• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

என் மன்னவன் நீதானோ - 21

Vishakini

Moderator
Staff member
என் மன்னவன் நீ தானோ
அத்தியாயம் 21

அடுத்த நாள் காலையில் எழும்பிய அகிலன், அருகில் உள்ள ஒருவரின் உதவியுடன் அவர்களின் வீட்டை துப்பரவு செய்வதில் ஈடுபட்டான். அந்த வீட்டை தாங்கள் வந்தால் தங்குவதற்காக ஒரு அறையை வைத்துக் கொண்டு மிகுதிப் பகுதியை வாடகைக்கு கொடுத்திருந்தார்கள். திருமணம் சரி வந்த உடனேயே அவர்களுக்கு அறிவித்தல் கொடுத்து, அவர்கள் எழும்பி விட்டார்கள் என்ற போதும், வீடு சுத்தமில்லாமலும் பழுதடைந்த நிலையிலும் காணப்பட்டது.

வீட்டுக்கு என்னென்ன திருத்த வேலைகள் செய்ய வேண்டும் என்பதையும் என்ன தளபாடங்கள் வாங்க வேண்டும் என்பதையும் தாயும் மகனும் பேசி முடிவு எடுத்துக் கொண்டார்கள்.

திருமணத்துக்கு இன்னும் ஒரு மாதம் தான் இருக்கு. இரண்டு நாட்கள் தாயுடன் தங்கி நின்று, அவருக்குத் தேவையான சகல வசதிகளையும் ஏற்பாடுகளையும் செய்து விட்டு, அருகிலுள்ள ஒன்று விட்ட மாமாவின் குடும்பத்திடம் தாயை பார்த்துக் கொள்ளும்படி கூறி விட்டு அகிலன் கொழும்புக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தான்.

புறப்பட தயாராக இருந்தவனிடம் “கலியாணத்துக்கு இரண்டு கிழமைக்கு முதலே இஞ்ச வரவேணும் அகில்” என்றார் பத்மா.

திருமணத்திற்கு நாள் குறித்த உடனேயே அவன் விடுமுறை தொடர்பாக மேலதிகாரிகளுடன் கதைத்தவன், ஆனால் அவர்கள், ஆண்டு இறுதிப் பரீட்சை இருப்பதால் நீண்ட நாட்கள் விடுமுறை எடுப்பது சிரமமாக இருக்கும் என்று கூறி இருந்தார்கள். எனவே “லீவு கேட்டுப் பார்க்கிறன்.. அவையள் தந்தால் தானே…” என்றான் வெகு அலட்சியமாக.

அவனின் அலட்சியத்தில் வெகுண்டவராக “கலியாணத்துக்கு லீவு தரத் தானே வேணும் …, நீ கேள்… அவை தருவினம்…” என்றார்.

“இரண்டு கிழமை லீவு எடுக்க வேணும் எண்டால் குறைஞ்து மூண்டு மாதத்துக்கு முதலே அறிவிக்க வேணும்…, அதோட பைனல் எக்ஸாமும் இருக்கு…, நீங்கள் சொல்லுற போல எல்லாம் லீவு எடுக்கேலாது…” என்றான் கடுப்புடன்.

“அவை தரமாட்டினம் எண்டு நீயே யோசிக்காமல் கேட்டுப் பார்…, நீ வந்தால் தானே எனக்கு உதவியா இருக்கும் அகில்…? எவ்வளவு வேலைகள் இருக்கு…, நான் தனியாளா எல்லாம் செய்ய ஏலுமோ…?” என்றார் சிறு எரிச்சலுடன்.

“நீங்கள் பெருசா ஒண்டும் செய்யாதீங்க…, பெயிண்ட் மட்டும் அடிக்க சொல்லுங்க…, தளபாடங்களை நான் கொழும்பில பார்த்து ஓடர் பண்ணுறன்… அவை டெலிவரி செய்வினம்…, பலகாரம் ஏதும் தேவை எண்டால் ஓடருக்கு எடுக்கலாம்…” என்றான் அவன்.

