• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

என் மன்னவன் நீதானோ - 7

Vishakini

Moderator
Staff member
என் மன்னவன் நீ தானோ
அத்தியாயம் 7
அவர்கள் அங்கே சென்றடைந்த போது, ஏற்பாட்டாளர்களும் பொது மக்களும் மண்டபத்தில் தயாராக இருந்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன்கள், பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பாக தான் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது என்பதால் பெண்கள் அதிகளவில் காணப்பட்டனர்.

வரவேற்புரையை தொடர்ந்து, அங்கு வருகை தந்திருந்த சட்டத்தரணிகள் பலரும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, மேம்பாடு குறித்துப் பேசினார்கள். அகிலனும் பெண்கள், குழந்தைகளுக்கான சட்டங்கள் பற்றி பேசினான். அவன் பேசும் போது அதன் கருத்துகளை காதால் கேட்டவாறு, அந்த கம்பீரமான குரலில் கட்டுண்டு, அவன் பேசும் அழகை வைத்த கண் வாங்காமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் சௌமிகா.

அனைவரினதும் உரைகள் நிறைவுற்றதும், அதில் கலந்து கொண்டோர் தங்களின் பிரச்சினைகள் தொடர்பாக சட்டத்தரணிகளிடம் ஆலோசனைகளைக் கேட்டு அறிந்து கொண்டிருந்தனர். சுமார் பதினேழு வயது மதிக்கத்தக்க ஓர் யுவதியும் அவளின் பெற்றோரும் அவர்களின் பிரச்சனை தொடர்பாக கதைப்பதற்காக அகிலனுக்கு அருகில் சென்று, அந்தப் பெண்ணின் தாய் “ஐயா, இது என்ர மகள்… இவள் ஒருத்தனை நம்பி ஏமாந்து போனாள்....” என்றவாறு கண்ணீர் வடித்தார்.

அவர்களை கண்களால் அளந்தவாறே “ இந்த கதிரையில இருந்து, என்ன என்று விளக்கமாகச் சொல்லுங்கோ” என்றான் அவன்.

“ஐயா இவள் ஒருத்தனை விரும்பினவளாம்… அது எங்களுக்குத் தெரியாது, இப்ப வயித்துல புள்ளையோட நிக்கிறாள்” என்றார் அவளின் தாயார் மிகுந்த அவமானத்துடன்.

“சேர்… இவள் எங்கட ஒரே மகள், பள்ளிக்கூடத்தில ஏ எல்( உயர்தரம்) படிக்கிறாள், நாங்கள் இவள் படிக்க வேணும் எண்டதற்காக கஷ்டப்பட்டுத்தான் படிப்பிக்கிறம். நான் நாலைந்து வீட்டில வீட்டு வேலை செய்யிறனான். இவர் எங்கட வீட்டுக்கு கிட்ட உள்ள ஒர் கடையில வேலை செய்யிறார். அந்தக் கடையின்ர முதலாளியின்ர மகன் தான் இப்பிடி செய்தவன்” என்றவாறு தனது மகளின் முதுகில் கோபத்துடன் அடித்தார் அப்பெண்ணின் தாய்.

“அடிக்காமல் விசயத்த சொல்லுங்க...” என்றான் அகிலன்.

“இவள் சொல்லுறாள் தாங்கள் இரண்டு பேரும் காதலிச்சவையாம்” என்றார் அவர் மேலும்.

“ம்...” அகிலன்.

“கொஞ்ச நாளா ஏலாது சோர்வாக இருக்குது எண்டு பள்ளிக்கூடத்துக்கும் போகாமல் இருந்தவள், நாங்கள் பயந்து போய் டாக்டரிட்டை கொண்டு போய் காட்டினனாங்கள் அப்ப அவர் தான் இப்பிடி எண்டு சொன்னவர்” என்றார் அவர் வேதனையுடன்.

