அத்தியாயம் 4
அடிக்கடி மகனை பார்த்து அழுகும் அக்காவை சமாதானம் பண்ண வழி இல்லாமல் தையல் பயிற்சி சேர்த்துவிட்டு, கூடவே ஒரு தையல் மெஷினும் வாங்கி தர சோர்ந்து போகும் அவள் மனதை இதில் தேற்றி கொண்டாள் யசோதா..
நித்திக் சரண் பாதி நேரம் சந்திரமோகன் தோளிலேயே தொங்குவான் அதை பார்க்கும் பொழுதெல்லாம் யசோதாவிற்கு விக்கி கொண்டு வரும்.. ஒரு தந்தையின் அரவணைப்பை தன் மகன் தேடுகிறான் என்ற விஷயம் புரியாமல் இல்லை ஆனால் உண்மையான தந்தைக்கு தாங்கள் இருவரும் இருக்கிறோமா செத்தோமா என்று பார்க்க கூட நேரமில்லையே..
சந்திரமோகன், லாவண்யா இருவரும் வேலைக்கு சென்று விடுவதால் எந்நேரமும் சாருலதா 'அத்தை மடி மெத்தையடி' என்று யசோதா கூடவே சுற்றுவாள்..
நித்திக் சரண் வளர வளர ஒரு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது யசோதாவிற்கு.. ஆம் என்னதான் குணத்தால் தன் தாய் மாமனையும் அன்னையையும் ஒத்திருந்தாலும் பார்க்க அச்சு அசலாக அவனின் தந்தை போலவே இருந்தான்.. அதனாலேயே யசோதா அவனை ரொம்பவே கண்டிக்க ஆரம்பித்தாள்..
என்னதான் நிதிக் தன் வளர்ப்பு என்றெல்லாம் தோன்றினாலும் அவரின் ரத்தம் அல்லவா?? அவரின் போலி குணம் தன் மகனுக்கு வரவிடாமல் அவனை குறுகுறுப்பாக கவனிப்பாள்.. இதில் இன்னும் கொடுமை என்னவென்றால் அவனை ஆண்கள் பள்ளிக்கூடத்தில் சேர்த்து படிக்க வைத்தாள்.. ஏன் ஒரு நட்பு வட்டம் கூட பெரிதாக வளர்த்துக் கொள்ள முடியாத அளவிற்கு அவனின் குழந்தை பருவத்திலேயே கண்டிப்பு, திட்டு, அடி என்றுயிருக்க அவன் ஆமையாக தன் கூட்டிற்குள் மறைந்து கொள்வான்..
"மாமா!! சைக்கிள் கத்துக்குடு.." இளம் மொட்டாக பள்ளி சிறுமியாக நித்திக் கையை பிடித்து இழுத்தாள் சாரு..
"பாப்பா!! எத்தனை முறை உன் கிட்ட சொல்லிருக்கேன்.. அவன் உனக்கு அண்ணன்.."
என்ற யசோதா, தானே அவளுக்கு சைக்கிள் ஓட்ட சொல்லி தர உதட்டை பிதுக்கி தந்தையிடம் முறையிட்டாள்..
"அட ஏன் க்கா நீ! முறையை மாத்தி சொல்லிக்கிட்டு இருக்க?? அதுங்க ரெண்டும் பழகுனா தான் பழகிட்டு போகட்டுமே.. உன் புருஷன் மாதிரி என் மாப்பிள்ள இருக்க மாட்டான்!!" நித்திக் தோளில் கைப்போட்டு பெருமையாக கூறினான் சந்திரமோகன்..
"நாங்க இந்த வீட்ல இருக்கணும்மா?? வேண்டாமா சந்திரா??"
"ப்ச் சாரும்மா!! அத்த உன் நல்லதுக்கு தான்டா சொல்லுவாங்க.."
பின்னே அக்கா எங்கேயோ போய் கஷ்டப்படுவதை பார்க்கவா முடியும்.. அதை விட தன் மாப்பிள்ளை அவனின் உயிர் அல்லவா!!
இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் நாள்.. அந்த பள்ளியில் பத்தாம் வகுப்பில் மட்டும் மொத்தம் இருநூறு மாணவர்கள் அனைவரும் ஆவலாக அங்கே கூடியிருக்க,
"டேய்ய்!! நம்ம ஸ்கூல் ஃபிரஸ்ட் யாரு தெரியுமா டா??"