“உடுப்புகள் வாங்கோணும்…” என்றார் கேள்வியாக.

“எனக்குத் தேவையானதை சனி ஞாயிறுகளில நான் அங்க பார்த்து வாங்குறன்…, உங்களுக்கு தேவையனதை கலா அக்காவோட போய் எடுங்களனம்மா…” என்றான் அலுப்புடன்.

“முகூர்த்தப் புடவை எடுக்கணும்…”

“அதை அவைய போய் எடுக்க சொல்லி காசை கொடுங்க…” என்றான் இலகுவாக.

“அகில்…” என கோபத்துடன் அதட்டியவர் “என்ன தம்பி கதைக்கிறாய்..? நாங்கள் தான் முகூர்த்தப் புடவை எடுக்கணும்.. அது கூட உனக்குத் தெரியாதா…? நீயும் வரோணும்… ” என்றார் கண்டிப்பாய்.

“ஏலுமெண்டா வாறன்…, இல்லாவிட்டால் அவையளோட நீங்கள் போய் எடுங்க..” என்றவனை பார்த்து முறைத்தார் அவர்.

“நான் கிளம்ப போறன்…, நீங்கள் உடம்பை பார்த்துக் கொள்ளுங்க…,டைமுக்கு சாப்பிடுங்க… மறக்காமல் மருந்தை சாப்பிடுங்க.. தூசி உங்களுக்கு ஒத்து வராது, கவனமா இருங்க” என தாயிடம் அக்கறையுடன் கூறினான்.

“நீயும் நேரத்துக்கு சாப்பிடு, நேரத்துக்கு படு” என்றார்.

“சரியம்மா.. நான் வாறன்” என்று விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டான் அகிலன்.

கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்தவனுக்கு தனக்கு திருமணம் என்பதில் ஓர் சந்தோஷம் ஏற்படவில்லை. மாறாக ஓர் வித கலக்கம் தான் ஏற்பட்டது. இந்த திருமணம் இரு குடும்பங்களுக்கு இடையில் சமூகமான உறவை ஏற்படுத்துமா என்ற கேள்வியுடன் தான் அவனின் பயணம் இருந்தது.

..............
என்னதான் சிறுசிறு அசௌகரியங்கள் இருந்த போதும் இரு வீட்டினரும் திருமண ஆயத்தங்களில் மும்மரமாக ஈடுபட்டனர்.

சௌமிகா வீட்டினரும் வீட்டுக்கு வர்ணம் பூசுதல், புடவைகள், நகைகள் வாங்குதல், உறவினர்களுக்கு அழைத்தல் என அவர்களும் கடும் பிஸியாக இருந்தார்கள்.

பத்மாவும் உறவுகளின் உதவியுடன் வீட்டுக்கு, சமையலறைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குதல், வளவை துப்பரவு செய்தல் என்று வேலைகளுடன் இருந்தார்.

அகிலனுக்கு ஒரு கிழமை தான் விடுமுறை கிடைத்தது, அவனுமே பாடத்திட்டத்தினை நிறைவு செய்தல், வினாத்தாள் தயாரித்தல், பரீட்சையை ஒழுங்கு படுத்துதல் போன்றவற்றில் மும்முரமாக இருந்தான்.

இவ்வாறாக திருமண நாள் நெருங்க, உறவினர்கள் ‘அகிலன் எப்ப வாறான்…?. அகிலன் இன்னும் வரலையா..?’ என விசாரிக்கத் தொடங்கினார்கள்.

