• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மாதொரு பாகம் கொண்டான் - 7

Vishakini

Moderator
Staff member
MPK 07

மயூரகி, “அன்ட்ரி! நீங்க பார்த்தனீங்க தானே? நான் தானே ஃபெர்ஸ்டா அந்தக் கல்லைப் போய்த் தொட்டனான்? அபி தான் தான் தொட்டதெண்டு சொல்லுறா.”

“ஓம் அன்ட்ரி. மயூ தான் வின். அதுக்குப் பிறகு அபி. அதுக்குப் பிறகு நான் தேர்ட். அபி பொய் சொல்றா அன்ட்ரி. பொய் சொல்லுறது கூடாத பழக்கமல்லோ அன்ட்ரி?” இது மயூரகியின் இரட்டை மகிழினி.

சாதனா வேலையில் சேர்ந்து ஒருவாரமாகி விட்டிருந்தது. வேலையில் சேர்ந்து என்று சொல்வதைக் காட்டிலும் தெரபியில் இணைந்து என்று சொன்னால் சரியாக இருக்கும். அப்படி மனதுக்கு இதம் சேர்த்தனர் அந்த இரு குழந்தைகளும்.

சமயத்தில் நித்திலன் பெண் குழந்தையாகப் பிறந்திருந்தால் இவர்களைப் போல் நல்ல பிள்ளையாக இருந்திருப்பானோ என்று சாதனாவை ஏங்கக் கூட வைத்திருந்தனர்.

அன்று பரமேஸ்வரி சொன்ன போது கூட, தன் பேத்திகள் என்பதால் குழந்தைகளை உயர்வாக சொல்கிறார், குழப்படி செய்யாத குழந்தைகள் என்று யாரும் இருக்கமாட்டார்கள் என்றுதான் நினைத்திருந்தாள்.

ஆனால் இந்த ஒருவாரத்தில் பரமேஸ்வரி சொன்னது மிகவும் குறைவு என்று அனுபவப் பூர்வமாக உணர்ந்து கொண்டிருந்தாள்.

சாதாரணமாக அக்கா, தங்கை என்று வயது வித்தியாசத்துடன் இருக்கும் பிள்ளைகளுக்கு இடையில் கூட போட்டியும் இது என்னுடையது என்ற பிரிவினையும் இருக்கும்.

ஆனால் ஒத்த வயதில் இரட்டைகளாகப் பிறந்த இவர்கள் இருவரும் இதுவரை எனது உனது என்று எதையும் பிரித்துக் கொண்டதே இல்லை.

பிரித்து வாங்கிக் கொடுத்தும் பழக்கம் இல்லை போல. பொம்மைகள் கூட ஒன்று போல் இன்னொன்று இருந்து அவள் பார்க்கவே இல்லை. சின்ன சைக்கிள் கூட இருவருக்கும் ஒன்று தான் உள்ளது.

“நீ முதல்ல கொஞ்ச நேரம் ஓடிட்டு என்னட்ட தா மயூ. நான் இங்க இருந்து கவுன்ட் பண்ணுறேன்.” என்றுவிட்டு மகிழினி பத்துத் தடவை ஒன்றிலிருந்து பத்து வரை மண்ணில் கோடு போட்டு எண்ணிக் கொண்டிருப்பாள்.

நூறு முடிந்த பின்னும் ஓட ஆசை இருந்தாலும் தன் சகோதரிக்கும் வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்று இறங்கி, எண்ணும் பணியை மயூரகி தொடர்வாள்.

இப்படி இன்னும் எண்ணிலடங்கா நல்ல பழக்கங்கள் அவர்களிடம். வீட்டு உணவைத் தவிர வெளியே இருந்து அதை இதை வாங்கித் தரச் சொல்லிக் கேட்கமாட்டார்கள். ஒன்று சொன்னால் அடம்பிடிக்காமல் கேட்டுக் கொள்வர். மரியாதை கொடுப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்களே! அதேநேரம் ஒன்று தவறாகப் பட்டால் அதை எதிராளியிடம் எடுத்துக் கூறவும் தவறுவதில்லை.

அப்படித்தான் இந்த அபியின் பிணக்கும். அபிஷா இருவரினதும் முன்பள்ளித் தோழி. இன்று சனிக்கிழமை ஆதலால் இவர்களுடன் விளையாட என்று வீட்டில் அடம்பிடித்து காலையே இங்கு வந்து விட்டிருந்தாள். இனி மாலைதான் அவளை அழைத்துச் செல்ல வருவார்கள்.

