அத்தியாயம் 13:
"கன்னத்தில்
முத்தத்தின் ஈரம் அது
காயவில்லையே கண்களில்
ஏன் அந்த கண்ணீர் அது யாராலே
கன்னியின் கழுத்தை பார்த்தால்
மணமாகவில்லையே....
காதலன் மடியில் பூத்தாள்
ஒரு பூ போலே....
மன்னவனே உன்
விழியால் பெண் விழியை
மூடு ஆதரவாய் சாய்ந்து
விட்டால் ஆரிராரோ பாடு
ஆரிராரோ இவர் யார் எவரோ
பதில் சொல்வார் யாரோ
என்ன சத்தம் இந்த
நேரம் உயிரின் ஒளியா
என்ன சத்தம் இந்த நேரம்
நதியின் ஒளியா கிளிகள்
முத்தம் தருதா அதனால்
சத்தம் வருதா அடடா ஆ...!"
அவனது அணைப்பின் கதகதப்பில் உறைந்து போய் நின்றவள், தூரத்தில் கேட்ட பாடல் சத்தத்தில் சட்டென நினைவு வந்தவளாக அவனை மெல்லத் தள்ளினாள்.
"செழியன்... யாராவது பார்த்திடப் போறாங்க. விடுங்க," என்று படபடப்புடன் கூறினாள்.
அவளது பதற்றத்தைக் கண்டு குறும்புடன் சிரித்த செழியன், "பார்த்தா பார்த்துட்டுப் போகட்டும் தீபி.
முறைப்படி பொண்ணு பார்க்க வந்துட்டு, என் மாமனார் கிட்ட பர்மிஷன் வாங்கிட்டுத் தானே பேச வந்திருக்கேன்? அப்பறம் எதுக்கு பயம்?" என்றான் அவளது கையை விடாமல்.
"அதுக்காக இப்படியா? அத்தை பொண்ணு பவித்ரா வேற ரொம்ப வாலு. அவ ஏதாவது பார்த்தா ஊரே கூட்டிடுவா," என தீபிகா கூற, அவளது மூக்கைத் செல்லமாக நுனியால் வருடினான் செழியன்.
"சரி சரி... உன் பயம் புரியுது. ஆனா ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோ, இனி உன்னை யாராலும் என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது.
அடுத்த மாசம் நிச்சயம், அடுத்து கல்யாணம்... அப்புறம் நீ முழுசா எனக்கே எனக்கு தான்," என அவன் உரிமையோடு சொல்ல, தீபிகாவின் முகம் நாணத்தில் சிவந்தது.
தோட்டத்தில் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே, தூரத்தில் அல்லிராணியும் பவித்ராவும் சிரித்துக் கொண்டே வருவது தெரிந்தது.
சட்டென இடைவெளியை அதிகப்படுத்திக் கொண்டு இருவரும் ஏதும் அறியாதவர்கள் போல் பூச்செடிகளைப் பார்ப்பது போல் நின்றனர்.
"என்ன கொழுந்தனாரே... பேசி முடிச்சாச்சா? இல்லை இன்னும் ஒரு பத்து நிமிஷம் எக்ஸ்ட்ரா வேணுமா?" என பவித்ரா கண்ணடித்தபடி கேட்க,
செழியன் சமாளிக்கும் விதமாக, "ஆச்சு... ஆச்சு... கிளம்பலாம்," என்றான்.
வீட்டிற்குள் வந்தபோது, பெரியவர்கள் அனைவரும் பேசி முடித்திருந்தனர். இளங்கோவனும் கதிரேசனும் கைகுலுக்கிக் கொண்டனர்.
"அப்போ கிளம்புறோம் சமந்தி நிச்சயதார்த்த வேலைகளை கவனிப்போம்" என சுப்ரமணி விடைபெற்றார்.
செழியன் கிளம்பும் போது, தீபிகாவைத் திரும்பிப் பார்த்தான். அவள் வாசற்படி ஓரம் நின்று கண்களாலேயே 'போயிட்டு வாங்க' எனச் சொல்வது போல் பார்த்தாள்.
செழியனின் கண்கள் அவளுக்கு ஒரு ரகசிய முத்தத்தை அனுப்பிவிட்டு காருக்குள் ஏறியது.