ஒரு மாணவன் சோகமே உருவாக இன்னொருவனிடம் கேட்க,
"தெரியும்!! அந்த ஒன்ற கால் தானே?!"
"ஹ்ம்ம் டா!! ஒருவேளை ஒன்ற கால் இருந்தா தான் படிப்பு நல்லா வருமோ இது தெரியாம எங்க வீட்ல என்ன ரெண்டு காலோட பெத்துட்டாங்களேடா எங்க அம்மா.."
என்று அழுவது போல பாசங்கு செய்து சிரித்தத்துக்கள் முட்டாள் கூட்டம் தான் வாங்கிய மதிப்பெண்ணுக்கு கவலை கொள்ளாமல்.. இதைக் கேட்டுக் கொண்டு அவர்களை கடந்து வந்தவனுக்கோ எந்த உணர்வுகளுமே இல்லை.. சிறுவயதிலிருந்து இதுபோல நிறைய கேலி, கிண்டல்கள் என்று கேட்டு கேட்டு அவனுக்கு மரத்துப் போய்விட்டது.. அவனின் எண்ணமெல்லாம் படிப்பு மட்டும்தான்..
தனக்கு இவ்வளவு கஷ்டத்தை கொடுத்த தந்தையை கூட அவன் வெறுத்ததும் இல்லை நினைத்ததும் இல்லை.. தன் அன்னை, தன்னுடைய மாமன் மகளுடன் பேசவிடாமல் தடுக்கும் பொழுதெல்லாம் தான் தன் தந்தை மேல் கோபம் வரும் அதுவும் அடுத்த நிமிடமே காணாமல் போகும்.. அதற்குக் காரணம் பெரிதாக பாசம் எல்லாம் இல்லை யாரையும் கண்டுகொள்ளும் மன நிலையில் அவன் இல்லை..
"டேய்ய் மாப்பிள்ள கலக்கிட்ட டா.. ரொம்ப பெருமையா இருக்கு.."
பள்ளியிலிருந்து வந்த நித்திகை தலைக்கு மேல் தூக்கி தட்டாமாலை சுற்றிக் கொண்டிருக்கிறான் சந்திரமோகன்.. பின்னே அவன் தானே தாயாக தந்தையாக தன் மாப்பிள்ளையை படிக்க வைப்பது ஏன் அவனோடு பள்ளிக்கு செல்வது கூட இவன் தானே..
அடுத்து என்ன படிக்கிறாய் என்று கேட்டதற்கு, "உங்க இஷ்டம் மாமா எனக்கு எதுவும் தோணல" என்று சொல்லும் மாப்பிள்ளையின் குணம் வேதனை அளித்தாலும், இரா பகலாக தெரிந்த அத்தனை பேரிடமும் அடுத்து என்ன படிக்க வைக்கலாம் என்று இந்த காலத்திற்கு ஏற்ப கேட்டு தெரிந்து அதில் ஒன்றை படிக்க வைத்தார் சந்திரமோகன்..
எப்பொழுதும் வெற்றியை பெற்றுக் கொண்டிருந்தால் சில சமயம் வெற்றியை கூட கொண்டாடும் படியாக இல்லாமல் வழக்கமான ஒன்றாக ஆகிவிடும்.. அப்படித்தான் நித்திகிற்கும் பன்னிரெண்டாவதிலும் அதேபோல் பள்ளியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்று விட்டான்.. பெரிதாக கொண்டாடலாம் தோன்றவில்லை அதே போல மாமன் சொன்ன படிப்பில் தான் கல்லூரியும் ஆரம்பமானது..
கல்லூரி சேர்ந்து விட்டான் அதுவும் தவிர்க்க முடியாத காரணத்தினால் இருப்பாளரும் இருக்கும் கல்லூரியில் சேர்த்து விட்டார். "இன்னும் எத்தனை நாளுக்கு மூடி மூடி வைப்ப, தண்ணிக்குள்ள எந்த அளவுக்கு பலூன அழுத்துறியோ அது அந்த அளவுக்கு உன் கைய மீறிட்டு வெளியில தான் வர பாக்கும் அதனால அவன் மேல நம்பிக்கை வச்சு ஃப்ரீயா விடுக்கா அவன் என் மாப்பிள்ளை!!" என்று பேசி தான் அந்த கல்லூரியிலேயே சேர்த்து விட்டான் சந்திரமோகன்..