சாதனா அந்த மாலை நேரம் எப்போது வரும் என்றுதான் சலிப்போடு காத்திருக்கிறாள். காரணம் இந்த அபி இரண்டு நித்திலனுக்கு சமமானவளாக இருந்தாள். வந்ததில் இருந்து ஏதாவது வில்லங்கம் செய்து இரண்டு மான்குட்டிகளையும் குழப்பிக் கொண்டே இருக்கிறாள்.

இப்போதும் மயூரகி விளையாட்டில் வென்றதை ஏற்றுக்கொள்ள முடியாமல்,

“இல்லையில்லை… நீங்க ரெண்டு பேரும் சேர்ந்துதான் அலாப்பப் பார்க்கிறீங்க! நான் தான் வின்.” என்றாள் அடமாக.

“நீ இரு அபி. அன்ட்ரி சொல்லட்டும் ஆர் முதலெண்டு?” மகிழினி சாதனா முகம் பார்க்க, அவள் சுமுகமாகப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமே என்று கவனமாகப் பேசினாள்.

“மூண்டு பேரும் நல்லா வேகமா தான் ஓடினீங்கள். ஆனா மயூக்குட்டி இன்னும் வேகமா ஓடி முன்னுக்குப் போய்த் தொட்டவா. அதால இப்ப அவா தான் வின். நீங்க இன்னும் நல்லா ஓடிப் பழகினா அடுத்த முறை நீங்களும் முதலாவதா வரலாம்.”

மகிழினி உடனே ஏற்றுக் கொண்டாள்.
முரட்டுக் குழந்தையான அபிக்கு மட்டும் மனம் ஒப்பவே இல்லை.

“நீங்களும் பொய் தான் சொல்லுறீங்க. நான் தான் ஃபெர்ஸ்ட்.”

“அபி! அன்ட்ரி பெரியாள். அன்ட்ரி பொய் சொல்லமாட்டா.”

“பெரியாள் எண்டா ரீச்சரோ? இல்ல, டொக்டரோ இவா? உங்களிட்ட வேலை செய்யிறவா தானே?”

அவள் அவமரியாதைக் கேள்வியில் சாதனாவுக்கு சுருக்கென்றது. ஆனாலும் தன் இடம் உணர்ந்து பல்லைக் கடித்து அமைதி காத்தாள்.

“அபிக்கு ரீச்சரும் டொக்டரும் தான் பெரியாக்கள் எண்டா இந்த ரெண்டும் இல்லாத நீங்கள் ஏன் இப்பிடி பெரிய கதை எல்லாம் கதைக்கிறீங்கள்?”

திடீரென்று கேட்ட குரலில் முதலில் திடுக்கிட்டாலும் பின் மரியாதை நிமித்தமாக தான் அமர்ந்திருந்த கல்லாலான வாங்கில் (பெஞ்ச்) இருந்து எழுந்து கொண்டாள், சாதனா.

வீட்டின் பின்புற சுவரை விட்டுத் தள்ளி இருந்த வேப்பமரத்தோடு லேசாக முதுகை சாய்த்த வண்ணம் நின்றிருந்தான் அவன். இரண்டு மான் குட்டிகளினதும் தந்தையாகப்பட்டவன். வந்து எவ்வளவு நேரம் ஆகிறது என்று யாருக்கும் தெரியவில்லை.

“அப்பா! நீங்க எப்ப வந்தனீங்கள்? உங்களுக்கு டியூட்டி இல்லையோ?” உற்சாகத்துடன் கேட்டுக் கொண்டே மயூ தகப்பனை நோக்கி ஓட,

“மயூ! அப்பா குளிச்சுட்டாரோ எண்டு கேட்காம அப்பாக்கு கிட்ட போற!” எச்சரித்தாள் மகிழினி.

மருத்துவமனையில் பலதரப்பட்ட நோயாளிகளைப் பார்த்துவிட்டு வீடு வருபவன், அங்கே சேகரித்த கிருமிகளைக் குழந்தைகளிடம் கொட்டக் கூடாது என்று,

“ஹொஸ்பிட்டலால வந்து அப்பா குளிச்சாப் போல தான் ரெண்டு பேரும் அப்பாக்குக் கிட்ட வரோணும்.” என்று சொல்லிப் பழக்கியிருந்தான்.

