• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மையல் மீளுதே மேகவியே - 10

ரோசி கஜன்

Administrator
Staff member
புதுமண தம்பதியரை சென்னைக்கு வழி அனுப்புவதற்காக, ரயில் நிலையத்திற்கு இரு குடும்பத்தாரும் வந்திருந்தனர்.



புஷ்பாவும் கதிரவனும், "பார்த்துக்கோடா." என மகனிடம் உரைக்க, தலையை மட்டும் அசைத்தான் சத்யகீர்த்தி.



புறப்படுவதற்கு முன்னர், திருமணம் முடிந்த கடந்த ஒரு வாரமாக வீட்டிலேயே வேண்டிய மட்டும் இல்லற வாழ்வைப் பற்றி அறிவுரை வழங்கிவிட்டனர்.



முதலில் அனைவருமே ஒன்றாய் சென்னைக்குக் கிளம்பி மேகவியையும் அவனையும் வீட்டில் விட்டு தேவையான பொருட்களை வாங்கித் தந்து, வசதிகளைச் செய்து கொடுத்து வரலாம் என்றுதான் பேச்சு தொடங்கியது.



ஆனால் ஆடவன், "எல்லாரும் அங்க வந்து என்ன செய்யப் போறீங்க? அம்மா, உங்க உடம்பு இருக்க நிலைமைக்கு இது அவசியமா? டயாலிஸிஸ் பண்ணணும் மறந்துட்டீங்களா.?‌" என ஆரம்பத்திலேயே வினாக்களை எழுப்பி, அந்த எண்ணத்திற்கு தடையிட்டு விட்டான்.



"எங்க லைஃபை நாங்க பார்த்துக்கிறோம். எல்லாத்தையும் ரெடி பண்ணி, நாங்களும் செட் ஆனதுக்கு அப்புறம் சொல்லுறோம். நீங்க வாங்க!" என பாவையின் குடும்பத்தாரிடமும் உரைத்து வைத்தான்.



இருபக்கமுமே அவனது சொல்லை தட்ட இயலாது ஏற்றுக் கொண்டனர்.



உண்மையில் மேகவியின் குடும்பத்தார் பெரிதாய் சத்தியிடம் எந்த வினாவும் எழுப்பவில்லை.



'தங்களது வீட்டுப் பெண்ணை இக்கட்டான நிலையில் நிறுத்தி‌, திருமணத்தை முடித்திருக்கிறோம். சட்டென்று அவளால் இந்த புதிய உறவையோ வாழ்வையோ ஏற்க இயலாது. மனதில் மாற்றம் ஏற்பட சில காலம் ஆகும்!' என உணர்ந்தே இருந்தனர்.‌ ஆகையால் இருவருக்குமே அவர்கள் எவ்வித அழுத்தத்தையும் தரவில்லை.



மறுவீடு வைபவத்தின் பொழுது சாகரன் மச்சினனை தனியாய் அழைத்து, "நைட் பாப்பா அமைதியா இருந்தாளா? இல்ல எதுவும் பேசி பிரச்சனை செஞ்சிட்டாளா.?" எனத் தலை இரவைப் பற்றி விசாரிக்க,



"மாம்ஸ், நீங்க நினைக்கிற அளவுக்கு எல்லாம் உங்க தங்கச்சி இல்ல. அம்மா அப்பாக்கிட்ட நல்லா தான் பழகுறா. என்கூடவும் ஓகே தான்."



"ஓகேன்னா? என்ன மாப்ள?" என்று அவன் வியப்பும் குழப்பமுமாய் நோக்க,



"வீணா பிரச்சனை வேணாம்.‌ ரெண்டு பேரும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்னு‌ எங்களுக்குள்ள பேசி வச்சிருக்கோம்!" என இரவு முதல் காலை வரையில் தங்களுக்கு இடையே நடந்த பேச்சு வார்த்தைகளை உரைத்தான்.



"ஓ.. அவ்வளவு தானா?" என்ற மூத்தவனின் முகம் சட்டென்று வாடி விட,



"ஏன் மாம்ஸ், உங்களுக்கே இது ஓவரா தெரியல? ஹவுஸ் அரெஸ்ட் செஞ்சு, கல்யாணத்துக்குச் சம்மதிக்க வச்சிருக்கீங்க.‌ அவ, இந்த அளவுக்கு பொறுமையா நடந்துக்கிறதே பெரிய விஷயம். இதுல அவ்வளவு தானானு வருத்தம் வேற உங்களுக்கு!"



"அதுவும் உண்மை தான். என்ன செய்யிறது? நீ ஓகேனு சொன்னதும், மிராக்கிள் எதுவும் நடந்திருக்குமோனு கொஞ்சம் எக்சைட் ஆகிட்டேன்."



