• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

குழலில் காற்றாகினாள் - 12

STN - 29

Member
குழல் - 12

அமரனின் விழிகள் தன்னிச்சையாய் எதிர்வீட்டின் மங்கலான வெளிச்சத்தில் பதிந்து கொண்டன. அங்கு அழுத்தமான வெளிச்சப் புள்ளியாய் அவள். கண்களை உறுத்து சுருக்கி விரித்து ஆழ்ந்து அவளை பார்க்க முயற்சித்தான். எப்படியேனும் அந்த பிம்பம் கொஞ்சமேனும் புலப்பட்டு விடாதா என்னும் எண்ணம். இத்தனை பிரயாசைப்பட்டு எல்லாம் ஒரு விஷயத்திற்காக அவன் கண்களை கஷ்டப்படுத்தியதில்லை. கண்களுக்கு அதிக சிரமம் கொடுத்தால் வலியும் எரிச்சலும் ஏற்படும் என்பது அவனது அனுபவத்தில் கண்ட உண்மை. அதனால் இதுவரை அவற்றிற்காக பெரிதாக மெனக்கெட மாட்டான். ஆனால் இன்று முயற்சித்துப் பார்த்தான்.

வரைந்து வைத்ததுபோல் ஒரு பிம்பம்… அதைத் தாண்டி வேறு எதையும் அவனால் காட்சிக்குள் கொண்டு வர முடியவில்லை. ஆயாசமாக கண்களை மூடி அமர்ந்து கொண்டான். இதற்காகத்தானே ஆசைகளை மனதிற்குள் உருவாக்கிக் கொள்வதில்லை… ஏக்கமும் தவிப்பும் பிறந்துவிடுமே.

‘உன் பிரண்ட் எங்கே..?’ இங்கிருந்தே திலோவிடம் சைகையால் கேட்டான் இளங்கோ.

‘உள்ளே தூங்குறா..?’ என்று தலையை சாய்த்து கையை மடக்கி கன்னத்தில் வைத்து காட்டினாள் திலோ.

அவளைப் பார்க்க முடியவில்லை என்ற வருத்தம் இளங்கோவிற்கு.

பத்து நிமிடங்கள்தான்… அதற்குமேல் அமரனால் அங்கு அமர முடியவில்லை. அங்கு ஒருத்தி தன்னையே துளைப்பது தெரிந்து இதயத்திற்குள் ஏதேதோ கொந்தளிப்பு. தன்னால் அவளை பார்க்க முடியவில்லையே என்ற தவிப்பு. இனம் புரியாத உணர்வுப் போராட்டம்… ஒருவிதமான அவஸ்தையை உணர்ந்தான்.

“நான் போறேன்டா… நீ வேணா கொஞ்ச நேரம் கழிச்சு வா…” என்றவன் இளங்கோவின் பதிலையும் எதிர்பார்க்காமல் விறுவிறுவென கீழே இறங்கி இருந்தான்.

உடனடியாக திலோத்தமாவின் கைப்பேசிக்கு அழைத்திருந்தான் இளங்கோ.

“உன் தொடுப்பு தூங்கு மூஞ்சியா..? சீக்கிரமா போய் படுத்துடுச்சு…” வேண்டுமென்றே வாரினான் இளங்கோ.

“அண்ணா… இனிமே தொடுப்பு எடுப்புன்னு பேசுற வேலையை நிறுத்துங்க. எனக்கே நீங்க பேசுறது சுத்தமா பிடிக்கல. இது என்ன பேச்சு..?” சிடுசிடுத்தாள் திலோத்தமா.

“நேத்து என்னை எப்படி எல்லாம் சீண்டினா… நீ கவனிக்கலையா..?”

“அதுக்காக இஷ்டத்துக்கு பேர் வைப்பீங்களா..?”

