• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அசோகவனத்தில் ராமன் - 13

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 13


அது அவன் தானா? அவன் எந்தப் பக்கமிருந்து வருவான் என்று வலப்புறமும் இடப்புறமுமாய் தனிஊசல் போல் கண்களை அலையவிட்டாள் ஆத்மீகா கண்ணபிரான்.


அவன் வந்தான். அவளுக்கும் மேலாய் அவன் முகம் வெலவெலத்துப் போயிருந்தது. இதயம் துடிக்கிறதா என்று நெஞ்சில் கை வைத்து‌ சோதித்து கொண்டான்.


இந்த அகங்காரி எதற்கு இங்கு வந்தாள் என்று எரிச்சல் மூண்டது அவனுக்கு.


ஆனால், அவளுக்கு அப்படி இல்லை. உடல் வசந்தோற்சவம் கொண்டது. மனம் தீபாவளி கொண்டாடியது. இத்தனை வருடங்கள் கைக்கு எட்டாக்கனியாய் இருந்த அற்புதம் நாவில் சாறாய் நாட்டியமாடிய உணர்வு.


அவன் வாசனைக்கே அவள் உடல் எப்படி கட்டுப்பட்டது! இன்று எதிரில் முழு மனிதனாய் நிற்கிறான். அவனை மஞ்சளாய் அள்ளி எடுத்து உடல் முழுவதும் பூசிக்கொள்ள அவள் கரங்கள் துடித்தன. கண்களோ தெய்வ தரிசனம் கிட்டியவை போல் இமைக்க மறந்தன.


மூளையோ அவனது மாற்றங்களை அங்குலம் அங்குலமாய் ஆராய்ந்தது.


டை அடிக்கும் பழக்கம் அவனிக்கில்லை என்பதை சொல்ல மட்டும் பத்து பனிரெண்டு துடுக்கு நரைமுடிகள். மத்தபடி அவன் பெரிதாய் மாறிவிடவில்லை.


கண்களில் அந்த கனலைக்கூட குறைக்க மாட்டானா இவன்? -குமைந்தாள்.


“ராணி கூப்பிட்டனுப்பின காரணம் தெரிஞ்சிக்கலாமா?” என்று பணிவாக கேட்டான் சித்தார்த்தன்.


ஆத்மீகாவுக்குள் ஒரு எரிமலை வெடித்துச் சிதறியது. அஞ்சலிதேவியின் முன் அவன் கை கட்டி பணிந்து நிற்பது அவள் மனதை அறுத்தது. அவன் அவளின் முடிசூடா மன்னன். அப்படியிருக்க! அவன் எப்படி இன்னொருவரின் முன்- வேலைக்காரன் மாதிரி- கைக்கட்டி நிற்கலாம் என்று முள்ளில் உட்கார்ந்தாற்போல் தவித்தாள்.


அக்கணம் அவள் மனதுள் ஒரு தீர்மானம் பிறந்தது. இனி அவனை இந்நிலையில் தொடரவிடக்கூடாது. அவ‌னை யாரி‌ன் முன்பும் கைக்கட்டி நிற்க விடக்கூடாது. அதற்கு திருமணம் ஒன்று தான் வழி என்றால், நான் அதற்கும் தயார் என்று தீர்க்கமாய் ஒரு முடிவெடுத்தாள்.


“ஆங்! இவங்க இன்னைக்கு இங்க தான் தங்குவாங்க சித்தார்த்தன். கெஸ்ட் ரூம் ஒன்னை அரெஞ்ச் பண்ணி கொடுங்க” என்று அஞ்சலிதேவி சாவதானமாய் சொன்னதும்,


“உத்தரவு ராணி” என்று தனது அலைபேசியை இயக்கினான் அவன்.


அவன் கைகள் நடுங்குவதை துல்லியமாக படம் பிடித்தன அவளின் விழிகள்.


