• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மொழியின் இலக்கணம் நீயடா - 12

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் - 12

"டேய் அண்ணா! ஒழுங்கா இப்ப உடனே வர்றியா? இல்லையா? வெயிலு மண்டைய பொளக்குதுடா. நிக்க முடியல." பொட்டல் வெளியில் மொட்டை வெயிலில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த தன் பெரியம்மா மகன் வசந்திடம் கத்திக் கொண்டிருந்தாள் பத்து வயதுச் சிறுமி தமிழ்மொழி.

பள்ளி விடுமுறையில் பாட்டி வீட்டிற்கு வந்திருக்கிறாள். தமிழின் பாட்டி வள்ளியம்மாளுக்கு விசாலத்தை தவிர மேலும் இரு பிள்ளைகள் உண்டு. தமிழின் தாய் விசாலத்திற்கு ஒரு அக்காவும், அவருக்குப் பின்பு பத்து வருட இடைவெளியில் பிறந்த தம்பியும் இருக்கிறார்கள்.

பெரிய மகள் வனிதாவை உள்ளூரிலேயே கட்டிக் கொடுத்திருக்க, விசாலத்தை மட்டும் சற்று தொலைவில் இருந்த தேனாத்தூரில் ஈஸ்வரனுக்கு கட்டிக் கொடுத்திருந்தார்.

வள்ளியம்மாளின் மகன் அருண் பத்தாம் வகுப்பு கூட ஒழுங்காக முடிக்காமல் நண்பர்களுடன் ஊர்சுற்றிக் கொண்டு வீட்டில் வெட்டியாக இருப்பதோடு பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறான்.

பத்து வருடங்களுக்கு பிறகு பிறந்த ஆண் வாரிசு என்று தாயின் செல்லம் அளவுக்கு அதிகம். அதன் விளைவு 22 வயதைத் தாண்டியும் உருப்படியாய் எந்த வேலையும் செய்யாமல் விட்டேற்றியாக ஊர் சுற்றிக்கொண்டு இருக்கிறான்.

தமிழின் முழு ஆண்டு விடுமுறைக்கு பாட்டி ஊருக்கு வந்திருக்கிறாள். அவளது ஒன்று விட்ட அண்ணனான வசந்த், விடுமுறை என்பதால் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தவனை மதிய உணவிற்காக பாட்டி அழைத்திருக்க அவனை இழுத்து வர அவனுடன் போராடிக் கொண்டிருக்கிறாள்.

வனிதா பணிக்குச் சென்று விடுவதால் அவளது பிள்ளையை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு பாட்டியிடம். அவனை சாப்பிட அழைத்தே சோர்ந்து போகும் வள்ளியம்மா, பேத்தி உடன் இருக்கவும் அவளை அனுப்பி விட்டார்.

அவள் அங்கிருக்கும் அந்த பத்து பதினைந்து நாட்களும் அந்த வேலை அவளுடையது. அவளுமே அங்கு, தன் தோழிகளோடு மகிழ்ச்சியாக கொண்டாட்டத்துடன் இருக்கும் பசுமையான நாட்கள் அவை.

உதட்டில் லேசான புன்னகையுடன் கண்கள் மூடி சாய்ந்தவாக்கில் படுத்திருந்த தமிழ் சொல்ல, அவளை ஹிப்னடைஸ் செய்து அதைக் கவனமாக கேட்டுக் கொண்டிருந்தனர் மருத்துவர் சித்ராவும் அவர் அருகிலிருந்த அகத்தியனும்.

"அப்றம் வேற எதாவது முக்கியமாக நடந்த நிகழ்வுகள் ஞாபகம் இருக்கா தமிழ்?" மெல்லிய குரலில் சித்ரா கேட்க, அதுவரை புன்முறுவலுடன் சொல்லிக் கொண்டிருந்தவள் முகம் கொஞ்சம் கொஞ்சமாக கலவரமாக மாறியது.

சில நிமிட மௌனத்திற்கு பிறகு, "அன்.. அன்னிக்கு நைட்டு.. நான் ரொம்ப பய..பயந்துட்டேன்." முகம் முழுக்க கலவரத்துடன் நடுக்கமான குரலில் தமிழ் சொல்லவும், சித்ரா அகத்தியனை திரும்பிப் பார்த்தார்.

"ஏன்? அன்னிக்கு என்னாச்சு தமிழ்?" மெல்லிய குரலில் அவர் கேட்க, நடந்த நிகழ்வின் தாக்கத்தில் இதழ்கள் அழுகையில் பிதுங்கி, கண்ணீர் வழிய சொல்லத் தொடங்கினாள் தற்போது மனதளவில் தன் பத்து வயது பிராயத்தில் இருந்த தமிழ்.

தமிழின் பாட்டி வீடு பெரிய அளவில் விஸ்தாரமானது இல்லை. சிறிய சமையலறை நடுவில் சற்று பெரிய அறை அதில் தான் டிவி, பீரோ போன்ற பிற பொருட்களும் இருக்கும். அதைத் தொடர்ந்து சிறிய முற்றம்.