சத்தி சிரித்திட, சாகரனும் மெலிதான பெருமூச்சு ஒன்றை வெளிவிட்டு புன்னகைத்தான்.



திருமண தினத்தின் இரவில் பேசிக் கொண்ட படி, ஊரில் இருந்த ஒரு வாரமும், குடும்பத்தார் எவ்வித வினாவையும் எழுப்பாத அளவிற்கு சற்று இணக்கத்துடனே நடந்து கொண்டனர் மேகவியும் சத்தியும்.



இருவருமே பெரிதாய் எவ்வித மெனக்கெடலும் செய்யவில்லை‌. தங்களது தனிப்பட்ட அறையை விட்டு வெளியே வரும் தருணங்களில் அருகருகே அமர்வதும், கணவனிற்கான காலை மற்றும் மாலை நேர தேநீரை அவள் சென்று தருவதும், அத்தருணங்களில் 'உனக்கு?' என்று மனைவியிடம் அவன் விசாரித்துக் கொள்வதும், ஒன்றாய் உணவு உண்பதும், ஒருவர் மற்றவருக்குப் பரிமாறுவதுமே போதுமானதாய் இருந்தது.



கதிரவன் புஷ்பா தம்பதியருக்கு, மகனும் மருமகளும் நல்வாழ்வை வாழ முயல்வதாய் பிம்பம் தோன்றிட, மேகவியின் குடும்பத்தார் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வதாய் எண்ணிக் கொண்டனர்‌.



அதுதான் உண்மையும் கூட. சத்தி மனைவியுடன் திருமண வாழ்வை முழுமனதுடன் பகிர்ந்து கொள்ள முனைய,‌ அவள் குடும்பத்தாருக்காக சற்று புரிதலுடன் நட்பாகவேனும் இப்புதிய உறவைத் தொடர நினைத்தாள்.



காகிதத்தில் எழுதப்படாத 'சேர்ந்து பயணம் செய்வோம்!' என்ற ஒரு உடன்படிக்கையை மனதால் உறுதி செய்து கொண்டனர். இவர்களிற்கு நடந்து முடிந்த திருமணமே, அதற்கு சாட்சியாகவும் அடிப்படையாகவும் அமைந்து போனது.



"வீட்டுலயும் அவங்கக்கிட்டயும் நீ நல்லபடியா தான் நடந்துக்கிறனு அண்ணனும் அண்ணியும் சொன்னாங்க. என்னால புரிஞ்சுக்க முடியிது, உன்னோட மனசுல என்ன இருக்குனு. கல்யாணத்தைச் செஞ்சு வச்சு, உன்னைக் கண்ட்ரோல் பண்ணுறதா நினைக்காத.



மருமகளோட அண்ணன் நல்ல குணம் தான். கொஞ்சம் பார்த்து நடந்துக்க முயற்சி செய் மேகா ம்மா.! எங்களுக்காக இல்லாம, மனசை மாத்திக்கிட்டு உனக்காகவும் கொஞ்சம் வாழப்பாரு." என ஷீலா மகளிடம் உரைத்திட,



"போதும் அவளைக் கொஞ்சுனது. இந்தப் பக்கம் வா.." என்றபடி மருமகளை நகர்த்திவிட்டு பெயர்த்தியின் அருகே வந்தார் கனகவள்ளி.



மேகவி மூத்தவரைப் பார்த்து முகத்தைத் திருப்பிக் கொள்ள, "என்னவாம் கழுத்து சடக்குனு வளையிது. பார்த்து அப்படியே மொத்தமா திரும்பிக்கப் போகுது. அப்புறம் போறவன் வர்றவன் எல்லாம் பார்த்துச் சிரிக்கப் போறான். திரும்பு இந்த பக்கம்!" என தாடையை பற்றி தன்னைக் காணச் செய்தார்.



"இங்க இருக்கும் போது, நல்லப்பிள்ளையா நடந்துக்கிட்டது பெருசு இல்ல. அங்க போன பின்னாடியும் அப்படியே இருக்கணும், அதுதான் முக்கியம். இங்க எதுவும் பிரச்சனைனா, நாங்க இருக்கோம். பார்த்துக்குவோம். ஆனா அங்க? வாழ்க்கையைப் புரிஞ்சுக்கிட்டு, தாலி கட்டுனவன் கூட ஒழுக்கமா குடும்பம் நடத்து.