அன்று அகிலன் விடுமுறை எடுக்கும் நாட்களுக்கான வேலைகளையும் செய்து முடிக்க வேண்டி இருந்ததால், அதில் சிலவற்றை செய்து விட்டு தாமதமாகத்தான் வீட்டுக்கு வந்தான். சாப்பிட்டுவிட்டு போபாவில் சோர்வுடன் அமர்ந்திருந்தவனிடம் பத்மா போன் பண்ணி “எப்ப இஞ்ச வாறதா இருக்கிறாய்…?” எடுத்த உடனேயே கேட்டவரின் குரலில் அதட்டல் இருந்தது.

ஏற்கனவே அலுப்பில் இருந்தவனுக்கு, தாயின் அதட்டலில் சினம் ஏற்பட “லீவு தரும் போது வாறன்..” என்றான்.

அவனின் அந்த பதிலில் கடுப்படைந்த பத்மா “எல்லாரும் நீ ஏன் இன்னும் வரேல்ல எண்டு கேக்கினம்… கல்யாணம் எண்டால் சும்மாவா…? நிறைய வேலைகள் இருக்குது …? எல்லாம் ஓடித்திரிஞ்சு செய்யக்கூடிய வயசா எனக்கு…? ஒவ்வொண்டுக்கும் ஆரையாவது எதிர்பார்க்க வேண்டி இருக்கிறது, உன்ர கலியாணத்துக்கு கூட லீவு எடுக்க முடியாமல் அப்பிடி என்ன வேலை செய்யுறாய்..?’” எனச் சினந்தார்.

“நீங்கள் நினைக்கிற மாதிரி லீவு எடுக்கேலாது எண்டு முதலே உங்களிட்ட சொன்னான் தானே…” அவனும் எரிந்து விழுந்தான்.

“சொந்தக் கலியாணத்துக்கு லீவு எடுக்கேலாது எண்டு சொன்னால் ஒருத்தரும் நம்பமாட்டினம் தம்பி…” என்றார் பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு.

“என்னை ஒருத்தரும் நம்பத் தேவையில்லை” என்றவனுக்கு தலை வலித்து.

“தம்பி .. இப்ப அது பிரச்சினை இல்லை…, சௌமிக்கு நகை எடுக்கோணும்…, முகூர்த்தப் புடவை எடுக்கோணும்… அவற்றை நீ தான் பார்த்து செலக்ட் பண்ண வேணும்”

“எனக்கு அதெல்லாம் செலக்ட் பண்ண தெரியாது, நீங்கள் அவையள கூட்டிக்கொண்டு போய் வாங்குங்கோ எண்டு சொன்னனான் தானே…” என்றவன் அவர்களை சந்திக்க தயங்கினான்.

என்ன சொன்னாலும் கேட்கிறான் இல்லையே என கடுகடுத்தார் “சரி அகில் உன்னோட கதைச்சால் எனக்கு கோபம் தான் வரும்.., இதுக்கு மேல உனக்கு சொல்லி உனக்கு புரியவைக்க முடியாது, நீ வாற நேரம் வா…” என்றவாறு அழைப்பைத் துண்டித்தார்.

கைப்பேசியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த அகிலனுக்கு காரணமே இல்லாமல் எல்லோர் மீதும் கோபமாக இருந்தது. தாயை தனியே விட்டுவிட்டேன் என்பதிலும் தாய்க்கு ஒத்தாசையாக தன்னால் இருக்க முடியவில்லை என்பதும் அவனுக்கு சஞ்சலமாக இருந்தது. இதில் அடுத்ததாக சௌமியின் பெற்றோர்கள் எவ்வாறு நடந்து கொள்ள போகிறார்கள் என்ற கேள்வியும் இருந்தது. அவர்கள் மீண்டும் உதாசீனப்படுத்தினால், அதை தன்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதும் அவனுக்கு விளங்கியது. சௌமி மீதுள்ள வெறுப்பை சமாளித்து அவளுடன் சாதாரணமாக தன்னால் பழக முடியுமா என்பதும் அவனுக்குப் புரியவில்லை. இவ்வாறு பல்வேறுபட்ட சிந்தனைகளுடன் அவன் அல்லல் பட்டுக் கொண்டிருந்தான்.

