• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மையல் மீளுதே மேகவியே -1

ரோசி கஜன்

Administrator
Staff member
மையல் 1
உச்சக்கட்ட கடுப்பில் அறைக்குள் இங்கும் அங்குமாய் நடைபயின்று கொண்டு இருந்தாள் மேகவி. தமையன் சாகரனின் திருமணத்திற்காக விடுப்பு எடுத்துக் கொண்டு அன்று காலை ஊரிற்கு வந்தவளைச் சிறை செய்து, மணமகளாய் மாற்றி இருந்தார் அவளின் அன்னை ஷீலா.

வீட்டை விட்டு வெளியேற இயலவில்லை. வாயிலில் பாதுகாப்பிற்காக அவளின் அப்பத்தா, கனகவள்ளி ஊன்றுகோலோடு படுத்துக் கிடந்தார்.

அவள் இல்லத்திற்குள் அடைபட்டு மூன்று மணி நேரம் கடந்துவிட்டது. மூத்தவர் இயற்கை உபாதைக்குக் கூட நகர்ந்ததாய் தெரியவில்லை.

'அப்பத்தா பாத்ரூம் போனாங்கனா, அந்த கேப்ல நாம எஸ்கேப் ஆகிடுவோம்!' என வாசலையே பார்த்து இருந்தவளிற்குத் தற்போது வரை கிடைத்தது என்னவோ, ஏமாற்றம் மட்டுமே! அசைய மறுத்தார் அந்த மூத்த பெண்மணி.

மேகவி அப்படி ஒன்றும் பலவீனமானவளோ, பெரியவர்களிடம் பயம் கொள்பவளோ இல்லை. அவள் வளர்ந்த சூழலும், குடும்ப நிலையும் அப்பத்தாவிடமும் அன்னையிடமும் அளவு கடந்த மரியாதையைக் கொடுத்திருந்தது.

அதுதான், இந்நொடியில் அம்மங்கையைத் தடுத்து, வீட்டிற்குள் இருக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இல்லை என்றால், கண் இமைக்கும் நொடியினில் அங்கிருந்து வெளியேறி விடுவாள்.

மகளிற்கு உணவைக் கொண்டு வந்த ஷீலா.. அறையில் இருந்த மேஜையில் வைத்துவிட்டு, அவள் அருந்தி வைத்திருந்த காலியான தேநீர் டம்ளரை எடுத்துச் சென்றார்.

"ம்மா.."

அவர் சற்றே நிதானித்துத் திரும்பிப் பார்க்க, "என்ன இது?"

"ஏன் பார்த்தா தெரியல, டிஃபன்."

"அது தெரியிது, எதுக்குனு தான் கேட்கிறேன்!"

"டிஃபன் எதுக்குடி தருவாங்க? சாப்பிடுறதுக்குத் தான்!"

"அடடா! ரொம்ப பெரிய கண்டுபிடிப்பு தான். நான் இப்ப உங்களை கேட்டேனா, சாப்பிட கொடுங்கனு."

"உனக்குச் சோறு போடுறது எங்க கடமை. நீ சாப்பிட்டா சாப்பிடு. இல்லேனா அப்படியே இரு! வா ஷீலா, அந்த அடங்காத கழுதைக்குப் போயி பதில் சொல்லிக்கிட்டு இருக்க.?" எனக் கனகவள்ளி மருமகளை அழைத்திட, லேசான பெருமூச்சை விட்டபடி நகர்ந்தார் அவர்.

"வந்து எவ்வளவு நேரமாகுது? பொம்பளைப் பிள்ள குளிச்சுத் துணி மாத்தி, அம்மாக்கு எதுவும் உதவி செய்வோம்னு இல்ல. குட்டிப் போட்ட பூனைக் கணக்கா இங்கிட்டும் அங்குட்டுமா நடந்துட்டு இருக்க. கால் வலிக்கல? பூனையாவது பரவாயில்ல, அதோட இனத்தைப் பெருக்குறதுக்குக் குட்டிய போடுது. நடக்க வேண்டியது தான்.

நீ என்ன செஞ்சனு, இப்ப இந்த நடை நடக்குற? காலு தேய்ஞ்சுப் போயிடப் போகுது. அப்புறம் என்னை மாதிரி நீயும் துணைக்குக் கம்பைத் தேட வேண்டியதா போயிடும், பார்த்துக்க!"

அப்பத்தாவிடம் வாதாடுவதற்கு மனமின்றி, அவரை முறைத்துவிட்டு ஓய்வறைக்குள் சென்றாள் மேகவி.

மகளின் நடவடிக்கைகளைப் பார்த்திருந்த ஷீலா, "அத்தை, நீங்க சொன்னீங்கனு நானும் கல்யாணத்தைப் பேசி முடிச்சிட்டேன். இவ ஒத்துப்பாளா?"