ஊர்ல தான இருக்காங்க, இவங்களுக்கு என்ன தெரியப் போகுதுனு உன் இஷ்டத்துக்கு இருக்க நினைக்காத. எப்படினாலும், அங்க நடக்கிறது எங்களுக்கு தெரிய வந்துடும். அப்புறம் முக்கியமான விஷயம் ஒன்னு சொல்லணும். சீக்கிரம் பிள்ளைய பெத்துக்கிற வழியைப் பாரு!"



'என்னை என்ன நினைச்சிட்டு இருக்காங்க இவங்க?' என எண்ணியவளிற்கு எரிச்சல் மேலிட, "அப்பத்தா?" என்று பல்லைக் கடித்தாள்.



"என்ன அப்பத்தா? நான்தான் அது! உனக்கு நான் என்ன முறை வேணும்னு எனக்கு நல்லாவே தெரியும். நீ ஒன்னும் அதைச் சொல்லித் தர வேணாம்."



"நக்கலு? நினைச்ச மாதிரி கல்யாணத்தை முடிச்சிட்டீங்க இல்ல‍? அப்ப, பேசத்தான் செய்யிவீங்க!"



"அப்படியே முதுகுல ஒன்னு போட்டேனா பாரு! பெரியவங்க எதுவும் சொன்னா, அது ஏன் எதுக்குனு எல்லாம் யோசிக்கிறது இல்ல. உடனே வரிஞ்சு கட்டிக்கிட்டு, இஷ்டத்துக்கு எதையாவது பேச வேண்டியது!"



"பிள்ளை பெத்துக்க பெருசா என்ன காரணம் இருக்கப் போகுது?‌ இவ, எப்படி நிம்மதியா இருக்கலாம்? சட்டு புட்டுனு ஒரு குட்டியைப் போட்டுட்டா, அது கூடவே நேரம் சரியா போகும். உங்கக்கூட எல்லாம் வாயாட வர மாட்டேன்னு தான, இந்த ஐடியா?"



"ஆமா.. உலகத்துல இல்லாத பெரிய ஐடியா. நாங்க யோசிச்சு மறைச்சு வச்சதை, நீ கண்டுபிடிச்சிட்ட.‌ என்னோட இத்தனை வருச அனுபவத்துல பாதிக்கு ஈடாகுமா உன்னோட புத்தி?"



"கிழவி! இது நல்லதுக்கு இல்ல."



"நான் கிழவியா? என் வயசுக்கு எப்படி இருக்கேன்னு பாரு. ஆனா‍, நீ குமரி மாதிரியா இருக்க? இன்னும் கொஞ்சம் காலம் போனா, என்னை மாதிரி கிழவி ஆகிடுவ போல?



சத்து கித்து ஒன்னும் இல்லாம, போனது வந்தது கண்டது காய்ஞ்சு போனதுனு முழுங்கி நல்லா சுருங்கிப் போன பீக்கங்கா மாதிரி இருக்க. நாளாச்சுனா அதுல இருக்க தண்ணி சத்து எல்லாம் வத்திப் போயி, ஒரு பக்கமா வளைஞ்சுக்கும்‌‌. பொம்பளை உடம்பும் அப்படித்தான்.



நல்லா சத்தா இருக்கும் போதே பிள்ளைய பெத்துடணும். ஏற்கனவே இருபத்தெட்டு ஆகிடுச்சு இல்ல? இப்ப இல்லாம, வேற எப்ப பெத்துப்ப? நாங்க எல்லாம் கை கால் சுகத்தோட இருக்கும் போதே, உனக்கு நல்லது கெட்டதை பார்த்து விட்டுடுவோம்ல‍?"



"ஆமா! உங்களுக்கு உங்க கடமையை முடிக்கணும். நான் என்ன நினைக்கிறேன்‌? எனக்கு என்ன வேணும்கிறது எல்லாம் முக்கியம் இல்ல!" என உரைத்து அவள் பார்வையை வேறு பக்கம் திருப்பினாள்.



'பெயர்த்தியிடம் இப்படிப் பேசுவது எல்லாம் எவ்வித உணர்வு தாக்கத்தையும் ஏற்படுத்தாது!' என்று உணர்ந்து மெலிதாய்ப் புன்னகைத்த வள்ளி, தனது அணுகுமுறையை மாற்றினார்.



"இவ்வளவு காலமும் உனக்கு வேணும்கிறதைச் செய்யினு உன் இஷ்டத்துக்கு தான விட்டோம்? எங்க கடமை தான் பெருசுனு நினைச்சிருந்தா, இத்தனை வருஷமும் அமைதியா இருந்திருப்போமா? இப்ப செஞ்சதை, அப்பவே செய்ய முடியாதா என்ன?