.............

அடுத்த வெள்ளிக்கிழமை திருமணம். இந்த வெள்ளி இரவு யாழ்ப்பாணத்துக்கு புறப்படுவதாக திட்டமிட்டிருந்தான். திருமணம் முடிய சனி அங்கே தங்கிவிட்டு ஞாயிறு இரவு கொழும்புக்கு புறப்படுவது அவனின் திட்டமாக இருந்தது. அவனின் வேலைப்பளுவுக்கு மத்தியிலும் அவனுக்கத் தேவையான சில பொருட்களையும் தாயார் கூறிய ஓரிரு பொருட்களையும் கடைகளுக்கு திரிந்து வாங்க வேண்டியிருந்தது.

பத்மா முகூர்த்தப் புடவை எடுப்பதற்கு புடவை கடைக்கு தனது அண்ணனின் மகளை அழைத்துச் சென்றார். சௌமி வீட்டில் இருந்து அனைவரும் வந்திருந்தனர். குறிப்பிட்ட நேரத்துக்கு அனைவரும் வந்திருந்தனர். நலன் விசாரிப்புகளை தொடர்ந்து, “அகிலன் எப்பயாம் வாறான்…” என்று கேட்டார் சகுந்தலா.

“வாற வெள்ளி வருவான்” என்றார் பத்மா.

சகுந்தலா யாழ்ப்பாணம் வந்ததில் இருந்து, நேரம் கிடைக்கும் போது அகிலன், சகுந்தலாவுக்கு போன் பண்ணி கதைப்பது வழக்கம். இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட கதைக்கும் போது, தனக்கு நீண்ட நாட்கள் விடுமுறை எடுப்பதில் சிரமம் இருப்பதாக கூறி இருந்தான்.

.............
ஓரிரு தடவை சௌமிகா, அகிலனுடன் கதைக்க முயற்சித்த போது, அவன் அவளின் அழைப்பை ஏற்கவில்லை.

ஒரு நாள் சகுந்தலா சௌமியின் வீட்டில் நின்ற போது, அவரது கைப்பேசிக்கு அகிலன் அழைத்திருந்தான். அந்த நேரத்தில் அவர் கமலாவுடன் முக்கிய விஷயம் ஏதோ கதைத்துக் கொண்டிருந்ததால், அழைப்பினை கவனிக்கவில்லை. சௌமி தன் பெரிய தாயாரின் கைபேசி சத்தத்தை கேட்டு, வந்து பார்த்த போது, அகிலனின் பெயர் திரையில் தெரியவும் ஆவலுடன் அதை எடுத்து “ஹலோ…” என்றாள் நெஞ்சு படபடக்க.

சௌமியின் குரலை எதிர் பாராதவன் அமைதியாக இருக்க, “ஹலோ” என்றாள் சௌமி மீண்டும்.

“எப்படி இருக்கீங்க…?” குரல் இளகி இருந்தது.
“ஆண்டி இல்லையா…?” என்றவனின் குரலில் எந்தவித உணர்ச்சியும் இல்லை.

“அலுவலா இருக்கிறா…” என்றாள் அவனின் குரலை அனுபவித்தவாறு.

“நான் பிறகு எடுக்கறன்” என்றவன் உடனே அழைப்பைத் துண்டித்தான். அவள் மீதுள்ள வெறுப்பு சற்றும் குறையவில்லை அவனுக்கு.

அவனின் அந்த செயலில் மனம் வாடிய சௌமி, அவ்வளவு தூரம் அவன் அவளை வெறுத்து, ஒதுக்குவதில் கோபம் கொண்டாள்.

அவன் முகூர்த்தப் புடவையை தெரிவு செய்யவேண்டும் என்ற அவளின் எதிர்பார்ப்பையும் அவன் வீணடித்து விட்டான் என்பதில் அவளின் மனம் வெகுவாக சுணங்கியது.