அதையே மகிழ் இப்போது சொல்ல, இயல்பிலேயே சற்று அவதாப்னிப்புத் திறன் அதிகமுள்ள மயூவோ,

“மகி! அப்பா விடிய வேற ஷேர்ட்டெல்லோ போட்டுக் கொண்டு போனவர்? இப்ப வேற ஷேர்ட் போட்டிருக்கிறார் பார். அப்ப அப்பா குளிச்சிட்டுத் தானே வந்திருப்பார், என்னப்பா?” சகோதரியிடம் ஆரம்பித்து தந்தையிடம் முடிக்க, தன்னிரு பெண்ணரசிகளும் பேசிக் கொள்வதை விரிந்த புன்னகையுடன் பார்த்து நின்றிருந்தான் அவன்.

அவன் ஆதித்யன். கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஓர்தோபெடிக் சேர்ஜனாக இருக்கிறான்.

மயூரகியின் கூற்றை ஆமோதிப்பது போல் அவளைக் கையில் ஏந்திக் கொண்டவன், அவள் கன்னத்தில் முத்தமிட்டு,

“மயூ செல்லம் நல்லா ஒப்சேர்வ் பண்ணுறீங்க. நீங்க சொல்லுறது சரிதான். அப்பா குளிச்சிட்டுத்தான் பிள்ளையளைப் பார்க்க வந்தனான். அதேமாதிரி மகி குட்டி சொல்லுறதும் பிழை எண்டில்லயே. சிலநேரம் ஹொஸ்பிட்டல்ல அப்பான்ர ஷேர்ட் டெர்ட்டியானா, அப்பா குளிக்காமலும் வேற ஷேர்ட் மாத்தலாமல்லோ? அப்பிடியெண்டா கேட்டுட்டு தானே கிட்ட வரோணும்?”

“ஓம் என்னப்பா?” என்று மயூ உடனே தந்தையை ஆமோதிக்க, அவள் கன்னத்தில் தட்டிப் புன்னகைத்தவன், அவளைத் தூக்கிக் கொண்டே மற்றவர்கள் அருகில் செல்ல, மகிழினி வந்து அவன் காலைக் கட்டிக் கொண்டாள்.

சிரமம் பார்க்காமல் அவளையும் மறு கையில் தூக்கி முத்தமிட்டு இருவரையும் இறக்கி விட்டவன், தன் முன்னே முழித்துக் கொண்டு நின்றிருந்த அபியையும் மரியாதையான உடல்மொழியைக் காட்டி நின்ற சாதனாவையும் ஒரே பார்வையில் அளந்தான்.

“அபி! இந்த அன்ட்ரிட்ட என்ன சொல்லிக்கொண்டு இருந்தனீங்கள்?” தன்மையாய் தான் கேட்டான். ஆனாலும் அவளுக்குக் கண்கள் முட்டிவிட்டது.

அதைப் பார்த்த சாதனாக்குப் பாவமாகப் போனது.

“சின்னப் பிள்ளை, தெரியாம கதைச்சிட்டா டொக்டர். பாவம் அழுகுறா...” என்று சங்கடமாக இழுத்தாள்.

“சின்னப் பிள்ளையிலதான் அவை விடுற பிழையை பிழை எண்டு சொல்லோணும். வளர்ந்தாப் பிறகு சொன்னா, அதைக் கேட்கிற நிலைமையில அவை இருக்க மாட்டினம். இப்ப சொல்லுங்கோ, அபி கதைச்சது பிழையோ? சரியோ?” ஆளுமையாக வந்த கேள்வி சாதனாவை சரியான பதிலைச் சொல்ல வைத்தது.

“பிழைதான் டொக்டர்.”

“அபி கதைச்சது பிழையெண்டா, அதுக்கு நீங்க அமைதியா இருந்தது சரியோ?” என்ற, சாதனாவுக்கு இதேதடா சோதனை என்றிருந்தது.

‘அபி, தவறிழைத்தாள் என்பதற்காக நித்திலனை அடித்துத் திருத்துவது போல் அவளை இவளால் அடிக்கவா முடியும்?’ மனதில் இப்படி ஓட, அதையே முகமும் பிரதிபலித்தது.

அதைப் படித்தவன், “நீங்களா ஒண்டும் அபியிட்ட சொல்லேலாதுதான். ஆனா இனிமேல் இப்படிக் கதைச்சா என்னட்டயோ, அம்மாட்டயோ சொல்லுவன் எண்டு சொல்லி இருக்கலாமே!”

அவன் தொடர்ந்து பாடமெடுக்க, பதிலின்றி சங்கோஜமாக நின்றாள் அவள்.