“ஒரு நிமிசம்” என்று அவனை தடுத்தவள், “அது வந்து நான் இங்க தங்கற பிளான்ல வரலை மேம். நைட் இங்கயிருக்க எங்க கொடவுன்ஸுக்கு வேறபோய் இன்ஸ்பெக்‌ஷன் நடத்தனும். நிறைய வேலை இருக்கு. ஏர்லி மார்னிங் -கோயம்பட்டூர் டூ சென்னை -ஃப்ளைட் டிக்கெட் வேற புக் பண்ணியிருக்கேன். ஸோ, உங்க விருப்பத்துக்கு மறுப்பு சொல்றதுக்கு மன்னிக்கனும்‌. பட், உங்க அரண்மனை ரொம்ப அழகா இருக்கு மேம். நீங்க அனுமதி தந்தா ஒரு தடவை சுத்திப் பார்த்துட்டு ஸ்கூலுக்கு போறேனே?” என்றதும்,


“சித்தார்த்தன், ம்!” என்று கையசைத்தார் அஞ்சலி தேவி.


அவன், “வாங்க” என்று முன்னால் நடந்தான்.


அவன் கால்கள் பின்னியது போல் அவளுக்கு தோன்றியது.


“ஏன் என்னை பார்த்து இவ்வளவு பயம் மிஸ்டர் சித்தார்த்தன்?” என்ற கேலிக்குரலில் தூக்கிவாரிப்போட்டது அவனுக்கு.


“மறுபடியும் உங்களுக்கு ஞாபகப்படுத்த கடமை பட்டிருக்கேன். நான் சூர்ப்பனகை இல்ல” என்று நையாண்டி செய்தன அவள் இதழ்கள்.


“நீங்க எதுக்கு இங்க வந்தீங்க மேடம்? என் நிம்மதியை கெடுக்கவா?”


“எனக்கு யார் நிம்மதியையும் கெடுத்து பழக்கமில்ல மிஸ்டர் சித்தார்த்தன். யானைக்கு தன் தலையிலேயே மண்ணள்ளி போட்டுக்கற பழக்கம் இருக்கறப்ப, பாகனுக்கு எதுக்கு அந்த அக்கறை சொல்லுங்க?”


“அதான் என் தலையில மண்ணள்ளி போட வச்சாச்சே மேடம்? அப்பறம் என்ன? இப்ப தான் எல்லாத்தையும் மறந்து சந்தோசமா இருக்கேன். அது பொறுக்கலையா உங்களுக்கு?”


“நான் இதுவரை உங்க நிம்மதியும் சந்தோசமும் கெடாம பார்த்துக்கிட்டதா தான் ஞாபகம் மிஸ்டர் சித்தார்த்தன். உங்களுக்கு ஒருவேளை அது மறந்திருக்கலாம்.” என்று அவனை நெருங்கி நடந்தாள்.


அவனுக்கு அவள் தோள்கள் தன் மீது உரசுவது பிடிக்கவில்லை. வேகமாய் நடந்தான். அவளால் அவன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை‌. பின் தங்கினாள்.


“எதுக்கு இந்த ஓட்டம்?” என்றதும், அவன் நின்றான்.


“நான் இதை சொல்லல. என்கிட்டயிருந்து தப்பிச்சி ஓட நெனைக்கறதை சொன்னேன்.” என்றதும்,


“உடம்புல சூடு சுரணை இருக்கற யாரும் செய்றதை தான் நான் செஞ்சேன்.” என்றான்.


“சரி என்னை ஏன் விரோதி மாதிரி பார்க்கறீங்க மிஸ்டர் சித்தார்த்தன்? நான் உங்களுக்கு நல்லது தானே செஞ்சேன்?”


“காகத்துக்கு குடிக்க பானைல தண்ணி கொடுத்திட்டு, அடியில ஓட்டை போடுறது தான் உங்க தர்மம் மேடம். அன்னைக்கு நடந்த தப்புல இப்ப வரைக்கும் என் அம்மா அப்பா முகத்துல முழிக்க முடியாம இருக்கேன் நான். அதுக்கு காரணம் நீங்க. எதையும் விலை கொடுத்து வாங்க முடியும்னு நினைக்கற உங்களால என் வலியை புரிஞ்சிக்கவே முடியாது மேடம்”


“அன்னைக்கு நடந்ததை ஒரு விபத்தா வச்சிக்கலாமே. இனிமே முறையா அதை முன்னெடுக்கலாம்னு நான் நெனைக்கறேன் மிஸ்டர் சித்தார்த்தன்” என்று அவனது தோளின் மீது பரிவாய் கை வைத்ததும், ஏதோ அமிலம் பட்டாற் போல் விலகினான்.