“நாங்கள் என்ன ஏது, இதுக்கு காரணம் யார் எண்டு விசாரிக்கத்தான் அவனைப் பற்றி இவள் சொன்னவள். நாங்கள் அவையளிட்டை போய் ‘இப்பிடி நடந்திட்டுது, இவையளுக்கு கலியாணத்தை செய்து வையுங்கோ’ எண்டு சொன்னதுக்கு அவை ‘அப்பிடி செய்ய ஏலாது’ எண்டு சொல்லினம். ‘எங்கட மகன் தான் காரணம் எண்டு நீங்கள் சொல்வதை நாங்கள் எப்பிடி நம்புவது’ எண்டு கேக்கினம். இவளை வேற பொடியளோடையும் தாங்கள் பாத்தது எண்டு சொல்லினம் எங்களுக்கு என்ன செய்யுறது எண்டு தெரியேல்லை. எல்லாருக்கும் இந்த விஷயம் தெரிஞ்சிட்டுது, எல்லாரும் கண்டபடி கதைக்கினம்.எங்களால வெளியில வெளிக்கிட முடியாமல் இருக்கு… எங்களுக்குப் பிறகு இனி இவள் என்ன செய்யப் போறாளோ தெரியாது..” என அவர் கவலையுடன் அழுதார்.

“ஏன் ‘கலியாணம் செய்ய முடியாது’ எண்டு அவை சொல்லினம் எண்டு நீங்கள் நினைக்கிறீங்க…” என யோசனையுடன் கேட்டான் அகிலன்.

“எங்கட அந்தஸ்து காணாதாம், நிறைய சீதனம் வேணுமாம். எங்களுக்கு வீடு இல்லை, நாங்கள் வாடகை வீட்டில தான் இருக்கிறம் சேர். நாங்கள் அன்றாடம் உழைச்சு சாப்பிடுறனாங்கள். காசு இல்லை, நகை இல்லை…, காணி இல்லை…” என்றார் அப்பெண்ணின் தந்தை.

அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த சௌமிகா திரும்பி அகிலனைப் பார்த்தாள்.



அவன் தலையைக் குனிந்து கொண்டிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்து “இவை சொல்லுறது உண்மையா?...” எனக் கேட்டான்.

அவள் தலையை குனிந்தபடியே ‘ஆம்’ என்பதாக தனது தலையை அசைத்தாள்.

அவளையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்த அகிலன் “இப்ப ஸ்கூலுக்கு போறதா?” எனக் கேட்டான்.

அதற்கு அவளின் தாய் “அவள் போக மாட்டன் எண்டு தான் சொன்னவள் நாங்கள் தான் வற்புறுத்தி அனுப்புறம்… , அங்க தெரிஞ்சவை தெரியாதவை எண்டு எல்லாரும் கண்டபடி கதைக்கினமாம், சில ரீச்சர்ஸும் அருவருப்போட பாக்கினமாம் எண்டு சொல்லுறாள்” என்றார்.

அவரைப் பார்த்து “உங்கட மகள் கதைப்பா தானே...” எனக் கேட்டான்.

அதற்கு அவர் “ஓம் சேர்… அவள் கதைப்பாள்...” எனவும், அவன் “நான் அவாவோட தான் கதைக்க வேணும்...... அவா தான் எனக்குப் பதில் சொல்ல வேணும்...” என்றான் கண்டிப்புடன்.

“சரி சேர் நீங்கள் கதையுங்கோ” என்றார் அப்பெண்ணின் தந்தை.

அப்பெண்ணைப் பார்த்து “உமக்கு என்ன பெயர்?” என்றான் அகிலன்.

அதற்கு அவள் தலை குனிந்தபடியே “வாணி” என்றாள் மெதுவாக.

“எத்தனை வயது?”

“பதினேழு”

“உம்முடைய லவ்வருக்கு என்ன பெயர், எத்தனை வயது?”

“கண்ணன், வயது இருபத்தைஞ்சு...”

“அவர் என்ன வேலை செய்யுறார்?”

“அவையின்ர கடையில தான் வேலை செய்யுறார்”

“அவர் உம்மளை லவ் பண்றதா சொன்னவரா?”

“ஓம்...”

“நீர் அதுக்கு என்ன சொன்னனீர்?”

எவ்வளவு நாளாக தன்னைப் பின் தொடர்ந்து வந்து, அவள் மறுக்க மறுக்க தன்னை வற்புறுத்தி அவனது காதலை தனக்குள்ளும் கொண்டு வந்து தன்னை சம்மதிக்க வைத்தவன் என்பது நினைவில் வர “நானும் சரி எண்டு சொன்னனான்” என்றாள்.