"நாம சொல்லுறதைக் கேட்காம எங்க போகப் போறா?"

"ஆனா அத்தை?"

"ஷீலா.. இவ்வளவு நாளும் அவ விருப்பத்துக்குத் தான விட்டோம்? ஆறு வருசமா கல்யாணத்தைப் பத்தி பேசுறோம். பிடி கொடுத்தாளா? வயசு இருபத்தெட்டு ஆச்சு. இவளால பெரியவனுக்கும் தள்ளிப் போயிடுச்சு. இல்லேனா மூனு வருஷத்துக்கு முன்னாடியே கல்யாணத்தை முடிச்சிருப்பான், ஆசைப்பட்ட பொண்ணை.

அந்தப் பிள்ளையும் சம்பந்தி வீட்டு ஆளுங்களும் தான் எவ்வளவு காலத்துக்குக் காத்திட்டு இருப்பாங்க? ஏதோ என்னோட வீட்டுக்காரங்க மேலயும் உன் புருஷன் மேலயும் இருந்த மரியாதைக்காக, பொறுமையா இருந்தாங்க. இனியும் தள்ளிப் போடுறது நல்லது இல்ல.

வெளிய மாப்பிள்ள தேடுனா, வயசு கூட ஆகிடுச்சு அது இதுனு ஆயிரம் குறை பேசுவாங்க. இவ வயசுல ரெண்டு பிள்ள பெத்துட்ட நீ! இனியும் தள்ளிப் போடுறது நல்லது இல்ல.

இந்தா, உட்கார்ந்த இடத்தை விட்டு நகர முடியல என்னால. எப்பவோ என் நேரம், தெரியல. ஏதோ இழுத்துப் பிடிச்சு வண்டியை ஓட்டிக்கிட்டு இருக்கேன், உனக்காக. என்னை பார்க்க நீ இருக்க. என் நிலைமை உனக்கு வரும்போது, நீ ஆதரவுக்குனு பெத்த ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க. அதுவே அவளுக்குனா.? யாரு இருக்கா?

மூத்தவன், அவனோட பொண்டாட்டி பிள்ளைகளை பார்க்க வேண்டாமா? இந்த கழுதைக்குச் சேவகம் செஞ்சிட்டு இருப்பானா? ஏதோ சாமியா பார்த்து நமக்கு வாய்ப்பைக் கொடுத்திருக்கு. அந்தப் பையனும் சம்மந்தியும் இவளைப் பத்தி ஓரளவுக்குத் தெரிஞ்சிருந்தும் கல்யாணத்துக்குச் சரினு சொல்லிட்டாங்க.

இனி நடக்குறது நடக்கட்டும். பாரத்தை சாமி மேல போட்டுட்டு ஆகுறதைப் பார்ப்போம். தெய்வம் எல்லாத்தையும் நல்லதாவே நடத்தித் தரும்னு நம்புவோம்."

ஒரு மெலிதான பெருமூச்சை விட்ட ஷீலா, "நீங்க சொல்லுறதும் சரிதான். இவ சம்மதம் சொல்லணும்னு காத்திருந்தா, கடைசி வரைக்கும் இப்படியே இருக்க வேண்டியது தான். ஆனா அத்தை, இவ கல்யாணத்துக்கு பின்னாடி அந்தப் பையன்கூட வாழ மாட்டேன்னு எதுவும் பிரச்சனை செஞ்சிட்டா.?"

"நான் சத்திக்கிட்ட இதைப் பத்தி எல்லாம் பேசிட்டேன். அவன் நான் பார்த்துக்கிறேன் அம்மாச்சின்னு சொல்லிட்டான். அதனால வீணா கவலைப்பட்டுக்காத! அதுவும் இல்லாம, நீயும் நானும் உசுரோட தான இருக்கோம்? பார்த்துக்கலாம்!"

கணவரது அன்னை தந்த தைரியத்தில் சற்றே ஆசுவாச மூச்சு விட்டார் ஷீலா. இது இன்று மட்டுமல்ல, இருபத்தேழு ஆண்டுகளாய் தொடர்கிறது.

மேகவியின் தந்தை விவேகானந்தன், நாட்டுக்காக போராடி கார்கில் போரில் உயிர் நீத்த பொழுது, அவளிற்கு ஒரு வயது. மூத்தவன் சாகரன் ஆறு வயது பாலகன். கனகவள்ளியின் கணவரும் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவரே! அதனாலேயே சுற்று வட்டாரத்தில், இவர்களது குடும்பத்திற்கு என்று தனி மரியாதை உண்டு.