அதற்கு மேல் அவளிடம் பேச எதுவுமின்றி அபியிடம் குனிந்தவன், “அபி! டோன்ட் க்ரை..” என்று அவள் கண்களைத் துடைத்து விட்டான்.

“அபிக்கு நல்ல பிள்ளையா இருக்க விருப்பமோ, இல்லாட்டி கூடாப்பிள்ளையா இருக்க விருப்பமோ?”

அவள் கைகளைப் பிடித்து அவளை ஊஞ்சல் போல் ஆட்டிக்கொண்டு தன்மையாகக் கேட்க, அவளும் அவன் விளையாட்டில் அழுகையை மறந்தவள்,

“நல்ல பிள்ளையா தான் இருக்கோணும். அப்ப தான் மிஸ் மகியையும் மயூவையும் மாதிரி கிளாஸ்ல முன்னுக்கு விட்டு கிளாப் பண்ண சொல்லுவா.” என்றாள், அப்போதும் அவர்கள் மேல் கொண்டிருக்கும் போட்டியுணர்வை வெளிக்காட்டியபடி.

ஆதித்யனுக்கு அது விளங்கினாலும் இது பெற்றோர்களைத் தாக்கும் கெம்பாரிஷன் என்ற கொடிய நோய் மூலம் இவளுக்குள் விதைக்கப்பட்டிருக்கலாம் என்று சரியாகக் கணித்தான்.

“நீங்க ஏன் அபி, மயூவையும், மகியையும் மாதிரி நல்ல பிள்ளையா இருக்கோணும்? நீங்க அபி தானே? அப்ப நீங்க அபி மாதிரி நல்ல பிள்ளையா தானே இருக்கோணும்?” என்று கேட்க, அவள் குழம்பிப் போய் அவனைப் பார்த்தாள்.

“திரும்பி மயூவையும் மகியையும் பாருங்கோ, அவை ரெண்டு பாரும் பார்க்க உங்களை மாதிரியோ இருக்கினம்?”

திரும்பிப் பார்த்தவள், உடனடியாக இல்லையென்று மறுத்துத் தலையசைத்தவள், “நான் அவைய விட வெள்ளை.” என்றாள் பெருமிதமாக…

அதைக் கேட்டு ஆதித்யன் எப்படி உணர்ந்தானோ, சாதனாவுக்கு ஐயோ ஆண்டவா என்றிருந்தது.

‘அவளின் ஒரு தவறைத் திருத்தி விட எண்ணி எலும்பு முறிவு டொக்டர் முயற்சியெடுக்க, அவள் என்னவென்றால், முள்ளந்தண்டு எலும்புகளின் கோர்வை போல் தவறுகளை அடுக்கி இழுத்துக் கொண்டே போகிறாளே!’ ஆதித்யன் மேல் பரிதாபம்தான் வந்தது.

ஆனால் அவன் தளரவில்லை. பொறுமைக்கும் நிதானத்துக்கும் அவன் இருக்கும் துறையை விட சிறந்த புகலிடம் இல்லையே!

பேசிப் பேசியே அவளின் தவறுகள் ஒவ்வொன்றையும் தவறென்றே ஒப்புக் கொள்ள வைத்தவன், அவளை சாதனாவிடம் மன்னிப்புக் கேட்கவே வைத்திருந்தான்.

“சொறி அன்ட்ரி. நான் உங்களை அப்பிடிக் கதைச்சது பிழை.” கேட்ட சின்னவளைப் பார்த்தவளுக்கு சொற்ப நிமிடங்களுக்குள் அவளை செதுக்கிய மருத்துவன் மேல் பிரமிப்பு எழாமல் இல்லை.

“சொறி எல்லாம் வேண்டாம் அபி. இனி ஆரிட்ட எண்டாலும் கவனமா கதையுங்கோ காணும்…” என்று புன்னகைக்க, அவளும் தலையசைத்துக் கொண்டாள்.

ஆதித்யன் எழுந்து கொண்டவன், “மயூ, மகி ரெண்டு பேரும் ஓடிப் போய் குயிக்கா வெளிக்கிட்டு வாங்கோ. நாங்கள் பார்க்குக்கு போவோம்.” என்றவும் இருவரும் குஷியாகிவிட்டனர்.