“எவ்வளவு நாளா காதலிக்கிறீங்கள்?”

“ஒரு வருசமாக...”

“வயித்தில பிள்ளை இருக்கிறது அவருக்குத் தெரியுமா?”

“ம்...”

“அதுக்கு என்ன சொன்னவர்?”

“இதை அவரின்ர வீட்டில சொன்னால் பேசுவினமாம், பிரச்சினை வருமாம், அதால கருவைக் கலைக்க சொன்னவர், அதுக்குப் பிறகு அவர் என்னைச் சந்திக்கிறதை நிப்பாட்டிட்டார்” என்றாள் அவள் வேதனையுடன். அவன் இவ்வாறு சந்திப்பதை நிறுத்தி இருந்தாலும், அவனுக்கு தன் மீது பிரியம் இருப்பதாகவே அவள் நம்பினாள். ஏதேனும் ஓர் தவிர்க்க முடியாத காரணத்தினால் தான் அவன் அவளைச் சந்திக்காமல் தவிர்த்து இருப்பான் என்றும் அவள் நம்பினாள். அவள் இதை அவளின் பெற்றோருக்கு எடுத்துக் கூறி இருந்த போதும் அவர்கள் இதை நம்பவில்லை. அவர்களின் வற்புறுத்தலினாலும், மேலும் அவர்களுக்கு சங்கடம் ஏற்படுத்த விரும்பாததாலும் தான் அவள் இங்கு வந்ததே.

“ஓ....” என்றான் அகிலன் மெல்லிய சினத்துடன்.

மேலும் அவனுக்குத் தேவையான சில தகவல்களை கேட்டுத் தெரிந்து கொண்டவன், கருத்தரங்கை ஏற்பாடு செய்த அப்பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை அழைத்து, கண்ணனையும் அவனது பெற்றோர்களையும் அங்கு அழைத்து வர ஏற்பாடு செய்து விட்டு, அவனையே கவனித்துக் கொண்டிருந்த சௌமிகாவிடம் “பசிக்குதா?” என அக்கறையுடன் வினாவினான் அவன்.

அவள் ‘இல்லை’ என்பது போல் தலையாட்டவும், அவன் அவனுடைய காற்சட்டை பாக்கெட்டில் இருந்த போனை எடுத்து நேரத்தை பார்த்து விட்டு “ஒரு மணியாகுது வாரும், அவையள் வர்றதுக்குள்ள சாப்பிட்டுட்டு வருவம்” என்றவன் அவளை சாப்பாடு வைத்திருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றான். அங்கே அவர்களுக்காக சாப்பாட்டு பார்சல்கள் வாங்கி வைக்கப்பட்டு இருந்தன, ஒரு சிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் “அகிலன் சாப்பிடுங்க, சாப்பாடு நல்லா இருக்கு...” என்றார்.

“ஓம்...” என்று அவருக்குப் பதிலளித்தவாறு, சௌமிக்கும் ஒரு பார்சலை எடுத்துக் கொடுத்துவிட்டு, தானும் ஒன்றை எடுத்துக்கொண்டு “இதில இருந்து சாப்பிடுவம்” என்றவாறு அவளுக்கு ஓர் கதிரையை காட்டிவிட்டு, தானும் பக்கத்தில் இருந்த கதிரையில் அமர்ந்து தனது சாப்பாட்டு பார்சலைப் பிரித்தபடி “போனில கதைச்ச மாதிரி இருந்தது… பெரியம்மாவா…?” என்றான்.

அவன் தன்னுடைய வேலையில் கவனமாக இருந்தாலும் தன்னையும் கவனித்துக் கொண்டிருக்கிறான் எனத் தெரிந்ததும் மனம் புளகாங்கிதமடைய, ஓர் புன்னகையுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“வர லேட்டாகும் எண்டு பெரியம்மாட்டை சொல்லும்” என்றுவிட்டு சாப்பாட்டில் கவனத்தைச் செலுத்தினான் அகிலன்.

அவனைப் பார்த்து முறுவலித்தவாறே “ம்…” என்றாள் அவள்.