...............

சனிக்கிழமை அதிகாலையில் தனது திருமணத்திற்கு யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தான் அகிலன். அதிகாலை வீட்டுக்கு வந்த மகனிடம் ”ம்… இப்பத்தான் உனக்கு இஞ்ச வர முடிஞ்சிருக்குது…” என நக்கலாக கேட்ட பத்மாவிற்கு மகன் வந்ததில் அத்தனை உற்சாகம்.

பசி, தூக்கம் பாராமல் முடிக்க வேண்டிய வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு களைத்துப் போய் வந்தவனிடம் “நல்லா மெலிஞ்சிட்டாய் அகில்…” என்றவருக்கு தனது சாப்பாடு இல்லாமல் மகன் கஷ்டப் பட்டு விட்டான் என்பதில் கவலை.

தாயைப் பார்த்து சிரித்தவன் “அப்பிடியா…? மெலிஞ்சிட்டனா…” எனக் கேட்டான்.

வர்ணம் தீட்டப்பட்டு, புதுப் பொலிவுடன் இருந்த வீட்டையும் புதிதாக வாங்கி போடப்பட்டிருந்த தளபாடங்களையும் பார்த்த அகிலன் “வீடு நல்லாத் தான் இருக்கு…” எனப் பாராட்டினான். அகிலன் கை கால் முகம் கழுவி வந்ததும், இருவரும் தேநீர் அருந்தியவாறு, அடுத்து செய்ய வேண்டியவனவற்றைப் பற்றி கதைத்தார்கள்.

............

திருமண நாளும் வந்தது. அன்று காலையில் முகூர்த்தம். அந்த ஊரில் உள்ள ஓர் மண்டபத்தில் தான் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மண்டப அலங்காரம் சிறப்பாக செய்வதற்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். புகழ்பெற்ற சமையல் கலை நிபுணரிடம் உணவிற்கு ஒழுங்கு படுத்தி இருந்தார்கள்.

காலையில் மாப்பிள்ளை அழைப்புக்காக அகிலனின் வீட்டுக்கு வந்த பெண் வீட்டு உறவினர்களை மிகுந்த மரியாதையுடன் வரவேற்றான் அகிலன். மாப்பிள்ளையின் தோழனாக வந்த சௌமியின் தம்பியிடம் இயல்பாய் கதைத்தான். வந்த உறவினர்களுக்கு தேநீர் , உணவு வழங்கி உபசரித்தனர். அங்குள்ள சிறு சடங்கையும் முடித்த பின்னர் நல்ல நேரத்தில் பெண் வீட்டினர் அகிலனை அழைத்துக் கொண்டு திருமண மண்டபத்துக்கு சென்றனர். அங்கே மண்டப வாசலில் சௌமியின் தந்தை, அவனை புன்னகையுடன் வரவேற்று மாலை அணிவித்தார். இந்த இடைப்பட்ட ஒரு மாத காலத்தில் சிவநாதன் அவனை மருமகனாக நினைக்க ஆரம்பித்திருந்தார். பின்னர், பெரும் ஆரவாரத்துடன், பிரபல்யமான நாதஸ்வர கலைஞர்களின் மேள தாளம் முழங்க, மண்டபத்தினுள் அழைத்துச் சென்று மிகவும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட திருமண மேடையில் அகிலனை அமர வைத்தனர்.

அவன் அமர்ந்ததுமே, அங்கே அமர்ந்திருந்த குருக்கள் மந்திரங்களை ஓதி பூஜைகளை ஆரம்பித்தார். சற்று நேரத்தில் மணப்பெண்ணை அழைத்து வரும்படி கூறவும் அகிலனின் உறவுப் பெண்கள் சௌமியை அழைக்க சென்றனர்.