“இப்ப போப்போறோமோ அப்பா?” இருவரும் அவனைக் கட்டிக் கொண்டு துள்ள,

“ஓம்.. ஏன் உங்களுக்கு விருப்பம் இல்லையோ? விருப்பம் இல்லாட்டி பிரச்சனை இல்லை. அப்பா வெளிக்கிட்டு ஹொஸ்பிட்டல் போறேன்…” என்று அவன் விளையாட,

“இல்ல… இல்ல… எங்களுக்கு அப்பாவோட வர சரியான விருப்பம். ஓமெல்லோ மகி?”

“ஓம்… ஓம்… நாங்க வேளைக்கெண்டு வெளிக்கிட்டு வாறம்.” என்றவள் பின் நினைவு வந்தவளாக,

“அப்ப அபி அப்பா?”

மகள்களின் சந்தோஷம் தன் முகத்தில் பிரதிபலிக்க நின்றிருந்தவன்,

“அவேன்ர அம்மாட்ட கேட்போம். அவா ஓம் எண்டா அபியும் எங்களோட வரட்டும்! இல்லையெண்டா அபிய அவேன்ர வீட்ட விட்டுட்டு போவோம். நீங்களும் போய் முகம் கழுவுங்கோ. போங்கோ.”

அதைக் கேட்ட மூவரும் சரியென்று நகர்ந்து சென்றனர். இந்த வயதிலேயே மகள்கள் இருவரையும் தாமாகக் குளித்து உடை மாற்றும் அளவு பழக்கியிருந்தான் அவன்.

எல்லாமே அவர்களே செய்கிறார்கள் என்றால் இங்கே சாதனாவின் வேலை தான் என்ன என்ற சந்தேகம் வருமே!

இங்கே அவளின் வேலை மதியம் பன்னிரண்டுக்கு முன்பள்ளி முடித்து வரும் பிள்ளைகள் இருவரையும் மாலை ஆறு மணி வரை பார்த்துக் கொள்வது, சனி ஞாயிறுகளில் முழுநேரமும் பார்த்துக் கொள்வது மட்டுமே.

விளையாட்டின் போதும் அவர்களுக்கான வேலையை அவர்கள் செய்யும் போதும் ஏதேனும் விபத்துகள் நேராமல் வெறும் பார்வையால் அவர்களைத் தொடர்வது தான் அவள் வேலை.

மற்றபடி அவர்களின் உடைகளைக் கூட பரமேஸ்வரி அல்லது ஆதித்யனே
வோஷிங் மிஷினில் போட்டு எடுத்து விடுவர்.

சமையல் கூட இன்னும் பரமேஸ்வரி கட்டுப்பாட்டில் தான்.

சமையலுக்கு ஆள் பிடிக்கவா என்று மகன் கேட்டபோது அதற்கும் சுத்தம் பத்தம் என்று யாரையும் வேண்டாம் என்றிருந்தார்.

அதனால் அவர் வசதிக்கு ஏற்றது போல் அமர்ந்திருந்து சமைப்பது போல், சமையலறையை மாற்றிக் கொடுத்து, தாயின் கால்களுக்கு அழுத்தத்தைக் குறைத்திருந்தான், ஆதித்யன்.

அவர்கள் வீட்டில் அப்படியெல்லாம் பெரிய பொரியல் வறுவல் என்று பாரதூரமான சமையலும் செய்து வழக்கமில்லை.

காலையில் ஓட்ஸ் கஞ்சி, பழங்கள். மதியம் சோறு, தாளிக்காத பருப்பு வெள்ளைக்கறி, கீரை, காய்கறி சாலட், அதோடு மீன் அல்லது வேறு கடல் உணவு, ஞாயிறுகளில் மாத்திரம் ஊர்க்கோழிக் குழம்பு. இரவுகளில் கடலை, பாசிப்பயறு, கௌபி என்று ஏதேனும் ஒன்றை அவித்து அவற்றோடு பழத்தையும் இணைத்து உணவை முடித்துக் கொள்வர். மிகவும் அரிதான நாட்களில் ஆட்டா மா ரொட்டி, குரக்கன் மா தோசை, பிட்டு என்று வகைகள் மாறும். ஆனால் எல்லாம் ஆரோக்கியத்தை முன்னிறுத்திய உணவாகவே இருக்கும். அதனால் பெரிதான வேலைகள் இருக்காது பரமேஸ்வரிக்கு.

சின்னவர்கள் மூவரும் இடத்தை விட்டு அகன்றதும் ஆதித்யன்,

“உங்களுக்கு வேலைல என்னவும் பிரச்சனை இருக்கோ? பிள்ளையள் ஏதேன் கஷ்டம் குடுக்கினமோ?”