அவர்கள் இருவரும் சாப்பிட்டு முடித்து மண்டபத்துக்கு வந்தும் அவர்கள் அங்கு வரவில்லை.

ஏற்பாட்டாளர், அவர்களை அழைத்து வரச் சென்ற போது , அவர்கள் வர மறுத்து விட்டதால், அவர், அவரின் அப் பிரதேசத்தைச் சார்ந்த பொலிஸ் நண்பனின் உதவியை நாடி அவர்களை அழைத்து வர சற்று தாமதமாகிவிட்டது. அதுவரையிலும் சௌமி , தனக்கு இருந்த சட்டங்கள் தொடர்பான தனது சந்தேகங்களை அகிலனிடம் கேட்டு, அறிந்து கொண்டாள். அவனும் அவளுக்கு பொறுமையுடன் விளக்கமளித்தான்.

அவர்கள் வரவும், அங்கே உள்ள கதிரைகளில் அவர்களை உட்காரும் படி கூறிய அகிலன், “நீர் தான் கண்ணனா?” என அவர்களுடன் வந்த வாலிபனைப் பார்த்து கேட்டான்.

“ஓம்… நான் தான் கண்ணன்… உங்களுக்கு என்ன வேணும் ?” என அங்கே தங்களை வர வைத்து விட்டானே என்றதில் உண்டான கோபத்துடன் கேட்டான் அவன்.

“இந்தப் பிள்ளையை உமக்குத் தெரியுமா? ” என அகிலன் அவனைப் பார்த்து கேட்டான்.

அவன் ‘ஆம்’ என்பது போலத் தலையாட்டினான்.

“இந்தப் பிள்ளையை காதலிச்சனீரா?” அகிலன்.

அவன் மௌனமாக இருந்தான்.

“இந்தப் பெண்ணின்ர வயித்துல வளர்ர குழந்தைக்கு நீர் தானே அப்பா?” என நிதானத்துடன் கேட்டான் அகிலன்.

கண்ணன் பதில் சொல்ல வாய் திறக்க முன்னரே அவனை முந்திக் கொண்டு, அவனின் தந்தை “இஞ்ச பாருங்க தம்பி, அவையள் இப்படித் தான் ஊருக்க கதை கட்டி விட்டு இருக்கினம்.... என்ர மகனுக்கு அந்தப் பிள்ளையை தெரியாது, அதின்ர அப்பன் தான் என்ர கடையில வேலை செய்தவர்… அவரை நான் கடையை பாத்துக் கொள்ளச் சொல்லிப் போட்டு, வெளியில போட்டு வந்து பார்த்த போது, காசு கொஞ்சம் குறைஞ்சு போட்டுது, அதை கேட்டதும் அவை இப்பிடி சொல்லினம்... ” என அவர் கூறி முடிப்பதற்குள் “பொய்...பொய்...” என்றார் வாணியின் தந்தை.

“நான் உங்கட மகனைத் தான் கேட்டனான்...” என சிறு அழுத்தத்துடன் அவரிடம் கூறிய அகிலன், கண்ணனைப் பார்த்தான்.

“எனக்கு ஒண்டும் தெரியாது…, யாரோ ஒருத்தனின்ர பிள்ளையை என்ர தலையில கட்டப் பாக்குறீங்களோ.... இதுக்கு நான் ஆள் இல்லை … நீங்கள் வேற யாரையும் தான் பார்க்க வேணும்...” என்றான் அவன் திமிராக. அவனுக்கு வாணி தன்னை நம்பாமல் இப்படி செய்து விட்டாள் என்ற கோபம் இருந்தது.

“இதுக்குத்தான் எங்களை இஞ்ச வர வைச்சனீங்களோ…? ” என சினத்துடன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கேட்டவனுக்கு தன்னைப் பெற்றவர்களும் இவளால் ஊர் சனங்களுக்கு முன்னால் அவமானப்பட்டு நிற்பதை பார்த்து சகிக்க முடியவில்லை.

