• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செம்புலப் பெயல் நீர் - 5

Vishakini

Moderator
Staff member

செம்புலம் 5



மேதினூர்:

பெற்றோர்கள் ஆசீர்வாதத்தோடு ராஜவேலு - பானுமதி தம்பதியருக்கு நல்ல முறையில் திருமணம் நடந்து முடிந்தது.

ஊர் வழக்கப்படி விருந்து முடிந்ததும், பானுமதியின் பெற்றோர்களோ சீர்வரிசைப் பொருட்களோடு தனது மகளைப் புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். என்னதான் வசதியான வீட்டில் பிறந்திருந்தாலும், அந்த வீட்டிற்கு மருமகள் தான் என்பதை நினைவில் வைத்துக்கொண்ட பானுமதி, மாமனார் - மாமியாரை மனங்கோணாமல் பார்த்துக்கொண்டார்.

ராஜவேலுவுடன் கூடப் பிறந்த தங்கை நந்தினியோ, அந்த வருடம் தான் மதுரையிலிருக்கும் மெடிக்கல் காலேஜில் சேர்ந்திருந்தாள்.

தம்பதிகளின் அன்புக்குப் பரிசாக மறாவது வருடத்தில் தலைச்சன் பிள்ளையாக ஆண் குழந்தை பிறக்க, அவனுக்குத் தங்களது குலதெய்வம் முருகனின் நினைவாகச் 'சேயோன்' என்று பெயர் சூட்டினர். பிள்ளை பிறந்த நேரமோ என்னவோ... தொட்டதெல்லாம் பொன்னாக மாறவும் ராஜவேலுவின் பரம்பரைச் சொத்தோடு, புதிதாக மேலும் அசையாச் சொத்துக்களும் சேர்ந்தன.

சேயோனுக்குப் பிறகு அடுத்த வாரிசு பிறக்கவில்லை. ஒற்றை மகன் என்றாலும் பாசத்தோடும் கண்டிப்போடும் சேர்த்தே வளர்த்தனர்.

நந்தினியும் தனது மருத்துவ படிப்பை முடித்து விட்டு வரவும் மகளுக்கு வரன் பார்க்கும்போது தெரிந்தவர்கள் மூலமாக வந்த சம்பந்தம் கூடி வரவும் நல்ல நாளில் மகளுக்கு திருமணத்தை முடித்து புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

நந்தினிக்கு இரண்டும் ஆண் குழந்தையாகவே பிறந்தது. மகன்களுக்கு ருத்ரன்- மித்ரன் என்று பெயர் சூட்டினர்.

வருடங்களும் வேகமாக ஓடின.

நந்தினியை போலவே அவளது மகன்கள் இருவரும் மருத்துவத்தையே படிக்க விரும்பவும் அவர்களின் ஆசையைப்போல வெளிநாட்டிற்கு படிக்க அனுப்பி வைத்தனர்.

சேயோனும் தனது கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவன், தந்தையின் சொத்தை நிர்வாகம் பண்ணாமல் தனக்கென்று ஓர் அடையாளம் வேண்டும் என்பதற்காகக் 'கன்ஸ்ட்ரக்ஷன் பிசினஸ்' ஆரம்பிக்கப் போவதாகப் பெற்றோர்களிடம் சொல்லிவிட்டான்.

"என்ன செய்ய? ஒற்றை மகன், அவனது விருப்பம் தானே முதன்மையானது!" என்று அவர்களும் மறு பேச்சின்றி சரியென்றனர்.

பின்னர் டவுனுக்குள் ஓர் இடத்தை வாடகைக்கு வாங்கியவன், நல்ல நாளில் தனது ஆபிஸைத் திறந்தான். அவனோடு பள்ளியில் படித்த இரண்டு நெருங்கிய நண்பர்களும் இதில் இணைந்து கொள்ள, முதல் இரண்டு வருடங்களுக்குப் பெரிதாக எந்த வேலையும் அவர்களுக்கு வரவில்லை. சின்னச் சின்னதாகக் கிடைத்த வேலையைச் சிறப்பாகச் செய்து கொடுக்கும்போது, அந்த வருடத்திற்கான டெண்டர் ஒன்றை அரசாங்கம் வெளியிட்டிருப்பது தெரிந்தது.

"என்னடா பண்ணலாம்?" என்று நண்பர்களிடம் சேயோன் கேட்க, அவர்களோ "உன் முடிவே எங்களுடையது!" என்றனர்.

புகழ்பெற்ற எத்தனையோ கம்பெனிகள் அதில் கலந்துகொள்ளும்போது, கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் சேயோனின் கம்பெனியும் அதில் கலந்துகொள்ள, சில உறவுகளோ அதை வைத்து மறைமுகமாக எள்ளி நகையாடினார்கள்.

"எறும்பு போல இருக்கும் நீ, யானைகளோடு எதுக்கு மோதுற?" என்று சிலர் நேரடியாகவே கிண்டலடிக்க, அதையெல்லாம் சிறிதும் காதில் வாங்காதவனின் கவனமோ, டெண்டருக்கான 'கொட்டேஷன்' ரெடி பண்ணுவதில் மட்டுமே குறியாக இருந்தது.