இப்ப, நான் நல்லா தான் இருக்கேன். ஆனா எப்பவும் அப்படி இருப்பேன்னு சொல்ல முடியாது, இல்ல? வயசு, ஆகத்தானே செய்யும்? இனி ரெண்டு இல்ல மூனு வருசம் கழிச்சு என்னோட உசுரு போச்சுனா.."



"அப்பத்தா.?" என அவள் மூத்தவரின் கரத்தைப் பற்றிட, "சொல்லுறேன், நெருப்புனு சொன்னா ஒன்னும் சுட்டுடாது. அப்படி ஒருவேளை போகும் போது, மேல உன்னோட அப்பனையோ தாத்தனையோ பார்த்தா, பிள்ளைக நல்லா இருக்குதுகனு அவங்கட்ட சொல்லணும்ல?



நம்ம பிள்ளைகளுக்கு அப்பனா எதுவும் செய்யாம, இப்படி வந்துட்டோமேனு என்னோட மகன் அங்க தவிச்சிட்டு இருக்க மாட்டானா? இப்ப நான் போயி சொல்லுறது, அவனோட ஆத்மாக்கு எவ்வளவு நிம்மதியா இருக்கும்? அதான், நான் உசுரை விடுறதுக்கு முன்ன நீங்க எல்லாம் நல்லா வாழுறதை கண் நிறைஞ்சுப் பார்த்திடணும்னு நினைக்கிறேன். இது, இந்த கிழவியோட கடைசி ஆசைனு வச்சுக்கோயேன்? சத்தி நல்லப்பிள்ள. உனக்கு நிச்சயமா பிடிக்கும்!"



மெலிதாய்ச் சிரித்தவள், "வாட் எ டயலாக்? செம அப்பத்தா! அதுலயும் நீங்க பேசுன மாடுலேஷன் எல்லாம் வேற லெவல்! இதை அப்படியே படத்துல வச்சா, செண்டிமெண்ட் பிச்சுக்கும். நம்ம ஆளுங்களும் பார்த்துட்டு கண்ணைக் கசக்கி சில்லரையை சிதற விட்டிருப்பாங்க.



ஆனா, நான் அந்த கூட்டத்துல இருக்க ஒருத்தி இல்ல. சோ, உங்களோட இந்த செண்டிமெண்ட் எல்லாம் என்கிட்ட வேலைக்கு ஆகாது. நீங்க பார்த்திருக்க மாப்பிள்ளையை நல்லவன்னு சொன்னீங்க இல்ல? பார்க்கிறேன் நானு, அவன் எவ்வளவு நல்லவன்னு. வரட்டுமா.?" என விடைபெற்றாள் மேகவி.



தனது முயற்சி வெற்றியை நல்காது போக, 'ஒரு வழிக்கும் வர மாட்டிகிறாளே இவ? அந்தப் பிள்ள எப்படி சமாளிக்க போறானோ, தெரியல!' என்று எண்ணி மூத்தவரால் பெருமூச்சு மட்டுமே விட முடிந்தது.



தொடர்வண்டி புறப்படுவதற்கான அறிவிப்பு கேட்க, மனைவியை முதலில் ஏறுமாறு உரைத்த சத்தி, அவளிற்குப் பின்னால் ஏறினான்.



கனகவள்ளியுடன் இணைந்து ஷீலா, சாகரன்‌, பிரார்த்தனா, கதிரவன், புஷ்பா என ஐவரும் சேர்ந்து நின்று கை அசைத்தனர்.



வண்டி மெல்ல நகர்ந்து சென்று வேகத்திற்கு மாற்றம் அடைய, இருவரின் பார்வையில் இருந்தும் குடும்பத்தார் தொலைதூரப் புள்ளியாய்க் கரைந்து போயினர்.



உள்ளே வந்த ஆடவன் தங்களிற்காக முன்பதிவு செய்திருந்த இருக்கையைத் தேடிப் பிடிக்க, பின்னோடு வந்து இணைந்தாள் அவள்‌.



"நான் மேல் பெர்த்ல படுத்துக்கிறேன். நீ, கீழ யூஸ் பண்ணிக்கோ!" என்று மேல்பக்க படுக்கைக்கு ஏறியவள், 'அவ்வளவு தான்‌. இனி பேசுவதற்கு ஒன்றும் இல்லை. நமக்கு இடையேயான உறவிற்கு, இதுதான் எல்லை!' என்பது போல் புளூடூத் மூலமாய் இணைக்கப்பட்ட கருவியை செவியில் மாட்டிக் கொண்டு படுத்தாள் மேகவி‌.



அவளைப் பார்த்து தனக்குள்ளே சிரித்துக் கொண்டு, கீழ்ப்பக்க இருக்கையில் உடலை சாய்த்தான் சத்யகீர்த்தி.
 
Top Bottom