கார் கிளம்பியதும், மிதுன் தான் முதலில் ஆரம்பித்தான். "ஏன் சித்தப்பா, தீபி சித்தியைப் பார்த்ததும் உங்க கண்ணு ஏன் அவ்வளவு பெருசாச்சு? ஒருவேளை அவங்க கையில இருந்த டம்ளர்ல பாம்பு ஏதாவது இருக்குமோன்னு பயந்துட்டீங்களா?"
மிதுனின் பேச்சைக் கேட்டு காரில் இருந்த இளமாறனும் பொற்செழியனும் அடக்க முடியாமல் சிரித்தனர்.
"டேய் மிதுன்! உன்னை யாருடா இப்போ பேசச் சொன்னது? ஒழுங்கா முன்னாடி பார்த்து உட்காரு," எனச் செழியன் மிரட்டினான்.
"விடுடா செழியா... பையன் உண்மையைத்தானே கேக்குறான்? பொண்ணு டீ கொடுக்கும்போது நீங்க ரெண்டு பேரும் பார்த்துக்கிட்ட பார்வையைத் தாங்க முடியாமத் தான் நாங்களே சிரிச்சிட்டோம்," என்றான் செந்தூர் பாண்டியன்.
"என்ன இருந்தாலும் நம்ம செழியன் இவ்வளவு ரொமாண்டிக்-னு இன்னைக்குத் தான் தெரியுது," என அல்லிராணி அவனை வம்பிக்க,
செழியனுக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது.
கார் ஒரு வளைவில் திரும்பும் போது, எதிரே வந்த ஒரு கார் இவர்களின் காருக்கு மிக அருகில் வந்து நின்றது.
அதில் இருந்த நபர் இளஞ்செழியனை உற்றுப் பார்த்துவிட்டுச் சென்றார்.
அவனைப் பார்த்ததும் செழியனின் முகம் சட்டென மாறியது. பழைய நினைவுகள் சில அவன் மனதில் நிழலாடி மறைந்தன.
அது தீபிகாவின் முறைப்பையன் 'பரத்' என்பது அவனுக்குத் தெரியும்.
பரத் தீபிகாவைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டவன்.
இப்போது இவர்களின் திருமணம் உறுதியாகியுள்ள நிலையில், அவன் அமைதியாக இருப்பானா என்பது செழியனுக்கு ஒரு கேள்வியாக நின்றது.
பரத்தின் கார் கடந்து சென்ற பின்பும், செழியனின் பார்வை கண்ணாடி வழியாக அந்த காரையே பின் தொடர்ந்தது.
அவன் மனதில் ஏதோ ஒரு நெருடல். தீபிகாவின் குடும்பத்தில் பரத் மிகவும் முக்கியமானவன் என்பது அவனுக்குத் தெரியும்.
"என்ன மச்சான்.. அந்த காரையே பார்த்துட்டு இருக்க? யாராவது தெரிஞ்சவங்களா?" என இளமாறன் கேட்க,
"இல்லடா... சும்மா தான் பார்த்தேன்," எனச் சமாளித்தான் செழியன்.
ஆனால் அவனது மனம் தீபிகாவைப் பற்றிய கவலையில் ஆழ்ந்தது.
தீபிகாவின் வீட்டில்...
பெண் வீட்டார் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்க, திடீரென வீட்டிற்குள் நுழைந்தான் பரத்.
அவன் முகம் கடும் கோபத்தில் சிவந்திருந்தது.
"என்ன மாமா இதெல்லாம்? எனக்கு ஒரு வார்த்தை கூட சொல்லாம தீபிக்கு நிச்சயம் பேசி முடிச்சிட்டீங்களா?" என இளங்கோவனிடம் எகிறினான்.
இளங்கோவன் நிதானமாக, "பரத்... தீபிகாக்கு அந்த பையன்னா எவ்ளோ இஷ்டம்னு உனக்கே தெரியும். எங்க எல்லாருக்கும் இந்த சம்பந்தத்துல முழு சம்மதம். அப்புறம் என்ன?" என்றார்.
"சம்மதமா? அவளுக்கு என்ன தெரியும்? அந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்க உங்களை விட வசதியில கம்மி. அவளைப் போய் ஒரு சாதாரணக் குடும்பத்துல கட்டிக் கொடுக்கப் போறீங்களா? நான் அவளை எவ்வளோ வருஷமா காதலிக்கிறேன்னு உங்களுக்குத் தெரியாதா?" என கத்தினான்.
இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த தீபிகா, முன்னே வந்து நின்றாள். "பரத்! நிறுத்துங்க. நீங்க காதலிக்கிறது உங்க விருப்பம்.