“அப்பிடி ஒண்டுமில்ல டொக்டர். ரெண்டு பேரும் ஒரு கரைச்சலும் குடுக்கிறேல.”

“ம்ம்.. அதான் மான்குட்டியள் எண்டு கூப்பிடுறனீங்கள் போல! பிள்ளையள் சொன்னவ.” என்றவனிடம் மையமாக சிரித்து வைத்தாள்.

“நீங்க சொல்லுற மாதிரி அப்பிடியே இருந்தா நல்லது தான். இல்லை கொஞ்சம் குழப்படி விடுகினம் எண்டாலும் நீங்க அதை எங்களிட்ட சொல்ல யோசிக்காதேங்கோ. இப்ப அபி கதைக்கேக்க பேசாம இருந்த மாதிரி மயூ, மகிட்டயும் இருக்காதங்கோ. கட்டாயம் அம்மாட்ட சொல்லுங்கோ. நான் என்னண்டு பார்ப்பேன்.” என்ற,

“ம்ம்…” என்ற ஒற்றைத் தலையசைப்போடே முடித்துக் கொண்டாள் அவள்.

தொடர்ந்த அவன் அழுத்தமான அறிவுறுத்தல்கள் தன்னைக் குற்றம் சொல்லுவது போல் இருக்க, அதை எதிர்த்து எதுவும் சொல்ல முடியாமல்தான் தலையாட்டி வைத்தாள்.

அது அவனுக்கும் புரிந்திருக்க வேண்டும்.

“இவன் ஏன் இதையே திரும்பத் திரும்ப சொல்லுறான் எண்டு உங்களுக்கு எரிச்சலாதான் கிடக்கும்.” என்ற, அவள் சங்கடமாகப் பார்த்தாள்.

அவன் அதைப் பொருட்படுத்தாது,

“அவை சின்னப் பிள்ளையள். எல்லா நேரத்திலயும் எல்லா இடத்திலயும் சரியா இருப்பினம் எண்டு சொல்லேலாது. என்னோட இருக்கேக்க பிழை விட்டினமெண்டா இனி இப்பிடி செய்யக் கூடாது எண்டு சொல்லித் திருத்த என்னால ஏலும். அம்மாவும் அப்பிடி ஏதேனும் எண்டா என்னட்ட சொல்லுவா.

எங்கள் ரெண்டு பேருக்கும் அடுத்ததா இனி உங்களோடதான் அவை கூட நேரம் இருக்கப் போகினம். கிட்டத்தட்ட ஸ்கூல்ல இருக்கிறளவு நேரம் உங்கட கண்காணிப்புல இருக்கப் போகினம். அந்த நேரம் அவை விடுற பிழையள் நீங்க சொல்லாம எங்களுக்குத் தெரிய வராது. அதுதான் இவ்வளவு கவனம் எடுக்கிறன்.

எனக்கு என்ர பிள்ளையளை சக மனுசரைக் கஷ்டப்படுத்தத் தெரியாத, சக மனுஷருக்கு மரியாதை குடுக்கத் தெரிஞ்ச, சக மனுஷர்ட கஷ்டத்தை உணரக் கூடிய ஆக்களா வளர்த்து விடோணும். அதான் இப்பிடி…” என்றவனுக்கு இம்முறை தலையசைப்பைக் கூடக் கொடுக்கவில்லை சாதனா.

பதில் சொல்லவியலா பிரம்மிப்புக்குள் மூழ்கியிருந்தவளின் மனசாட்சியின் வாயின் ஆஆ… என்ற திறந்த நிலையை இன்னும் கூட்டுவது போல்,

“நான் என்ர எண்ணத்தை சொல்லுறன் எண்டு உங்களைக் கஷ்டப்படுத்துற மாதிரிக் கதைச்சிருந்தா சொறி...” என்ற அவனின் மன்னிப்பை ஏந்தி வந்த வார்த்தைகள் அமைந்து போயின.

“ஐயோ! நீங்க பிழையா ஒண்டும் கதைக்கேல டொக்டர். நான்தான் நீங்க சொல்ல வாறது விளங்காம… சொறி டொக்டர்.” என்றாள் வருந்தி.

“ம்ம்.. பரவாயில்ல. இண்டைக்கு இதுக்கு மேல உங்களுக்கு வேலை இல்லை. நீங்க வீட்ட போறதெண்டா போகலாம்.” என்றவன் அவ்விடம் நீங்கி மகள்களைக் காணச் சென்றான்.

தொடரும்…
 
Top Bottom