இரவு பகலாகத் தனது நேரத்தைச் செலவழித்து ஒரு வழியாகக் கொட்டேஷனை ரெடி பண்ணிவிட்டு சேயேன் அன்று படுக்க நள்ளிரவானது.

பரம்பரைச் சொத்தில் உட்கார்ந்து தின்னாமல் தனக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்க ஓடிக்கொண்டிருக்கும் மகனைப் பார்க்கப் பெற்றோர்களுக்கும் பெருமையாகத் தான் இருந்தது.

வழக்கம்போல் தூங்கி எழுந்தவனோ, குளித்துத் தயாராகி கீழே வந்தவன் "அம்மா!" என கூப்பிட, "இதோ கண்ணா!" என்றவாறு அங்கு வந்தார் பானுமதி.

"இதைச் சாமி கிட்ட வச்சு எடுத்துட்டு வாங்கம்மா!" என மகன் நீட்டிய கவரை வாங்கிச் சாமிக்கு முன்பு வைத்தவர், "அப்பா பழனி முருகா! உன்னுடைய சித்தம் போல ஆகட்டும்," என்றவாறு அதை எடுத்து வந்து மகனிடம் கொடுத்தார்.

"ஏங்க, பரீட்சை பத்து மணிக்குத் தான் ஆரம்பிக்கும். வந்து சாப்பிட்டுட்டுப் போங்க," என்று சொல்லிக்கொண்டே மகனுக்குக் காலை உணவைப் பரிமாறினார்.

பேப்பர் படித்துக்கொண்டிருந்த ராஜவேலுவோ, மனைவி சொன்னதைக் கேட்டு அங்கிருந்த டீபாயின் மேல் பேப்பரை மடித்து வைத்துவிட்டு எழுந்து வந்தவர், "ஒரு மனுஷன் பேப்பர் படிப்பது குற்றமா?" என்றவாறு உட்கார்ந்தார்.

"படிக்கிறது குத்தமில்லைங்க. காலையிலிருந்து அந்தப் பேப்பரில் எத்தனை முறை எழுத்துக் கூட்டிப் படித்தாலும் இருப்பது தானே இருக்கப்போகிறது?" என பானுமதி கூற, "ஆமாம் டி யம்மா, இனி நான் படிக்கலை போதுமா?" என்றவரோ வேகமாகச் சாப்பிட்டு எழுந்து சென்றார்.

"தினமும் நடக்கிற கூத்து தான், இருந்தாலும் ஏம்மா இப்படி?" என்று சேயோன் கேட்க, "பின்னர் என்ன கண்ணு? எஸ்டேட்டில் இன்னைக்குச் சம்பளம் போடணும். காலையிலேயே போய் பணத்தை எடுத்துட்டு வாங்கன்னு நேற்றே சொன்னேன், இன்னும் உங்க அப்பா பேங்கிற்குப் போன பாடில்லை," என்றார் பானுமதி.

"சரி சரி, நான் வேண்டுமானால் எடுத்து வரட்டுமா?" என்று சேயோன் கேட்கும்போது, "பானு, நான் பேங்கிற்குப் போயிட்டு வந்துடுறேன்," என்றவாறு சூட்கேஸோடு ராஜவேலு கிளம்பினார்.

சாப்பிட்டு எழுந்த மகனுக்குச் சூடான காபியை நீட்டிய பானுமதியிடம், "ஏம்மா, எனக்கும் அப்பாவிற்கும் எது எப்போது வேண்டுமென்று பார்த்துப் பார்த்துச் செய்யுற, ஆனால் உன்னைப் பற்றி நீ ஏன் மா கேர் பண்ண மாட்டேங்குற?" என்றான் சேயோன்.

சேயோனின் கேள்வியில் மௌனமாகச் சிரித்தவர், "சின்னத் துரும்பு படாமல் உங்கப்பாவும் நீயும் என்னைத் தாங்கும்போது, என்னைப் பற்றி நினைக்க என்னப்பா இருக்கிறது? உனக்கொரு கல்யாணம் பண்ணி குடும்பமாகப் பார்த்துவிட்டால் போதும்," என்றார்.

"ஓஹோ! உன் பேச்சைப் பார்த்தால் பொண்ணை ரெடியா வச்சுக்கிட்டுப் பேசுற போல இருக்கேமா?" என்று சிரித்துக்கொண்டே காபியைக் குடித்து முடித்தவன், "இந்த டெண்டர் முடிவுதான் உன் ஆசையைத் தீர்மானிக்கப் போகும் துருப்புச் சீட்டு," என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.

பின்னர் கொட்டேஷன் இருக்கும் கவரைத் தானே நேரில் போய்ப் போஸ்ட் ஆபிஸில் அனுப்பிவிட்டுத் தனது ஆபிஸிற்கு வந்தான்.

தேனூர்:

"காசி... காசி..." என்றவாறு உள்ளே வரும் தனது சித்தப்பாவைப் பார்த்த சகுந்தலா, "வாங்கப்பா, மாமா தோட்டத்தில் தான் இருக்காங்க," என்றாள்.