ஆனா எனக்கு உங்க மேல எந்த எண்ணமும் வந்ததில்லை. நான் செழியனைத் தான் விரும்புறேன். அவர மட்டும் தான் கல்யாணம் பண்ணுவேன்!" எனத் தீர்க்கமாகக் கூறினாள்.
பரத் அவளை ஒரு தீர்க்கமான பார்வை பார்த்துவிட்டு, "நிச்சயம் வரைக்கும் போயிட்டீங்க... ஆனா தாலி ஏறுற வரைக்கும் நான் விடுவேன்னு நினைக்காதீங்க. இந்த கல்யாணம் நடக்காது!" எனச் சபதமேற்று அங்கிருந்து வெளியேறினான்.
அன்று இரவு, செழியனுக்குத் தீபிகாவிடமிருந்து அழைப்பு வந்தது. அவள் நடந்த அனைத்தையும் அழுதுகொண்டே அவனிடம் சொன்னாள்.
"செழியன்... எனக்குப் பயமா இருக்கு. பரத் எதையும் செய்வான். அவனுக்குப் பின்னாடி நிறைய ஆட்கள் இருக்காங்க," எனத் தேம்பினாள்.
செழியன் மென்மையாக, "தீபி... அழாத. இங்க பாரு, இத்தனை வருஷம் போராட்டத்துக்கு அப்புறம் தான் நம்ம காதல் கல்யாணத்துல முடிய போகுது.
ஒரு பரத் வந்தா என்ன, பத்து பரத் வந்தாலும் உன்னை என்கிட்ட இருந்து பிரிக்க முடியாது. நான் இருக்கேன் உனக்கு," என அவளுக்கு தைரியம் கூறினான்.
அவளைச் சமாதானப்படுத்தித் தூங்க வைத்தவன், தன் வீட்டில் விஷயத்தைச் சொன்னான்.
இளமாறன் ஆவேசமாக, "யாரு மச்சான் அவன்? நம்ம வீட்டுப் பொண்ணு எடுக்க வர்ற இடத்துல வந்து மிரட்டுறானா? , நீ கவலைப்படாத மச்சான் .
நிச்சயதார்த்தத்தை இன்னும் கிராண்டா நடத்துவோம். எவன் வர்றான்னு பார்ப்போம்," என கூறினான்.
நாட்கள் நகர்ந்தன. அடுத்த மாதம் நிச்சயதார்த்தத்திற்காக ஒரு பிரம்மாண்ட மண்டபம் முன்பதிவு செய்யப்பட்டது. இரண்டு குடும்பங்களும் நகைகளும் உடைகளும் வாங்குவதில் பிஸியாக இருந்தனர்.
செழியன் தன் வேலைகளுக்கு நடுவிலும் தீபிகாவின் பாதுகாப்பை உறுதி செய்தான். அவளுக்குத் தெரியாமலேயே அவளைக் கவனிக்க ஆட்களை ஏற்பாடு செய்திருந்தான்.
நிச்சயதார்த்தத்திற்கு முதல் நாள்...
செழியன் போனில் தீபிகாவிடம் பேசிக் கொண்டிருந்தான். "நாளைக்கு இந்த நேரத்துக்கு நாம ஒருத்தருக்கு ஒருத்தர் சொந்தமாகிடுவோம் தீபி.
நான் உனக்கு எடுத்த அந்தப் பச்சைப் பட்டுச் சேலையில நீ தேவதை மாதிரி இருப்பேன்னு எனக்குத் தெரியும்," என்றான்.
"உங்களுக்கு எப்பவுமே வர்ணனை தான். நாளைக்கு நேரத்துல மண்டபத்துக்கு வந்துடுங்க," என அவள் சிரித்தாள்.
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே, தீபிகாவின் அறை ஜன்னலில் ஒரு கல் வந்து விழுந்தது. அதில் ஒரு சீட்டு சுற்றப்பட்டிருந்தது.
தீபிகா பயந்து போய் அந்தச் சீட்டை எடுத்துப் பார்த்தாள். அதில் ரத்தச் சிவப்பில் எழுதப்பட்டிருந்தது:
"நாளை உன் கழுத்தில் ஏறப்போவது மாலையா?
இல்லை அவன் உயிருக்கு விழப்போகும் மாலையா? முடிவு செய்!"
தீபிகாவின் கைகள் நடுங்கின. போன் கீழே விழுந்தது...