தான் சொன்னதை வாணி கேட்கவில்லை என்ற கோபமும் சேர்ந்து “ஏய்… என்ன நீ ஆக்களை வைச்சு எங்களை வெருட்டுறியோ…?” என அவளைப் பார்த்து, கையை நீட்டி பேசியவாறு எழுந்து, அவளுக்கு அருகே செல்லவும், வாணி பயந்து போனாள். ஏற்கனவே அவன் கதைத்ததை கேட்டு, கலங்கி நின்றவள் அவனின் இந்த நடவடிக்கையால் அவன் மீது இருந்த கொஞ்ச நம்பிக்கையும் இல்லாமல் போய் விட்டது.

அவனுடைய திமிரான செயலைப் பார்த்ததும் அகிலனுக்கு சினம் ஏற்பட, தான் அமர்ந்திருந்த கதிரையை வேகமாக பின்னால் இழுத்தவாறு எழும்பவும், அவனுக்கருகில் அமர்ந்திருந்து அவற்றைப் அவதானித்துக் கொண்டிருந்த சௌமியும் பதற்றத்துடன் வேகமாக எழுந்து, அகிலனின் அருகில் சென்று, அவனின் வலது கை மணிக்கட்டைப் பற்றினாள். அவள் திடீரென்று அவளது இரு கரங்களாலும் அவனது கைகளை பற்றவும், அவளைத் திரும்பிப் பார்த்த அகிலனுக்கு, அவள் அமைதியாக இருக்குமாறு கண்களால் ஜாடை செய்தாள்.

அகிலனது கோபத்தைத் தவிர்ப்பதற்காகவே, அக்கணத்தில் ஏற்பட்ட உந்துதலால், அவனது கையைப் பிடித்தவள், அவன், அவளைப் பார்க்கவும் தனது கைகளை விலக்கிக் கொண்டாள்.

அவள், அவனது கையைப் பற்றியதும், அவன் மனதில் இதம் பரவ, அவளுக்கு ‘ஆம்’ என்பது போல் தலையசைத்துவிட்டு, கண்ணனை உற்றுப் பார்த்தவாறு “ஏன் இவ்வளவு கோபப்படுறீர்…? நான் என்ன உங்களை வெருட்டினனானா…? அவை தங்களுக்கு நியாயம் வேண்டித்தான் இஞ்ச வந்தவை…, நான் என்ன நடந்தது என்று தானே உம்மட்ட கேட்டனான்….” என்றான்.

“தம்பி கோபப்படாமல் இருந்து கதை” என அவனின் தாயாரும் “இப்ப ஏன் கோப்ப்படுறாய்…?” என தந்தையும் கூறினர்.

“நான் கேட்ட கேள்விக்கு மட்டும் நீர் பதில் சொல்லும்” என்றான் அகிலன் கடுப்புடன் .

“இந்த பிள்ளை சொல்லுறது உண்மையா…? உமக்கும் இவாவுக்கும் என்ன தொடர்பு…?” எனக் கேட்டான் அகிலன்.

“அவாவின்ர அப்பா எங்க கடையில வேலை செய்தவர்…” என மழுப்பினான் கண்ணன்.

“அவாவோட கதைச்சு இருக்கிறீரா…?”

“ம்…”

“எங்க…?, எப்ப…?” என விசாரித்தான் அகிலன்.

“எங்கட கடைக்கு வரேக்க… ”

“அவாவின் வயித்துல இருக்கிற புள்ள…?” என வினாவினான்.


“அதைப் பற்றி எனக்குத் தெரியாது…”

“நீராகவே உண்மையை ஒத்துக் கொண்டால், அடுத்தது என்ன செய்யலாம் என்று சொல்லுவன்… இல்லாட்டி கோர்ட்டுக்கு தான் போக வேண்டும்... ” என்றவாறு கதிரையில் மீண்டும் அமர்ந்து கொண்டவன் தொடர்ந்து, “ உமக்கு எதிராக கோர்ட்டில ‘சிறுமி மீது பாலியல் வல்லுறவு’ எண்டு வழக்குத் தாக்கல் செய்ய வேண்டி வரும்” என அவனை வெருட்டினான். அதைக் கேட்டதும் கண்ணன் கண்களில் மிரட்சியுடன் தனது பெற்றோரைப் பார்ப்பதை அகிலன் கண்டான்.