“நீங்க தொடுறது அருவருப்பா இருக்கு எனக்கு” என்று சுடுசொற்களை வீசினான்.


“வார்த்தைகள்ல கவனம் வைங்க மிஸ்டர் சித்தார்த்தன்”


கோபக்கனல் வீசியது அவள் மூச்சுக்காற்றில்.


“இதுக்கு மேலயும் உங்களுக்கு அடிபணியுறதுக்கான எந்த அவசியமும் எனக்கு இல்லைனு நெனைக்கறேன் மேடம்”


“நிஜமாவா? நான் உருவாக்கினா?”


“பகல் கனவு பலிக்காது மேடம்”


“ஹாஹாஹா! அதையும் தான் பார்க்கலாமே”


இருவரும் பேசிக்கொண்டே மீண்டும் வரவேற்பறை வந்தனர்.


அஞ்சலி தேவி அவளிடம் புருவம் உயர்த்தினார்.


“தேவலோகத்தை பூலோகத்துல பார்த்த மாதிரி இருக்கு மேம். எல்லாமே இங்க ரொம்ப பிடிச்சிருக்கு எனக்கு” என்று அவள் சித்தார்த்தனை பார்த்துக்கொண்டே சொல்ல, திடுக்கிட்டார் அஞ்சலிதேவி.


“நான் வரேன் மேம்” என்றவள் விடைபெறும் போது சித்தார்த்தனின் விழிகள் அவளையே வருடின.


எதுவோ சரியில்லை என்று ஆணித்தரமாய் அடித்து சொன்னது அஞ்சலிதேவியின் உள்ளுணர்வு.


நேரே அந்த உலகதரமான பள்ளிக்கு சென்றாள் ஆத்மீகா கண்ணபிரான்.


அஞ்சலிதேவி வண்டி அனுப்பியதற்கான காரணம் அப்போது தான் புரிந்தது. முன்பதிவு செய்யப்பட்ட வாகன எண்களை தவிர்த்து, மற்றவை பள்ளிக்குள் நுழைய தடை. அதுதான்.


பின்புற ஷோகேஸில் பல பதக்கங்களையும், கோப்பைகளையும் அடுக்கியிருந்த -அந்த முதல்வர் அறையில்- நடுத்தர வயதில் உதட்டிலும் தலையிலும் சாயம் பூசியிருந்தவரை கண்டு, அங்கு எத்தனை மாணவ மாணவிகள் படிக்கிறார்கள்- ஒவ்வொரு வகுப்பிலும் ஆண், பெண் வாரியாக அவர்களின் எண்ணிக்கை என்ன என்று அனைத்தையும் கேட்டாள் ஆத்மீகா கண்ணபிரான்.


அப்போது பள்ளியின் முதல்வருக்கு ஒரு அழைப்பு வந்தது, ஒரு பெற்றோரிடமிருந்து.


ஏற்று பேசியவர், கலக்கமாக காணப்பட்டார். அவர் பேசி முடித்ததும் என்னவானது என்று விசாரித்தாள் ஆத்மீகா கண்ணபிரான்.


அவர் ஆற்றாமையாக பகிர்ந்தார்: “இந்த பேரண்ட்ஸ் இருக்காங்களே, எவ்வளவு சொன்னாலும் ரூல்ஸை ஃபாலொவ் பண்றது இல்ல மேடம். ஸ்கூலுக்கு சில்ரன் கோல்டு ஆர்னமெண்ட்ஸ் எதுவும் போட்டுட்டு வரக்கூடாதுங்கறது ரூல்ஸ். ஆனா இன்னைக்கு தன் குழந்தைக்கு பர்த்டேனு ரெண்டு பவுண் கோல்டுசெயினை போட்டு விட்டிருக்காங்க பேரண்ட்ஸ். அது இப்ப மிஸ்ஸிங்காம். இங்க படிக்கிறது எல்லாமே மில்லியனர் பில்லியனர் பசங்க. இதுல யார் கிட்டப்போய் விசாரிக்கறது சொல்லுங்க? இவங்களும் இப்ப நகையை தேடி தரச் சொல்லி போன் பண்ணல. ஜஸ்ட் ஒரு இன்ஃபர்மேஷன் பாஸ் பண்ணிருக்காங்க, அவ்வளவு தான். ஆனா ஸ்கூலோட ரெப்யூடேசன் கெட்டுப்போகுதா இல்லையா?” என்றவர் கேட்டதும்,