தினமும் காலை, மாலை இரு வேளையும், "எந்த பொண்ணையும் பார்க்க கூடாது எந்த பெண்ணிடமும் பேசக்கூடாது, காதல் எல்லாம் ஹார்மோன்ஸ் செய்யும் கலகம் அதில் சிக்கி தவித்து பின்னாடி துயரப்படாதே உனக்கான ஒரு நல்ல பெண்ணை நாங்கள் பார்த்து திருமணம் செய்து வைக்கிறோம்". என்று கூற அவனும் அன்னை வாக்கை அப்படியே ஏற்றுக்கொண்டான்..
நித்திக் ஆறடி இல்லை தான் ஆனால் அசரடிக்கும் அழகன்.. கால் குறைபாடு அவன் அணிந்திருக்கும் காலணியை கழட்டினால் ஒழிய ஒருவராலும் கண்டு பிடிக்க முடியாது.. அன்னை உடன் வெளியே செல்லும் பொழுது பெண்கள் எல்லாம் இவனை பார்க்க இவனோ கண்டுகொண்டதே இல்லை யாரையும், அதனாலே மகனின் மேல் அபார நம்பிக்கை வந்தது..
இதற்கிடையில் சாருலதா பெரிய மனுஷி ஆகி விட, தாய் மாமனாக நித்திக் முறை செய்ய, விஷேஷ நேரத்தில் அமைதி காத்த யசோதா அடுத்த நாளே நித்திக் சரணுக்கு கல்லூரியுடன் தங்கும் விடுதியையும் பார்த்துவிட்டாள்..
"அக்கா! நீ பண்றதுக்கெல்லாம் அவன் பொறுமையா அமைதியா இருக்காங்கறதுக்காக அவனை என்ன வேணாலும் செய்யலாம்னு இல்லக்கா.. உள்ளூர் காலேஜ்ல படிச்சிட்டு, பெரிய வீடு, அம்மா சமையல் இருக்கும்போது அவன் எதுக்கு ஹாஸ்டல் போகணும் ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிட்டு கஷ்டப்படணும்??"
"டேய்!! என்னதான் அத்தை பையன், மாமா பொண்ணு அண்ணன் தங்கச்சியா பழகுனாலும் பாக்குறவங்க கண்ணு அப்படி இருக்காதுடா.. இவளுக்கு நாளைக்கு வெளியில் வரன் தேட வேண்டாமா??"
சந்திரமோகன் சட்டென திரும்பி தன் மாப்பிள்ளையை பார்க்க அவனோ இதற்கும் எனக்கும் சம்மந்தமே இல்லை என்று அமர்ந்திருந்தான்.. தன் அறையை எட்டி பார்க்க தன் மகள் கலக்கம் அவள் கண்ணில் தெரிந்தது..
"அக்கா.. அது..!!"
" என்னடா இத்தனை வருஷம் ஆகுது அக்கா கோவம் குறைஞ்சிருக்கும் மனச மாத்தி இருப்பான்னு நினைக்கிறியா கிடையவே கிடையாது அவன் அவரோட பையன் டா.. "
என்றதும் அன்னையை ஒரு பார்வை மட்டுமே பார்த்தான் நித்திக்.. அந்த பதிலில் அதிருப்தி ஏற்பட, அக்காவுடன் வீண் வாதம் செய்ய விரும்பாமல் தன் அறைக்கு சென்றுவிட்டார் சந்திரமோகன்
"என்னங்க இது!! அண்ணி எப்போ தான் மனச மாறி இந்த புள்ளைங்கள சேர்த்துவச்சு.."
"என்னடி ஒளறுற??"