முற்றத்தின் கீழே நான்கைந்து படிக்கட்டுகள் இறங்கிச் சென்றால் அதேப்போல சிறிய அளவிலான ஒரு வீடு. அதில்தான் வனிதாவின் குடும்பம் வசித்து வருகிறார்கள்.
தாய்வீட்டிற்கு அருகிலேயே இருப்பதில் பணிக்குச் செல்லும் வனிதாவிற்கு எந்த பிக்கல் பிடுங்கலும் இல்லாமல் இருந்தது.

விடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு வரும் தமிழ் பகல் பொழுது முழுவது‌ம் தோழிகளோடு விளையாடுவதும், வீட்டில் வசந்த்துடன் கேலி பேசி அரட்டை அடித்துக் கொண்டு டிவி பார்ப்பதோடும் கழிந்து விடும்.

இரவில் வசந்த் தனது வீட்டிற்கு உறங்கச் சென்றுவிட, விளையாடிய களைப்பில் வழக்கம் போல தனது பாட்டி அருகில் படுத்து உறங்குவாள் தமிழ்.

அன்று வெளியே சென்ற வருண் இன்னமும் வீடு திரும்பாமல் இருக்க, மகனுக்காக காத்திருந்த வள்ளியம்மாள், தூக்கத்தில் கண்கள் செருக தன்னருகே அமர்ந்திருந்த பேத்தியைக் கண்டு "போய் தூங்கு தமிழு." படுத்துறங்கச் சொல்லி வற்புறுத்தவும், வந்து படுத்தவள் களைப்பில் உடனே உறங்கி விட்டாள்.

வருண் வந்த பிறகு அவனுக்கு உணவு பரிமாறி அவன் உண்டு முடித்தபிறகு அடுப்பங்கரையை சுத்தம் செய்து விட்டு தாமதமாக வந்து படுத்தார் வள்ளியம்மாள். அதற்குள் தமிழ் ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்று விட்டாள்.

வேலையின் களைப்பில் பாட்டி சிறிது நேரத்திலேயே அசந்து உறங்கிவிட, அருகே உறங்கிக் கொண்டிருந்த தமிழ் சீக்கிரமே படுத்து விட்டதால் ஆழ்ந்த உறக்கத்திற்கு பின்பு லேசான சுய உணர்வுடன் இருந்த சமயம் தனது உள்ளாடை விலகுவதை உணர முடிந்தது.

அது கனவில்லை என்பது தெளிவாக அவளுக்கு புரிய, அடுத்த கணம் அவள் மேல் படர்ந்த வருணின் வாசனையில் உள்ளுக்குள் நடுநடுங்கிப் போனவள், தன் மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டாள்.

தனக்கு நடப்பது இன்னதென்று தெரியாத அந்த சின்னஞ்சிறு பிள்ளையின் மனதில் ஏதோ தவறு நடக்கிறது என்பது மட்டும் விளங்க, அரண்டு போய் அப்படியே கிடந்தாள்.

அந்த சமயத்தில் பாட்டியின் குறட்டை சத்தம் திடீரென நிற்கவும், அவள் மீது படர்ந்திருந்த வருண் சட்டென அகன்று விட்டான். அதுவரை மூச்சை இழுத்து பிடித்து உறங்குவது போல கிடந்தவள் அதன்பிறகு மூச்சை வெளியிட, கண்கள் கண்ணீரைச் சொறிந்தன.

குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல் பற்றியெல்லாம் அதிகம் விழிப்புணர்வு இல்லாத காலகட்டம் அது. அதனால் அவளது தாய் அவளுக்கு இதைப்பற்றி எதுவும் சொல்லித் தந்ததில்லை.

வெளியாட்களிடம் பார்த்து கவனமாக இருக்க வேண்டும் என்று மட்டுமே அறிவுரைக்கப்பட்ட தமிழும் தன் சொந்த வீட்டிலேயே தனக்கு இப்படி நேரும் என எதிர்பார்க்கவில்லை. அதைவிட பாலியல் துன்புறுத்தல் இப்படித்தான் இருக்கும் என்பதுகூட அவளுக்கு தெரியாது.

தனக்கு நேர்ந்தது ஏதோ தவறான செயல் என்பதுவரை மட்டுமே அந்த பிள்ளைக்கு விளங்கியது. மறுநாள் முதல் தாய் எப்போது வந்து தன்னை அழைத்துச் செல்வார் என்று காத்திருக்கத் தொடங்கினாள்.

தாய் வந்து அழைத்துச் செல்லும் வரை அதன்பிறகு அங்கிருந்த ஒவ்வொரு இரவும் பாட்டியை அட்டைப் போல ஒட்டிக் கொண்டே தான் உறங்கினாள்.

தாயிடம் கூறி விட்டால் அவர் எல்லாம் பார்த்துக் கொள்வார் என்று நம்பி ஊருக்குத் திரும்பியபிறகு தன் தாயிடம் அனைத்தையும் கூறி விட்டாள். ஆனால் நடந்ததோ வேறு.
 
Top Bottom