கண்ணனின் தாயாரும் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்க, அவனின் தந்தை “அப்பிடி நீங்கள் ஒண்டும் செய்ய ஏலாது .... உங்களிட்டை இவன் தான் இதுக்கு காரணம் எண்டதுக்கு ஏதும் சாட்சி இருக்கா?” என கேள்வி எழுப்பினார்.

“அதெல்லாம் நான் பார்த்துக் கொள்ளுவன்… எனக்கு என்ன செய்ய வேணும் என்று தெரியும்.... ” என்றான் உறுதியாக.

அதைக் கேட்டு கலக்கமடைந்த மூவரும் என்ன செய்வது என்று ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

கண்ணனுக்கு வாணி மீது விருப்பம் இருக்கிறது, அவன் அவளை ஏமாற்ற ஒருபோதும் நினைக்கவில்லை. ஒரே பிள்ளையான அவன் தனது பெற்றோரின் வார்த்தைகளையும் மீற முடியாமல் தவித்தான். அவனின் தாய் ‘என்ர பிணத்தை தாண்டித்தான் அவளுக்கு தாலி கட்டுவாய்’ என்றும் தந்தை ‘எங்களின் விருப்பத்துக்கு மாறாக நீ அவளைத் திருமணம் செய்தால், நாங்கள் எங்களின் சொத்துக்கள் அனைத்தையும் அனாதை ஆசிரமங்களுக்கு கொடுத்து விடுவோம்’ எனவும் அவனை மிரட்டி வைத்துள்ளனர். அவன் சுகமாக வாழ அவனுக்கு பெற்றவர்களின் பணமும் தேவைப்பட்டது, அவன் எப்படியாவது பெற்றோரை சம்மதிக்க வைத்து, அவளைத் திருமணம் செய்யலாம் என்று எண்ணியிருக்க, வாணி வீட்டினர் இப்படி சிக்கலில் இழுத்து விட்டது அவனுக்கு அவர்கள் மீது அளவில்லாத ஆத்திரத்தை கிளப்பி விட்டுள்ளது.
“நல்லா யோசிச்சு பதில் சொல்லுங்க…” என்றான் அகிலன்
அவர்கள் சிந்திப்பதற்காக அவகாசம் கொடுத்து விட்டு, அருகில் இருந்த சௌமியை திரும்பிப் பார்த்து, “என்ன… போரிங்கா இருக்கா?” என வினவினான்.

அவள், அவனது கைகளை பற்றியதில் இருந்தே உடல் முழுவதும் ஓர் விதமான உணர்வினால் சிக்குண்டிருந்த அதே நேரம், அவன் என்ன நினைப்பான் என்ற ஓர் தவிப்பும் இருந்து கொண்டிருந்தது. அவனை நிமிர்ந்து பாராமலே “இல்லை” என்றாள்.

“படிக்கிற வயதில காதலிக்கிறது… கலியாணத்துக்கு முதலே எல்லாத்துக்கும் அவசரப்படுறது… இவையளாள அவையிட பெற்றோருக்குத் தான் சங்கடம்...” என்றான் சலிப்புடன்.

இதுக்கு அவளுக்கு என்ன பதில் சொல்வது என்பது தெரியாததால், அமைதியாக இருந்தாள்.

கண்ணனையும் அவனுடைய பெற்றவர்களையும் பார்த்தவாறு சௌமியிடம் “இவ்வளவு நாளும் இதைப் பற்றி யோசனையே இல்லாமல் இருந்துட்டு இப்பத்தான் கடுமையா யோசிக்கினம்....” என்றான் நக்கலாக.

சௌமியும் நிமிர்ந்து அவர்களைப் பார்த்துவிட்டு “அவையள் என்ன செய்ய வேணும் எண்டு நீங்கள் எதிர்பார்க்கிறீங்க?” எனக் கேட்டாள்.

“அவன் அந்தப் பிள்ளையை கலியாணம் செய்ய வேணும்” என்றான் அவன்.

“அப்ப அந்தப் பிள்ளையின்ர படிப்பு....? அதை கைவிடுறதா....” என வினவினாள் அவள்.

“அந்தப் பிள்ளை விரும்பினால் படிக்கலாம் தானே…”

“வயித்துல புள்ளையோட ஸ்கூலுக்கு போறது கஷ்டம் தானே...”