"இங்க பாருடா ஆகட்டீங்க!! மாப்பிள்ள கண்ண பார்த்தே அவன் தேவை புரிஞ்சிகிட்டு வேல சொல்ற மாதிரி மவ பக்கத்துலயே இருக்க வச்சவருக்கு, உங்க கண்ணு பார்த்து உங்க ஆச என்னானு உங்க பொண்டாட்டி கண்டுபிடிச்சுருவான்னு தெரியாதாக்கும்??" என்ற லாவண்யா சந்திரமோகன் மீசையை இழுத்து ஆட்டி நெஞ்சில் சாய, புன்னகை மாறதவனோ அணிச்சை செயலாக மனைவி தலையை கோதினான்..
ஒரு வாரமாக கருவாட்டை பார்த்த பூனை போல தன் மாப்பிள்ளை, தன் மகளை சுற்றி வருவது தெரிந்து தானே இன்று திரட்டு விசேஷத்தில் எதயோ காரணம் காட்டி இருவரையும் ஒன்றாகவே இருக்க வைக்க, அதுங்களோ பல நாள் பட்னி கிடந்தது போல கண்ணாலே தின்று கொள்ள யசோதா கண்டுகொண்டாள் போல அதான் பிள்ளையை வீடு கடத்தி விட்டாள்..
சந்திரமோகனின் மகள் படிப்பில் கெட்டி எல்லாம் இல்லை அவள் தேர்ச்சி பெறுவதே பெரிய விஷயம் என்றிருக்க, எதிர்பாராத விரதமாக பத்தாவதில் அவள் நன்கு மதிப்பெண் எடுத்திருக்க,
"சாருமா நீ இவ்ளோ மார்க் எடுப்பன்னு அப்பா எதிர்பார்க்கவே இல்ல டா.. சொல்லு உனக்கு அப்பா கிட்ட இருந்து என்ன வேணும்.. "
"அது..."
"தயங்காம கேளுடா அப்பாவால முடிஞ்சது கண்டிப்பா செய்வேன்.. "
"எனக்கு மாமாவ பாக்கணும்.. நீங்க மாமாவ பாக்க போகும்போது என்னையும் கூட்டிட்டு போவீங்களாப்பா??.. "
கிங்கினி குரலில் செவ்விதழ் திறந்து தன் ஆசையை கேட்டுவிட்டாள்..
"தங்கம் நான் உனக்கு அப்பா டா.."
பாவமாக முழித்தான் சந்திரமோகன்..
"யோவ் அவளுக்கு தான் அப்பா, எனக்கு நீ மாமா தானேய்யா!!"
கைபேசியின் அந்த பக்கத்தில் பதில் வந்தது..
"டேய் மாப்ள நீ இன்னும் போன் கட் பண்ணலையாடா?? "
"என் பப்பூ கொலுசு சத்தம் கேட்டுச்சே.. அதான் கட் பண்ணாம இருந்தேன்.. "
மகள் முகத்தையே பார்த்த சந்திரமோகன் அவளின், "ப்ளீஸ் ப்பா!!" என்ற கெஞ்சும் தோணியில் சரி என்று தலை தானாக ஆட, நித்திக் தன் அரும்பு மீசையை முறிக்கி சிரித்தான்..
"என்னடா இன்னைக்கு நீ நித்திக்க போய் பாக்குற நாள் தானே எங்க பாப்பாவோட கிளம்பிட்ட??"
"அது.. ஹான் அதான் கா பாப்பாக்கு ஸ்கூல் வரைக்கும் போயி மார்க் ஷீட் வாங்கிட்டு வரணும்.. அடுத்த வாரம் தான் மாப்பிள்ளைய பாக்க போனும்கா.."
"அதுவும் சரிதான்.. நீ பாப்பாவ கூட்டிட்டு ஸ்கூலுக்கு போ எனக்கு என்னமோ அவன் நினைப்பாவே இருக்க மாதிரி இருக்கு. நான் ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்துடறேன்.. எதுக்கு ஒரு விசிட்டர் டே வேஸ்ட் பண்ணனும்.." என்ற யசோதா தன் மூக்கு கண்ணாடியை மாட்டிக்கொண்டு கிளம்பினார்..
தன் மாமனுக்காக ஆசை ஆசையாக பார்த்து பார்த்து கட்டி இருந்த தாவணி பாவாடையே பார்த்துக் கொண்டிருந்தவள் கண்கள் கலங்கி நெஞ்சு வெதும்பி முகம் அழுகையில் கூம்பியது..
Last edited: