க்கம் கண்ட இடமும் இதுவே..! நாம் அதைப்பற்றிப் பிறகு உரையாடுவோம்
தங்கமே... இப்பொழுது நீ அறியாத பல தகவல்களை உம்மிடம் பகிர வேண்டும்..!"
என்று அவள் செங்காந்தள் விரல்களை வருட,

"கூறுங்கள் தீரனே..!" என்றபடி மன்னவனைக் கேள்வியாக ஏறிட்டாள்...

அந்த வான்நிலவைத் தோற்கடிக்கும் அவளின் எழில்மிகு வதனத்தைத் கூர்ந்தபடி,
"உமது தமையன் அதியன் நெடுமாறன் இறக்கவில்லை வதனி..! அவனை அந்த
தருமன் நம் அரண்மனையில் எங்கோ மறைத்து வைத்திருக்கிறான்..." என்க,

ஒற்றை வினாடியில் திகைப்பு, வியப்பு, மகிழ்ச்சி என்று பல்வகையான உணர்வுகள்
தாக்கியதில் விழிகளில் நீர் நிறைய, "தீ..தீரனே..! தாங்கள் உரைத்தது சத்..சத்தியமா?
எம் தமையன் உயிருடன் இருக்கின்றாரா?.." கதறலாக வினவியபடி அவன் களிரை
ஒத்திருந்த புஜங்களைப் பற்றி உலுக்கினாள்...

அவளின் விழிநீரைத் துடைத்தவன், "ஆம் வதும்மா..! அதியன் உயிருடன்
இருக்கின்றான்..." என்று உண்மையை விளம்ப,

"எவ்வாறு இத்தனை உறுதியாக கூறுகின்றீர்கள்? தமையன் காணாமல் சென்று
இன்றோடு நான்கு தினங்களுக்கு மேல் ஆகிவிட்டதே... அந்த தருமனால் அவரின்
உயிருக்கு ஏதும் ஆபத்து நேர்ந்திருந்தால்?.."
என்று கவலையாக வினவ,

"நிச்சயமாக யாம் அறிவேன் தேவி..! இது தருமனின் ஒற்றன் நம்மிடம் பிணையாக
மாட்டியுள்ளதால் வந்த உறுதி..! அவனிடம் இருந்து தகவல் செல்லாமல் நம்
அதியனின் விரலைக்கூட அந்த தருமன் தொடமாட்டான்... நம்பகமான சில
வீரர்களைக் கொண்டு அவனைத் தேடும் பணியையும் தொடங்கிவிட்டோம்...
இன்னும் சில தினங்களில் நம்மை சூழ்ந்துள்ள ஆபத்துக்கள் யாவும் நீங்கிவிடும்...
கவலை வேண்டாம்..!" தம் ராணியை ஆற்றுப்படுத்தியவன் அவளின் மேலாடை
விலகியதால் வெளிப்பட்ட அழகினை காதல் சிந்தும் விழிகளால் களவாடினான்...

மன்னவனின் இடையறாத விழிநோக்கில் நாணம் கொண்டு முகம் மறைத்தவள்,
"தாங்கள் எம்மை இவ்வாறு நோக்குவது நியாயமில்லை தீரனே..! எமக்குள் எழும்
குழப்பங்களைத் கலைந்த பின்பு தங்களின் வேலையைத் தொடங்கலாம் அல்லவா..!"
என்று கண்டிப்புக் காட்ட,

"ஹாஹா..! இது எம் அதீத காதலின் வெளிப்பாடு தேவியே..! இப்பொழுது தாம்

எதைப்பற்றி அறிய வேண்டும்? எதை வேண்டுமானாலும் கேளடி..."

"ஆதினியும் அவளின் கூட்டாளிகளும் எதற்காக நம் ராஜ்ஜியத்திற்குள் வந்தார்கள்?
அவர்களின் நோக்கம் என்ன?..."

"அந்த ஆதினியின் தந்தையும், உமது தந்தையும் பால்ய கால தோழர்கள் என்பதை நீ
அறிவாய் வதனி..! ஆனால் உம் தந்தை மட்டும் அவனை தம் தோழனாக நினைக்க,
அந்த அவன் பகையாளியை உறவாடிக் கெடுக்கும் எண்ணத்தில் இவரோடுப்
பழகியிருக்கிறான்..!

அவனது உயிர்ப் பிரியும் தருணத்தில் உம் தந்தையை அழைத்து, தம்
குடும்பத்தினரை இங்கு அனுப்பி ராஜ்ஜியத்தைக் கைப்பற்றும் நோக்கில் அவனது
புதல்வியை அதியனுக்கு திருமணம் செய்து வைக்கும்படி வேண்டியிருக்கிறான்...
அதனால் வந்த வினை..!"

"ஓகோ..! இவற்றையெல்லாம் தாங்கள் எப்பொழுது அறிந்தீர்கள் தீரனே?.."

"எமக்கு தொடக்கத்தில் இருந்தே அப்பெண்ணின் மீது நல்அபிப்ராயம் ஏற்படவில்லை
வதனி..! அதிலும் உமது பாட்டியார் அளித்த வைர அட்டிகையைக் களவாடி வேறு
வடிவில் உருமாற்றியதோடு அது அவளுடையது என்று சாதித்தத்தாகக் கூறினாயே..!

அன்றிலிருந்து எழுந்த சந்தேகம் அத்தனை எளிதில் மறையவில்லை... அத்துடன்
அதியனின் முடிசூட்டு விழாவிற்கு முந்தைய இரவு உறக்கம் வராமல்
நடைப்பயின்றபோது அந்த தருமனும் வடிவாம்பாளும் தீட்டிய சதித்திட்டத்தைக்
கேட்கும்படி நேர்ந்தது..!"

"சதித்திட்டமா?.."

"ஆம்..! நம் அரண்மனை வைத்தியர் மானுடர்களின் உயிர்ப்பை சில நாழிகைகள்
நிறுத்தி வைக்கும் மூலிகைக்கலவையை உருவாக்கியிருப்பதாகவும், அதை
அதியனுக்கு செலுத்தி அவனை நம் பாதாள சிறையில் அடைத்துவிட்டு அந்த
தருமன் அரியணையில் அமரப்போவதைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்தனர்..!"

"எத்தனை கொடிய நயவஞ்சகர்கள்..! இதில் எமக்கு ஓர் சந்தேகம் உள்ளது தீரனே..!"

"கேள் தேவியே..!"

"அக்கயவர்களின் நோக்கம் நிறைவேற த..தமையனின் உயிரைப் பறித்தால்
போதுமே..! எதற்காக சிறையில் அடைக்க வேண்டும்..."

சில நொடிகள் அமைதியில் கழிய தம் விழிகளை அழுத்தமாக மூடித்திறந்த
இளந்தீரன், "அவனை உயிருடன் சித்திரவதை செய்வதற்காக..!" என்றதில் மீண்டும்
விழிநீர் பெருகி வழிய தம் மணாளனை இறுக்கி அணைத்துக்கொண்டாள்...

"அழாதே வதனி..! அதியனுக்கு எதுவும் நேராது... இப்பொழுது வரையில் அவனால்
சுற்றி நடப்பதைக் கிரகித்துக்கொள்ள இயலாது... முழுமையாக சுயமடைய மேலும்
ஐந்து தினங்கள் அவசியம்..! அதற்குள் அவனை மீட்டு விடலாம்..!" என்று
நம்பிக்கையாக உரைக்க,

"எம் தமையன் மீண்டும் வரவிருப்பதில் நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே
இல்லை தீரனே..! ஆனால் இதில் ஆதினி எங்கு வந்தாள்?.." என்று வினவினாள்...

அவர்களின் திட்டத்தை அவன் அறிந்தபின்னர் அரண்மனை வைத்தியரை மிரட்டி
அவரிடமிருந்து அதனை பெற்றுக்கொண்டதையும், அதியனிடம் சென்று நடந்ததை
விவரித்து அவனை இறந்ததைப் போல் நாடகமாடும்படி கூற, அதற்கு அவன்
ஒப்புக்கொண்டதையும் தெரிவித்தவன், எவ்வழியிலோ தர்மன் அதனை
அறிந்துகொண்டு தங்களை முந்தியதை வருத்தத்துடன் பகிர்ந்தான்...

"ஓ..! அப்படியென்றால் ஆதினி வழியாக அறிந்தானா?.."

"ஆம் வதனி..! அன்று அந்த ஆதினியின் நடவடிக்கைகளை கண்காணித்ததில்
அவளும் இதற்கு உடந்தையாக செயல்பட்டதைக் கண்டுகொண்டேன்... இது தான்
நடந்தது..! நான் ஓர் திட்டம் போட அது வேறாக முடிந்துவிட்டது..."