மாமியாரும் மருமகளுமாக இரு பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கி, அந்த மதிப்பை ஆண்டுக் கணக்கில் கடத்தி வந்துள்ளனர். சாகரனும் மேகவியும் கூட நன்முறையில் படித்து பட்டம் பெற்று, தங்களுக்கென தனித்த அடையாளம் மற்றும் பணியையும் அடைந்து, "மிலிட்டரியில வேலை பார்த்தவரோட குடும்பம். நாட்டுக்காக உசுரை விட்ட மனுசனோட பிள்ளைக!" என்ற மரியாதையைத் தக்க வைத்துக் கொண்டனர்.

பெண்ணானவள் படித்து முடித்துத் தனக்கான சுதந்திரத்தோடு சென்னையில் பணிக்குச் செல்ல, வீட்டுப் பிள்ளையோ அன்னையையும் அப்பத்தாவையும் கவனிக்கும் பொருட்டு உள்ளூரிலேயே தனக்கான வேலையை தேடிக் கொண்டான்.

சாகரனிற்கும்.. தந்தை மற்றும் தாத்தாவைப் போல் இராணுவத்தில் சேரத்தான் விருப்பம். எனினும் 'வீட்டில் ஆண் இல்லாது, பெண்கள் மூவருமாய் இந்த சமூகத்தை தனியாய் எதிர் கொள்வதா?' எனச் சிந்தித்து அந்த ஆசையைக் கைவிட்டு விட்டான்.

சிந்தனையுடன் நீராடிக் கொண்டிருந்தாள் மேகவி. எப்படியும் திருமண பேச்சு வரும் என்று அறிவாள்.

இருபத்திரண்டு வயதிலேயே, மாப்பிள்ளை பார்க்கத் துவங்கி விட்டனர் குடும்பத்தார். தங்களின் உடல்நிலை நன்றாக இருக்கும் பொழுதே வீட்டுப் பெண்ணிற்கான கடமையை செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் கனகவள்ளிக்கும் ஷீலாவிற்கும்

பள்ளிக் காலத்தில் ஏற்பட்ட தனது சொந்த அனுபவத்தாலும், நேரில் கண்ட மற்றொரு விஷயத்தாலும் ஆண்களின் மீது நம்பிக்கையை இழந்த மங்கைக்கோ, திருமணம் என உரைத்தாலே வேப்பங்காயாய் கசந்தது.

அந்தக் கசப்பைத் தவிர்க்கும் பொருட்டு, தன்னால் இயன்ற மட்டும் ஆறு ஆண்டுகளைக் கடத்திவிட்டாள். எப்படியும் இந்த சூழல் வரும் என்று அறிந்து தான் இருந்தாள்.

'பேசிப் பேசி தனக்கு நெருக்கடி கொடுப்பர். அன்னை மற்றும் அப்பத்தாவின் உடல் நிலையை காரணம் காட்டி வற்புறுத்தக் கூடும். தன்னால் தமையனின் திருமணமும் தள்ளிப் போவதாய் குற்றம் சாட்டி காரியம் சாதிக்கலாம்!' என்று பல விதமாய் அவள் எண்ணியிருந்தாள்.

அதுபோல் சூழல்கள் அமைந்தால் எப்படி தப்பிப்பது எனவும் சிந்தித்து வைத்திருந்தாள்.

ஆனால் 'திருமணத்திற்கான நாளைக் குறித்து, தான் ஊருக்கு கிளம்பி வரும் வரை அச்செய்தி வெளியே கசிந்து விடாமல் இரகசியம் காத்து, வீட்டிற்குள் சிறை செய்து இப்படி தன்னை வசமாய் சிக்க வைத்து விடுவர்!' என நினைக்கவில்லை.

'முடியாது!' என்று சொல்லிச் செல்ல, ஒரு நொடித் தேவைப்படாது. ஆனால் திருமண அழைப்பிதழை சுற்றத்தார் அனைவருக்கும் கொடுத்து சுபநிகழ்விற்கு அழைப்பு‌ விடுத்த பின்னர், மணப்பெண் அவ்விழாவில் இல்லாமல் போனால்‌‍?

மேகவியால் தனது குடும்பத்தாரின் மதிப்பையும் மரியாதையையும் குறைக்கும் விதமாய், எச்செயலையும் செய்ய இயலாது.

அறியா வயதில் இறந்து போன தந்தையை இன்றுவரை புகைப்படத்தில் நிழல் உருவமாய் மட்டுமே கண்டிருக்கிறாள்.‌ அத்தந்தையின் இடத்தையும் சேர்த்து நிரப்பியவர்கள், அன்னையும் அப்பத்தாவும்‌.

தோற்றத்திற்கு எளிதானவர்களாய் தெரிந்தாலும், திடமும் ஆளுமையும் மிக்கவர்கள். ஆகையால் தான், இத்தனை ஆண்டு காலமும் குடும்பத்தை ஒரு திட்ட வரைவுக்குள்‌ அவர்களால் வழிநடத்த முடிந்தது.