“உடல் ரீதியாகவும் கஷ்டம் தான்… உள ரீதியாகவும் கஷ்டம் தான்… ஆனால் வேற வழி இல்லையே... “ என்றான் அவன்.

இவ்வாறு இவர்கள் இருவரும் கதைத்துக் கொண்டிருக்கும் போது, அங்கே கண்ணன் தனது பெற்றோரிடம் “கோர்ட்டுக்கு எல்லாம் என்னை போக விடப் போறீங்களா… பேசாமல் அவளை எனக்கு கட்டி வையுங்க...” என வாதாடிக் கொண்டிருந்தான்.

“இப்பவே இப்பிடி எல்லாம் எங்களை கோர்ட்டுக்கு இழுத்து கஷ்டப்படுத்த நினைக்குதுகள் கலியாணத்துக்கு பிறகு என்ன எல்லாம் செய்யுங்களோ தெரியேல்லயே...” என அவனின் தாய் புலம்பிக் கொண்டிருந்தார்.

கண்ணனின் தந்தை “நான் கேக்கிற சீதனம் தந்தால் கலியாணத்துக்கு சம்மதிக்கலாம் ” என ஏற்கனவே அவனுக்கு சொன்னதையே மீண்டும் சொன்னார்.

“அவையிட்ட இருந்தால் தருவினம் தானே...” என்றவன் தொடர்ந்து, “அப்ப.. நான் ஜெயிலுக்கு போறது தான் உங்கட விருப்பம் எண்டால் என்னவாவது செய்யுங்கோ...” என்றான் சலிப்புடன்.

கண்ணனின் தந்தை “அவை, அவையின்ர பிள்ளைக்கு சீதனம் கொடுப்பினம் எண்டால், நாங்கள் இந்த கலியாணத்துக்கு சம்மதிக்கிறம் ”என்றார் அகிலனிடம்.

அவ்வளவு நேரமும் அவர்கள் தங்களுக்கு சாதகமான ஓர் பதிலை சொல்லி விட வேண்டும் என கடவுளை தியானித்துக் கொண்டிருந்த வாணியின் தாயார் “சார்… எங்களிட்டை ஓரிரு நகைகள் தான் இருக்கு… காசா எதுவும் இல்லை.... நாங்கள் உழைக்கிறது எல்லாத்தையும் அவளின்ர படிப்புக்காக செலவளித்து விட்டோம். நாங்கள் அவள் நல்லா படிச்சு முன்னுக்கு வர வேணும் எண்டு தான் நினைச்சனாங்கள்… இப்ப கலியாணம் செய்யிற ஐடியாவிலேயே இருக்காததால கலியாணத்துக்கு எண்டு இன்னும் சேர்க்கத் தொடங்கேல்ல…, எங்களுக்கு இவள் ஒரே பிள்ளை தான் இனி நாங்கள் உழைக்கிறது எல்லாம் அவளுக்குத் தான்… நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உழைத்து அவைக்கு குடுக்கிறம்.. ” என்றார்.

இதுக்கு என்ன பதில் என்பது போல அகிலன் அவர்களைப் பார்த்தான்.

அவர்கள் தங்களின் மகனுக்கு என்ன வேண்டும் எனப் பட்டியலிட, அவற்றில் சிலதை ஏற்றும் சிலதை மறுத்தும் வாணியின் பெற்றோர் சம்மதிக்க, வெகு விரைவில் திருமணத்திற்கான நாளைக் குறிப்போம் என பேசினார்கள். அப்பிரதேசத்துக்கு அருகில் வசிக்கும் ஓர் சட்டத்தரணி நண்பனை அழைத்த அகிலன், அவ்விரு பகுதியினருக்கும் அச் சட்டத்தரணியை அறிமுகப்படுத்தி, ‘இவர் மேற்கொண்டு உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து தருவார்’ எனக் கூறி அந்த நண்பனுக்கும் அவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் கூறினான். அதன் பின்னர் கண்ணனும் அவனின் பெற்றவர்களும் சென்றுவிட, வாணியும் அவளின் பெற்றோ
ரும் அகிலனுக்கு தங்களின் நன்றியை மனப்பூர்வமாகவும் நிம்மதியுடனும் தெரிவித்து விட்டு சென்றனர்.
 
Top Bottom