சிறு பூக்கள் ஆங்காங்கே இருக்க, மெல்லிய சிவப்பு நிறத்திலான ஜரிகையுடன் கூடிய சந்தன நிற பட்டு புடவையில் ஆரி வேலைப்பாட்டுடன் கூடிய அதே சிவப்பு நிற சட்டையும் அணிந்து இருந்தாள் சௌமிகா. காதில் ஜிமிக்கிகள், கழுத்தில் அதற்குப் பொருத்தமான எளிமையான நகைகள் அணிந்து, திறமைமிக்க அழகுக்கலை நிபுணரின் கைவண்ணத்தில் எழிலோவியம் ஆகத் திகழ்ந்தாள் சௌமிகா.

உறவுகள் சூழ மண்டபத்தினுள் நுழைந்தவளை அங்கே நிறைந்திருந்த உறவினர்கள் அனைவரும் கண் இமைக்காமல் பார்த்து ரசித்தனர். அகிலனின் இரு விழிகள் கூட அவளைத்தான் நோக்கின. மணப்பெண்ணுக்குரிய அலங்காரத்துடன், மயக்கும் புன்னகையை இதழில் தவழ விட்டவாறு, குனிந்த தலையுடன் அன்ன நடை பயின்று வருபவளை பார்த்தவனின் மனதில் அவ்வளவு பரவசம். தன்னருகில் வரும் வரை அவளையே பார்வையால் விழுங்கிக் கொண்டிருந்தான். சௌமி மணமேடையின் அருகில் வர, தலையை சற்று நிமிர்த்தி, அகிலனை நோக்கினாள். பட்டு வேஷ்டி சட்டை, தலைப்பாகை அணிந்து, குறையாத கம்பீரத்துடனும் இளமுறுவல் உடனும் அமர்ந்திருந்தவன், தன்னை மிகுந்த ஆர்வத்துடன் ரசித்துக் கொண்டிருப்பதை அவதானித்தவளின் உடலில் ஓர் சிலிர்ப்பு ஓடியது. அவனது கண்களுடன் தனது கண்களை கலக்க விட, அவன் தனது பார்வையை அகற்றிக் கொண்டான். அவனின் அந்தச் செய்கையில் அவளின் மனம் வாட்டமடைந்தாலும் அதை வெளிக்காட்டாதவாறு , அவள், அவனருகில் அமரவும் குருக்கள் சடங்குகளை ஆரம்பித்தார். அவர்கள் இருவரும் தத்தமது உணர்வுகளை வெளிக்காட்டாது குருக்கள் கூறுவதன் படி சடங்குகளை செய்தனர்.

பத்மாவுக்கு மகனை அந்தக் கோலத்தில் பார்த்ததும் பூரிப்பில் நெஞ்சு விம்மியது. சௌமியின் பொற்றோர்கள் கூட ஆனந்தத்தில் உள்ளம் நிறைய அந்த கண் கொள்ளாக் காட்சியை பார்த்து நின்றனர்.

குருக்கள், திருமாங்கல்யத்தை அகிலனின் கரங்களில் கொடுக்க அதை வாங்கியவன், ஓர் கணம் அவளை பார்த்துவிட்டு தாலிகட்ட ஆயத்தமாகும் போது, சௌமி நிமிர்ந்து காதலுடன் அவனைப் பார்த்தாள். அவன் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல், அவள் கழுத்தில் மங்கல நாணை அணிவித்து, அதற்கு பொட்டிட்டான். அதை அணவிக்கையில் அவனுடைய வலிமையான கரங்கள் அவளின் கழுத்தில் உரசும் போது, அதில் கூசி சிலிர்த்தவள், தங்களின் இல்லறம் சிறக்க வேண்டும் என கடவுளைப் பிரார்த்தித்தாள். இப்போது அவள் தனது காதலில் வென்று விட்ட ஆனந்தத்தில் மிகுதி சடங்குகளில் கலந்து கொண்டாள்.
 
Top Bottom