அப்படியான‌ இரு பெண்மணிகளைக் காயப்படுத்துவதை அவளின் மனம் விரும்பாது. ஏற்கனவே திருமணத்தைத் தள்ளிப் போட்டு, அதிகபட்ச அளவிற்கு அவர்களின் பொறுமையை சோதனை செய்து பார்த்து விட்டாள். அச்சோதனையின் விளைவு தான், தற்போது ஏற்பாடு ஆகி இருக்கும் சிறை திருமணம்.

இனியும் இவள் குடும்பத்தாரின் எண்ணத்திற்கு எதிராக எதையேனும் செய்தால், வேறுவிதமாய் பிரச்சனை எழக்கூடும்‌‌. அதனால் மூத்தவர்களின் மன அமைதிக்காக இந்த திருமணத்தைச் செய்து கொள்ளலாம் என்ற முடிவை எடுத்தாள்.

கனகவள்ளியால். பெயர்த்தி திருமணத்தை மறுப்பதற்கான காரணத்தை புரிந்து கொள்ள முடியவில்லை எனினும் அவள் குடும்பத்தாரிடம் கொண்டிருக்கும் ஈடுபாட்டையும் பெரியவர்களின் மீதான மரியாதையையும் நன்கு அறிவார்‌. அதனால்தான் திருமண விஷயத்தில் துணிந்து இப்படி ஒரு வழியைத் தேர்ந்தெடுத்தார்.

ஷீலாவிற்கு மகள் 'இந்த திருமணத்தை எப்படி எதிர்கொள்வாளோ?' என உள்ளுக்குள் பதற்றம் இருந்தாலும், அவளின் நல்வாழ்விற்காக, மாமியாரின் சொல்லிற்குத் தலை அசைத்துச் சம்மதித்தார்‌.

மேகவிக்கு இந்த விஷயத்தை கையாள்வது பற்றி‌ ஓரளவிற்குத் தெளிவு கிடைத்து விட, தயாராகி வெளியே வந்தாள்.

அவளின்‌ அன்னை பக்கத்து அறையில் வேலையாய் இருக்க, மூத்தவர் பெயர்த்தியை கேள்வியாய் நோக்கினார்.

"வழியை விடுறது. இப்படி பாதையை மறைச்சு உட்கார்ந்து இருந்தா, எப்படி வெளிய போறது?"

"எங்க‌ போற?"

"ஏன், உங்க கிட்ட சொல்லணுமா?"

"அப்புறம், வீட்டுல பெரிய மனுசினு நான் எதுக்கு இருக்கேன்?"

"என்னை இப்படிப் பாடு படுத்துறதுக்காக தான இருக்கீங்க? வேற எதுக்கு.?"

"ஆமாண்டி அம்மா! உன்னை கல்லு சுமக்க சொன்னேன்? மண்ணு அள்ளி‌ வேலை பார்க்கச் சொன்னேன்? வீட்டுல சமைக்கிறது, கழுவுறது, துவைக்கிறது, துடைக்கிறது, ஆட்டுறது, அரைக்கிறதுனு அத்தனையும் செய்யச் சொல்லி எவ்வளவு பாடு படுத்துறேன்? எனக்கு எல்லாம் போற வழிக்கு நல்ல கதி கிடைக்குமா?

டீ குடிச்ச டம்ளரை, இப்படினு நகர்த்தி வைக்க மாட்டிற?‌ அதைக்கூட உன்னோட அம்மா தான் செய்யிறா! இந்தா.. தட்டுல வச்சுக் கொடுத்ததை முழுங்க வலிக்கிதுனு, அப்படியே காய விட்டுட்டு வந்திருக்க‌. அந்த சாப்பாட்டுக்குப் பாவம், வாய் இருந்தாலும் அழுதிடும்! சோத்தையும்‌ மதிக்கத் தெரியல.‌ இந்தக் கிழவியையும் மதிக்கணும்னு நினைப்பு இல்ல. எவ்வளவு பாடு படுற என்கிட்ட?

எதுவும் விட்டு போச்சா ராணியம்மா? சொல்லுங்க, அதையும் குறிச்சு வச்சுக்குவோம். அப்பதான பட்ட பாடுக்கு எல்லாம் உங்களால பதில் தேட முடியும்.?"

"அப்பத்தா!" எனப் பல்லை கடித்தவள், "ஏதோ தெரியாம ஒரு வார்த்தை சொன்னதுக்கு, எவ்வளவு பெரிய டையலாக்? முடியல! பாருங்க காதுல இருந்து ரத்தம் வருது!" என்று அவள் கனகவள்ளியின் எதிரே சென்று அமர்ந்து அவரிடம் காதை காட்ட, இவர்களிற்கு இடையே நடந்து கொண்டிருந்த வாதத்திற்கு, கைப்பேசி ஒலித்து தற்காலிகமாய் தடை விதித்தது.
 
Top Bottom