“சரி தாயே… உன் தோழியை, நட்பின் இலக்கணத்தை நான் எதுவும் சொல்லல…காலையில எங்க வீட்டு வாசல்ல புதையல் எடுத்தாளே… எவ்வளவு எடுத்துட்டு போனான்னு தெரிஞ்சுக்கலாம்னுதான் கூப்பிட்டேன்…”

“பாவம்ணா... உருண்டு விழுந்து நல்லாவே அடிபட்டுருச்சு… முழங்கையில சிராய்ப்பு… இடுப்புலயும் அடி… அடிபட்ட இடம் நல்லாவே வீங்கிடுச்சு. இன்னைக்கு பூராம் வலிக்குதுன்னு சொல்லிட்டு இருந்தா…”

“ஹா..ஹாஸ்பிடல் கூட்டிட்டு போனியா..?” சங்கடத்தை மறைத்தபடி சாதாரணமாக கேட்டான்.

“அவ வேணாம்னு சொல்லிட்டா… வீக்கத்துக்கு போடுற களிம்பு இருந்தது… அதைத்தான் காலையிலேயும் இப்பவும் போட்டிருக்கா. ஹாஸ்பிடல் போற அளவுக்கெல்லாம் ஒன்னும் இல்ல… இன்னும் ரெண்டு நாள்ல சரியாகிடும். ஆனா நீங்க கைகொட்டி சிரிச்சீங்க பாருங்க… அவளுக்கு அதுதான் பெரிய வலி. நீங்க பண்ணினது பெரிய தப்பு… ஏண்ணா அப்படி பண்ணீங்க..?”

கோபத்தோடுதான் கேட்டாள் திலோத்தமா. இளங்கோவால் பதில் சொல்ல முடியவில்லை. அவன் செய்தது தவறு என்று காலையில் இருந்து மனது குத்திக் கொண்டுதானே இருக்கிறது.

‘தப்புதான்டா… எனக்கே சங்கடமாதான் இருக்கு… என்னை வெறுப்பேத்திட்டே இருந்தாளா… அவளையும் வெறுப்பேத்தணும்னு அப்படி பண்ணினேன்… ஆனாலும் தப்புதான்…”

“சரி விடுங்க…”

“அ..அழுதாளா.?”

“வலியில அழல… உங்க கிண்டலை நினைச்சுதான் அழுதா… அவ்ளோ சீக்கிரம் அழற ஆள் இல்ல அவ…உங்களால அழுதுட்டா தெரியுமா..?”

இதை கேட்டு இன்னும் கூடுதலாக கவலை கொண்டான் இளங்கோ. அவளை உடனே பார்க்க வேண்டும்போல் இருந்தது. ஆனால் பெண்கள் தனியாக இருக்கும் இடத்திற்கு இந்நேரத்திற்கு மேல் சென்று பார்த்து வருவது நாகரிகம் அல்ல என்பதால் அந்த எண்ணத்தை கைவிட்டான்.

“சரிடா அவ எழுந்ததுக்கு அப்புறம் நான் அவகிட்ட மன்னிப்பு கேட்டேன்னு சொல்லிடு…”

“ஏன் நீங்களே நேர்ல இதை சொல்லலாமே…”

“அவதான் தூங்கிட்டாளே…”

“காலையில சொல்லுங்க…”

“காலையில சீக்கிரமே நாங்க ரெண்டு பேரும் கிளம்பிடுவோ.ம் நாளைக்கு ஈவினிங் குக்கூ ப்ரோக்ராம் மெகா பெஸ்டிவல் இருக்கிறது உனக்கும் தெரியுமே…”

“ஆமாமா… ஏற்கனவே டிக்கெட் எல்லாம் புக் பண்ணிட்டேன்… கூடுமானவரை முன்னால உக்காந்துக்குற மாதிரி சீட் கன்பார்ம் பண்ணி வச்சிருக்கேன்…”

“நீ மட்டும்தான் வர்றியா..? இ..இல்ல உன் ஃபிரண்டும் வருவாங்களா..?” தயக்கத்தோடுதான் கேட்டான்.

“ஏன் அங்கேயே வச்சு மன்னிப்பு கேட்க போறீங்களா..?”

“நான் ஸ்டேஜ்ல ரொம்ப பிசியா இருப்பேன்டா… ஆனா நேர்ல பார்க்கும்போது கண்டிப்பா மன்னிப்பு கேட்பேன்…”

“சந்தோஷம்… அவ வர்றாளா என்னன்னு தெரியல… இடுப்பு வலி இருந்தா வர யோசிப்பான்னு நினைக்கிறேன்…”

“எப்படியாவது கூட்டிட்டு வந்துடேன்..?”

“ஏன்ன்ன்..?”

ஒரு மார்க்கமாக இழுத்து தலையை சாய்த்து இங்கிருந்தே அவனை பார்த்தாள் திலோ.

“வாய்ப்பு கிடைச்சா சின்ன கேப்ல ஒ..ஒரு மன்னிப்பு மனுவை போட்டு வச்சுடலாம்னுதான்…”

“மனு மன்னிப்புக்கு மட்டும்தானே..?”

அவள் நக்கலாக கேட்க அவனையும் மீறிய குறுகுறுப்பு அவன் முகத்தில்.

“வாலு… போய் படு… எனக்கும் டைம் ஆச்சு… நாளைக்கு நிறைய வேலை இருக்கு…”

சமாளிப்பாய் அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து இங்கிருந்தே அவளுக்கு கைகாட்டி விளக்கை அணைத்து கீழே இறங்கிச் சென்றிருந்தான் இளங்கோ.

மறுநாள் தோழிகள் இருவரும் கிளம்புவதற்கு முன்பே நண்பர்கள் இருவரும் கிளம்பிச் சென்றிருந்தனர் என்பதை போர்டிகோவில் கார் இல்லாததை வைத்து கண்டுகொண்டாள் திலோத்தமா.

முந்தைய நாள் இரவு இளங்கோ அவளிடம் பேசியவற்றை ரஞ்சனியிடமும் கூறினாள்.

“அந்த ஆளு மன்னிப்பை கொண்டு போய் அவங்க வீட்டு ஜலதாரையில கொட்டு..”

கடுகடுவென சொன்ன ரஞ்சனிக்கு முதல்நாள் அவன் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்த காட்சிதான் கண்முன் விரிந்தது. இப்பொழுது நினைத்தாலும் மனம் ஆறவே மறுக்கிறது.

அன்று அரை நாள் மட்டும் வேலைக்குச் சென்று விடுப்பு எடுத்துக் கொண்டு மாட்டவே மாட்டேன் என்று அடம்பிடித்த ரஞ்சனியையும் கெஞ்சி கொஞ்சி மிரட்டி கண்களில் கண்ணீரை காட்டி என்று ஏதேதோ செய்து குக்கூ நிகழ்ச்சிக்கு இழுத்துச் சென்றிருந்தாள் திலோத்தமா.

இடம் பிடிப்பதற்கென்றே சற்று முன்கூட்டியே வந்திருந்தாள். சொன்னது போன்றே மேடைக்கு அருகில் அமர்வது போல் இடம் தேர்ந்தெடுத்து ரஞ்சனியோடு அமர்ந்து கொண்டாள்.

“கூட்டமே இப்போதான் கொஞ்சம் கொஞ்சமா வர ஆரம்பிச்சிருக்கு… அவதி புடிச்ச பேய் மாதிரி இவ்வளவு சீக்கிரம் இழுத்துட்டு வந்துட்ட. ப்ரோக்ராம் ஆரம்பிக்கிறதுக்கு எப்படியும் இன்னும் ஒரு மணி நேரத்துக்குமேல இருக்கு. ஏன்டி என்னையும் போட்டு இப்படி படுத்துற..?”

எரிச்சலோடு கடுகடுத்தாள் ரஞ்சனி. அது எதையும் திலோத்தமா கண்டுகொள்ளவே இல்லை. மேடையில் எப்பொழுது தன் நாயகன் முளைப்பான் என்றுதான் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தாள். அங்கும் இங்கும் வேடிக்கை பார்த்து ஏதேதோ பேசி நேரமும் இருட்டத் தொடங்கி இருக்க நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் மேடையிலும் ஆரம்பமாகி இருந்தன.

இசைக்குழுவை சேர்ந்த அனைவரும் மேடைக்கு வந்திருந்தனர். அனைவருக்குமே கருப்பும் இள வைலட் நிறமும் கலந்தது போல் ஜிகுஜிகுவென ஜொலிக்கும் ஒரே போன்ற உடை. கூலர்ஸ் அணிந்து அடர்ந்த சிகை காற்றில் அசைய அனைவருடன் இணைந்து கம்பீரமாய் மேடை ஏறி வந்து தனது இடத்தில் அமர்ந்த அமரனையே இதழ்கொள்ளா சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் திலோத்தமா. ரஞ்சனியின் விழிகளும் ஆச்சரியமாக அவனைத்தான் நோக்கின.

“இவருக்கு பார்வை குறைபாடு இருக்குன்னு சொன்னா யாராச்சும் நம்புவாங்களாடி… நிஜமாவே உண்மையைத்தான் சொன்னாங்களா..? இல்லை உன்னை ஓட ஓட விரட்டணும்னு அந்த சொம்பு தூக்கி பொய் சொன்னானா..?”

இளங்கோவின் மேல் அவளுக்கு இருக்கும் கோபத்தை வார்த்தைகளிலேயே வெளியிட்டு இருந்தாள் ரஞ்சனி.

“ஏய்… அப்படியெல்லாம் பொய் எதுவும் இல்ல… எல்லாம் உண்மைதான்… நானே அவரோட கண்ணை பார்த்தேன்டி… தனக்கே தனக்கான நிறத்தை இழந்து வெள்ளைப் படலம் பூசிப் போய் கிடக்கு…” சொல்லும்போதே அவளது குரல் தழுதழுத்தது.

“ஆனாலும் என் அமருக்கு அதுவும் அழகுதான்... எந்த கோலத்தில பார்த்தாலும் என் அமர் அழகுதான்…” என்றவளை திரும்பிப் பார்த்தாள் ரஞ்சனி.

இங்கிருந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்த திலோத்தமாவின் கண்களில் தெரிந்த அந்த காதலும் நிறம் மாறாத நேசமும் தெளிவாக தெரிந்தது. அவள் கையை ஆதரவாக பற்றி மெல்ல வருடினாள்.

“இப்படி ஒரு காதல் கிடைக்க அந்த ஆள் கொடுத்து வச்சிருக்கணும்… ஆனா புரிஞ்சிக்கிற மாதிரி தெரியலையே… ரொம்ப பண்றான்டி…”

“இப்போதானடி விஷயமே அவர் காதுக்கு விழுந்து இருக்கு. இன்னும் என்னை நான் அவர்கிட்ட ப்ரூவ் பண்ண ஆரம்பிக்கவே இல்லையே. நான் சொன்ன உடனே சட்டுனு புரிஞ்சுக்கிட்டு ஓகேன்னு தலையாட்டுற சூழ்நிலையில அவர் இல்ல. நிறைய வலிகளை கடந்து வந்தவர்… புரிஞ்சுப்பார்… ரொம்ப நாள் எல்லாம் ஆகாது… சீக்கிரமே…”

நம்பிக்கையாக சொன்னவளை பார்த்து சிரித்துக் கொண்டாள் ரஞ்சனி. எழுந்து நின்று கையை அசைத்து தங்களது இருப்பை இளங்கோவிடம் காட்டி இருந்தாள் திலோத்தமா. அவனும் மேடை ஏறி அமர்ந்தவுடன் அவர்களைத்தான் விழிகளால் தேடிக் கொண்டிருந்தான். அவர்களை என்று சொல்வதைவிட ரஞ்சனியை தேடினான் என்பதுதான் உண்மை. திலோவின் கையசைப்பை கண்டு கொண்டு தானும் மெல்ல கைசைத்து இதழ் பிரித்து சிரித்துக் கொண்டவன் அருகில் ரஞ்சனி அமர்ந்திருப்பதை கண்டு இன்னும் அகலமாய் புன்னகைத்தான்.

நல்லா பண்ணுங்க என்பதுபோல் இரண்டு பெருவிரல்களையும் தூக்கி காட்டி இவள் கூற அவனும் தலையசைப்புடன் டன் என்று தனது பெருவிரலை காட்டினான்.

“உன் ஆளு வந்தாச்சுடா… ப்ரோக்ராம் பாக்குறதுக்காக இல்ல… உன்ன பாக்கறதுக்காக…”

தன் அருகில் அமர்ந்திருந்த அமரனிடம் சிரிப்புடன் கூற முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் புல்லாங்குழலின் துளைகளை விரல்களாய் தட்டியபடி அமர்ந்து கொண்டான் அமரன். ஆனால் இதயத்தில் புதுவிதமான ஒரு தாக்கம். தகதகவென அந்த இடமே விளக்குகளால் மின்னி திளைத்துக் கொண்டிருந்ததால் வழக்கத்தைவிட அதிகமான வெளிச்சத்திற்குள் இருப்பதை உணர முடிந்தது.

மக்களின் ஹோவென்ற இடைவிடாத இரைச்சல், மகிழ்ச்சி, ஆரவாரம், கைதட்டல் என்று இதற்கு முன் அவன் பார்த்ததுதான். ஆனால் இன்று தன்னை மட்டும் இரு கண்கள் குறுகுறுவென நிகழ்ச்சி நடக்கப் போகும் இந்த ஆறு மணி நேரமும் அலுப்பு சலிப்பே இல்லாமல் பார்த்துக் கொண்டே இருக்கும் என்பதை உணரும்போது உள்ளுக்குள் பூ பூப்பதை தடுக்கவே முடியவில்லை.

நிகழ்ச்சி ஆரம்பமாகி வெகு சுவாரஸ்யமாக நடந்து கொண்டே இருந்தது. இறுதிச்சுற்றுக்கு தேர்வான போட்டியாளர்கள் நீயா நானா என்பதுபோல் தங்கள் குரலாலும் வசீகரத்தாலும் பாடல் தேர்வாலும் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி அலை ஓசை போன்ற மக்களின் ஆரவாரத்தையும் கைதட்டல்களையும் பரிசுகளாக பெற்றுக் கொண்டே இருந்தனர். இடையிடையே வேறு சில நிகழ்ச்சிகளும் நடந்தன. அதில் ஒன்றாக அமரனும் இளங்கோவும் மட்டும் தனியே பங்கு பெற்ற ஓர் இசை நிகழ்ச்சி.

பழைய பாடல்கள் தொடங்கி இன்றைய பாடல்கள்வரை சங்கிலித்தொடர் போல் ஒன்றோடு ஒன்று இணைத்த அழகான ஒரு இசை கோர்வை. வார்த்தைகள் இன்றி தங்களது இசைகளை வார்த்தைகளாக்கி புதிய மொழி பேசிய இசைச் சாமரம். நண்பர்கள் இருவரும் மொத்த கூட்டத்தையும் தங்களது இசையால் கட்டி வைத்தனர். ஆடாது அதிராது அசையாது அந்த இசை சங்கமத்தில் முழுக்க லயித்திருந்தது மொத்தக் கூட்டமும்.

மொத்தமாய் லயித்து ஆச்சரியத்து கண்கள் விரித்து அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள் ரஞ்சனி. திலோத்தமாவோ தன்னவனின் திறமையிலும் மொத்த கூட்டத்தையும் வசப்படுத்திய அந்த புல்லாங்குழல் இசையிலும் அந்த வடிவிலும் அதில் தெரிந்த உயிரிலும் மொத்தமாய் தன்னிலை இழந்து கண்களில் கண்ணீரும் இதழ்களில் சிரிப்புமாய் நெஞ்சம் நெகிழ அமர்ந்திருந்தாள்.

(தொடரும்)
 
Top Bottom