"தங்கள் திட்டமா?"

"அது இடுகாட்டில் வைத்து அதியனை மீட்டு அவனுக்கு சுயம் திரும்பும்வரையில்
மறைத்து வைத்து பாதுக்காக்க நினைத்திருந்தேன்... அவனும் இவர்கள் மூவரின்
சிரத்தை கொய்யும் முடிவில் இருந்தான்..! இப்பொழுது அனைத்தும் கெட்டுவிட்டது...
இனி அதியனை மீட்டு இந்த ராஜ்ஜியத்தை அவனிடம் ஒப்படைத்ததும் நாம்
இந்திரபுரிக்குச் செல்லவேண்டும்..."

"அ..அங்கே எம்மை தங்களின் ராணியாக ஏற்பார்களா தீரனே..!"

"ஐயம் வேண்டாம் வதனி..! நான் நினைத்ததை செய்து முடிப்பவன் என்பதை நீ
அறிவாய் அல்லவா? இந்த மகேந்திரன் இளந்தீரனிற்கு ராணியாக ஒருத்தி வர
வேண்டுமென்றால் அது எம் மதிவதனியால் மட்டுமே இயலும்..!"

தம் தீரனின் மனதில் அவள் நீக்கமற நிறைந்திருப்பதை எண்ணி மகிழ்ந்தவள்,
"அப்படியானால் அந்த காஞ்சனை என்ன செய்வாள் மகி..!" என்று அவனை
இடையிட்டதில் சட்டென்று விழிகளில் விஷமம் வழிய மனையாளின் இடையில்
விரல்களால் கோலமிட்டவாறே, "அவளைப்பற்றிய கவலை நமக்கெதற்கு? அவள்
என்னவோ ஆகட்டும் வதும்மா..!" என்றான் குழைவாக...

தன்னவனின் குழைவில் திகைத்த மதிவதனி அதற்கான காரணம் புரிந்து அவனின்
மார்பில் வலிக்காமல் குத்தியபடி, "தீரனே பொருந்தா வேளையில் என்னப் பார்வை
இது?" என்று செல்லமாக கடிய,

"எம் மீது தவறில்லை வதும்மா..! காமன் அம்பு பாயும் வேளையில் அழைப்பதைப்
போன்று மகி என்று இத்தோடு இருமுறை அழைத்துவிட்டாய்... ஆதலால் வந்த
தடுமாற்றம் இது..!" என்றபடி அவளைப் பார்த்துக் கள்ளத்தனமாகக் கண்சிமிட்டினான்...

"கவனமின்றி அழைத்துவிட்டேன் தீரனே..! நாம் நாடுத் திரும்பும் தினத்தைப் பற்றி
அறியாமல் எம்மை உறக்கம் அண்டாது என்பதை தாங்களும் அறிவீர்களே... அது
எப்பொழுது நிகழும் என்பதைக் கூறுங்கள்..." அவன் முகவாயைப் பிடித்துக்
கொஞ்சியதில் அவளைப் பற்றி என்னவெல்லாம் தாம் அறிவோம் என்றெண்ணி
மௌன நகைப்பில் உடல் குலுங்க,

"ஆம் நிச்சயமாக..! உம்மைப் பற்றி அனைத்தையும் யாம் அறிவேன் தேவி..‌‌."
அவளின் பூ உடலை அத்துமீறிய வருடலில் சிலிர்க்க வைத்தவன்,

"அதிகபட்சமாக இன்னும் ஓரிரு திங்களில் நம் தேசத்திற்குத் திரும்பிவிடலாம்
வதனி..! அதன் பின்னர் இம்மன்னனிற்கு முப்பொழுதும் தம் ராணியோடு சல்லாபம்
செய்வது மட்டுமே முழுநேரப்பணியாக மாறப்போகின்றது..!" என்றான்
உல்லாசக்குரலில்...