"சரித்தா, நல்ல விஷயம் ஒன்று சொல்லிட்டுப் போக வந்தேன்," என்று அவர் சொல்லும்போதே உள்ளே வந்த காசியோ, அங்கிருந்தவரைப் பார்த்தவன், "வாங்க மாமா, என்ன அதிசயமாக மகள் வீட்டுப் பக்கம் காத்து அடிக்குது?" என்றான்.

"அது வந்துங்க மருமகனே... என்னதான் உள்ளூரில் பொண்ணு கொடுத்தாலும், நித்தம் போனால் முற்றம் சலித்திடும் இல்லைங்களா? வாத்தியார் உங்களுக்குத் தெரியாததா?" என்றவரிடம் சகுந்தலாவும் மோர் சொம்பை நீட்டினாள்.

அதை வாங்கித் குடித்தவர், "நம்ப பழனி, வெள்ளிக்கிழமைக்குப் பொண்ணு கேட்டு வரோம்னு சொல்லுறான் மாப்பிள்ளை. பொண்ணை பெத்தவங்க நீங்கள் என்ன சொல்றீங்க? என் பேரனைப் பற்றிச் சொல்லணும்னு அவசியம் இல்லை, இருந்தாலும் சொல்றேன். என் அண்ணன் குணத்தை அப்படியே உறிச்சுட்டு வந்திருக்கான். அண்ணன் மவளைக் கட்டி வைக்கணும்னு மரகதமும் ஆசைப்படுது. இனி நீ தான் பதில் சொல்லணும்," என்றார்.

இதை எதிர்பார்க்காத காசிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவரது உடன் பிறந்த தங்கை மரகதத்தை ஊரில் பெரிய மிராசுதாரர் குடும்பமான பழனிச்சாமிக்குப் பெண் கேட்டு வந்திருந்தனர் அன்று. சொத்து பத்தில் சமம் இல்லையென்றாலும், "உங்கள் பொண்ணு தான் என் வீட்டிற்கு மருமகளாக வேண்டும்," என்று அவர்கள் கேட்க, காசியின் அப்பாவோ தனது நிலத்தை அடகு வைத்துச் சீர்வரிசையோடு மகளை அனுப்பி வைத்தார்.

காசிக்கும் அரசாங்கப் பள்ளியில் வாத்தியார் வேலை கிடைக்க, இருவரும் கடுமையாக உழைத்து நிலத்தை மீட்டதோடு மேலும் கொஞ்சம் நிலத்தையும் வாங்கினர். அவர்கள் நேரம் நன்றாக இருக்க, தொட்டதெல்லாம் பொன்னாகியது. என்னதான் உள்ளூரில் மகள் வாக்கப்பட்டிருந்தாலும், பண்டிகை காலங்களில் மட்டுமே சீர்வரிசை செய்ய மரகதத்தின் வீட்டிற்குப் போவார்கள்.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு மரகதத்திற்குத் தலைச்சன் பிள்ளையாக மகன் பிறந்தான். அவனுக்கு 'மணி' என்று பெயர் வைத்தார்கள். வாரிசு வந்துவிட்ட சந்தோஷத்தில் இரண்டு குடும்பங்களும் திளைத்தன.

தூரத்து உறவிலிருந்து தனது மகன் காசிக்கு சகுந்தலாவை பெண் பார்க்க, அவர்கள் திருமணமும் நல்ல முறையில் முடிந்தது. அவர்களுக்குச் சுந்தர் என்ற மகனும், வள்ளி என்ற மகளும் பிறந்தனர். "வாத்தியார் பிள்ளை மக்கு" என்ற பழமொழிக்கேற்ப, சுந்தருக்குப் படிப்பை விட விவசாயத்தில் ஆர்வம் அதிகம். வள்ளியும் எட்டாவது வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு அண்ணனோடு வயலில் இறங்கி வேலை பார்க்க ஆரம்பித்தாள். இப்போது இருவருக்கும் திருமண வயது வந்துவிட்டது.

"என்ன காசி, நான் பேசிட்டு இருக்கேன் நீ ஒன்னும் பதில் சொல்ல மாட்டேங்குற?" என்று பெரியவர் கேட்கவும் தனது நினைவிலிருந்து கலைந்த காசி, "ஒன்னுமில்லை மாமா, திடீர்னு சொன்னதால என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை. மரகதம் குடும்பத்தைப் பற்றி உங்களுக்கு நல்லா தெரியும். என் சக்திக்கு முடிந்த சீர்வரிசையைச் சிறப்பாகச் செய்து மருமகளாக என் பொண்ணை அனுப்புறேன் மாமா. இதை மறக்காம உங்க அண்ணன் வீட்டில் சொல்லிடுங்க," என்றான்.

"ஏன்யா சீர்வரிசையா முக்கியம்? என் குடும்பத்துக்கு உன் பொண்ணு மருமகளாக வரணும்னு தான் ஆசைப்படுறோம். என் அண்ணன் உயிரோடு இருந்தா இதத்தானே கேட்டிருப்பார்!" என்றார் பெரியவர்.

செம்புலம் தொடரும்...

 
Top Bottom