“சரி தான் மேம்” என்றாள் ஆத்மீகா.


அப்போது, “எஸ்கியூஸ் மீ மேம்” என்றொரு குரல் கேட்டது.


இருவருமே வாசலை பார்த்தார்கள்.


வந்திருந்தது பானுமதி.


அவள் ஆத்மீகா கண்ணபிரானை கண்டதும் பேயறைந்தது போல் நின்றாள்.


“கமின் பானு” என்றார் முதல்வர்.


அவள் மெதுவாக வந்தாள்.


ஐந்து வருடங்களில் அவள் மெலிந்துபோய், அந்த குறும்புத்தனம் மின்னும் கண்கள் தொலைந்து போயிருந்ததை கவனித்தாள் ஆத்மீகா.


ஆனால், பானுமதிக்கு என்னவோ ஆத்மீகா அன்று இருந்தது போல் தான் இன்றும் இருப்பதாய் தோன்றியது. ஆத்மீகாவின் உணவு முறைகளும், உடற்பயிற்சி இத்யாதிகளும் அந்த மாதிரி என்று பாவம் அவளுக்கு தெரியவில்லை.


துப்பட்டாவை சரி செய்துகொண்டே, “மேம் இது தேர்டு-சி கிட்ட கிடந்தது. டீச்சர்ஸ் சர்க்கிள்ல யாரும் செயின் மிஸ் ஆனதா சொல்லல. ஸோ, ஸ்டூடண்ட் யாரோடதாவது இருக்கும்னு உங்ககிட்ட கொண்டு வந்தேன்” என்று அந்த இரண்டு பவுன் தங்கச் சங்கிலியை நீட்டவும்,


“தான்க் காட்! பெரிய தலைவலில இருந்து தப்பிக்க வச்சதுக்கு தான்க்ஸ் பானு. இது ஒரு ஸ்டூடண்டோடது தான். இப்ப தான் ஒரு பேரண்ட் கால் பண்ணாங்க. ஸ்கூல் பேர் கெட்டுடுமோனு நெனச்சேன். நீங்க கவனிச்சி கொண்டு வந்துட்டீங்க. ஒன்ஸ் அகைன் தான்க்ஸ்மா” என்றதும், அவள் லேசாக விகசித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.


பள்ளி முதல்வரிடம் மேலும் கேட்க வேண்டியவற்றை எல்லாம் கேட்டு தெரிந்துவிட்டு, வெளியே வந்த‌ ஆத்மீகா, பானுமதியை தேடினாள்.


அவள் தனது கைப்பையை தூக்கிக்கொண்டு, வெளியே காரிற்காக காத்திருந்தாள்.


அவளை நெருங்கிய ஆத்மீகா கண்ணபிரான், “வாட்ச்சை விட தங்க செயின் அதிக விலை‌போகும் பானுமதி” என்றதும், அவள் விழிகள் ட்ராகன்களாயின.


“உங்களுக்கு தெரியாதோனு சொன்னேன். ஒருவேளை தெரிஞ்சிருந்தா, பாராட்டத் தகுந்த மாற்றம் தான்” என்றதும், வெறுப்பாய்‌ முகத்தை சுளித்தாள் பானுமதி.


இவள் தானே உண்மையை விஹானிடம் சொல்லி, முதுகில் குத்தியது என்ற கோபம் அவளுக்கு.


உள்ளுக்குள் பொருமிய‌படி, “எனக்கு உங்ககிட்ட பேச விருப்பமில்ல” என்று முகத்திலடித்தாற்‌ போல் சொன்னாள்.