ஆகாத வேளையில் ஆலிங்கனம் செய்ய முனைந்தவனின் கரங்களை தடுத்தவாறே,
"அமைதியாக அமருங்கள் தீரனே..! தங்கள் மோகத்தைத் தாங்கும் அளவிற்கு எம்
உடலில் வலு இல்லை..! இப்பொழுது நம் காதல் வளர்த்தக் கதையின் நினைவுகளை
மீட்டப் போகிறேன்..! எமக்கு இதுவே போதுமானது..." என்றபடி அவனது பரந்த
மார்பில் பின்மேனி படுமாறு அமர்ந்தவள் அவர்களின் காதல் உருவான தேவ
கணங்களுக்குள் மூழ்கினாள்...

தம் மனம் நிறைந்த மதிவதனியைப் பின்னிருந்து இடையோடு அணைத்த
மகேந்திரனும் அவளின் தோள்வளைவில் முகம் புதைத்து அவளுடன் இணைந்து
கொண்டான்..!

_______

இராஜசிங்காபுரி நாட்டு மக்கள் எண்ணியதைப் போன்று மதிவதனி உணவுப்பிரியை
அல்ல..! அப்படி தம்மை வெளிக்காட்டிக் கொண்டவள்...

மன்னரின் புதல்வியாகப் பிறந்ததன் பலனாக இயல், இசையில் துவங்கி
போர்க்கலைகளையும் கற்றுத் தேர்ந்தவள் அவள்..!

பெண் என்பதால் அவளின் வீரதீர செயல்களை வெளியுலகிற்கு தெரியவிடாமல்
மறைத்திருந்தனர்...

அப்படித்தான் தமது பதினெட்டாவது வயதில் மலர்வனம் என்ற சிற்றூரில் வசித்த
ஓர் குருவிடம் வில்வித்தைப் பயில வந்திருந்தனர் மதிவதனியும், அவளின்
உற்றத்தோழி வான்மதியும்...

வான்மதி மந்திரியாரின் மகள்..! அவளுக்கு போர்க்கலைகளில் பெரிதான
நாட்டமில்லை என்றபோதிலும் தோழிக்காக அங்கு வந்திருந்தாள்... சிறு
வயதிலிருந்தே இருவரும் அரண்மனையில் ஒன்றாக வளர்ந்ததால் அவர்களுக்குள்
அப்படி ஓர் பிணைப்பு..!

தினம் பயிற்சி நேரம் முடிந்ததும் இருவரும் சுற்றத்தில் இருக்கும் இயற்கை
வளங்களை ரசிக்கக் கிளம்புவர்... அப்படி ஓர் நாள் மாலையில் அருகிலிருந்த
மூலிகை வனத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்பியபொழுது மயங்கிய நிலையில் தம்
சிங்காவின் மீது படுத்திருந்த இளந்தீரனைக் கண்டாள் அவள்..!

"வான்மதி... அங்கே பாரடி..! யாரோ ஓர் வீரன் மயங்கிய நிலையில் இருப்பதைப்
போல் உள்ளதே... வா யாரென்று விசாரிப்போம்..." என்று தோழியை அழைக்க,

"வேண்டாமடி மதி..! யாரும் எதிரி நாட்டின் ஒற்றனாக இருக்கும்... நம்மோடு
பேச்சுக்கொடுப்பதற்காக நாடகம் ஆடுகின்றானோ என்ற ஐயம் எழுகிறது... வா
கண்டும் காணாமல் கடந்து விடுவோம்..." என்று மறுதலித்தாள் வான்மதி...

"நீ மனிதாபிமானம் அற்றவளாக எப்பொழுது மாறினாய் வான்மதி? உமக்கு ஐயம்
இருந்தால் தாராளமாகச் சென்று வா... நான் அவ்வீரனைக் காப்பாற்றிவிட்டு தான்
திரும்புவேன்..." என்றவள் தம்மை விலகி நடந்த தோழியை விடுத்து அவனிடம்
விரைந்தாள்...

தீரனை நெருங்க நெருங்க அவன் நீருக்காக அரற்றுவதை அறிந்தவள் தம்
துணிப்பையில் வைத்திருந்த நீர்க்குடுவையை வெளியே எடுத்து அவனை நீர்ப்பருக
வைக்க முயன்றாள்...

அந்தோ பரிதாபம்..! அவள் சராசரி பெண்களைக் காட்டிலும் சற்று உயரமாக
வளர்ந்திருந்தும் சிங்காவின் உயரத்திற்கு அவளது கரம் எட்டவில்லை..!

அதில் வேறு‌ வழியின்றி அவனின் கன்னங்களில் மெதுவாகத் தட்டி, "இங்கே
பாருங்கள் வீரனே..! தாங்கள் எழுந்தால் தான் நீரை எம்மால் வழங்க முடியும்.."
என்று அழைத்துப் பார்த்தாள்...

அவன் விழிகளைத் தட்டி விழித்ததைத் தவிர்த்து வேறு அசைவின்றி போகவே,
பிரம்ம பிரயத்தனப்பட்டு அவனை புரவியில் இருந்துக் கீழே இறக்க முயற்சித்தாள்...

ஆனால் உயரத்திற்கு ஏற்ற வனப்பில் கம்பீர தோற்றம் கொண்டவனின் பாரம்
தாங்காமல் அவனோடு இணைந்து தரையில் சரிய நேர்ந்ததில், சமயோசிதமாக
செயல்பட்டு அவனுக்கு முன்பாக தரையில் அமர்ந்து அவனை மடி
தாங்கியிருந்தாள்...

நல்லவேளையாக அவர்கள் சரிந்தது அடர்ந்து வளர்ந்த மரத்தின் நிழலில்..!

அவள் உள்ளங்கையில் சிறிது நீர் ஊற்றி தம் மடியில் சரிந்திருந்த தீரனின்
வதனத்தில் நன்றாக அடித்துத் தெளித்ததும், சிறிது சிறிதாக சுயம் அடைந்தவனின்
முகவாயை நிமிர்த்தி நீரைப் பருகக் கொடுத்தாள்...

சில வினாடிகளில் முழுமையாக சுயமடைந்து எழுந்து அமர்ந்தவன், "நீயா? இரு
தினங்களுக்கு முன் எம்மை ஈர்த்த வனதேவதை தாம் தானே பெண்ணே?.." என்றபடி
அவளின் கன்னம் வருட முயன்றதில் அவனை விட்டு விலகி எழுந்தவள்,

"அல்ல..! நான் சாதாரண மானுடப்பெண் வீரனே..! ஆமாம் தாங்கள் யார்?.." என்று
அவனிடம் வினா தொடுத்திருந்தாள்...

___________

ஆழ்ந்த உறக்கத்தில் வந்த கனவால் தங்கள் உயிர்க்காதலின் தொடக்கப்புள்ளியை
அறியும் நிலையிலிருந்த தீரனின் சிந்தையை கலைப்பது போல் அவனின் அலைபேசி
விடாமல் ஒலித்துக் கொண்டிருந்தது..!

இடைவிடாமல் காதில் கேட்ட சத்தத்தைத் தவிர்க்க முடியாமல் கையால் துழாவி
அதைத் தேடி எடுத்து, இந்நேரத்தில் யார் தன்னை தொந்தரவு செய்வது என்று
கடுப்புடன் அலைபேசித் திரையை நோக்கியவனின் கண்கள் விரித்துகொண்டது...

வேறு யார்? நேற்று அவனை தொல்லை செய்த அதே கரடி தான்..!

அழைப்பை ஏற்று காதில் வைத்தவன், "அடேய் மகேன்..! நான் உனக்கு என்னடா

பாவம் பண்ணேன்? முக்கியமான நேரத்துல கனவ கட் பண்ணி விட்டுட்ட படுபாவி.."
என்று எகிற,

"ஹாஹா..! அத மெதுவா கண்டுக்க தம்பி... இப்போ நான் சொல்ற டீல் உனக்கு
ஓகேவானு யோசிச்சு சொல்லு..! ஆனாப்பாரு உனக்கு ஓகேவா இல்லைனாலும் நீ
ஓகே சொல்லி தான் ஆகணும்..." என்று சிரித்த மகேன் அவன் போட்டு
வைத்திருக்கும் திட்டத்தை நண்பனிடம் பகிர்ந்தான்...

அவன் சொல்ல சொல்ல அதிர்ச்சியில் விழிகளை உருட்டிய தீரன், "எடு செருப்ப
நாயே..! நீயும் உன்‌ டீலும்... நேர்ல வந்தேன்னு வை, உன்னக் கொன்றுவேன்
ராஸ்கல்.." மேலும் இனிமையான வார்த்தைகளால் அவனைத் திட்டித் தீர்த்தாலும்
வேறு வழியின்றி அவன் சொன்னதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டு உள்ளங்கையால்
நெற்றியைப் பிடித்தபடி அமர்ந்துவிட்டான்...

தொடரும்......
 
Top Bottom