ஆத்மீகாவின் புருவங்கள் நெற்றிக்கு ஏறின. கண்களோ கூர்மையாகி‌ன.


“நான் ஏன்னு தெரிஞ்சிக்கலாங்களா மேடம்?” என்று கேலியாகக் கேட்டாள்.


“நீங்க ஒரு நம்பிக்கை துரோகி அதான்” என்று சீறியதும்,


“அட! நன்றிகெட்ட நீங்க என்னை நம்பிக்கை துரோகினு சொல்றது தான் வேடிக்கையா இருக்கு. அப்படி உங்க எந்த நம்பிக்கைக்குமா நான் துரோகம் செஞ்சிட்டேன்?” என்று கேட்டதும், சிலிர்த்தாள் பானுமதி.


“அன்னைக்கு நான் என் அண்ணன்கிட்ட விஹானுக்கு உண்மை தெரிஞ்சா, நான் தற்கொலை பண்ணிப்பேனு சொன்னேனா இல்லையா? அப்ப என் அண்ணன்கிட்ட எல்லாத்தையும் மன்னிச்சி, அவருக்கு வேலை போட்டுக் கொடுக்கற மாதிரி பாவ்லா பண்ணிட்டு, விஹான்கிட்ட போய் உண்மை எல்லாத்தையும் உடைச்சது யாராம்? நீங்க தான? என் அழகான கனவை கலைச்சது நீங்க தான? எனக்கு உங்க முகத்துல முழிக்கக்கூட பிடிக்கல மேடம். வெறுப்பா இருக்கு” என்றபடியே தன்னருகே வந்த காரில் ஏறினாள்.


அவளை பாவமாக பார்த்தபடி நின்றாள் ஆத்மீகா கண்ணபிரான்.


அவள் குரல் உடைந்ததிலேயே ஆத்மீகா தனது வீம்பை கைவிட்டு விட்டாள்.


தவறான புரிதலில் இருப்பவளிடம் தன்னை பற்றி தான் எடுத்து சொல்வதை விட, அவள் மனம் கவர்ந்தவனே சொல்வது தான் நியாயமாக இருக்கும் என்று நினைத்தாள்.


அதனால் சென்னைக்கு சென்றதும் முதல் வேலையாக விஹானை சந்தித்து பேச வேண்டும் என்று முடிவு செய்தாள்.


அன்றிரவு கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு விமானத்தில் பறக்கும் போது- ஆத்மீகா பிசினஸ் கிளாஸில் கால்களை நீட்டி அசந்து தூங்கினாள் என்றால், சித்தார்த்தன், பானுமதி ஆகிய இருவரும் பழைய நினைவுகளில் ஆந்தையானார்கள்.


அவளின் வருகை‌ அவர்களுக்கு பாரமாக இருந்தது.


விஹான் பானுமதியின் நினைவுகளில் ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தான். அவனை மறக்க முயன்று தோற்றவள், தலையணையை நனைத்தாள்.


சித்தார்த்தனோ தனதறையில்- ஆத்மீகா பேசியதை பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான்.


அவள் அப்படியே இருக்கிறாளே என்ற வியப்பும் அவனுக்கு. இந்த ஆறரை வருடங்களும் அவளுக்கு மட்டும் ஆறரை மணி நேரங்களானது போல் அவனுக்குள் ஒரு பிரமிப்பு.


பின்னே ஆளைத் தின்னும் பார்வை, பிரமிடு மூக்கு, பனியாரக் கன்னங்கள், ரம்மில் ஊற வைத்த உதடுகள் என்று எல்லாம் அப்படியே அல்லவா இருந்தன!


அவளை மறக்கவேண்டும் என்ற முடிவோடு கண்களை மூடி மூடித் தோற்றான்.



தொடரும்…


ஆத்மீகாவின் முடிவை அஞ்சலிதேவி ஆதரிப்பாரா? சித்தார்த்தன் அவளை ஏற்பானா? அறிவோம் அடுத்தடுத்த அத்தியாயங்களில்.

தினமும் அத்தியாயம் வேண்டுமென்றால் எனக்கு லைக், கமெண்ட்ஸ் வேண்டும் நண்பர்களே!
 
Top Bottom